M’Cheyne Bible Reading Plan
தொழுநோயாளியைச் சுத்தப்படுத்துவதற்கான விதிகள்
14 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இவை தொழுநோயாளிகள் குணமாவதற்கும், அவர்களைச் சுத்தப்படுத்துவதற்குமுரிய விதி முறைகளாகும்.
“தொழுநோயுள்ள ஒருவனை ஆசாரியன் சோதித்துப் பார்க்க வேண்டும். 3 ஆசாரியன் கூடாரத்திற்கு வெளியே போய் அவன் நோய் குணமாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். 4 அவனது நோய் குணமாகியிருந்தால் அவனிடம் கீழ்க்கண்டவற்றை செய்யும்படி கூறவேண்டும். முதலில் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டைகளையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வரவேண்டும். 5 பின்னர், ஆசாரியன் அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். 6 அடுத்து ஆசாரியன், உயிருள்ள குருவியையும் அதோடு கேதுரு கட்டையையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து அதில் கொல்லப்பட்டக் குருவியின் இரத்தத்தைத் தோய்க்க வேண்டும். 7 பின் ஆசாரியன் நோய் நீங்கப்பட்டவனின் மேல் ஏழுதரம் தெளித்து அவனைச் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு ஆசாரியன் அவனைத் தீட்டில்லாதவன் என அறிவிக்க வேண்டும். பின் ஆசாரியன் திறந்த நிலப்பரப்பிற்கு சென்று உயிருள்ள குருவியை விட்டுவிட வேண்டும்.
8 “பிறகு அவன் தன் ஆடைகளை துவைத்து, தன் முடியை மழித்துக்கொண்டு, தண்ணீரில் குளிக்க வேண்டும். பின்னரே அவன் சுத்தமாவான். அதன் பின் அவன் கூடாரத்திற்குள் செல்லலாம். ஆனால் அவன் ஏழு நாட்கள் கூடாரத்திற்கு வெளியிலேயே தங்கவேண்டும். 9 ஏழாவது நாள் அவன் தன் தலை முடி, தாடி, புருவம் என அனைத்து முடியையும் மழித்துவிட வேண்டும். பின் தன் ஆடைகளைத் துவைத்துக் குளிக்க வேண்டும். இதன்பின் அவன் சுத்தமாவான்.
10 “எட்டாவது நாள், எவ்விதமான குறையுமற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு வயதான எக்குறையுமில்லாத பெண் ஆட்டுக்குட்டியையும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவன் தானியக் காணிக்கைக்காக கொண்டு வரவேண்டும். இருபத்து நான்கு கிண்ணங்கள் எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவையும், ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டு வரவேண்டும். 11 அவனை தீட்டில்லாதவன் என்று அறிவித்த அதே ஆசாரியன் நோயுற்றவனையும் அவனது பலிப் பொருட்களையும் கர்த்தருக்கு முன்னால் ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டு வர வேண்டும். 12 ஆசாரியன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை குற்ற பரிகார பலியாக செலுத்த வேண்டும். அவன் அதனையும் சிறிது எண்ணெயையும் அசைவாட்டும் பலியாகப் பயன்படுத்த வேண்டும். 13 பிறகு ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை பாவப் பரிகார பலியையும் தகனபலியையும் கொல்லுகிற பரிசுத்த இடத்தில் கொல்ல வேண்டும். குற்ற நிவாரண பலியானது பாவப்பரிகார பலி போன்றதாகும். அது ஆசாரியனுக்குரியது. அது மிகவும் பரிசுத்தமானது.
14 “ஆசாரியன் குற்ற பரிகார பலியின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைச் சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது நுனியில் தடவ வேண்டும். அது அவனைச் சுத்தமாக்கும். பிறகு கொஞ்சம் இரத்தத்தை அவனது வலது கையின் பெருவிரலிலும், வலதுகால் பெரு விரலிலும் தடவ வேண்டும். 15 மேலும் ஆசாரியன் எண்ணெயை எடுத்து தனது இடது உள்ளங்கையில் ஊற்றி 16 வலது கை விரலில் தொட்டு ஏழுமுறை கர்த்தரின் சந்நிதியில் தெளிக்க வேண்டும். 17 பிறகு ஆசாரியன் தன் உள்ளங்கையில் உள்ள மீதி எண்ணெயை எடுத்து சுத்திகரிக்கப்படவேண்டியவனின் வலது காது நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவ வேண்டும். 18 மேலும் மீதியுள்ள எண்ணெயை அவனது தலையிலே தடவ வேண்டும். இவ்வாறு, ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அவனைச் சுத்தப்படுத்தி விடுகிறான்.
19 “பின் ஆசாரியன் பாவப்பரிகார பலியைச் செலுத்தி சுத்திகரிக்கப்படவேண்டியவனின் தீட்டு நீங்க அவனுக்குப் பாவப்பரிகாரம் செய்துவிட வேண்டும். 20 பின்பு தகன பலிக்குரிய மிருகத்தைக் கொன்று அதனோடு தானியக் காணிக்கையையும் பலிபீடத்தின்மேல் வைத்து அவனுக்காகப் பாவப்பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது அவன் சுத்தமாவான்.
21 “ஆனால் ஒரு ஏழையால் இத்தகைய பலியைக் கொடுக்க இயலாது. அப்போது அவன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை மட்டும் கொண்டு வந்தால் போதும். அது அசைவாட்டும் பலியாகும். ஆசாரியன் இதன் மூலம் அவனைச் சுத்தப்படுத்தலாம். இதற்கு ஆசாரியன் எண்ணெயுடன் கலந்த மிருதுவான மாவிலே 8 கிண்ணம் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தானியக் காணிக்கைக்காக உபயோகப்படுத்தப்படும். 22 இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரு புறாக் குஞ்சுகளையாவது கொடுக்க வேண்டும். இவற்றில் ஒன்று பாவப்பரிகார பலிக்கும் இன்னொன்று தகன பலிக்கும் உரியது.
23 “எட்டாவது நாளில் மேற்கண்ட எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு அவன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் வர வேண்டும். அவை கர்த்தருக்கு முன்பு அளிக்கப்பட வேண்டும். அதனால் அவன் சுத்தமாவான். 24 ஆசாரியன் ஆண் ஆட்டுக்குட்டியைக் குற்றப்பரிகார பலிக்காக எடுத்துக்கொள்வான். இதையும் ஆழாக்கு எண்ணெயையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக செலுத்துவான். 25 பிறகு அந்த ஆண் ஆட்டுக்குட்டியை குற்றப்பரிகார பலிக்காகக் கொல்லுவான். அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காதின் நுனியிலும், வலதுகை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவுவான். 26 ஆசாரியன் தனது இடது உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு 27 பின் வலது கை விரலால் தொட்டு கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிப்பான். 28 மிச்சமிருக்கிற எண்ணெயைத் தொட்டு இரத்தத்தை தடவிய இடங்களில் எல்லாம் தடவுவான். அதனை அவனின் வலது காதின் நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவுவான். 29 உள்ளங்கையில் மேலும் மிச்சமிருக்கிற எண்ணெயை அவனது தலையில் தடவுவான். இவ்வாறு ஆசாரியன் அவனை கர்த்தருக்கு முன்பு சுத்தப்படுத்த வேண்டும்.
30 “பிறகு ஆசாரியன் ஒரு காட்டுப் புறாவையாவது, புறாக்குஞ்சையாவது பலியிட வேண்டும். (ஒருவன் எவற்றைக் கொடுக்க முடியுமோ அவற்றையே காணிக்கையாக அளிக்க வேண்டும்.) 31 இவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். தானியக் காணிக்கையோடு இதனைச் சேர்த்துச் செலுத்த வேண்டும். இவ்வாறு ஆசாரியன் அவனை கர்த்தருக்கு முன்பு சுத்திகரிப்பு செய்யவேண்டும். அவனும் சுத்திகரிக்கப்படுவான்” என்றார்.
32 தொழுநோயுற்றவன் குணம் அடைந்தபின் சுத்திகரிப்புச் செய்யவேண்டிய விதிகள் இவையாகும். முறையான பலிகளைத் தரமுடியாதவர்கள் இவ்வாறு சில விதிகளைக் கடைப்பிடிக்கலாம் என்று கூறினார்.
வீட்டில் உள்ள நோய்க்கான விதிகள்
33 மேலும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் பார்த்து, 34 “நான் உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் அங்கு போய்ச் சேர்ந்த பின்பு உங்களில் சிலரது வீட்டிலே தொழுநோய் ஏற்படும்படி செய்தால் 35 அப்போது அந்த வீட்டிற்கு உரியவன் ஆசாரியனிடம் வந்து, ‘என் வீட்டில் தொழுநோய் போன்று ஒன்று இருப்பதைப் பார்த்தேன்’ என்று சொல்ல வேண்டும்.
36 “பிறகு அந்த ஆசாரியன், வீட்டில் உள்ள யாவற்றையும் வெளியே எடுத்துச் செல்ல ஜனங்களிடம் கூறவேண்டும். ஆசாரியன் அந்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீட்டுக்குரியவை என்று சொல்லத் தேவை இருக்காது. வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே வைத்த பிறகுதான் ஆசாரியன் வீட்டிற்குள் நுழைய வேண்டும். 37 ஆசாரியன் அந்த வீட்டிற்குள் நுழைந்து தொழுநோயுள்ள இடங்களைக் கவனித்து பார்க்க வேண்டும். அப்போது சுவரில் கொஞ்சம் பச்சையும், சிவப்புமான குழிகள் சுவற்றின் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இருப்பதைக் கண்டால், 38 ஆசாரியன் வெளியே வந்து அவ்வீட்டை ஏழு நாட்கள் பூட்டிவைக்க வேண்டும்.
39 “ஏழாம் நாள் ஆசாரியன் திரும்பப் போய், சோதித்துப் பார்க்க வேண்டும். தோஷம் வீட்டுச் சுவர்களில் பரவியிருந்தால் 40 ஆசாரியன் தோஷம் படிந்த கற்களைச் சுவற்றிலிருந்து பெயர்த்தெடுத்துப் பட்டணத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட அசுத்தமான இடத்திலே கொண்டு போய் போடச் சொல்ல வேண்டும். 41 வீட்டினுள்ளே தரையைப் பெயர்த்து, அதையும் வெளியே அசுத்தமான இடத்தில் போட்டுவிட வேண்டும். 42 பிறகு சுவரில் புதிய கற்களை வைத்துப் பூசவேண்டும்.
43 “கற்களைப் பெயர்த்து வீட்டைச் செதுக்கி புதிதாய்ப் பூசின பிறகும் நோய் திரும்பவும் வந்தால், 44 ஆசாரியன் போய் அந்த வீட்டைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த நோய் மேலும் சுவரில் பரவி இருந்தால் அதனை வீட்டை அரிக்கிற தொழுநோயாகக் கருதவேண்டும். அது தீட்டுள்ளதாக இருக்கும். 45 எனவே வீடு முழுவதையும் இடித்து அதன் கற்களையும் மரங்களையும் காரையையும் ஊருக்கு வெளியே அசுத்தமான தனி இடத்தில் கொட்டிவிட வேண்டும். 46 அந்த வீட்டிற்குள் நுழைகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 47 அந்த வீட்டில் எவனாவது உண்டாலோ, உறங்கினாலோ, அவனும் தனது ஆடையைத் துவைக்க வேண்டும்.
48 “புதிய கற்களும் பூச்சும் முடிந்தபிறகு அவ்வீட்டை ஆசாரியன் சோதிக்கும்போது நோய் பரவியதற்கான அறிகுறி எதுவும் இல்லாவிட்டால் அவ்வீடு தீட்டு இல்லாததாய் ஆயிற்று என்று அறிவிக்க வேண்டும்.
49 “பிறகு அந்த வீட்டை சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்கு ஆசாரியன் இரண்டு குருவிகளையும், கேதுரு கட்டையையும், ஒரு துண்டு சிவப்புத் துணியையும், ஈசோப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 50 அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். 51 பிறகு கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் இவற்றை மூழ்க வைக்க வேண்டும். பிறகு அந்த இரத்தத்தை ஆசாரியன் வீட்டின்மேல் ஏழுதரம் தெளிக்கவேண்டும். 52 குருவியின் இரத்தம், ஊற்று தண்ணீர், உயிருள்ள குருவி, ஈசோப்பு, கேதுருக் கட்டை, சிவப்பு நூல் போன்றவற்றால் வீட்டின் தீட்டினைக் கழிக்க வேண்டும். 53 பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்” என்று கூறினார்.
54-55 துணிகளிலோ அல்லது வீட்டிலோ தோஷம் பிடித்தல், தொழுநோய், ஆகியன உண்டாகும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே. 56 வீக்கம், அசறு, தோலில் வெள்ளைப் புள்ளிகள் உண்டாகுதல் ஆகியவற்றின்போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே. 57 பொருட்கள் எப்பொழுது சுத்தமாயுள்ளன, எப்பொழுது சுத்தமற்றவையாக உள்ளன எனக் கற்பிப்பதற்குரிய விதிகள் இவைகளே.
தாவீதின் ஒரு ஜெபம்
17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
உம்மால் உண்மையைக் காணமுடியும்.
3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
10 தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி
பெருமையுடையோராய் இருக்கிறார்கள்.
11 அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள்.
இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
12 பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள்.
தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.
13 கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும்.
உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை
உமது வல்லமையால் அப்புறப்படுத்தும்.
கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை.
அவர்களுக்கு அதிக உணவளியும்.
வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும்.
அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.
15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன்.
கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன்.
கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.
28 தீயவர்கள் எல்லாவற்றுக்கும் அஞ்சுவார்கள். ஆனால் ஒரு நல்லவன் சிங்கத்தைப்போல் தைரியமானவன் ஆவான்.
2 ஒரு நாடு அடிபணிய மறுத்தால், அது குறுகிய காலமே ஆளும் தீய தலைவர்களைப் பெறும். ஆனால் ஒரு நாட்டிற்கு நல்லவனும் ஞானவானுமாகிய ஒருவன் தலைவனாக இருந்தால், அங்கே நீண்டக் காலம் நிலைத்த ஆட்சி நடைபெறும்.
3 அரசன் ஏழைகளுக்குத் துன்பம் செய்தால், பயிரை அழிக்கிற பெருமழை போன்று இருப்பான்.
4 நீ சட்டத்திற்கு அடிபணிய மறுத்தால் தீயவர்களைச் சார்ந்தவனாவாய். ஆனால் நீ சட்டத்திற்கு அடிபணிந்தால் அவர்களுக்கு எதிரானவனாவாய்.
5 தீயவர்கள் நேர்மையைப்பற்றிப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் கர்த்தரை நேசிப்பவர்கள் அதனை அறிந்துகொள்வார்கள்.
6 ஒருவன் செல்வந்தனாகவும் தீயவனாகவும் இருப்பதைவிட நல்லவனாகவும் ஏழையாகவும் இருப்பது நல்லது.
7 சட்டத்திற்கு அடிபணிபவன் புத்திசாலி. ஆனால் தகுதியற்றவர்களோடு நட்புகொள்கிறவன் தன் தந்தைக்கு அவமானத்தைத் தேடித்தருகிறான்.
8 ஏழைகளை ஏமாற்றி அதிக அளவில் வட்டியை வாங்கி நீ செல்வந்தன் ஆனால், அச்செல்வத்தை நீ விரைவில் இழந்துவிடுவாய். இரக்கம் உள்ளவனிடம் அச்செல்வம் போய்ச் சேர்ந்துவிடும்.
9 ஒருவன் தேவனுடைய போதனைகளைக் கேட்க மறுத்தால், தேவன் அவனது ஜெபங்களையும் கேட்க மறுத்துவிடுவார்.
10 ஒரு தீயவன், ஒரு நல்லவனைப் புண்படுத்தவே பல திட்டங்களைத் தீட்டமுடியும். ஆனால் அத்தீயவன் தனது சொந்த வலையிலேயே விழுவான். நல்லவனுக்கு நன்மையே ஏற்படும்.
11 செல்வந்தர்கள் எப்பொழுதும் தம்மைப் பெரிய ஞானிகளாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஏழையும் பெரிய ஞானியுமானவன், உண்மையைக் கண்டுகொள்கிறான்.
12 நல்லவர்கள் தலைவர்களாக வந்தால் எல்லோரும் மகிழ்வார்கள். தீயவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், எல்லோரும் போய் ஒளிந்துகொள்வார்கள்.
13 ஒருவன் தன் பாவங்களை மறைக்க முயன்றால் அவனால் வெற்றிபெற இயலாது. ஆனால் ஒருவன் தன் பாவங்களுக்கு வருந்தி, தன் பாவங்களை ஒப்புக்கொண்டு தவறு செய்வதை நிறுத்திவிட்டால், தேவனும், மற்ற எல்லா ஜனங்களும் அவனுக்கு இரக்கம் காண்பிப்பார்கள்.
14 ஒருவன் எப்பொழுதும் கர்த்தருக்கு மரியாதை செய்தால், அவன் ஆசீர்வதிக்கப்படுவான். ஆனால் ஒருவன் பிடிவாதமாக கர்த்தருக்கு மரியாதை தர மறுத்தால், பிறகு அவனுக்குத் துன்பங்களே ஏற்படும்.
15 பலவீனமானவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் தீயவன் கோபங்கொண்ட சிங்கத்தைப்போன்றும், சண்டைக்குத் தயாரான கரடியைப்போன்றும் இருப்பான்.
16 ஆட்சி செய்பவன் ஞானமுள்ளவனாக இல்லாவிட்டால், தனக்குக் கீழுள்ள ஜனங்களைத் துன்புறுத்துவான். ஆனால் நேர்மையாய் ஆட்சி செய்து, ஜனங்களை ஏமாற்றுவதை வெறுக்கிறவன் நீண்டகாலம் ஆட்சி செய்வான்.
17 அடுத்தவனைக்கொன்ற குற்றவாளிக்கு எப்பொழுதும் சமாதானம் இருக்காது. அவனுக்கு ஆதரவு தராதே.
18 ஒருவன் சரியான வழியில் வாழ்ந்தால் அவன் பாதுகாப்பாக இருப்பான். ஆனால் தீயவனாக இருப்பவன் இருந்தால் தன் வல்லமையை இழந்துவிடுவான்.
19 கடினமாக உழைப்பவன் உணவை ஏராளமாகப் பெறுவான். ஆனால் எப்போதும் கனவுகள் கண்டு தன் காலத்தை வீணாக்குபவன் ஏழையாகவே இருப்பான்.
20 தேவன் தன்னைப் பின்பற்றுபவனை ஆசீர்வதிக்கிறார். ஆனால் செல்வந்தனாக மாறுவதற்கு மட்டும் முயற்சிப்பவன் தண்டிக்கப்படுவான்.
21 ஒரு நீதிபதி நேர்மையானவனாக இருக்க வேண்டும். ஒருவன் இன்னான் என்ற காரணத்திற்காகவே அவனுக்குச் சார்பாகப் பேசக்கூடாது. ஆனால் சில நியாயாதிபதிகள் தனக்குத் தரப்படும் சிறு தொகைகளுக்காகக்கூட தங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்கின்றனர்.
22 சுயநலக்காரன் செல்வந்தன் ஆவதற்கே முயற்சி செய்கிறான். தன் பேராசை வறுமையின் எல்லைக்கே கொண்டுசெல்லும் என்பதை அவன் அறியாமல் இருக்கிறான்.
23 ஒருவன் செய்கிற தவறைச் சுட்டிக் காட்டி அவனுக்கு உதவிசெய்தால் பிற்காலத்தில் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பான். எப்பொழுதும் மென்மையான வார்த்தைகளையே பேசுவதைவிட இது நல்லது.
24 சிலர் தம் தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் திருடிக்கொள்கின்றனர். அவர்கள் “இது தவறில்லை” என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழைந்து எல்லாப் பொருட்களையும் நொறுக்கும் தீயவனைப் போன்றவன்.
25 சுயநலக்காரன் துன்பத்துக்குக் காரணமாக இருப்பான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் பரிசுகளைப் பெறுகிறான்.
26 ஒருவன் தன்னில் தானே நம்பிக்கை வைத்தால், அவன் ஒரு மூடன். ஆனால் ஒருவன் ஞானியாக இருந்தால், அவன் துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்வான்.
27 ஏழை ஜனங்களுக்கு உதவி செய்பவன், தனக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுவான். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்ய மறுப்பவனுக்கோ அதிகத் தொல்லைகள் வரும்.
28 தீயவன் ஒருவன் அரசாளுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் நாட்டு ஜனங்கள் ஒளிந்துக்கொள்வார்கள். ஆனால் தீயவன் தோற்கடிக்கப்பட்டால், நல்லவர்கள் மீண்டும் ஆள்வார்கள்.
தீயசெயல்கள் நிகழும்
2 சகோதர, சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவது பற்றிச் சில காரியங்கள் சொல்ல வேண்டியது உள்ளன. நாம் எப்போது அவரோடு ஒன்று சேருவோம் என்பது பற்றிப் பேச நாங்கள் விரும்புகிறோம். 2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம். 3 எவரும் உங்களை எவ்விதத்திலும் முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் விசுவாச மறுதலிப்பும், அழிவின் மகனாகிய பாவமனிதனும் தோன்றும் வரை அந்த நாள் வராது. பாவமனிதன் நரகத்துக்கு உரியவன். 4 அவன் தேவனுக்கும் மனிதர்களின் வழிபாடுகளுக்கும் எதிரானவன். அவன் தேவனுடைய ஆலயத்திற்கும் சென்று அங்கே உட்காருவான். பிறகு, தன்னை தேவனைவிட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்வான்.
5 இக்காரியங்கள் நிகழும் என்பது பற்றி முன்னரே நான் உங்களிடம் கூறினேன், ஞாபகம் இருக்கிறதா? 6 அவனை இப்போது தடுத்து நிறுத்தி இருப்பது யாரென்று உங்களுக்குத் தெரியும். அவன் இப்போது தடுக்கப்பட்டிருப்பது சரியான நேரத்தில் வெளிப்படும் பொருட்டுத்தான். 7 பாவத்தின் இரகசிய சக்தி ஏற்கெனவே உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை உடையவர் ஒருவரே! அவன் முழுமையாகத் தன் வழியில் இருந்து விலக்கப்படும்வரை அவனைத் தடுத்து நிறுத்துவார் அவர். 8 பிறகு அந்தப் பாவ மனிதன் வெளிப்படுவான். கர்த்தராகிய இயேசு தன் வாயில் இருந்து வரும் சுவாசத்தினால் அவனைக் கொல்வார். அவர் தன் பெருமைமிகு வருகையின் மூலமே அந்தப் பாவமனிதனை அழிப்பார்.
9 சாத்தானின் சக்தியாலேயே பாவமனிதன் வருவான். அவனுக்குப் பெரும் சக்தி இருக்கும். அதனால் போலி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான். 10 பாவ மனிதன் எல்லாவிதமான பாவங்களையும் செய்து ஆன்மீக அளவில் தான் வஞ்சிக்கும் மக்களை ஏமாற்ற பல தந்திரங்கள் செய்வான். உண்மையை நேசிக்க மறுத்ததால் அம்மக்கள் ஆன்மீக அளவில் தொலைந்துபோனவர்கள் ஆகிறார்கள். (உண்மையை நேசித்திருந்தால் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.) 11 ஆனால் அவர்கள் உண்மையை நேசிக்க மறுத்தார்கள். எனவே, அவர்கள் பொய்யை நம்பத்தக்கதாகப் போலி நம்பிக்கை என்னும் ஆற்றலை அவர்களுக்குள் தேவன் அனுப்புகிறார். 12 எனவே, உண்மையை நம்பாத மக்கள் எல்லாரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் உண்மையை நம்பவில்லை. பாவச் செயல்கள் செய்வதிலே மகிழ்ந்தார்கள்.
மீட்கப்படுவதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்
13 சகோதர, சகோதரிகளே! கர்த்தர் உங்களிடம் அன்புடன் இருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே, உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற பரிசுத்த ஆவியானவராலும், உண்மையின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தாலும் இரட்சிக்கப்படுகிறீர்கள். 14 அந்த இரட்சிப்பை அடைய உங்களை தேவன் அழைத்தார். நாங்கள் பரப்புகிற நற்செய்தியைப் பயன்படுத்தி நீங்கள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டு தேவன் உங்களை அழைத்தார். 15 சகோதர சகோதரிகளே! ஆகையால் உறுதியாய் நில்லுங்கள். எங்கள் போதனைகளில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். அவற்றை நாங்கள் பிரசங்கங்கள் மூலமும், நிருபங்களின் மூலமும் உங்களுக்குப் போதித்திருக்கிறோம்.
16-17 நம்மை நேசித்தும், நமக்கு நல்ல விசுவாசத்தைக் கொடுத்தும், எக்காலத்திலும் தொடர்கிற ஆறுதலை வழங்கியும் வருகிற இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தரும், நம் பிதாவாகிய தேவனும் தொடர்ந்து உங்களை ஆறுதல்படுத்தவும், நீங்கள் சொல்கிற, மற்றும் செய்கிற ஒவ்வொரு நற்செயலிலும் உங்களை வலிமையுறச் செய்யவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
2008 by World Bible Translation Center