Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் விண்ணப்பம்
86 நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன்.
கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
2 கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன்.
தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள்.
நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன்.
எனவே என்னைக் காப்பாற்றும்.
3 என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும்.
நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
4 ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன்.
என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள்.
5 ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர்.
உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள்.
நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும்.
7 கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன்.
8 தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது.
9 ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர்.
அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
10 தேவனே, நீர் மேன்மையானவர்!
நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர்.
நீரே, நீர் மட்டுமே தேவன்!
பெத்தேலில் யாக்கோபு
35 தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன் சகோதரனாகிய ஏசாவிற்குப் பயந்து ஓடிப்போனபோது உனக்குக் காட்சி தந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை அமைத்து அங்கு தேவனைத் தொழுதுகொள்” என்றார்.
2 எனவே, யாக்கோபு தன் குடும்பத்தார் வேலைக்காரர்கள் அனைவரிடமும், “உங்களிடம் உள்ள மரத்தாலும் உலோகங்களாலும் செய்யப்பட்ட அந்நிய தெய்வங்களையெல்லாம் அழித்துப்போடுங்கள். உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். 3 நாம் இந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குப் போகிறோம். அங்கே எனக்குத் துன்பத்தில் உதவிய தேவனுக்கு நான் பலிபீடம் கட்டப்போகிறேன். அந்த தேவன் நான் எங்கு போனாலும் என்னோடு இருக்கிறார்” என்றான்.
4 எனவே, ஜனங்கள் தம்மிடம் இருந்த அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதுகளில் அணிந்திருந்த வளையங்களையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவற்றை சீகேம் நகருக்கருகில் இருந்த ஒரு கர்வாலி மரத்தின் அடியிலே புதைத்துவிட்டான்.
தடை செய்யும் முயற்சி
17 தலைமை ஆசாரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். 18 அவர்கள் அப்போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர். 19 ஆனால் இரவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் சிறையின் கதவுகளைத் திறந்தான். தேவ தூதன் அப்போஸ்தலர்களை வெளியே அழைத்துச் சென்று அவர்களை நோக்கி, 20 “செல்லுங்கள். தேவாலயத்தில் போய் நில்லுங்கள். இப்புதிய வாழ்க்கையைக் குறித்த ஜீவ வார்த்தைகள் அனைத்தையும் மக்களுக்குக் கூறுங்கள்” என்றான். 21 அப்போஸ்தலர்கள் இதைக் கேட்டபோது அவ்வாறே கீழ்ப்படிந்து தேவாலயத்துக்குச் சென்றார்கள். அது அதிகாலை வேளையாக இருந்தது. அப்போஸ்தலர்கள் மக்களுக்குப் போதிக்க ஆரம்பித்தனர். தலைமை ஆசாரியனும் அவனது நண்பர்களும் தேவாலயத்துக்கு வந்தனர். யூதத் தலைவர்களும் எல்லா முக்கியமான யூத முதியவர்களும் கூடி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போஸ்தலர்களை அவர்களிடம் அழைத்து வருவதற்கெனச் சில மனிதர்களை அனுப்பினர். 22 அவர்கள் சிறைக்குப் போனபோது, அங்கு அப்போஸ்தலர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பிச் சென்று, யூத அதிகாரிகளுக்கு அதனை அறிவித்தனர். 23 அம்மனிதர்கள், “சிறை பூட்டித் தாளிடப்பட்டிருந்தது. சிறைவாயில்களருகே காவலர்கள் நின்றனர். ஆனால் நாங்கள் கதவுகளைத் திறந்தபோது சிறையில் யாருமில்லை!” என்றனர். 24 தேவாலயத்துக் காவலரின் தலைவனும் முக்கிய போதகர்களும் இதனைக் கேட்டனர். அவர்கள் குழப்பமுற்றனர். அவர்கள் ஆச்சரியமுற்று, “இதனால் என்ன நடக்கப்போகிறதோ?” என்றனர்.
25 பின் மற்றொரு மனிதன் வந்து, “கேளுங்கள்! நீங்கள் சிறையில் அடைத்த மனிதர்கள் தேவாலயத்துக்குள் நிற்கின்றனர். அவர்கள் மக்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கின்றனர்” என்று அவர்களுக்குக் கூறினான். 26 காவலர் தலைவனும், காவலரும் வெளியே வந்து அப்போஸ்தலரை அழைத்துச் சென்றனர். மக்களுக்குப் பயந்ததால் வீரர்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தவில்லை. மக்கள் சினம் கொண்டு கற்களாலெறிந்து அவர்களைக் கொல்லக்கூடுமென்று வீரர்கள் பயந்தனர்.
2008 by World Bible Translation Center