Beginning
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குரியவர்கள்
19 கர்த்தர் மோசேயிடம், 2 “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நீ கூற வேண்டியதாவது: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர். எனவே, நீங்களும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும்.
3 “உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தாய் தந்தைக்கு மரியாதை செய்யவேண்டும். என் ஓய்வு நாட்களை [a] ஆசரிக்கவேண்டும். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்!
4 “விக்கிரகங்களை வணங்காதீர்கள். வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உருவாக்காதீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5 “நீங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொடுக்கும்போது அது அங்கீகரிக்கப்படத்தக்க சரியான வழியிலேயே செய்யவேண்டும். 6 நீங்கள் பலிகொடுத்த நாளிலும், மறுநாளும் அதனை உண்ணலாம். ஆனால் அந்த உணவில் மீதியானது மூன்றாவது நாளும் இருந்தால் அதனை நெருப்பில் போட்டு எரித்துவிட வேண்டும். 7 மூன்றாவது நாள் பலியின் மீதியான எதையும் நீங்கள் உண்ணக் கூடாது. இது தீட்டானது, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. 8 இதனை எவராவது செய்தால் அது பாவமாயிருக்கும். ஏனென்றால் அவர்கள் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றை மதிக்கவில்லை. இத்தகைய மனிதர்கள் தம் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள்.
9 “அறுவடைக் காலத்தில் நீங்கள் விளைந்த பயிரை அறுவடை செய்யும்போது வயலின் எல்லாப் பகுதிகளையும் மூலைகளையும் சேர்த்து அறுக்காதீர்கள். தானியங்கள் தரையில் சிதறுமானால் அவற்றைச் சேகரித்து அள்ளிக்கொள்ளாதீர்கள். 10 உங்கள் திராட்சைக் கொடியில் உள்ள அனைத்து திராட்சைப் பழங்களையும் பறிக்காதீர்கள். தரையில் விழும் திராட்சைப் பழங்களையும் பொறுக்கிக்கொள்ளாதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
11 “நீங்கள் திருடக்கூடாது. நீங்கள் ஜனங்களை ஏமாற்றவும் கூடாது. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். 12 எனது பெயரைப் பயன்படுத்தி பொய் சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் தேவனின் பெயரை மதிக்காமல் இருக்கிறீர்கள். நானே கர்த்தர்.
13 “உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்குத் தீமை செய்யாதீர்கள். அவனிடம் திருடாதீர்கள். வேலைக்காரனின் கூலியை விடியும்வரை இரவு முழுக்க நிறுத்தி வைக்காதீர்கள்.
14 “செவிடர்களை நீங்கள் சபிக்காதீர்கள். குருடன் விழுந்துவிடும்படி அவன் எதிரே எதுவும் போடாதீர்கள். உங்கள் தேவனுக்கு மரியாதைச் செலுத்த வேண்டும். நானே கர்த்தர்!
15 “நீங்கள் நியாயத்தீர்ப்பில் நடுநிலையுடன் இருங்கள். ஒருவன் ஏழை என்பதினால் சிறப்பான சலுகையோ அல்லது ஒருவர் முக்கியமான மனிதர் என்பதினால் விசேஷ சலுகையோ செய்யக் கூடாது. உனது அயலானுக்குத் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையில் இருந்து சொல்ல வேண்டும். 16 மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்!
17 “உன் மனதில் உன் சகோதரனை நீ வெறுக்கக் கூடாது. உனது அயலான் உனக்குக் கெடுதல் செய்தால் அதைப்பற்றி அவனிடம் பேசு, பின் அவனை மன்னித்துவிடு. 18 உனக்கு ஜனங்கள் செய்த தீமைகளை மறந்துவிடு. பழிவாங்க முயற்சி செய்யாதே. உனது அயலானையும் உன்னைப்போல நேசி. நானே கர்த்தர்!
19 “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இருவிதமான மிருகங்களைச் சேர்த்து இனப்பெருக்கம் செய்யக்கூடாது. உங்களது வயலில் இரண்டுவிதமான விதைகளை விதைக்கக்கூடாது. இரண்டு விதமான நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது.
20 “அடுத்தவனிடம் அடிமையாய் இருக்கிற ஒரு பெண்ணுடன் ஒருவன் பாலியல் உறவுகொள்ள நேரிடலாம். ஆனால் அவளை வாங்கவோ அவளுக்குச் சுதந்திரம் அளிக்கவோ முடியாது. இவ்வாறு நடந்தால் இது தண்டனைக்குரியது. ஆனால் இது மரணத்திற்குரியது அல்ல. ஏனென்றால் அவள் சுதந்திரமானவள் அல்ல. 21 அவன் குற்றபரிகார பலியாக ஆட்டுக்கடா ஒன்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவரவேண்டும். 22 அவன் சுத்திகரிக்கப்படும்படி ஆசாரியன் பாவ நிவிர்த்தி செய்வான். கர்த்தருக்கு முன்பாக ஆசாரியன் ஆட்டுக்கடாவை குற்றபரிகார பலியாகச் செலுத்த வேண்டும், அப்போது அவன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
23 “வருங்காலத்தில் உங்கள் நாட்டுக்குள் நுழைந்த பின்பு உணவுக்காகப் பலவிதமான மரங்களை நீங்கள் நடுவீர்கள். ஒரு மரத்தை நட்டபிறகு மூன்று வருடத்திற்கு அதிலுள்ள பழங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். 24 நான்காவது ஆண்டில் கிடைக்கும் பழங்கள் கர்த்தருக்குரியவை. அவற்றப் பரிசுத்தக் காணிக்கையாக கர்த்தரைத் துதிப்பதற்காகக் கொடுக்க வேண்டும். 25 ஐந்தாவது ஆண்டில் அம்மரத்திலுள்ள கனியை நீங்கள் உண்ணலாம். அம்மரம் உங்களுக்காக மேலும் மேலும் பழங்களைத் தரும். உனது தேவனாகிய கர்த்தர் நானே.
26 “இரத்தம் இருக்கிற இறைச்சியை நீங்கள் உண்ணக் கூடாது.
“மாயவேலைகளைப் பயன்படுத்தவோ, அல்லது எதிர்காலத்தைப்பற்றி அறிய மந்திர, தந்திர வழிகளில் முயற்சி செய்யவோ கூடாது.
27 “உன் முகத்தில் வளருகிற முடியையும், தாடியையும் மழிக்கக் கூடாது. 28 மரித்து போனவர்களின் நினைவாக உன் உடலில் கீறி அடையாளம் உருவாக்காதே. உன் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளாதே. நானே கர்த்தர்.
29 “உனது மகள் வேசியாகும்படி விடாதே. அவளை நீ மதிக்கவில்லை என்பதையே அது காட்டும். உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படி விடாதே. இத்தகைய பாவம் உன் நாட்டில் காணப்படக்கூடாது.
30 “எனது ஓய்வு நாளில் நீங்கள் வேலை செய்யக்கூடாது. என் பரிசுத்தமான இடத்தை நீங்கள் மதிக்க வேண்டும். நானே கர்த்தர்.
31 “மந்திரவாதிகளிடமும் செத்தவர்களிடமும் தொடர்புகொள்வதாகக் கூறுபவர்களிடமும் புத்திமதி கேட்டு செல்லாதீர்கள். அவர்கள் உங்களைத் தீட்டுப்படுத்துவார்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
32 “முதியவர்களுக்கு மரியாதை கொடு. அவர்கள் அறைக்குள் வரும்போது எழுந்து நில். உங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துங்கள். நானே கர்த்தர்.
33 “உனது நாட்டில் வாழும் அயல்நாட்டுக்காரர்களுக்குக் கெடுதல் செய்யாதே. 34 நீ உனது நாட்டாரை மதிப்பதுபோலவே அந்நியர்களையும் மதிக்க வேண்டும். நீ உன்னையே நேசிப்பது போல அந்நியர்களையும் நேசிக்க வேண்டும். ஏனென்றால் நீங்களும் முன்பு எகிப்தில் அந்நியராயிருந்தீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
35 “நியாய விசாரணையின்போது நடு நிலமையில் இருங்கள். அளக்கும்போதும், நிறுக்கும்போதும் நேர்மையாக இருங்கள். 36 உங்கள் கூடைகளும், ஜாடிகளும் சரியான அளவுள்ளவையாக இருக்கட்டும். உங்கள் எடைக் கற்களும், தராசும் பொருட்களைச் சரியாக எடை போடட்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எகிப்திலிருந்து உங்களை நானே வெளியே அழைத்து வந்தேன்.
37 “எனது கட்டளைகளையும், எனது விதிகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நானே கர்த்தர்” என்று கூறினார்.
விக்கிரக ஆராதனைக்கு எதிரான எச்சரிக்கை
20 கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இவற்றையும் கூற வேண்டும். உங்கள் நாட்டில் உள்ளவர்களில் இஸ்ரவேலரில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எவனாவது தன் பிள்ளைகளை போலிதெய்வமாகிய மோளேகுக்கு அர்ப்பணித்தால் அவன் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். 3 நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் தன் பிள்ளைகளை மோளேகுக்குக் கொடுத்தபடியால், எனது பரிசுத்தமான பெயருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதை அவன் காட்டிவிட்டான். அவன் எனது பரிசுத்த இடத்தைத் தீட்டாக்கிவிட்டான். 4 அவனை பொது ஜனங்கள் தங்களை விட்டு ஒதுக்கித் தள்ளிவிடலாம். மோளேகுக்குத் தன் பிள்ளையைக் கொடுத்த அவனைப் புறக்கணிக்கலாம். அவர்கள் அவனைக் கொல்லாமல் விடலாம். 5 ஆனால் நான் அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் எதிராக இருப்பேன். அவனை மற்ற ஜனங்களிடம் இருந்து பிரித்து வைப்பேன். என்னிடம் நம்பிக்கையில்லாமல் இருக்கிற எவனையும், மோளேக்குப் பின் செல்லுகிற எவனையும் நான் ஒதுக்கி வைப்பேன்.
6 “மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன்.
7 “நீங்கள் சிறப்பானவர்களாயிருங்கள். உங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் நான் பரிசுத்தராய் இருக்கிறேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். 8 என் கட்டளைகளை நினைவில் கொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படியுங்கள். நானே கர்த்தர். நான் உங்களை பரிசுத்தமாக்குவேன்.
9 “எவனாவது தன் தந்தை அல்லது தாயைச் சபித்தால் அவன் கொலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்வதினால் அவனது மரணத்துக்கு அவனே பொறுப்புள்ளவனாகிறான்.
பாலியல் பாவங்களுக்கான தண்டனைகள்
10 “எவனாவது பிறனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் இருவரும் விபசாரம் என்னும் பாவத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த ஆண், பெண் இருவரும் கொலைச் செய்யப்பட வேண்டும். 11 எவனாவது தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்களின் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அது அவன் தன் தந்தையை நிர்வாணப்படுத்தியது போன்றதாகும்.
12 “ஒருவன் தன் மருமகளோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மிக மோசமான பாலியல் பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.
13 “ஒருவன் இன்னொரு ஆணோடு, பெண்ணோடு பாலின உறவு கொள்வது போன்று பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் பெரும் பாவம் செய்தபடியால் அவர்கள் கொல்லப்பட வேண்டும். அவர்களே தம் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.
14 “ஒருவன் ஒரு தாயோடும் மகளோடும் பாலின உறவு கொண்டால் இதுவும் பெரிய பாலியல் பாவமாகும். ஜனங்கள் அவர்கள் மூவரையும் நெருப்பிலே போட்டுக் கொல்ல வேண்டும். இது போன்ற பாலியல் பாவங்கள் உங்கள் ஜனங்களிடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
15 “எவனாவது மிருகத்தோடு பாலின உறவு கொண்டிருந்தால் அவன் கொல்லப்பட வேண்டும். அந்த மிருகத்தையும் நீ கொன்றுபோட வேண்டும். 16 ஒரு பெண் மிருகத்தோடு பாலின உறவு கொண்டால் நீ அவளையும் அந்த மிருகத்தையும் கொன்றுவிட வேண்டும். அவர்களே தங்கள் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.
17 “ஒருவன் தன் சகோதரியையோ, சகோதரி முறையுள்ளவளையோ மணந்துகொண்டு அவளோடு பாலின உறவு கொள்வது வெட்ககரமான பாவமாகும். அவர்கள் பொது ஜனங்கள் மத்தியில் தண்டிக்கப்படுவதுடன், மற்ற ஜனங்களிடமிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். ஒருவன் தன் சகோதரியோடு பாலின உறவு கொண்ட பாவத்துக்காக அவன் தண்டிக்கப்பட வேண்டும்.
18 “ஒருவன் ஒரு பெண் மாதவிலக்காக இருக்கும்போது அவளுடன் பாலின உறவு கொண்டால் அவர்கள் இருவருமே தங்கள் ஜனங்களிடமிருந்து தனியே ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அவளது இரத்தப் போக்கை அவன் திறந்து விட்டிருக்கிறபடியால் அவர்கள் பாவம் செய்தவர்களாகிறார்கள்.
19 “நீங்கள் உங்கள் தந்தை அல்லது தாயின் சகோதரியோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. இது நெருங்கிய உறவோடு பாலின உறவு கொண்ட பாவத்திற்குரியது. உங்கள் பாவத்திற்கு நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
20 “ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் அது தகப்பனின் சகோதரனோடு பாலின உறவு கொண்டது போலாகும். அவனும் அவனுடைய தகப்பனின் சகோதரனின் மனைவியும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் குழந்தைகள் இல்லாமல் செத்துப்போவார்கள்.
21 “ஒருவன் தனது சகோதரனின் மனைவியை எடுத்துக்கொள்வது தவறானதாகும். இது அவன் தன் சகோதரனோடு பாலின உறவு கொள்வது போன்றதாகும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமற்போகும்.
22 “நீங்கள் எனது சட்டங்களையும் விதிகளையும் நினைவில் கொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் உங்கள் நாட்டிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அங்கு வாழும்போது எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிந்தால் அந்த நாடு உங்களை கக்கிவிடாது. 23 நான் மற்றவர்களை அந்நாட்டினின்று துரத்திவிடுகிறேன். ஏனென்றால் அவர்கள் இத்தகைய பாவங்களையெல்லாம் செய்கின்றனர். நான் அப்பாவங்களை வெறுக்கிறேன். எனவே அவர்களைப் போலவே நீங்களும் வாழாதீர்கள்! 24 அவர்களின் நாட்டை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என்று நான் கூறியிருக்கிறேன். அவர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன். இது உங்கள் நாடாகும். அது நன்மைகள் நிரம்பிய நாடாக இருக்கும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!
“நான் உங்களை என் சிறப்புக்குரிய ஜனங்களாக அழைத்திருக்கிறேன். மற்றவர்களைவிட உங்களை வித்தியாசமாக நடத்தியிருக்கிறேன். 25 எனவே நீங்கள் தீட்டுள்ள மிருகங்களிலிருந்து தீட்டு இல்லாத மிருகங்களையும், தீட்டுள்ள பறவைகளிலிருந்து தீட்டில்லாத பறவைகளையும், வேறுபடுத்தி நடத்த வேண்டும். தீட்டுளள்ள பறவைகளையும், மிருகங்ளையும், ஊர்ந்து செல்லுகின்றவற்றையும் உண்ணாதீர்கள். நான் அவற்றைத் தீட்டுள்ளதாகச் செய்திருக்கிறேன். 26 நான் உங்களை எனக்கென்று சிறப்பான மக்களாகச் செய்திருக்கிறேன்; எனவே நீங்கள் எனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும். ஏனென்றால் நான் பரிசுத்தமுள்ளவர். நானே கர்த்தர்!
27 “மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்” என்று கூறினார்.
ஆசாரியர்களுக்கான விதிகள்
21 கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது. 2 ஆனால் மரித்தவன் அவனது நெருங்கிய உறவினனாக இருந்தால் அவன் அந்தப் பிணத்தைத் தொடலாம். மரித்துபோனவர்கள் அவரது தாய் அல்லது தந்தை, மகன் அல்லது மகள், சகோதரன் அல்லது 3 திருமணமாகாத கன்னித் தன்மையுள்ள சகோதரி எனும் உறவினராக இருந்தால் ஆசாரியன் தீட்டு உள்ளவனாகலாம். திருமணம் ஆகாத சகோதரி என்றால் அவளுக்குக் கணவன் இல்லை. எனவே அவன் அவளுக்கு நெருக்கமானவனாகிறான். அவள் மரித்துப்போனால் அவன் தீட்டுள்ளவனாகலாம். 4 ஆனால் ஆசாரியனின் அடிமைகளுள் ஒருவன் மரித்து போனால் அதற்காக ஆசாரியன் தீட்டுள்ளவனாகக் கூடாது.
5 “ஆசாரியர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடியின் ஓரங்களை மழிக்கவோ கூடாது. தங்கள் உடலில் வெட்டி எவ்வித அடையாளக் குறிகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 6 இவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இவர்கள் தேவனின் பெயருக்கு மரியாதை செலுத்த வேண்டும், ஏனென்றால் இவர்கள் கர்த்தரின் தகன பலியையும் அப்பத்தையும் செலுத்துகிறவர்கள். எனவே, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
7 “விசேஷ வழியில் ஒரு ஆசாரியன் தேவனுக்குச் சேவை செய்கிறான். எனவே அவர்கள் வேசியையோ, கற்ப்பிழந்தவளையோ திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. 8 ஒரு ஆசாரியன் தேவனுக்கு விசேஷ வழியில் சேவை செய்கிறான். ஆகையால் நீங்கள் அவனை விசேஷமாக நடத்த வேண்டும். ஏனென்றால் அவன் பரிசுத்தமான பொருட்களை ஏந்திச் செல்பவன். பரிசுத்தமான அப்பத்தை கர்த்தருக்கு எடுத்து வருபவன். நான் பரிசுத்தமானவர்! நானே கர்த்தர். நான் உன்னையும் பரிசுத்தப்படுத்துவேன்.
9 “ஒரு ஆசாரியனின் மகள் வேசியானால் அவள் தனது பரிசுத்தத்தைக் குலைத்துகொள்வதுடன், தன் தந்தைக்கும் அவமானத்தைத் தேடித்தருகிறாள். அவளைச் சுட்டெரிக்க வேண்டும்.
10 “தலைமை ஆசாரியன் தன் சகோதரர்களுக்கிடையில் இருந்து தலைமை சிறப்பு பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவன், சிறப்பான உடைகளை அணிவதற்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அவன் தலையில் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கும். அவன் தனது துன்பங்களைப் பொது ஜனங்களிடம் வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. அவன் தன் தலை முடியை அதிகமாக வளரும்படிவிடவோ, தன் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது. 11 அவன் பிணத்தைத் தொட்டு தன்னைத் தீட்டுப் பண்ணிக்கொள்ளக் கூடாது. மரித்து போனது அவனது தாயாகவோ தந்தையாகவோ இருந்தாலும் பிணத்தின் அருகில் போகக்கூடாது. 12 தலைமை ஆசாரியன் தேவனின் பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போகக் கூடாது. அவன் அதனால் தீட்டாவதுடன், தேவனின் பரிசுத்தமான இடத்தையும் தீட்டாக்கிவிடுகிறான். அபிஷேக எண்ணெயானது தலைமை ஆசாரியனின் தலைமீது ஊற்றப்பட்டிருக்கிறபடியால், இது அவனை மற்றவர்களிடமிருந்து தனியே பிரித்துக் காட்டும். நானே கர்த்தர்!
13 “கன்னியான ஒரு பெண்ணை தலைமை ஆசாரியன் மணந்துகொள்ள வேண்டும். 14 விபச்சாரியான பெண்ணையோ, வேசியையோ, விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ மணந்துகொள்ளக் கூடாது. அவன் தன் சொந்த ஜனங்களிடமிருந்து ஒரு கன்னியான பெண்ணை மணந்துகொள்ள வேண்டும். 15 அப்பொழுது அவனது பிள்ளைகளை ஜனங்கள் மதிப்பார்கள். [b] கர்த்தராகிய நான் தலைமை ஆசாரியனை அவனது சிறப்புப் பணிகளுக்காகத் தனியாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.
16 கர்த்தர் மோசேயிடம், 17 “ஆரோனிடம் சொல்! உனது சந்ததியில் எவராவது அங்கக் குறைவுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் தேவனுக்கு சிறப்பு அப்பத்தை எடுத்துச் செல்ல தகுதியற்றவர்களாகிறார்கள். 18 உடல் உறுப்புகளிலே குறைவுள்ள யாரும் ஆசாரியனாகப் பணிச்செய்யக் கூடாது. எனக்குப் பலிசெலுத்தும் பொருள்களையும் கொண்டுவரக்கூடாது. குருடர், சப்பாணி, முகத்திலே வெட்டுக்காயங்கள் உள்ளவர்கள், கைகளும் கால்களும் அதிக நீளமாய் இருக்கிறவர்கள், 19 உடைந்த கைகளும், கால்களும் உடையவர்கள், 20 கூனர்கள், குள்ளர்கள், பூ விழுந்த கண்ணுள்ளவர்கள், சொறியர்கள், அசறு உள்ளவர்கள், விதை நசுங்கினவர்கள் ஆகியோர் ஆசாரியனாகத் தகுதியில்லாதவர்கள்.
21 “ஆரோனின் சந்ததியில் எவராவது இத்தகைய உடல்குறை உடையவர்களாக இருந்தால் அவர்கள் கர்த்தருக்கு எந்த பலிகளையும் கொடுக்க தகுதியற்றுப் போகிறார்கள். அவன் தேவனுக்கு சிறப்பான அப்பத்தை எடுத்துச் செல்ல முடியாது. 22 அவன் ஆசாரியர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதினால் பரிசுத்தமான அப்பத்தையும், மிகப்பரிசுத்தமான அப்பங்களையும் அவன் உண்ணலாம். 23 ஆனால் அவன் மிகவும் பரிசுத்தமான இடத்துக்குத் திரையைக் கடந்து போகமுடியாது. பலிபீடத்தின் அருகிலும் செல்ல முடியாது. ஏனென்றால் அவனிடம் குறையுள்ளது. அவன் எனது பரிசுத்தமான இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. கர்த்தராகிய நான் அந்த இடங்களை பரிசுத்தப்படுத்துகிறேன்!” என்று கூறினார்.
24 ஆகவே இவ்விதிமுறைகள் அனைத்தையும் ஆரோனுக்கும், ஆரோனின் பிள்ளைகளுக்கும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மோசே சொன்னான்.
2008 by World Bible Translation Center