Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 50

யாக்கோபின் இறுதிச் சடங்கு

50 இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான். பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின் உடலை அடக்கத்திற்கு தயார் செய்யும்படி ஆணையிட்டான். (அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்.) அடக்கம் செய்வதற்கு ஏற்ற முறையில் அதனைத் தயார்படுத்தினர். எகிப்திய முறையில் அவ்வாறு செய்தனர். சரியான முறையில் தயார் செய்ய 40 நாட்கள் ஆகும். அந்தபடியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடினர்.

70 நாட்கள் ஆனதும் துக்க நாட்கள் முடிந்தன. எனவே யோசேப்பு பார்வோன் மன்னனின் அதிகாரிகளோடு பேசினான். “இதனை பார்வோன் மன்னனுக்குச் சொல்லுங்கள். ‘என் தந்தை மரணத்தை நெருங்கும்போது அவருக்கு நான் ஒரு வாக்குக் கொடுத்தேன். அவரை கானான் நாட்டில் ஓரிடத்தில் அடக்கம் செய்வதாக ஒப்புக்கொண்டேன். அதுவே அவர் விரும்பிய குகை. எனவே, நான் போய் அவரை அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வேண்டும். பின்னர் நான் உங்களிடம் திரும்பி வருவேன்’” என்றான்.

பார்வோனும், “உன் வாக்கைக் காப்பாற்று. போய் உன் தந்தையை அடக்கம் செய்” என்றான்.

எனவே யோசேப்பு அடக்கம் செய்யக் கிளம்பினான். பார்வோனின் மூப்பர்களும் (தலைவர்களும்) எகிப்திலுள்ள முதியவர்களும் யோசேப்போடு சென்றார்கள். யோசேப்பின் குடும்பத்தினரும், அவனது சகோதரர்களின் குடும்பத்ததினரும் தந்தையின் குடும்பத்தினரும் அவனோடு சென்றார்கள். குழந்தைகளும் மிருகங்களும் மட்டுமே கோசேன் பகுதியில் தங்கினார்கள். அவர்கள் பெருங்கூட்டமாகப் போனார்கள். வீரர்களும் இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறிப் போனார்கள்.

10 அவர்கள் கோரான் ஆத்தாத் நதியின் கீழ்க்கரையில் உள்ள கோசேன் ஆத்தாதிற்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலுக்கு இறுதிச் சடங்குகளையெல்லாம் செய்தனர். இது ஏழு நாட்கள் நடந்தது. 11 கானான் நாட்டிலுள்ள ஜனங்களெல்லாம் இந்தச் சடங்கில் கலந்துகொண்டனர். அவர்களோ, “அந்த எகிப்தியர்கள் பெரிய துக்கமான சடங்கைக் கொண்டுள்ளனர்” என்றனர். இப்போது அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர் வழங்குகிறது.

12 யாக்கோபின் மகன்கள் தந்தை சொன்னபடியே செய்தனர். 13 அவர்கள் அவனது உடலை கானானுக்குள் எடுத்துச் சென்று மக்பேலாவில் அடக்கம் செய்தனர். இந்தக் குகை ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து வாங்கிய நிலத்தில் மம்ரேக்கு அருகில் இருந்தது. ஆபிரகாம் இதனைக் கல்லறைக்காகவே வாங்கியிருந்தான். 14 யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்த பிறகு, அவனோடு அனைவரும் எகிப்துக்குத் திரும்பிப் போனார்கள்.

சகோதரர்கள் யோசேப்புக்குப் பயப்படுதல்

15 யாக்கோபு மரித்தபிறகு யோசேப்பின் சகோதரர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அவர்கள் பயந்தார்கள். அவர்கள் யோசேப்புக்கு தாங்கள் செய்த தீமையை எண்ணிப் பயந்தனர். “நாம் யோசேப்பிற்குச் செய்த தீமைக்காக அவன் இப்போது நம்மை வெறுக்கலாம். நம் தீமைகளுக்கெல்லாம் அவன் பழி தீர்க்கலாம்” என்று அவர்கள் பேசிக்கொண்டனர். 16 எனவே அவனது சகோதரர்கள் அவனுக்குக் கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினர்: “தந்தை மரிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு செய்தி சொல்லும்படி சொன்னார். 17 அவர், ‘யோசேப்புக்கு நீங்கள் முன்பு செய்த தீமையை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றார். எனவே நாங்கள் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உனக்குச் செய்த தீமைக்கு எங்களை மன்னித்துவிடு. நாங்கள் தேவனின் அடிமைகள். அவர் உனது தந்தைக்கும் தேவன்” என்றனர்.

இந்தச் செய்தி யோசேப்பை மிகவும் துக்கப்படுத்தியது. அவன் அழுதான். 18 அவனது சகோதரர்கள் அவனிடம் சென்று பணிந்து வணங்கினார்கள். “நாங்கள் உன் வேலைக்காரர்கள்” என்றனர்.

19 பிறகு யோசேப்பு, “பயப்படவேண்டாம், நான் தேவன் அல்ல. உங்களைத் தண்டிக்க எனக்கு உரிமையில்லை. 20 எனக்குக் கேடு செய்ய நீங்கள் திட்டம்போட்டீர்கள் என்பது உண்மை. ஆனால் உண்மையில் தேவன் நன்மைக்குத் திட்டமிட்டிருக்கிறார். நான் பலரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது தேவனின் திட்டம். இன்னும் அவரது திட்டம் அதுதான். 21 எனவே அஞ்ச வேண்டாம். நான் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக்கொள்வேன்” என்றான். இவ்வாறு யோசேப்பு தன் சகோதரர்களுக்கு இனிமையாகப் பதில் சொன்னான். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

22 யோசேப்பு தொடர்ந்து எகிப்தில் தன் தந்தையின் குடும்பத்தோடு வாழ்ந்தான். அவனுக்கு 110 வயதானபோது மரணமடைந்தான். 23 யோசேப்பு உயிரோடு இருக்கும்போதே எப்பிராயீமுக்குப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மனாசேக்கு மாகீர் என்ற மகன் இருந்தான். மாகீரின் பிள்ளைகளையும் யோசேப்பு பார்த்தான்.

யோசேப்பின் மரணம்

24 மரணம் நெருங்கியதும் யோசேப்பு தன் சகோதரர்களிடம், “எனது மரண நேரம் நெருங்கிவிட்டது. தேவன் உங்களை கவனித்துக்கொள்வார் என்பதை நான் அறிவேன். உங்களை இந்த நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு தேவன் கொடுப்பதாகச் சொன்ன நாடுகளை உங்களுக்குக் கொடுப்பார்” என்றான்.

25 பின் யோசேப்பு இஸ்ரவேல் ஜனங்களிடம் ஒரு வாக்குறுதிச் செய்தான். அவன், “நான் மரித்த பிறகு என் எலும்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனால் வழி நடத்தப்பட்டு புதிய பூமிக்குப் போகும்போது அதையும் கொண்டு செல்லுங்கள்” இதைப்பற்றி வாக்குறுதி செய்யுங்கள் என்றான்.

26 யோசேப்பு எகிப்திலேயே மரணமடைந்தான். அப்போது அவனுக்கு 110 வயது. மருத்துவர்கள் அவனது உடலை அடக்கம் செய்வதற்காகத் தயார் செய்தனர். அதனை ஒரு பெட்டியில் வைத்தார்கள்.

லூக்கா 3

யோவானின் போதனை(A)

அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது;

பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான்.

ஏரோது கலிலேயாவை ஆண்டான்.

ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும்

திராகொனித்தி நாட்டையும் ஆண்டான்.

அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். அப்போது சகரியாவின் மகனாகிய யோவானுக்கு தேவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. யோவான் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான். யோர்தான் நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன் மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான். இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது:

“வனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்:
‘கர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள்.
    அவருக்குப் பாதையை நேராக்குங்கள்.
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்.
    ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும்.
திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும்.
    கரடுமுரடான பாதைகள் மென்மையாகும்.
ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.’” (B)

யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறும்பொருட்டு மக்கள் வந்தனர். யோவான் அவர்களை நோக்கி, “நீங்கள் விஷம் பொருந்திய பாம்புகளைப் போன்றவர்கள். வரவிருக்கும் தேவனுடைய கோபத்தினின்று ஓடிப் போக யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தனர்? உங்கள் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டவல்ல செயல்களை நீங்கள் செய்தல் வேண்டும். ‘ஆபிரகாம் எங்கள் தந்தை’ என்று பெருமை பாராட்டிக் கூறாதீர்கள். தேவன் இந்தப் பாறைகளில் இருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உருவாக்கக்கூடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். மரங்களை வெட்டும்படிக்குக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. நல்ல பழங்களைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்” என்றான்.

10 மக்கள் யோவானை நோக்கி, “நாங்கள் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டனர்.

11 அவர்களுக்கு யோவான், “உங்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தால், ஒரு மேலாடைகூட இல்லாத மனிதனுக்கு ஒன்றைக் கொடுங்கள். உங்களிடம் உணவிருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று பதிலுரைத்தான்.

12 வரி வசூலிப்போரும்கூட யோவானிடம் வந்தனர். அவர்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினர். அவர்கள் யோவானிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

13 அவர்களிடம் யோவான், “எந்த அளவுக்கு வரி வசூலிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு வரி வாங்குவதன்றி அதிகமாக வசூலிக்காதீர்கள்” என்று கூறினான்.

14 வீரர்கள் யோவானை நோக்கி, “எங்களைப்பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர்.

அவர்களுக்கு யோவான், “உங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறினான்.

15 எல்லா மக்களும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருந்தனர். எனவே யோவானைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் கொண்டனர். அவர்கள், “இவன் கிறிஸ்துவாக இருக்கக்கூடும்” என்று எண்ணினர்.

16 அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17 தானியங்களைச் சுத்தமாக்குவதற்குத் தயாராக அவர் வருவார். பதரிலிருந்து தானியத்தைப் பிரித்துக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவர் எரிப்பார். அணைக்க முடியாத நெருப்பில் அவற்றைச் சுட்டெரிப்பார்,” என்று பதில் கூறினான். 18 யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான்.

யோவானுக்கு ஏற்பட்ட உபத்திரவம்

19 ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான். 20 எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். அவன் யோவானை சிறையிலிட்டான். ஏரோது செய்த பல தீய காரியங்களோடு கூட இதுவும் ஒரு தீய செயலாக அமைந்தது.

இயேசு ஞானஸ்நானம் பெறுதல்(C)

21 யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு அவனால் எல்லா மக்களும் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் அப்போது அங்கு வந்து அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது வானம் திறந்தது. 22 பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். ஆவியானவர் ஒரு புறாவைப்போலத் தோற்றமளித்தார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அது “நீர் என் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.

யோசேப்பின் குடும்ப வரலாறு(D)

23 இயேசு போதிக்க ஆரம்பித்தபோது ஏறக்குறைய முப்பது வயது நிரம்பியவராக இருந்தார். மக்கள் இயேசுவை யோசேப்பின் மகன் என்றே எண்ணினர்.

யோசேப்பு ஏலியின் மகன்.

24 ஏலி மாத்தாத்தின் மகன்.

மாத்தாத் லேவியின் மகன்.

லேவி மெல்கியின் மகன்.

மெல்கி யன்னாவின் மகன்.

யன்னா யோசேப்பின் மகன்.

25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன்.

மத்தத்தியா ஆமோஸின் மகன்.

ஆமோஸ் நாகூமின் மகன்.

நாகூம் எஸ்லியின் மகன்.

எஸ்லி நங்காயின் மகன்

26 நங்காய் மாகாத்தின் மகன்.

மாகாத் மத்தத்தியாவின் மகன்.

மத்தத்தியா சேமேயின் மகன்.

சேமேய் யோசேப்பின் மகன்.

யோசேப்பு யூதாவின் மகன்.

27 யூதா யோவன்னாவின் மகன்.

யோவன்னா ரேசாவின் மகன்.

ரேசா செரூபாபேலின் மகன்.

செரூபாபேல் சலாத்தியேலின் மகன்.

சலாத்தியேல் நேரியின் மகன்.

28 நேரி மெல்கியின் மகன்.

மெல்கி அத்தியின் மகன்.

அத்தி கோசாமின் மகன்.

கோசாம் எல்மோதாமின் மகன்.

எல்மோதாம் ஏரின் மகன்.

29 ஏர் யோசேயின் மகன்.

யோசே எலியேசரின் மகன்.

எலியேசர் யோரீமின் மகன்.

யோரீம் மாத்தாத்தின் மகன்.

மாத்தாத் லேவியின் மகன்.

30 லேவி சிமியோனின் மகன்.

சிமியோன் யூதாவின் மகன்.

யூதா யோசேப்பின் மகன்.

யோசேப்பு யோனானின் மகன்.

யோனான் எலியாக்கீமின் மகன்.

31 எலியாக்கீம் மெலெயாவின் மகன்.

மெலெயா மயினானின் மகன்.

மயினான் மத்தாத்தாவின் மகன்.

மத்தாத்தா நாத்தானின் மகன்.

நாத்தான் தாவீதின் மகன்.

32 தாவீது ஈசாயின் மகன்.

ஈசாய் ஓபேதின் மகன்.

ஓபேத் போவாசின் மகன்.

போவாஸ் சல்மோனின் மகன்.

சல்மோன் நகசோனின் மகன்.

33 நகசோன் அம்மினதாபின் மகன்.

அம்மினதாப் ஆராமின் மகன்.

ஆராம் எஸ்ரோமின் மகன்.

எஸ்ரோம் பாரேசின் மகன்.

பாரேஸ் யூதாவின் மகன்.

34 யூதா யாக்கோபின் மகன்.

யாக்கோபு ஈசாக்கின் மகன்.

ஈசாக்கு ஆபிரகாமின் மகன்.

ஆபிரகாம் தேராவின் மகன்.

தேரா நாகோரின் மகன்.

35 நாகோர் சேரூக்கின் மகன்.

சேரூக் ரெகூவின் மகன்.

ரெகூ பேலேக்கின் மகன்.

பேலேக் ஏபேரின் மகன்.

ஏபேர் சாலாவின் மகன்.

36 சாலா காயினானின் மகன்.

காயினான் அர்பக்சாத்தின் மகன்.

அர்பக்சாத் சேமின் மகன்.

சேம் நோவாவின் மகன்.

நோவா லாமேக்கின் மகன்.

37 லாமேக் மெத்தூசலாவின் மகன்.

மெத்தூசலா ஏனோக்கின் மகன்.

ஏனோக் யாரேதின் மகன்.

யாரேத் மகலாலெயேலின் மகன்.

மகலாலெயேல் கேனானின் மகன்.

கேனான் ஏனோஸின் மகன்.

38 ஏனோஸ் சேத்தின் மகன்.

சேத் ஆதாமின் மகன்.

ஆதாம் தேவனின் மகன்.

யோபு 16-17

யோபு எலிப்பாசுக்குப் பதிலளிக்கிறான்

16 அப்போது யோபு பதிலாக,

“நான் இவற்றையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன்.
    நீங்கள் மூவரும் எனக்குத் தொல்லையை அல்லாமல் ஆறுதலைத் தரவில்லை.
உங்கள் நீண்ட பேச்சுகளுக்கு முடிவேயில்லை!
    ஏன் தொடர்ந்து விவாதிக்கிறீர்கள்?
எனக்கு வந்த தொல்லைகள் உங்களுக்கு ஏற்பட்டால்
    நீங்கள் சொல்வதையே நானும் சொல்லக் கூடும்.
நானும் ஞானமுள்ள காரியங்களை உங்களுக்குச் சொல்லி,
    என் தலையை உங்களுக்கு நேர் அசைக்கக்கூடும்.
நான் கூறும் காரணங்களால் உங்களுக்கு உற்சாகமூட்டி
    உங்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்.

“ஆனால் நான் கூறுபவை எதுவும் என் வேதனையை அகற்ற முடியாது!
    ஆயினும் மௌனமாய் இருப்பதிலும் பயன் இல்லை.
தேவனே, உண்மையாகவே என் பலத்தை எடுத்துப்போட்டீர்.
    என் குடும்பம் முழுவதையும் அழித்தீர்.
நீர் என்னை இணைத்து பலவீனமாக்கினீர்.
    அதனால் நான் குற்றவாளியே என ஜனங்கள் நினைக்கிறார்கள்.

“தேவன், என்னைத் தாக்குகிறார்,
    அவர் என் மீது கோபங்கொண்டு, என் உடம்பைக் கிழித்தெறிகிறார்.
தேவன் எனக்கெதிராக அவரது பற்களைக் கடிக்கிறார்.
    என் பகைவனின் கண்கள் என்னை வெறுப்போடு (பகையோடு) பார்க்கின்றன.
10 ஜனங்கள் என்னைச் சூழ்ந்து ஒன்றுக் கூடி, என்னை பார்த்து நகைத்து,
    என் முகத்தில் அறைகிறார்கள்.
11 தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார்.
    அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார்.
12 எனக்கு எல்லாம் நல்லபடியாக இருந்தன, ஆனால், பின்பு தேவன் என்னை நசுக்கினார்!
    ஆம், அவர் என்னைக் கழுத்தில் பிடித்து, என்னைத் துண்டுகளாக நொறுக்கினார்!
தேவன் என்னை இலக்காகப் பயன்படுத்தினார்.
13 தேவனுடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கிறார்கள்.
    அவர் என் சிறுநீரகங்கள்மேல் அம்புகளை எய்கிறார்.
அவர் இரக்கம் காட்டவில்லை.
    என் ஈரலின் பித்த தண்ணீரைத் தரையில் சிந்தச் செய்கிறார்.
14 மீண்டும், மீண்டும் தேவன் என்னைத் தாக்குகிறார்.
    யுத்தம் செய்யும் வீரனைப் போல் அவர் என் மேல் பாய்கிறார்.

15 “நான் மிகவும் துயரமுற்றிருக்கிறேன், எனவே துயரத்தைக் காட்டும் இந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன்.
    நான் இங்குத் துகளிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, நான் தோற்கடிக்கப்பட்டதாய் உணருகிறேன்.
16 அழுது என் முகம் சிவந்திருக்கிறது.
    கருவளையங்கள் என் கண்ணைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
17 நான் யாரிடமும் கொடுமையாக நடந்துக்கொண்டதில்லை, ஆனால் இத்தீய காரியங்கள் எனக்கு நேரிட்டுள்ளன.
    என் ஜெபங்கள் தூய்மையும் நேர்மையுமானவை.

18 “பூமியே, எனக்குச் செய்யப்பட்ட அநீதிகளை மறைக்காதே.
    நியாயத்திற்கான என் வேண்டுதல் (நிறுத்த) தடுக்கப்படாமல் இருக்கட்டும்.
19 இப்போதும் பரலோகத்தில் யாரேனும் இருந்தால், அவர்கள் எனக்காக பேசுவார்கள்,
    மேலிருந்து யாராவது எனக்காக சாட்சி கூறுவார்கள்.
20 என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில்
    என் நண்பர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
21 நண்பனுக்காக வாதாடுகின்ற ஒரு மனிதனைப் போன்று
    எனக்காக தேவனை வேண்டுகிற ஒருவன் எனக்கு வேண்டும்!

22 “இன்னும் சில ஆண்டுகளில்
    திரும்பமுடியாத அந்த இடத்திற்கு, (மரணம்) நான் போவேன்.”

17 என் ஆவி நொறுங்கிப்போயிற்று
    நான் விட்டு விலகத் தயாராயிருக்கிறேன்.
என் வாழ்க்கை முடியும் நிலையிலுள்ளது.
    கல்லறை எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
ஜனங்கள் என்னைச் சூழ்ந்து நின்று, என்னைப் பார்த்து நகைக்கிறார்கள்.
    அவர்கள் என்னைக் கேலிச்செய்து, அவமானப்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

“தேவனே, நீர் என்னை ஆதரிக்கிறீர் என்பதை எனக்குக் காட்டும்.
    வேறெவரும் என்னை ஆதரிக்கமாட்டார்கள்.
நீர் என் நண்பர்களின் மனத்தை மூடி வைத்திருக்கிறீர்,
    அவர்கள் என்னை புரிந்துக்கொள்ளார்கள்.
    தயவுசெய்து அவர்கள் வெற்றியடையாதபடிச் செய்யும்.
ஜனங்கள் கூறுவதை நீர் அறிவீர்:
    ‘ஒருவன் அவனது நண்பர்களுக்கு உதவுவதற்காகத் தன் பிள்ளைகளைக்கூடப் பொருட்படுத்தமாட்டான்’
    ஆனால் என் நண்பர்களோ எனக்கெதிராகத் திரும் பியிருக்கிறார்கள்.
எல்லோருக்கும் ஒரு கெட்ட சொல்லாக, தேவன் என் பெயரை மாற்றியிருக்கிறார்.
    ஜனங்கள் என் முகத்தில் உமிழ்கிறார்கள்.
என் கண்கள் குருடாகும் நிலையில் உள்ளன ஏனெனில், நான் மிகுந்த துக்கமும் வேதனையும் உள்ளவன்.
    என் உடம்பு முழுவதும் ஒரு நிழலைப் போல மெலிந்துவிட்டது.
நல்லோர் இதைப்பற்றிக் கலங்கிப்போயிருக்கிறார்கள்.
    தேவனைப்பற்றிக் கவலையுறாத ஜனங்களுக்கு எதிராக, களங்கமற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.
ஆனால் நல்லோர் நல்ல வழியில் தொடர்ந்து வாழ்கிறார்கள்.
    களங்கமற்றோர் இன்னும் வலிமை பெறுவார்கள்.

10 “ஆனால் நீங்கள் எல்லோரும் வாருங்கள், இது எனது தவறால் விளைந்ததே எனக் காட்ட முயலுங்கள்.
    உங்களில் ஒருவரும் ஞானமுடையவன் அல்லன்.
11 என் வாழ்க்கை கடந்து போகிறது, என் திட்டங்கள் அழிக்கப்பட்டன.
    என் நம்பிக்கை போயிற்று.
12 ஆனால் என் நண்பர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
    அவர்கள் இரவைப் பகலென்று நினைக்கிறார்கள்.
    அவர்கள் இருள் ஒளியை விரட்டி விடுமென நினைக்கிறார்கள்.

13 “கல்லறையே என் புது வீடாகும் என நான் எதிர்பார்க்கலாம்.
    இருண்ட கல்லறையில் என் படுக்கையை விரிக்கலாம் என நான் எதிர்பார்க்கலாம்.
14 நான் கல்லறையிடம், ‘நீயே என் தந்தை’ என்றும்,
    புழுக்களிடம் ‘என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் கூறலாம்.
15 ஆனால் அதுவே என் ஒரே நம்பிக்கையாயிருந்தால், அப்போது எனக்கு நம்பிக்கையே இல்லை!
    அதுவே என் ஒரே நம்பிக்கையாக இருந்தால், அந்த நம்பிக்கை நிறைவுப்பெறுவதை காண்பவர் யார்?
16 என் நம்பிக்கை என்னோடு மறையுமோ?
    அது மரணத்தின் இடத்திற்குக் கீழே போகுமா?
    நாம் ஒருமித்துத் துகளில் இறங்குவோமா?” என்றான்.

1 கொரி 4

கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள்

மக்கள் நம்மைப்பற்றி நினைக்க வேண்டியது இதுவாகும். நாம் கிறிஸ்துவின் பணியாட்களே. தேவன் தமது இரகசியமான உண்மைகளை ஒப்படைத்திருக்கிற மக்கள் நாமே. ஒரு விஷயத்தில் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கிற ஒருவன் அந்நம்பிக்கைக்குத் தான் தகுதியானவனே என்று காட்ட வேண்டும். நீங்கள் எனக்கு நீதி வழங்கினால் அதைப் பொருட்படுத்தமாட்டேன். எந்த உலகத்து நீதிமன்றமும் எனக்கு நியாயம் தீர்ப்பதைக் கூடப் பொருட்டாகக்கொள்ளமாட்டேன். நான் எனக்கு நீதி வழங்கமாட்டேன். நான் எந்தத் தவறும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னைக் களங்கம் அற்றவனாக மாற்றாது. என்னை நியாயம் தீர்க்கிறவர் கர்த்தர் ஒருவரே. எனவே தகுந்த நேரம் வரும் முன்பு நீதி வழங்காதீர்கள். கர்த்தர் வரும்வரை காத்திருங்கள் அவர் இருளில் மறைந்திருப்பவற்றின் மீது ஒளியை அனுப்புவார். மக்களின் மனதிலிருக்கும் இரகசியமான விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கீர்த்தியை அவனவனுக்குக் கிடைக்கும்படியாகச் செய்வார்.

சகோதர சகோதரிகளே! அப்பொல்லோவையும், என்னையும் இவற்றில் உதாரணங்களாக நான் உங்களுக்குக் காட்டினேன். எழுதப்பட்டுள்ள சொற்களின் பொருளை எங்களிடமிருந்து நீங்கள் அறிந்துகொள்ளுமாறு இதைச் செய்தேன். “வேத வாக்கியங்களில் எழுதி இருப்பதைப் பின்பற்றி நடவுங்கள்.” அப்போது நீங்கள் ஒருவனைக் குறித்துப் பெருமை பாராட்டி, இன்னொருவனை வெறுக்கமாட்டீர்கள். நீங்கள் பிற மக்களை விட சிறந்தவர்கள் என்று யார் கூறினார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றையே நீங்கள் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்டவையே உங்களுக்கு வாய்த்திருக்கையில் அவற்றை உங்கள் வல்லமையால் பெற்றதாக நீங்கள் ஏன் பெருமை அடைய வேண்டும்?

உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் செல்வந்தர்களென எண்ணுகிறீர்கள். எங்கள் உதவியின்றி நீங்கள் ஆளுபவர்களாக விளங்குவதாகக் கருதுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மன்னர்களாக விளங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது, நாங்களும் உங்களோடுகூட ஆளுபவர்களாக இருந்திருப்போம். ஆனால் தேவன் எனக்கும் பிற அப்போஸ்தலர்களுக்கும் கடைசியான இடத்தையே கொடுத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் பார்த்திருக்க மரண தண்டனை அளிக்கப்பட்ட மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். தேவ தூதர்களும் மனிதர்களும் முழு உலகமும் பார்த்திருக்கும் ஒரு காட்சியைப் போன்றவர்கள் நாங்கள். 10 கிறிஸ்துவுக்கு நாங்கள் மூடர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானிகளாக நீங்கள் உங்களைக் கருதுகிறீர்கள். நாங்கள் பலவீனர்கள். ஆனால் நீங்கள் பலசாலிகளாக நினைக்கிறீர்கள். மக்கள் உங்களை கௌரவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்களை கௌரவப்படுத்துவதில்லை. 11 இப்போதும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தேவையான பொருள்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய ஆடைகள் இருப்பதில்லை. அவ்வப்போது பிறரால் அடிக்கப்படுகிறோம். எங்களுக்கு வீடுகள் இல்லை. 12 எங்களுக்குத் தேவையான உணவின்பொருட்டு எங்கள் கைகளால் கடினமாக உழைக்கிறோம். மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம். 13 மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர்.

14 நீங்கள் வெட்கமடையுமாறு செய்ய நான் முயலவில்லை. உங்களை எனது சொந்தக் குழந்தைகளெனக் கருதி இவற்றையெல்லாம் உங்களுக்கு முன் எச்சரிக்கையாய் எழுதுகிறேன். 15 கிறிஸ்துவில் பதினாயிரம் போதகர்களை நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் உங்களுக்குப் பல தந்தையர் இல்லை. நற்செய்தியின் மூலமாகக் கிறிஸ்து இயேசுவில் நான் உங்களுக்குத் தந்தையானேன். 16 நீங்களும் என்னைப் போலவே இருக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். 17 அதனாலேயே நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கர்த்தருக்குள் அவன் என் மகன் ஆவான். நான் தீமோத்தேயுவை நேசிக்கிறேன். அவன் உண்மையுள்ளவன். கிறிஸ்து இயேசுவில் என் வாழ்வின் நெறியை நீங்கள் நினைவுகூருவதற்கு அவன் உதவி செய்வான். எல்லா சபைகளிலும் அந்த வாழ்க்கை நெறியையே நான் போதிக்கிறேன்.

18 நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என எண்ணி உங்களில் சிலர் தற்பெருமையால் நிரம்பி இருக்கிறீர்கள். 19 ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன். 20 தேவனுடைய இராஜ்யம் பேச்சல்ல, பெலத்திலே என்பதால் இதைக் காண விரும்புகிறேன். 21 உங்கள் விருப்பம் என்ன? நான் உங்களிடம் தண்டனை தர வருவதா? அல்லது அன்பு, மென்மை ஆகியவற்றோடு வருவதா?

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center