Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 49-50

அம்மோனைப் பற்றிய செய்தி

49 அம்மோனியர்களைப்பற்றி கர்த்தர் இதைக் கூறுகிறார்,

“அம்மோனிய ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களுக்குப்
    பிள்ளைகள் இல்லையென்று நினைக்கிறீர்களா?
பெற்றோர்கள் மரித்தப்போது நாட்டை சுதந்தரித்துக்கொள்ள
    பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறீர்களா?
ஒருவேளை அதற்காகவேதான் மில்காம் காத்தின் நாட்டை எடுத்துக்கொண்டிருக்கலாம்.”

கர்த்தர் கூறுகிறார், “அம்மோனின் ரப்பாவிலே ஒரு காலம் வரும்.
    அப்போது ஜனங்கள் போரின் சத்தங்களைக் கேட்பார்கள்.
அம்மோனின் ரப்பா அழிக்கப்படும்.
    அது அழிந்த கட்டிடங்கள் நிறைந்த வெற்று மலையாகும்.
    அதைச் சுற்றியுள்ள பட்டணங்கள் எரிக்கப்படும்.
அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களைத் தம் சொந்த நாட்டை விட்டு விலகும்படி பலவந்தப்படுத்தினார்கள்.
    ஆனால் பிறகு, இஸ்ரவேல் அவர்களை விலகும்படி வற்புறுத்தி அவர்கள் தேசத்தை சுதந்தரிப்பர்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“எஸ்போன் ஜனங்களே அழுது புலம்புங்கள்! ஏனென்றால், ஆயி பட்டணம் அழிந்துக்கொண்டிருக்கிறது.
    அம்மோனது ராப்பாவின் பெண்களே அழுங்கள்!
சோகத்துக்குரிய ஆடையை அணிந்துக் கொண்டு அழுங்கள்.
    பாதுகாப்புக்காக நகரத்திற்கு ஓடுங்கள்.
ஏனென்றால், பகைவன் வந்துக்கொண்டிருக்கிறான்.
அவர்கள் மில்காம் என்ற தெய்வத்தை எடுத்துச் செல்வார்கள்.
    அவர்கள் மில்காமின் ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் எடுத்துச் செல்வார்கள்.
நீ உனது பலத்தைப்பற்றி பெருமைபட்டாய்.
    ஆனால் நீ உனது பலத்தை இழந்துக் கொண்டிருக்கிறாய்.
உனது பணம் உன்னை பாதுகாக்கும் என்று நம்புகிறாய்.
    எவரும் உன்னைத் தாக்கிட நினைக்கவும்மாட்டார்கள் என்று நினைக்கிறாய்.”
ஆனால் சர்வ வல்லையுள்ள கர்த்தர் இதனைக் கூறுகிறார்:
“எல்லாப் பக்கங்களிலுமிருந்தும் உனக்கு கஷ்டங்களை வரப்பண்ணுவேன்.
நீங்கள் அனவைரும் ஓடுவீர்கள்.
    எவராலும் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கமுடியாது.”

“அம்மோனிய ஜனங்கள் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்குக் கொண்டு போகப்படுவார்கள். ஆனால் நேரம் வரும். அப்போது நான் அம்மோனிய ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏதோம் பற்றிய செய்தி

இச்செய்தி ஏதோமைப் பற்றியது. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்:

“தேமானில் இனி ஞானமில்லையா?
    ஏதோமில் உள்ள ஞானிகள் நல்ல ஆலோசனைக் கூற முடிவதில்லையோ?
    அவர்கள் தம் ஞானத்தை இழந்துவிட்டார்கள்.
தேதானில் வாழ்கிற ஜனங்களே ஓடிப் போங்கள்! ஒளிந்துக்கொள்ளுங்கள்.
    ஏனென்றால், நான் ஏசாவை அவர்களின் தீமைகளுக்குத் தண்டிப்பேன்.

“வேலைக்காரர்கள் திராட்சைக் கொடிகளில் இருந்து திராட்சையைப் பறிக்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் கொடியில் சில திராட்சைகளை விட்டுவிடுவார்கள்.
இரவில் திருடர்கள் வந்தால்
    அவர்கள் எல்லாவற்றையும் எடுக்கமாட்டார்கள்.
10 நான் ஏசாவிலிருந்து எல்லாவற்றையும் எடுப்பேன்.
    நான் அவர்களின் அனைத்து மறைவிடங்களையும் கண்டுக்கொள்வேன்.
    அவன் என்னிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியாது.
அவனது பிள்ளைகள், உறவினர்கள், அயலார்கள் அனைவரும் மரிப்பார்கள்.
11 தன் பிள்ளைகளை பராமரிக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
அவனுடைய மனைவிகள் தாங்கள் சார்ந்திருக்க எவரும் இல்லாதிருப்பார்கள்.”

12 இதுதான் கர்த்தர் சொல்கிறது: “சில ஜனங்கள் தண்டிக்கப்படத்தக்கவர் அல்ல. ஆனால் அவர்கள் துன்புறுகிறார்கள். ஆனால் ஏதோம் நீ தண்டிக்கப்படத் தகுதி உள்ளவன். எனவே, நீ உண்மையாகத் தண்டிக்கப்படுவாய். உனக்கேற்ற தண்டனையிலிருந்து நீ தப்பிக்கமாட்டாய் நீ தண்டிக்கப்படுவாய்.” 13 கர்த்தர் கூறுகிறார், “எனது சொந்த வல்லமையினால், நான் இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். போஸ்றா பட்டணம் அழியப்போகிறது என்று நான் வாக்குக் கொடுக்கிறேன். அந்த பட்டணம் பாறைக் குவியலாக அழியும். ஜனங்கள் மற்ற நகரங்களுக்கு ஏற்படும் அழிவுகளைப்பற்றி சொல்லும்போது இதனை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள். ஜனங்கள் அப்பட்டணத்தை நிந்திப்பார்கள். போஸ்றாவைச் சுற்றியுள்ள அனைத்து பட்டணங்களும் என்றென்றும் அழிக்கப்படும்.”

14 நான் கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தையைக் கேட்டேன்.
    கர்த்தர் நாடுகளுக்கு ஒரு தூதுவனை அனுப்பினார்.
“உங்கள் படைகளை ஒன்று சேருங்கள்! போருக்குத் தயாராகுங்கள்!
    ஏதோம் நாட்டிற்கு எதிராகச் செல்லுங்கள்!
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 ஏதோமே, நான் உன்னை ஜனங்களுக்குள்ளே முக்கியமற்றவனாகச் செய்வேன்.
    ஒவ்வொருவரும் உன்னை வெறுப்பார்கள்.
16 ஏதோமே, நீ மற்ற தேசங்களை பயமுறுத்தினாய்.
    எனவே நீ முக்கியமானவன் என்று நினைத்தாய்.
ஆனால் நீ முட்டாளானாய்.
    உன் பெருமை உன்னை வஞ்சித்திருக்கிறது.
    ஏதோமே, நீ மலைகளின் உச்சியில் இருக்கிறாய்.
    நீ பாறைகளும் குன்றுகளும் பாதுகாப்பாக இருக்கிற இடத்தில் இருக்கிறாய்.
ஆனால், நீ உனது வீட்டை கழுகின் கூட்டைப்போன்று உயரத்தில் கட்டினாலும் நான் உன்னைப் பிடிப்பேன்.
    நான் உன்னை அங்கிருந்து கீழே கொண்டு வருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

17 “ஏதோம் அழிக்கப்படும்.
    ஜனங்கள் அழிந்த நகரங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.
    அந்த அழிந்த நகரங்களில் ஜனங்கள் பிரமித்து பிரமிப்பார்கள்.
18 சோதோம் கொமோரா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களைப்போன்று ஏதோம் அழிக்கப்படும்.
    அங்கே ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

19 “யோர்தான் ஆற்றின் கரையிலுள்ள அடர்த்தியான புதர்களில் இருந்து சில வேளைகளில் சிங்கம் வரும். ஜனங்கள் தங்கள் ஆடுகளையும் மாடுகளையும் விட்டிருக்கிற வயல்களில் அச்சிங்கம் போகும். நான் அந்தச் சிங்கத்தைப் போன்றிருக்கிறேன். நான் ஏதோமுக்குப் போவேன். நான் அந்த ஜனங்களைப் பயப்படுத்துவேன். அவர்களை ஓடும்படிச்செய்வேன். அவர்களது இளைஞர்கள் யாரும் என்னைத் தடுக்கமுடியாது. எவரும் என்னைப்போல இரார். எவரும் எனக்குச் சவால் விடமுடியாது. அவர்களில் எந்த மேய்ப்பர்களும் (தலைவர்கள்) எனக்கு எதிரே நிற்கமுடியாது.”

20 எனவே, ஏதோம் ஜனங்களுக்கு என்ன செய்ய வேண்டும்
    என்று கர்த்தர் திட்டமிட்டுள்ளாரோ அதைக் கவனி!
தீமான் ஜனங்களுக்கு கர்த்தர் என்ன செய்யவேண்டும்
    என்று முடிவு செய்தாரோ, அதை கவனி!
ஏதோமின் மந்தையில் (ஜனங்கள்) உள்ள குட்டிகளைப் பகைவர்கள் இழுத்துப் போடுவார்கள்.
ஏதோமின் மேய்ச்சல் நிலம் அவர்கள் என்ன செய்தார்களோ
    அதினிமித்தம் வெறுமையாய்விடும்.
21 ஏதோமின் வீழ்ச்சியின் ஓசையில்
    பூமி அதிரும்.
அவர்களின் அழுகை
    செங்கடல் வழி முழுவதும் கேட்கும்.

22 கர்த்தர், மிருகத்தைத் தாக்கப்போகிற கழுகு மேலே பறப்பதுப்போன்று இருப்பார்.
    போஸ்ராவின் மேல் சிறகை விரிக்கிற கழுகைப்போன்று கர்த்தர் இருப்பார்.
அந்நேரத்தில் ஏதோமின் வீரர்கள் மிகவும் அஞ்சுவார்கள்.
    குழந்தையைப் பெறுகிற பெண்ணைப்போன்று அவர்கள் பயத்தால் அழுவார்கள்.

தமஸ்குவைப்பற்றியச் செய்தி

23 இச்செய்தி தமஸ்குவைப்பற்றியது:

“ஆமாத், அர்ப்பாத் ஆகிய பட்டணங்கள் அஞ்சுகின்றன.
    அவர்கள் பயப்படுகிறார்கள்.
    ஏனென்றால், அவர்கள் கெட்டச் செய்திகளைக் கேட்டனர்.
அவர்கள் அதைரியப்படுகிறார்கள்.
    அவர்கள் கவலைப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள்.
24 தமஸ்கு நகரம் பலவீனமாயிற்று.
    ஜனங்கள் ஓட விரும்புகின்றனர்.
    ஜனங்கள் திகில் அடைய தயாராகின்றனர்.
குழந்தை பெறும் பெண்களைப்போன்று
    ஜனங்கள் வலியும் துன்பமும் அடைகின்றனர்.

25 “தமஸ்கு மகிழ்ச்சியுள்ள நகரமாயிருக்கிறது.
    ஜனங்கள் அந்த ‘மகிழ்ச்சி நகரை’ இன்னும் விட்டுப் போகவில்லை.
26 எனவே, இளைஞர்கள் நகரின் பொதுச் சதுரங்களில் மரிப்பார்கள்.
    அந்த நேரத்தில் அவளது வீரர்கள் எல்லோரும் கொல்லப்படுவார்கள்.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
27 “தமஸ்குவின் சுவர்களில் நான் நெருப்பை வைப்பேன்.
    அது பெனாதாத்தின் பலமான கோட்டைகளை முழுவதுமாக எரிக்கும்.”

கேதார் மற்றும் காத்சோர் பற்றியச் செய்தி

28 இது கேதார் மற்றும் காத்சோர் கோத்திரத்தை ஆள்வோர்களைப்பற்றிய செய்தி. பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களைத் தோற்கடித்தான்.

கர்த்தர் கூறுகிறார்.

“போய் கேதாரின் கோத்திரத்தை தாக்கு.
    கிழக்கின் ஜனங்களை அழியுங்கள்.
29 அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் எடுக்கப்படும்.
    அவர்களின் கூடாரம் மற்றும் அவர்களின் செல்வமெல்லாம் எடுக்கப்படும்.
    பகைவர்கள் அவர்களது ஒட்டகங்களை எடுப்பார்கள்.
இதனை ஆண்கள் அவர்களிடம் சத்தமிடுவார்கள்.
    ‘நம்மைச் சுற்றிலும் பயங்கரமானவை நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
30 ‘வேகமாக ஓடுங்கள்!
    காத்சோரின் ஜனங்களே, ஒளிந்துக்கொள்ள நல்ல இடத்தைப் பாருங்கள்’
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
‘நேபுகாத்நேச்சார் உனக்கு எதிராக திட்டமிட்டான்.
    உன்னைத் தோற்கடிக்க அவன் ஒரு நல்ல திட்டத்தை நினைத்தான்.’

31 “பாதுகாப்பை உணர்கிற ஒரு தேசம் இருக்கிறது.
    அத்தேசம் பாதுகாப்பை உணர்கிறது.
அந்தத் தேசத்திற்கு வாசலோ வேலியோ பாதுகாப்புக்கு இல்லை.
அவற்றின் அருகில் எவரும் இல்லை.
    கர்த்தர், ‘அத்தேசத்தைத் தாக்குங்கள்!’ என்றார்.
32 பகைவர்கள் அவர்களின் ஒட்டகங்களைத் திருடுவார்கள்,
    அவர்களின் பெரிய மந்தையை எடுத்துக்கொள்வார்கள்.
நான் பூமியின் மூலைகளுக்கு அவர்களை ஓடச் செய்வேன்.
    நான் அவர்களுக்குப் பயங்கரமான துன்பங்களை எல்லா பக்கத்திலிருந்தும் கொண்டுவருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33 “ஆசோர் தேசம், காட்டு நாய்கள் மட்டும் வாழத்தக்க இடமாக மாறும்.
அந்த இடத்தில் எவரும் வாழ்வதில்லை.
    அது என்றென்றும் காலியான வனாந்தரமாக இருக்கும்.”

ஏலாமைப் பற்றியச் செய்தி

34 யூதாவின் அரசனான சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப நாட்களில், தீர்க்கதரிசி எரேமியா கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். அச்செய்தி ஏலாம் தேசத்தைப்பற்றியது.

35 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்.
“நான் விரைவில் ஏலாமின் வில்லை உடைப்பேன்.
    வில் ஏலாமின் பலமான ஆயுதம்.
36 நான் ஏலாமிற்கு எதிராக நான்கு காற்றுகளைக் கொண்டு வருவேன்.
    நான் அவற்றை வானத்தின் நான்கு மூலைகளில் இருந்தும் கொண்டுவருவேன்.
நான்கு காற்றுகளும் வீசுகிற பூமியின் அனைத்து
    இடங்களுக்கும் ஏலாம் ஜனங்களை அனுப்புவேன்.
எல்லா தேசங்களுக்கும் ஏலாமின் கைதிகள் கொண்டுச்செல்லப்படுவார்கள்.
37 நான் ஏலாமை, அவர்களின் பகைவர்கள்
    கவனிக்கும்போதே துண்டுகளாக உடைப்பேன்.
அவர்களைக் கொல்ல விரும்பும் ஜனங்களின் முன்னால்
    ஏலாமை நான் உடைப்பேன்.
நான் அவர்களுக்குப் பயங்கரமானவற்றைக் கொண்டு வருவேன்.
    நான் எவ்வளவு கோபமாக இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“நான் ஏலாமைத் துரத்தும்படி வாளை அனுப்புவேன்.
    நான் அவர்கள் அனைவரையும் கொல்லும்வரை அந்த வாள் அவர்களைத் துரத்தும்.
38 நான் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறேன் என்பதை ஏலாமிற்குக் காட்டுவேன்.
    நான் அவளது அரசனையும் அவளது அதிகாரிகளையும் அழிப்பேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39 “ஆனால் எதிர்காலத்தில், நான் ஏலாமிற்கு நன்மை நடக்கும்படிச் செய்வேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பாபிலோன் பற்றியச் செய்தி

50 பாபிலோனைப் பற்றியும் பாபிலோனிய ஜனங்களைப் பற்றியும் கர்த்தர் பேசிய வார்த்தை இது. கர்த்தர் இந்த வார்த்தையை எரேமியா மூலமாகப் பேசினார்:

“அனைத்து தேசங்களுக்கும் இதனை அறிவியுங்கள்!
    ஒரு கொடியைத் தூக்கிச் செய்தியை அறிவியுங்கள்!
முழுச் செய்தியையும் பேசுங்கள்:
    சொல்லுங்கள்: ‘பாபிலோன் தேசம் கைப்பற்றப்படும்.
    அந்நிய தெய்வமாகிய பேல் தெய்வம் அவமானம் அடைவான்.
    பொய்த் தெய்வமாகிய மெரொதாக் தெய்வம் மிகவும் பயப்படுவான்.
பாபிலோனின் விக்கிரகங்கள் அவமானம் அடையும்.
    அவளது தெய்வங்களின் விக்கிரகங்கள் பயங்கரத்தால் நிறைந்திருக்கும்.’
வடக்கிலிருந்து ஒரு தேசம் பாபிலோனைத் தாக்கும்.
    அத்தேசம் பாபிலோனைக் காலியான வனாந்தரம் போலாக்கும்.
அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
    அங்கிருந்து மனிதர்களும் மிருகங்களும் வெளியே ஓடுவார்கள்.”
கர்த்தர் கூறுகிறார்: “அந்த நேரத்தில்,
    இஸ்ரவேல் ஜனங்களும் யூதாவின் ஜனங்களும் சேர்வார்கள்.
அவர்கள் அழுவார்கள்.
அவர்கள் கூடி அழுவார்கள்.
    அவர்களுடைய தேவனாகிய கர்த்தரைத் தேட அவர்கள் போவார்கள்.
சீயோனுக்கு எப்படி போகவேண்டும் என்று அந்த ஜனங்கள் கேட்பார்கள்.
    அந்தத் திசையில் அவர்கள் போகத் தொடங்குவார்கள்.
ஜனங்கள் சொல்லுவார்கள், ‘வாருங்கள், கர்த்தருடன் நாம் ஒன்று சேர்வோம்.
    நாம் என்றென்றும் நிலைத்திருக்கும்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம்.
    என்றென்றும் மறக்கமுடியாதபடி ஒரு ஒப்பந்தத்தை நாம் செய்வோம்.’

“எனது ஜனங்கள் காணாமல் போன ஆட்டைப்போன்று இருக்கிறீர்கள்.
    அவற்றின் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தவறான வழியில் வழிநடத்துகின்றனர்.
அவர்களின் தலைவர்கள் அவர்களை மலைகளிலும் குன்றுகளிலும் அலைய வைத்தார்கள்.
    அவர்களது ஆறுதலுக்குரிய இடம் எதுவென்று அவர்கள் மறந்தார்கள்.
எவர்கள் என் ஜனங்களைக் கண்டார்களோ அவர்களை காயப்படுத்தினார்கள்.
    அப்பகைவர்கள் ‘நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை’ என்று சொன்னார்கள்.
‘அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப்
    பாவம் செய்தார்கள்.
கர்த்தர் தாமே அவர்களுடைய உண்மையான இளைப்பாறும் இடம்.
    கர்த்தர் தாமே அவர்களது முற்பிதாக்கள் நம்பின தேவன்.’

“பாபிலோனை விட்டு ஓடுங்கள்.
    பாபிலோனிய ஜனங்களின் தேசத்தை விட்டு விலகுங்கள்.
    மந்தையை வழிநடத்திச் செல்லும் வெள்ளாடுகளைப் போன்று இருங்கள்.
நான் வடக்கிலிருந்து பல தேசங்களை ஒன்று சேர்ப்பேன்.
இந்தத் தேசங்களின் குழு பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிடத் தயாராகும்.
வடக்கிலிருந்து வரும் ஜனங்களால் பாபிலோன் கைப்பற்றப்படும்.
இத்தேசங்கள் பாபிலோன் மேல் பல அம்புகளை எய்யும்.
அந்த அம்புகள் போரிலிருந்து வெறுங்கைகளோடு
    திரும்பி வராத வீரர்களைப் போன்றிருக்கும்.
10 பகைவர்கள் கல்தேயர் ஜனங்களின் செல்வமெல்லாவற்றையும் எடுப்பார்கள்.
    அவ்வீரர்கள் அவர்கள் விரும்பும் எல்லாவற்றையும் எடுப்பார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

11 “பாபிலோனே, நீ சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தாய்.
    நீ என் நாட்டை எடுத்தாய்.
நீ ஒரு இளம்பசு தானியங்களுக்குள்
    புகுந்ததுப்போன்று சுற்றிலும் ஆடுகிறாய்.
குதிரைகள் செய்வதுப்போன்று உனது சிரிப்பு
    சந்தோஷ ஒலியாக உள்ளது.
12 ஆனால் உனது தாய் மிகவும் அவமானம் அடைவாள்.
    உன்னைப் பெற்ற பெண் சங்கடம் அடைவாள்.
எல்லா தேசங்களையும்விட பாபிலோன் குறைந்த முக்கியத்துவம் உடையது.
    அவள் காலியான, வறண்ட வனாந்தரம்போல் ஆவாள்.
13 கர்த்தர் அவரது கோபத்தைக் காட்டுவார்.
    எனவே அங்கே ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.
    பாபிலோன் முழுவதும் காலியாகும்.
பாபிலோனைக் கடந்துப்போகும் எவரும் பயப்படுவார்கள்.
    அது எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறதைப் பார்க்கும்போது அவர்கள் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.

14 “பாபிலோனுக்கு எதிராகப் போரிடத் தயாராகுங்கள்.
    வில்லோடுள்ள வீரர்கள் அனைவரும் பாபிலோன் மேல் அம்பை எய்யுங்கள்.
    உங்கள் அம்புகளில் எதையும் சேமிக்கவேண்டாம்.
பாபிலோன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறது.
15 பாபிலோனைச் சுற்றியுள்ள வீரர்களே வெற்றிக்குரலை எழுப்புங்கள்!
    பாபிலோன் முற்றுகையிடப்பட்டிருக்கிறது!
அவளது சுவர்களும் கோபுரங்களும் கீழே தள்ளப்படும்!
    கர்த்தர் அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
தேசங்களாகிய நீங்கள் பாபிலோனுக்கு
    பொருத்தமான தண்டனையைக் கொடுக்கவேண்டும்.
மற்ற தேசங்களுக்கு அவள் என்ன செய்தாளோ அவற்றை அவளுக்குச் செய்யுங்கள்.
16 பாபிலோனில் உள்ள ஜனங்களைத் தங்கள் விதையை விதைக்கவிடாதீர்.
    அவர்களை அறுவடையைச் சேகரிக்கவிடாதீர்.
பாபிலோனின் வீரர்கள் தம் நகரத்திற்கு பல கைதிகளைக் கொண்டு வந்திருக்கின்றனர்.
இப்போது பகைவரது வீரர்கள் வந்திருக்கிறார்கள்.
    எனவே, அந்தக் கைதிகள் திரும்பப்போயிருக்கிறார்கள்.
அக்கைதிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

17 “நாடு முழுவதும் சிதறி இருக்கிற மந்தையைப்போன்று
    இஸ்ரவேல் சிதறி இருக்கிறது.
இஸ்ரவேல் சிங்கங்களால் துரத்தப்படுகின்ற ஆடுபோன்று உள்ளது.
    அசீரியா அரசன் தாக்குவது முதல் சிங்கம் தாக்குவது போன்றது.
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் கடைசி சிங்கத்தைப்போன்று தாக்கி
    அதன் எலும்புகளை நொறுக்குவான்.
18 எனவே, இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
‘நான் விரைவில் பாபிலோன் அரசனையும் அவனது நாட்டையும் தண்டிப்பேன்.
    நான் அசீரியா அரசனைத் தண்டித்ததுப்போன்று அவனைத் தண்டிப்பேன்.

19 “‘நான் இஸ்ரவேலை அவர்களின் சொந்த வயல்களுக்கு மீண்டும் கொண்டுவருவேன்.
    அப்பொழுது அவன் கர்மேல் மலையிலும் பாசான் நாட்டிலும் விளைந்த உணவை உண்ணுவான்.
    அவன் உண்டு நிறைவுப்பெறுவான்.
    எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அவன் உண்ணுவான்.’”
20 கர்த்தர் கூறுகிறார், “அந்த நேரத்தில், இஸ்ரவேலின் குற்றத்தைக் கண்டுப்பிடிக்க ஜனங்கள் மிகக் கடுமையாக முயலுவார்கள்.
    ஆனால் அங்கே குற்றம் இருக்காது.
யூதாவின் பாவங்களை கண்டுப்பிடிக்க அவர்கள் முயலுவார்கள்.
    ஆனால் எந்தப் பாவத்தையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
ஏனென்றால், நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவிலிருந்து உயிர் பிழைத்தவர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்.
அவர்களது அனைத்துப் பாவங்களையும் நான் மன்னித்துவிடுகிறேன்.”

21 கர்த்தர் கூறுகிறார்: “மெரதாயீம் தேசத்தைத் தாக்கு!
    பேகோடில் வாழ்கின்ற ஜனங்களைத் தாக்கு!
அவர்களைத் தாக்கு!
    அவர்களைக் கொல்! அவர்களை முழுமையாக அழி!
    நான் உனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்.

22 “நாடு முழுவதிலும் யுத்தத்தின் போரொலியைக் கேட்கலாம்.
    அது பேரழிவின் ஓசையாகும்.
23 பாபிலோன், ‘பூமியின் சம்மட்டி’
    என்று அழைக்கப்பட்டது.
ஆனால் இப்போது ‘சம்மட்டி’ உடைக்கப்படுகிறது.
    எல்லா தேசங்களையும்விட அதிகமாக அழிக்கப்பட்ட தேசம் பாபிலோன்.
24 பாபிலோனே, நான் உனக்காகக் கண்ணி வைத்தேன்.
    அதனைத் தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் நீ மாட்டிக்கொண்டாய்.
நீ கர்த்தருக்கு எதிராகச் சண்டையிட்டாய்.
    எனவே நீ கண்டுப்பிடிக்கப்பட்டு பிடிப்பட்டாய்.
25 கர்த்தர் தமது பொருட்கள் சேமிக்கும் அறையைத் திறந்திருக்கிறார்.
    கர்த்தர் அவருடைய கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டு வந்தார்.
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் அந்த ஆயுதங்களைக் கொண்டுவந்தார்.
    ஏனென்றால், அவர் செய்யவேண்டிய வேலை இருக்கிறது.
    கல்தேய ஜனங்களின் தேசத்தில் அவர் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.

26 “பாபிலோனுக்கு எதிராகத் தொலை தூரத்திலிருந்து வா.
    அவள் தனது தானியங்களைச் சேகரித்து வைத்திருக்கிற அறைகளை உடைத்துத் திற.
பாபிலோனை முழுமையாக அழி.
    எவரையும் உயிரோடுவிடாதே.
அவர்களது உடல்களைத் தானியக் கதிர்களைக் குவியலாக்குவதுப்போல் குவியலாக்கு.
27 பாபிலோனில் உள்ள எல்லா இளங்காளையையும் (இளைஞரையும்) கொல்.
    அவர்கள் வெட்டப்படட்டும்.
அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கான நேரம் வந்திருக்கிறது.
எனவே இது அவர்களுக்கு மிகக் கேடாகும்.
    இது அவர்கள் தண்டிக்கப்படுவதற்குரிய காலம்.
28 ஜனங்கள் பாபிலோனை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
    அவர்கள் தேசத்திலிருந்து தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் சீயோனுக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் ஒவ்வொருவரிடமும் கர்த்தர் செய்தவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
    கர்த்தர் பாபிலோனுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
    பாபிலோன் கர்த்தருடைய ஆலயத்தை அழித்தது.
    எனவே இப்போது கர்த்தர் பாபிலோனை அழித்துக்கொண்டிருக்கிறார்.

29 “அம்புகளை எய்யும் ஆட்களைக் கூப்பிடு.
    பாபிலோனைத் தாக்கும்படி அவர்களிடம் சொல்.
நகரத்தை முற்றுகையிடும்படி அவர்களிடம் சொல்.
    எவரையும் தப்பிக்கவிடாதே.
அவள் செய்த தீமைக்கு, திருப்பிக்கொடுங்கள்.
    அவள் மற்ற தேசங்களுக்கு எவற்றைச் செய்தாளோ அவற்றை அவளுக்குச் செய்யுங்கள்.
பாபிலோன் கர்த்தருக்கு மரியாதை செய்யவில்லை.
    பாபிலோன் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டது.
    எனவே பாபிலோனைத் தண்டித்துவிடு.
30 பாபிலோனின் இளைஞர்கள் தெருவில் கொல்லப்படுவார்கள்.
    அந்த நாளில் அவளது வீரர்கள் எல்லாம் கொல்லப்படுவார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

31 “பாபிலோனே, நீ மிகவும் வீண்பெருமை உள்ளவள்.
    நான் உனக்கு எதிராக இருக்கிறேன்” எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
“நான் உங்களுக்கு எதிராக இருக்கிறேன்.
    நீங்கள் தண்டிக்கப்படுவதற்குரிய காலம் வந்திருக்கிறது.
32 வீண் பெருமையுள்ள பாபிலோனே நீ இடறி விழுவாய்.
    நீ எழ எவரும் உதவி செய்யமாட்டார்கள்.
நான் அவளது பட்டணங்களில் நெருப்பை வைப்பேன்.
    அவளைச் சுற்றியுள்ள எல்லோரையும் நெருப்பு முழுமையாக எரிக்கும்.”

33 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் அடிமைகளாக இருக்கிறார்கள்.
    பகைவர் அவர்களைக் கைப்பற்றினார்கள்.
    பகைவர் இஸ்ரவேலைப் போக விடமாட்டார்கள்.
34 ஆனால் தேவன் அந்த ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவார்.
    அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
அவர் அவர்களைப் பலமாகப் பாதுகாப்பார்! அவர்களை அவர் பாதுகாப்பார்.
    அதனால் அவர் அந்த தேசத்தை ஓய்வுக்கொள்ளச் செய்வார்.
ஆனால் அங்கே பாபிலோனில் வாழ்கிற ஜனங்களுக்கு ஓய்வு இராது.”

35 கர்த்தர் கூறுகிறார்,
“வாளே, பாபிலோனில் வாழ்கிற ஜனங்களைக் கொல்.
வாளே, அரசனின் அதிகாரிகளையும்
    பாபிலோனின் ஞானிகளையும் கொல்”
36 வாளே, பாபிலோனின் ஆசாரியர்களையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கொல்.
    அவர்கள் முட்டாள்களைப்போன்று ஆவார்கள்.
வாளே, பாபிலோனின் வீரர்களைக் கொல்.
    அவர்கள் பயங்கரத்தினால் நிறைந்திருப்பார்கள்.
37 வாளே, பாபிலோனின் குதிரைகளைக் கொன்றுப்போட்டு பாபிலோனிய இரதங்களை அழித்துப்போடு.
வாளே, பிற தேசங்களில் இருந்து கூலிக்குக் கொண்டுவரப்பட்ட வீரர்களையும் கொல்.
    அவ்வீரர்கள் பயந்தப் பெண்களைப் போன்றுள்ளார்கள்.
வாளே, பாபிலோனின் பொக்கிஷங்களை அழி.
    அப்பொக்கிஷங்கள் எடுத்துச்செல்லப்படும்.
38 வாளே, பாபிலோனின் தண்ணீரைத் தாக்கு.
    அத்தண்ணீர் வற்றிப்போகும்.
பாபிலோனில் நிறைய நிறைய விக்கிரகங்கள் உள்ளன.
    பாபிலோன் ஜனங்கள் முட்டாள்கள் என்பதை அந்த விக்கிரகங்கள் காட்டுகிறது.
    எனவே அந்த ஜனங்களுக்குத் தீமை ஏற்படும்.
39 “பாபிலோன் மீண்டும் ஜனங்களால் நிறையாது.
காட்டு நாய்கள், நெருப்புக் கோழிகள், பிற காட்டு மிருகங்கள் அங்கு வாழும்.
    ஆனால் ஒருக்காலம் மீண்டும் மனிதர்கள் அங்கே வாழமாட்டார்கள்.
40 தேவன் முழுமையாக சோதோம் கொமோரா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் அழித்தார்.
    இப்பொழுது அந்நகரங்களில் ஜனங்கள் எவரும் வாழவில்லை.
அதே வழியில் பாபிலோனில் ஜனங்கள் எவரும் வாழவில்லை.
    அங்கே வாழ ஜனங்கள் எவரும் என்றென்றும் போகமாட்டார்கள்.

41 “பார்! வடக்கிலிருந்து ஜனங்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
    அவர்கள் வல்லமையான நாட்டிலிருந்து வருகிறார்கள்.
உலகின் சுற்றிலும் உள்ள பல அரசர்கள் சேர்ந்து வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
42 அவர்களது படைகள் வில்லும் ஈட்டிகளும் வைத்திருக்கிறார்கள்.
    வீரர்கள் கொடுமையானவர்கள்.
    அவர்களிடம் இரக்கம் இல்லை.
வீரர்கள் தங்கள் குதிரைகளின்மேல் சவாரி செய்கிறார்கள்.
    அந்த ஓசை இரைச்சலிடுகிற கடலைப் போன்றுள்ளது.
அவர்கள் தம் இடங்களில் நிற்கிறார்கள்.
போருக்குத் தயாராக இருக்கிறார்கள்.
    அவர்கள் பாபிலோன் நகரமே, உன்னைத் தாக்கத் தயாராக இருக்கிறார்கள்.
43 பாபிலோன் அரசன் அப்படைகளைப்பற்றிக் கேள்விபட்டான்.
    அவன் மிகவும் பயம் அடைந்தான்.
அவன் கைகள் நகரமுடியாத அளவிற்குப் பயந்தான்.
    குழந்தைப்பெறுகிற பெண்ணின் வயிறுபோன்று அவனது வயிறு வலித்தது.”

44 கர்த்தர் கூறுகிறார்:
    “சில நேரங்களில் யோர்தான் நதிக்கரையிலுள்ள அடர்ந்த புதர்களிலிருந்து சிங்கம் வரும்.
ஜனங்கள் தங்கள் மிருகங்களை விட்டிருக்கிற வயல்களில் சிங்கம் நடந்துப்போகும்.
    (அங்குள்ள மிருகங்கள் வெளியே ஓடும்).
நான் அந்தச் சிங்கத்தைப்போன்று இருப்பேன்.
    நான் பாபிலோனை அதன் தேசத்திலிருந்து விரட்டுவேன்.
இதைச் செய்வதற்கும் நான் யாரைத் தேர்ந்தெடுப்பேன்.
    என்னைப்போல் எவரும் இல்லை.
    எனக்குச் சவால்விட எவரும் இல்லை.
    (எனவே நானே இதனைச் செய்வேன்).
எந்த மேய்ப்பனும் வந்து என்னைத் துரத்திடான்.
    நான் பாபிலோன் ஜனங்களைத் துரத்துவேன்.”

45 பாபிலோனுக்கு என்ன செய்யவேண்டும்
    என்று கர்த்தர் திட்டமிட்டிருக்கிறார் என்பதை கவனி.
பாபிலோனிய ஜனங்களுக்கு
    கர்த்தர் செய்யவேண்டுமென முடிவு செய்திருப்பதை கவனி.
பகைவர்கள் பாபிலோனின் மந்தையிலிருந்து (ஜனங்கள்) சிறிய குட்டிகளை இழுத்துச் செல்வார்கள்.
    பாபிலோனின் மேய்ச்சல் நிலங்கள் கர்த்தரால் முழுவதுமாக அழிக்கப்படும்.
46 பாபிலோன் விழும்.
    அந்த வீழ்ச்சி பூமியை அதிரச்செய்யும்.
பாபிலோனின் அழுகையின் சத்தத்தை
    அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் கேள்விப்படுவார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center