Beginning
பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி
13 ஆமோத்சின் மகனான ஏசாயாவுக்கு தேவன் பாபிலோன்பற்றிய சோகச் செய்தியைக் காட்டினார்.
2 தேவன், “எதுவும் வளராத அந்த இடத்தில், மலை மீது கொடியை ஏற்றுங்கள்.
அந்த மனிதர்களை அழையுங்கள்.
உங்கள் கைகளை அசையுங்கள்.
அவர்கள் முக்கியமானவர்களுடைய வாசல்களில் நுழையும்படி கூறுங்கள்!” என்றார்.
3 தேவன்: “நான் அவர்களை ஜனங்களிடமிருந்து பிரித்திருக்கிறேன்.
நானே அவர்களுக்கு ஆணையிடுவேன்.
நான் கோபமாக இருக்கிறேன்.
ஜனங்களைத் தண்டிக்க எனது மிகச் சிறந்தவர்களை கூட்டிச்சேர்த்தேன். மகிழ்ச்சியுள்ள இவர்களைப்பற்றி பெருமிதமடைகிறேன்!.
4 மலைகளில் உரத்த சத்தம் உள்ளது.
அச்சத்தத்தை கவனியுங்கள்! அது பல மனிதர்களின் சத்தம் போலுள்ளது.
பல அரசாங்கங்களிலிருந்து ஜனங்கள் அங்கு கூடியிருக்கின்றார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் படைகளைக் கூட்டியிருக்கிறார்.
5 கர்த்தரும் அவரது படைகளும் தூர நாடுகளிலிருந்து வந்துள்ளனர்.
அவர்கள் பூமியின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வருகிறார்கள்.
கர்த்தர் தன் கோபத்தைக் காட்ட இவர்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்.
இந்தப் படை முழு நாட்டையும் அழிக்கும்” என்றார்.
6 கர்த்தருடைய விசேஷ நாள் நெருங்குகிறது. எனவே அழுங்கள். உங்களுக்காகச் சோகமாக இருங்கள். பகைவர்கள் உங்கள் செல்வங்களைப் பறிக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவன் இதனை நிறைவேற்றுவார். 7 ஜனங்கள் தம் தைரியத்தை இழப்பார்கள். ஜனங்களை அச்சம் பெலவீனப்படுத்தும்.
8 ஒவ்வொருவரும் அஞ்சுவார்கள். இந்த அச்சம் அவர்களின் வயிற்றில் பிரசவ வேதனைபோன்ற துன்பத்தைத் தரும். அவர்களின் முகங்கள் நெருப்பைப்போன்று சிவக்கும். ஒருவரையொருவர் பார்த்து பிரமித்துப்போவார்கள். காரணம் எல்லாருடைய முகங்களிலும் அச்சம் நிரம்பியிருக்கும்.
பாபிலோனுக்கு எதிரான தேவனுடைய தீர்ப்பு
9 பார்! கர்த்தருடைய விசேஷ நாள் வருகிறது! இது பயங்கரமான நாள். தேவன் மிகவும் கோபம் அடைந்து, நாட்டினை அழிப்பார். பாவம் செய்த அனைவரையும் தேவன் அழித்துப்போடுவார். 10 வானம் இருட்டாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் ஒளி வீசாது.
11 தேவன் கூறுகிறார்: “உலகத்திற்கு கேடு ஏற்பட நான் காரணமாக இருப்பேன். கெட்டவர்களை அவர்களது பாவத்துக்காகத் தண்டிப்பேன். ஆணவம் கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை விடும்படி செய்வேன். மற்றவர்களுக்கு அற்பமாகத் தெரியும்படி செயல்புரிகிறவர்களின் வாயாட்டத்தை நான் தடுப்பேன். 12 கொஞ்சம்பேர் மட்டுமே விடுபடுவார்கள். அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். தங்கத்தைப்போன்று அரிதாக இருப்பார்கள். இவர்கள் சுத்தமான தங்கத்தைவிட விலைமதிப்புள்ளவர்கள். 13 எனது கோபத்தால் வானத்தை நடுங்கவைப்பேன். பூமி தன் இடத்திலிருந்து நகரும்”. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் கோபத்தைக் காட்டும் நாளில் இவை அனைத்தும் நிறைவேறும். 14 பிறகு, காயம்பட்ட மானைப்போல, பாபிலோனை விட்டு ஜனங்கள் ஓடுவார்கள். மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல, அவர்கள் ஓடுவார்கள். ஒவ்வொருவரும் திரும்பி தங்கள் சொந்த நாட்டிற்கும் ஜனங்களிடமும் ஓடுவார்கள். 15 ஆனால் பாபிலோனிய ஜனங்களைப் பகைவர்கள் துரத்துவார்கள். பகைவன் ஒருவனைப் பிடிக்கும்போது, அவனை வாளால் கொல்வான். 16 அவர்களது வீடுகளிலுள்ள அனைத்தும் களவாடப்படும். அவர்களின் மனைவிகள் கற்பழிக்கப்படுவார்கள். அவர்களின் சிறிய குழந்தைகள், ஜனங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அடித்துக் கொல்லப்படுவார்கள். 17 தேவன் கூறுகிறார்: “கவனி, மீதியானியப் படைகள் பாபிலோனைத் தாக்க நான் காரணமாக இருப்பேன். மீதியானியப் படைகளுக்குப் பொன்னும், வெள்ளியும் கொடுத்தாலும்கூட தங்கள் தாக்குதலை நிறுத்தாது. 18 பாபிலோனிலுள்ள இளைஞர்களைப் படை வீரர்கள் தாக்கிக் கொல்வார்கள். படை வீரர்கள் குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள். படை வீரர்கள் சிறு பிள்ளைகளிடமும் தயவோடு இருக்கமாட்டார்கள். பாபிலோன் அழிக்கப்படும். அது சோதோம் கொமோரா ஆகியவற்றின் அழிவைப்போல் இருக்கும். தேவன் இந்த அழிவுக்குக் காரணமாக இருப்பார். எதுவும் விடுபடாது. 19 “எல்லா இராஜ்யங்களையும்விட பாபிலோன் மிகவும் அழகானது. பாபிலோனிய ஜனங்கள் தமது நகரத்தைப்பற்றிப் பெருமையோடு இருக்கிறார்கள். 20 ஆனால் தொடர்ந்து பாபிலோன் அழகுடையதாக இருக்காது. வருங்காலத்தில் அங்கு ஜனங்கள் தொடர்ந்து வாழமாட்டார்கள். அரேபியர்கள் அங்கே தமது கூடாரங்களை அமைக்கமாட்டார்கள். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை அங்கே மேய்ச்சலுக்குக் கொண்டுவரமாட்டார்கள். 21 அங்கே வனாந்திரத்திலுள்ள காட்டு மிருகங்கள் மட்டுமே வாழும். பாபிலோனின் வீடுகளில் ஜனங்கள் வசிக்கமாட்டார்கள். வீடு முழுவதும் ஆந்தைகளும், பெரிய பறவைகளும் வசிக்கும். காட்டு ஆடுகள் வீடுகளில் விளையாடும். 22 காட்டு நாய்களும், நரிகளும் பாபிலோனில் மிகப்பெரிய அழகான கட்டிடங்களில் ஊளையிடும். பாபிலோன் அழியும். பாபிலோனின் முடிவு அருகிலுள்ளது. பாபிலோனின் அழிவை நான் தாமதமாக்க விடமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.
இஸ்ரவேலர்கள் விட்டிற்குத் திரும்புவார்கள்
14 வருங்காலத்தில், கர்த்தர் மீண்டும் யாக்கோபிடம் தமது அன்பைக் காட்டுவார். கர்த்தர் மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களைத் தேர்ந்தெடுப்பார். அந்த நேரத்தில், கர்த்தர் அந்த ஜனங்களுக்கு அவர்களின் நாட்டைக் கொடுப்பார். பிறகு யூதரல்லாத ஜனங்கள் யூத ஜனங்களோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். இரண்டு ஜனங்களும் சேர்ந்து ஒரே குடும்பமாக யாக்கோபின் குடும்பமாக ஆவார்கள். 2 அந்த நாடுகள், இஸ்ரவேல் ஜனங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டு செல்லும். மற்ற நாடுகளில் உள்ள அந்த ஆண்களும், பெண்களும் இஸ்ரவேலருக்கு அடிமைகளாக ஆவார்கள். கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களைத் தமது அடிமைகளாக இருக்க வற்புறுத்தினார்கள். ஆனால் இந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நாடுகளைத் தோற்கடித்து, அவர்கள் மேல் ஆட்சி செய்கின்றனர். 3 கர்த்தர் உங்களது கடின வேலைகளை எடுத்துப்போட்டு உங்களுக்கு ஆறுதலைத் தருவார். கடந்த காலத்தில் நீங்கள் அடிமைகளாக இருந்தீர்கள். மனிதர்கள் உங்களைக் கடினமான வேலை செய்யும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் கர்த்தர் உங்கள் கடின வேலைகளை முடிவுக்குக் கொண்டுவருவார்.
பாபிலோனிய அரசனைப்பற்றிய பாடல்
4 அந்த நேரத்தில், பாபிலோன் அரசனைப்பற்றிய இந்தப் பாடலை பாடத் துவங்குங்கள்:
அரசன் நம்மை ஆளும்போது, ஈனமாக ஆண்டான்.
ஆனால் இப்போது அவனது ஆட்சி முடிந்துவிட்டது.
5 கர்த்தர் தீய அரசர்களின் கொடுங்கோலை உடைப்பார்.
கர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார்.
6 கோபத்தில் பாபிலோனிய அரசன் ஜனங்களை அடித்தான்.
ஜனங்களை அடிப்பதை அவன் ஒருபோதும் நிறுத்தவில்லை.
அத்தீய அரசன் ஜனங்களைக் கோபத்துடன் ஆண்டான்.
அவன் எப்பொழுதும் ஜனங்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.
7 ஆனால் இப்பொழுது, முழு நாடும் ஓய்வெடுக்கிறது. நாடு அமைதியாக உள்ளது.
இப்பொழுது ஜனங்கள் கொண்டாடத் துவங்குகின்றனர்.
8 நீ தீய அரசனாக இருந்தாய்.
இப்பொழுது நீ முடிந்து போனாய்.
பைன் மரங்களும் கூட மகிழ்ச்சியாய் உள்ளன.
லீபனோனில் உள்ள கேதுரு மரங்களும் மகிழ்ச்சியாய் உள்ளது.
“அரசன் எங்களை வெட்டிச் சாய்த்தான்.
ஆனால் இப்பொழுது அரசனே விழுந்துவிட்டான்.
அவன் இனி ஒருபோதும் நிற்கமாட்டான்” என்று மரங்கள் சொல்கின்றன.
9 மரணத்தின் இடமான பாதாளம் அதிர்கிறது.
ஏனென்றால் நீ வந்துகொண்டிருக்கிறாய்.
உனக்காக பூமியில் இருந்த அனைத்துத் தலைவர்களின் ஆவிகளையும்
பாதாளம் எழுப்பிக்கொண்டிருக்கிறது.
அரசர்களை அவர்களின் சிங்காசனத்திலிருந்து
பாதாளம் எழுந்து நிற்கச் செய்துகொண்டிருக்கிறது.
உன் வருகைக்காக அவை தயாராக உள்ளன.
10 இந்த அனைத்துத் தலைவர்களும் உன்னைக் கேலிசெய்வார்கள்.
“இப்பொழுது எங்களைப்போன்று நீயும் மரித்த உடல்.
இப்பொழுது நீ சரியாக எங்களைப்போன்றே இருக்கிறாய்” என்று அவர்கள் சொல்வார்கள்.
11 உங்கள் தற்பெருமை பாதாளத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும்.
உங்கள் சுரவீணைகளிலிருந்து வரும் இசை, உங்கள் பெருமைக்குரிய ஆவியின் வரவைப்பற்றிக் கூறும்.
பூச்சிகள் உங்கள் உடலை உண்ணும்.
பூச்சிகளின்மேல் படுக்கையைப்போல் நீ படுத்திருப்பாய்.
புழுக்கள் உங்கள் உடலைப் போர்வையைப்போல் மூடும்.
12 நீ விடிவெள்ளியைப்போல் இருந்தாய்.
ஆனால், நீ வானத்திலிருந்து விழுந்துவிட்டாய்.
கடந்த காலத்தில், பூமியில் உள்ள எல்லா நாடுகளும், உனக்குமுன் பணிந்திருந்தது.
ஆனால், இப்போது நீ வெட்டித் தள்ளப்பட்டிருக்கிறாய்.
13 நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே,
“நான் மிக உன்னதமான தேவனைப்போலாவேன்.
நான் வானங்களுக்கு மேலே போவேன்.
நான் எனது சிங்காசனத்தை தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேல் வைப்பேன்.
நான் பரிசுத்தமான மலையான சாபோன் மீது அமர்வேன்.
நான், அந்த மலைமேலே தெய்வங்களைச் சந்திப்பேன்.
14 நான், மேகங்களிலுள்ள பலிபீடத்திற்கு ஏறிப்போவேன்.
நான் மிக உன்னதமான தேவனைப்போல் ஆவேன்” என்று சொன்னாய்.
15 ஆனால் அது நடைபெறவில்லை.
நீ தேவனோடு வானத்துக்குப்போகவில்லை.
நீ மரணத்தின் இடமான பாதாளத்தின் பள்ளத்துக்குத் தள்ளப்பட்டாய்.
16 ஜனங்கள் உன்னைக் கவனிக்கிறார்கள்.
உன்னைப்பற்றி சிந்திக்கிறார்கள்.
நீ ஒரு மரித்துப்போன உடல் என்று ஜனங்கள் பார்க்கின்றனர் ஜனங்கள் சொல்லுகிறார்கள்,
“பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் பெரும் பீதிக்கு உள்ளாக்கிய அதே மனிதன் இவன்தானா?
17 இதே மனிதன்தான் நகரங்களை அழித்து,
நாடுகளை வனாந்திரமாகச் செய்தவனா?
இதே மனிதன்தான் போரில் ஜனங்களைச் சிறைப்பிடித்து
அவர்களைத் தங்கள் வீடுகளுக்குப்போகவிடாமல் செய்தவனா?”
18 பூமியில் ஒவ்வொரு அரசனும் மகிமையோடு மரித்திருக்கின்றனர்.
ஒவ்வொரு அரசனும் தனது சொந்தக் கல்லறையை வைத்திருக்கிறான்.
19 ஆனால் தீய அரசனான நீ, உனது கல்லறையிலிருந்து தூக்கி எறியப்பட்டாய்.
நீ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளையைப்போல் வெட்டித் தூர எறியப்பட்டாய்.
நீ போர்க்களத்தில் விழுந்து மரித்த மனிதனைப்போலிருக்க மற்ற வீரர்கள் மிதித்துக்கொண்டு சென்றனர்.
இப்பொழுது, நீ மற்ற மரித்த மனிதர்களைப்போலிருக்கிறாய்.
கல்லறைத் துணிகளுக்குள் விழுந்து கிடக்கிறாய்.
20 மற்ற அரசர்கள் பலர் மரித்திருக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் தம் சொந்தக் கல்லறைகளை வைத்துள்ளனர்.
ஆனால், நீ அவர்களோடு சேரமாட்டாய்.
ஏனென்றால், நீ உன் சொந்த நாட்டை அழித்துவிட்டாய்.
நீ உன் சொந்த ஜனங்களைக் கொன்றாய்.
நீ செய்ததுபோல உன் பிள்ளைகள் தொடர்ந்து, அழிவு வேலைகளைச் செய்யமாட்டார்கள். உன் பிள்ளைகள் நிறுத்தப்படுவார்கள்.
21 அவனது பிள்ளைகளைக் கொலை செய்யத் தயாராகுங்கள்.
அவர்களின் தந்தை குற்றவாளி.
அதனால் அவர்களைக் கொல்லுங்கள்.
அவனது பிள்ளைகள் மீண்டும் நாட்டின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
அவர்கள் மீண்டும் தமது நகரங்களால் உலகத்தை நிரப்பமாட்டார்கள்.
22 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறினார், “அந்த ஜனங்களுக்கு எதிராக நான் நின்று சண்டையிடுவேன். புகழ்பெற்ற நகரமான பாபிலோனை நான் அழிப்பேன். பாபிலோனிலுள்ள அனைத்து ஜனங்களையும் நான் அழிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான் அழிப்பேன்” என்றார்.இவை அனைத்தையும் கர்த்தர் தாமே கூறினார்.
23 கர்த்தர்: “நான் பாபிலோனை மாற்றுவேன். அந்த இடம் ஜனங்களுக்காக இல்லாமல் மிருகங்களுக்குரியதாகும். அந்த இடம் தண்ணீருள்ள பள்ளத்தாக்கு ஆகும். நான் அழிவு என்னும் துடைப்பத்தை எடுத்து பாபிலோனைத் துடைத்துப்போடுவேன்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
தேவன் அசீரியாவையும் தண்டிப்பார்
24 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்திருக்கிறார். “நான் வாக்குறுதிக் கொடுக்கிறேன். நான் நினைத்தது போலவே இவை அனைத்தும் நிகழும். நான் திட்டமிட்ட வழியிலேயே இவை அனைத்தும் சரியாக நிகழும். 25 எனது நாட்டிலுள்ள அசீரிய அரசனை நான் அழிப்பேன். என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன். அந்த அரசன் எனது ஜனங்களை அவனது அடிமைகளாக்கினான். அவர்களின் பின் கழுத்தின்மேல் நுகத்தடியைப் பூட்டியிருக்கிறான். யூதா ஜனங்களின் கழுத்திலிருந்து அந்தத் தடி நீக்கப்படும். அந்தப் பாரம் விலக்கப்படும். 26 எனது ஜனங்களுக்காக நான் திட்டமிட்டுள்ளது இதுதான். அனைத்து நாடுகளையும் தண்டிக்க எனது புயத்தை பயன்படுத்துவேன்” என்று கர்த்தர் சொன்னார்.
27 கர்த்தர் தனது திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அதனை எவரும் தடுக்க இயலாது. கர்த்தர் தனது கைகளை உயர்த்தி ஜனங்களைத் தண்டிக்கும்போது எவரும் அவரைத் தடுக்கமுடியாது.
பெலிஸ்தியாவுக்கான தேவனுடைய செய்தி
28 இந்தத் துன்பச்செய்தியானது, ஆகாஸ் அரசன் மரித்த ஆண்டில் கொடுக்கப்பட்டது.
29 பெல்ஸ்தியா நாடே உன்னை அடித்த அரசன் மரித்துப்போனதால் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். ஆனால் நீ உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கமாட்டாய். அவனது ஆட்சி முடிந்துவிட்டது என்பது உண்மை. ஆனால் அரசனின் மகன் வந்து ஆட்சி செய்வான். இது, ஒரு பாம்பு அதை விட ஆபத்தான பாம்மைப் பெற்றது போன்றிருக்கும். இந்த புதிய அரசன் விரைவும் ஆபத்தும் கொண்டு பாம்புபோல உங்களுக்கு இருப்பான்.
30 ஆனால் எனது ஏழை ஜனங்கள் பாதுகாப்புடன் உணவு உண்பார்கள். அவர்களின் பிள்ளைகளும் பாதுகாப்பாக இருப்பார்கள். எனது ஏழை ஜனங்கள் படுத்திருந்து பாதுகாப்பை உணர்வார்கள். ஆனால் உனது குடும்பத்தை நான் பட்டினியோடு கொல்வேன். மீதியுள்ள உனது ஜனங்கள் மடிந்துப்போவார்கள்.
31 நகர வாசலருகில் உள்ள ஜனங்களே, கதறுங்கள்!
நகரத்திலுள்ள ஜனங்களே, கதறுங்கள்!
பெலிஸ்தியாவிலுள்ள அனைத்து ஜனங்களும் நடுங்குவார்கள்.
உங்கள் தைரியம் சூடான மெழுகுபோல் உருகிவிடும்.
வடக்கே பாருங்கள்!
அங்கே புழுதி மேகம் இருக்கிறது!
அசீரியாவிலிருந்து படையொன்று வந்துகொண்டிருக்கிறது!
அந்தப் படையிலுள்ள அனைவரும் பலம் கொண்டவர்கள்!
32 அந்தப் படை தம் நாட்டிற்கு தூதுவர்களை அனுப்பும்.
அந்தத் தூதுவர்கள் தம் ஜனங்களிடம், “பெலிஸ்தியா தோற்கடிக்கப்பட்டது.
ஆனால் கர்த்தர் சீயோனைப் பலப்படுத்தினார்.
அவரது ஏழை ஜனங்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று அறிவிப்பார்கள்.
மோவாபிற்கு தேவனுடைய செய்தி
15 இது மோவாயைப்பற்றி துக்கமான செய்தி.
ஒரு இரவு, ஆர், மோவாப் ஆகியவற்றிலிருந்து படைகள் செல்வங்களை எடுத்தனர்.
அந்த இரவில் நகரம் அழிக்கப்பட்டது.
ஒரு இரவு, கீர், மோவாப் ஆகியவற்றிலிருந்து படைகள் செல்வங்களை எடுத்தனர்.
அந்த இரவில் நகரம் அழிக்கப்பட்டது.
2 அரசனது குடும்பத்தினரும் தீபோனின் ஜனங்களும் அழுவதற்குத் தொழுதுகொள்கிற இடங்களுக்குப்போனார்கள்.
மோவாப்பின் ஜனங்கள் நேபோவுக்காகவும் மேதெபாவுக்காகவும் அழுதனர்.
ஜனங்கள் தம் தலைகளையும், தாடிகளையும் மழித்துக்கொண்டு
அவர்கள் துக்கமாக இருப்பதாகக் காட்டினர்.
3 மோவாபின் எல்லா இடங்களிலும் வீட்டுக் கூரைகளிலும், தெருக்களிலும்,
ஜனங்கள் துக்கத்தின் ஆடைகளை அணிந்து அழுதுகொண்டிருந்தனர்.
4 எஸ்போன் மற்றும் எலெயாலே நகர ஜனங்கள் உரத்து அழுதுகொண்டிருந்தனர்.
வெகு தொலைவிலுள்ள யாகாஸ் நகரம் வரை அவர்களின் சத்தங்களை நீ கேட்கலாம்.
படைவீரர்களும்கூட கதறுகிறார்கள்.
அவர்கள் அச்சத்தால் நடுங்கிக்கொண்ருக்கிறார்கள்.
5 மோவாபுக்காக எனது இதயம் துயரத்தோடு அழுகிறது.
ஜனங்கள் பாதுகாப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வெகு தொலைவில் உள்ள சோவாருக்கு ஓடுகிறார்கள்.
அவர்கள் எக்லாத் செலிஸ்ஸியாவுக்கு ஓடுகிறார்கள். லூகித்துக்குப்போகும் மலைப்பாதையில் அவர்கள் ஏறிப்போகும்போது அழுகிறார்கள்.
ஓரோனாயீமின் வழியில் அவர்கள் நடந்து செல்லும்போது மிக உரத்து அழுகிறார்கள்.
6 ஆனால் நிம்ரீம் புருக் பாலைவனமாகக் காய்ந்திருக்கிறது.
அனைத்து தாவரங்களும் காய்ந்துள்ளன. எதுவும் பசுமையாக இல்லை.
7 எனவே, ஜனங்கள் தமக்குச் சொந்தமானவற்றைச் சேகரித்துக்கொண்டு மோவாபை விட்டு விலகுகிறார்கள்.
அவர்கள் அவற்றைச் சுமந்துகொண்டு பாப்லர்கிரீக்கின் எல்லையைக் கடக்கின்றனர்.
8 மோவாபின் எல்லா இடங்களிலும் அழுகையைக் கேட்கலாம்.
வெகு தொலைவிலுள்ள எக்லாயிம் வரை ஜனங்கள் அழுதுகொண்டிருந்தனர்.
பெரேலீம் நகரத்தில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருந்தனர்.
9 தீமோனின் தண்ணீரானது இரத்தத்தால் நிறைந்திருக்கும்.
தீமோனுக்கு மேலும் அதிகக் கேடுகளை நான் (கர்த்தர்) கொண்டுவருவேன்.
மோவாபில் வாழ்கிற சில ஜனங்கள் பகைவரிடமிருந்து தப்பியிருக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களை உண்ண சிங்கங்களை அனுப்புவேன்.
16 நீங்கள் நாட்டின் அரசனுக்கு அன்பளிப்பை அனுப்பவேண்டும். நீங்கள் சேலாவிலிருந்து வனாந்தரம் வழியாக சீயோன் மகளின் மலைக்கு (எருசலேம்) ஒரு ஆட்டுக்குட்டியை அனுப்புங்கள்.
2 மோவாபின் பெண்கள் அர்னோன் ஆற்றை கடக்க முயன்றனர்.
அவர்கள் உதவிக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடுகிறார்கள்.
மரத்திலிருந்து கூடு விழுந்த பிறகு, அதை இழந்த பறவைகளைப்போன்றிருக்கின்றனர்.
3 “எங்களுக்கு உதவுங்கள்!
என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்!
மதிய வெயிலிலிருந்து நிழலானது எங்களைக் காப்பாற்றுவது போன்று எங்கள் பகைவரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
நாங்கள் எங்கள் பகைவர்களிடமிருந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்.
எங்களை ஒளித்து வையுங்கள்.
எங்களை எமது பகைவர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள்
4 மோவாபிலிருந்த ஜனங்கள் தங்கள் வீடுகளிலிருந்து விலக பலவந்தப்படுத்தப்பட்டனர்.
எனவே, அவர்கள் உங்கள் நாட்டில் வாழட்டும்.
அவர்களின் பகைவர்களிடமிருந்து அவர்களை மறைத்துவையுங்கள்”
என்று அவர்கள் சொல்கிறார்கள்.
கொள்ளையானது நிறுத்தப்படும்.
பகைவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.
மற்ற ஜனங்களைக் காயப்படுத்திய மனிதர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியே போவார்கள்.
5 பிறகு, புதிய அரசர் வருவார்.
அந்த அரசர் தாவீதின் குடும்பத்திலிருந்து வருவார். அவர் உண்மையுள்ளவராக இருப்பார்.
அவர் அன்பும் கருணையும் உள்ளவராக இருப்பார்.
அந்த அரசர் சரியாக நியாயந்தீர்ப்பார்.
அவர் சரியாகவும் நல்லதாகவும் உள்ளவற்றையே செய்வார்.
6 மோவாபிலுள்ள ஜனங்கள் பெருமையும் மேட்டிமையும் கொண்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம்.
அவர்கள் பிடிவாதமும் தற்பெருமையும் உடையவர்கள்.
அவர்களின் தற்பெருமைகள் வெற்று வார்த்தைகளாக உள்ளன.
7 மோவாப் நாடு முழுவதுமே இந்த அகங்காரத்தால் துன்புறும்.
மோவாபிலுள்ள அனைத்து ஜனங்களும் அலறுவார்கள், ஜனங்கள் துக்கம் அடைவார்கள்.
அவர்கள் கடந்துபோன காலத்தில் தாங்கள் கொண்டிருந்தவற்றின்மேல் ஆவல் கொள்வார்கள்.
அவர்கள் கிராரேசேத் ஊரில் செய்யப்பட்ட அத்தி அப்பங்களை விரும்புவார்கள்.
8 எஸ்போன் வயல்களும் சிப்மா ஊர் திராட்சைத் தோட்டங்களும் வளர முடியவில்லையே என்று வருத்தப்படுவார்கள்.
வெளிநாட்டு அரசர்கள் திராட்சைக் கொடிகளை வெட்டிப்போட்டனர்.
பகைப் படைகள் யாசேர் நகரம் வரையும் வானந்திரத்திலும் பரவி இருக்கின்றன.
அவர்கள் கடல் வரையிலும்கூடப் பரவி இருந்தனர்.
9 “நான் யாசேர் மற்றும் சிப்மா ஜனங்களோடு அழுவேன்,
ஏனென்றால், திராட்சைகள் அழிக்கப்பட்டுவிட்டன.
நான் எஸ்போனே மற்றும் எலெயாலே ஜனங்களோடு அழுவேன்.
ஏனென்றால், அங்கே அறுவடை நடைபெறாது.
கோடைகாலப் பழங்களும் இல்லாமல் போகும்.
மகிழ்ச்சி ஆரவாரங்களும் இல்லாமல் போகும்.
10 கர்மேலில் மகிழ்ச்சியும் பாடலும் இராது.
அறுவடைக் காலத்தில் அனைத்து மகிழ்ச்சியையும் நிறுத்துவேன்.
திராட்சையானது இரசமாக தயாராக உள்ளது.
ஆனால் அவை வீணாகப்போகும்.
11 எனவே நான் மோவாபுக்காக மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.
நான் கிர்கேரேசுக்காக மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.
நான் இந்த நகரங்களுக்காக மிக மிக வருத்தமாக இருக்கிறேன்.
12 மோவாபிலுள்ள ஜனங்கள் தொழுதுகொள்ளும் தம் இடங்களுக்குச் செல்வார்கள்.
ஜனங்கள் ஜெபம் செய்ய முயல்வார்கள்.
ஆனால், என்ன நடைபெறும் என்று பார்ப்பார்கள்.
அவர்கள் ஜெபம் செய்யக்கூட முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பார்கள்”.
13 பலமுறை, கர்த்தர் மோவாபைப்பற்றிய இச்செய்திகளைச் சொன்னார். 14 இப்பொழுதும் கர்த்தர் கூறுகிறார்: “மூன்று ஆண்டுகளில், (ஒரு கூலிக்காரன் தனது காலத்தை எண்ணுவதுபோன்று) அந்த ஜனங்கள் அனைவரும் அவர்களின் தற்பெருமைக்குரிய பொருட்களும் அழிந்துபோகும். அங்கு சிலரே மீதியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் பலராக இருக்கமாட்டார்கள்.”
ஆராமுக்கு தேவனுடைய செய்தி
17 தமஸ்குவிற்கான துயரச் செய்தி இது.தமஸ்குவுக்கு இவையனைத்தும் நிகழும் என்று கர்த்தர் கூறுகிறார்:
“தமஸ்கு இப்பொழுது நகரமாக இருக்கிறது.
ஆனால் தமஸ்கு அழிக்கப்படும்.
அழிக்கப்பட்டக் கட்டிடங்கள் மட்டுமே தமஸ்குவில் இருக்கும்.
2 ஆரோவேரின் நகரங்களைவிட்டு ஜனங்கள் விலகுவார்கள்.
காலியான அந்தப் பட்டணங்களில் ஆட்டு மந்தைகள் சுதந்திரமாகத் திரியும்.
அவற்றைத் தொந்தரவு செய்ய அங்கே யாரும் இருக்கமாட்டார்கள்.
3 எப்பிராயீமின் (இஸ்ரவேல்) அரணான நகரங்கள் அழிக்கப்படும்.
தமஸ்குவில் உள்ள அரசு முடிந்துவிடும்.
இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட அனைத்தும் சீரியாவிற்கு ஏற்படும்.
முக்கியமான ஜனங்கள் அனைவரும் வெளியே எடுத்துச்செல்லப்படுவார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவை அனைத்தும் நிகழும்” என்று கூறினார்.
4 “அந்தக் காலத்தில், யாக்கோபின் (இஸ்ரவேல்) செல்வம் அனைத்தும் போய்விடும்.
யாக்கோபு நோய்வாய்ப்பட்டதினால் பெலவீனமும் மெலிவும் கொண்ட மனிதனைப்போலாவான்.
5 “அந்தக் காலம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே தானிய அறுவடை நடைபெறுவதுபோல் இருக்கும். வேலைக்காரர்கள் வயலில் வளர்ந்த செடிகளை சேகரிக்கிறார்கள். பிறகு அவர்கள் செடிகளிலிருந்து தானியக் கதிர்களை வெட்டுகிறார்கள். பிறகு அவர்கள் தானியத்தைச் சேகரிக்கின்றனர்.
6 “ஜனங்கள் ஒலிவமரத்தில் அறுவடை செய்வதுபோன்று அந்தக் காலம் இருக்கும். ஜனங்கள் ஒலிவ மரத்திலிருந்து ஒலிவக் காய்களைப் பறிப்பார்கள். மரத்தின் உச்சியில் சில ஒலிவக் காய்களை அவர்கள் விட்டுவைப்பார்கள். நான்கு அல்லது ஐந்து ஒலிவக் காய்களை அவர்கள் உயரத்திலுள்ள கிளைகளில் விட்டுவிடுவார்கள். இதுபோலவே அந்த நகரங்களுக்கும் ஏற்படும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
7 அந்தக் காலத்தில், ஜனங்கள் தங்களைப் படைத்த தேவனை நோக்கிப் பார்ப்பார்கள். அவர்களின் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரைப் பார்க்கும். 8 அவர்களால் செய்யப்பட்ட பலிபீடங்களுக்குத் திரும்பமாட்டார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு தங்களால் அமைக்கப்பட்ட சிறப்பான தோட்டங்களுக்கும், பலிபீடங்களுக்கும் போகமாட்டார்கள்.
9 அந்தக் காலத்தில், கோட்டை நகரங்கள் எல்லாம் காலியாகும். இஸ்ரவேல் ஜனங்கள் வருவதற்கு முன்னால் அந்தத் தேசத்தில் மலைகளும் காடுகளும் இருந்தது போன்று அந்த நகரங்கள் இருக்கும். கடந்த காலத்தில், அனைத்து ஜனங்களும் ஓடிப்போனார்கள். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் அங்கு வந்துகொண்டு இருந்தனர். வரும்காலத்தில் மீண்டும் இந்தத் தேசம் காலியாகும். 10 இது நிகழும், ஏனென்றால், உங்களைப் பாதுகாக்கிற தேவனை நீங்கள் மறந்துவிட்டீர்கள். உங்கள் பாதுகாப்புக்குரிய இடமாக இருக்கும் தேவனை நீங்கள் நினைக்கவில்லை.
வெகு தொலைவிலுள்ள இடங்களிலிருந்து நீ சில நல்ல திராட்சைக் கொடிகளைக் கொண்டுவந்தாய். நீ அவற்றை நட்டு வைக்கலாம். ஆனால் அவை வளராது. 11 ஒரு நாள் உன் திராட்சைக் கொடிகளை நடுவாய். அவற்றை வளர்க்க முயல்கிறாய். மறுநாள் அக்கொடிகள் வளரத் தொடங்கும். ஆனால் அறுவடைக் காலத்தில் அச்செடிகளிலிருந்து பழங்களைப் பறிக்க செல்வாய். ஆனால் அனைத்தும் மரித்துப்போனதை காண்பாய். அனைத்து செடிகளையும் ஒரு நோய் அழித்துவிடும்.
12 ஏராளமான ஜனங்களை விசாரித்துக் கேள்!
அவர்கள் உரத்து கடல் இரைச்சலைப்போன்று அலறிக்கொண்டிருக்கிறார்கள்.
சத்தத்தைக் கேள், இது கடலில் அலைகள் மோதிக்கொள்வதைப்போன்றிருக்கும்.
13 ஜனங்களும் அந்த அலைகளைப்போன்று இருப்பார்கள்.
தேவன் அந்த ஜனங்களிடம் கடுமையாகப் பேசுவார்.
அவர்கள் வெளியே ஓடிப்போவார்கள்.
ஜனங்கள் காற்றால் துரத்தப்படுகிற பதரைப்போன்று இருப்பார்கள்.
ஜனங்கள் புயலால் துரத்தப்படுகிற துரும்பைப்போன்று இருப்பார்கள்.
காற்று அடிக்கும்போது பதர்கள் வெளியேறும்.
14 அந்த இரவு, ஜனங்கள் அஞ்சுவார்கள்.
காலைக்கு முன்னால், எதுவும் விடுபடாது.
எனவே, நம் பகைவர்கள் எதனையும் பெறமாட்டார்கள்.
அவர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள்.
ஆனால் அங்கு எதுவும் இராது.
2008 by World Bible Translation Center