Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் பாடல்
29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார்.
என்றென்றும் கர்த்தரே அரசர்.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.
13 “தீக்கோழி வியப்புற்று அதன் சிறகுகளை அடிக்கும்.
ஆனால் தீக்கோழியால் பறக்க முடியாது, தீக்கோழியின் சிறகுகள் கொக்கின் சிறகுகளைப் போன்றவை அல்ல.
14 தீக்கோழி நிலத்தில் அதன் முட்டைகளை இடும்,
அவை மணலினுள் வெப்பமுறும்.
15 யாரேனும் அதன் முட்டைகளின்மேல் நடக்கக் கூடும் என்பதையோ,
சில காட்டு விலங்குகள் அவற்றை உடைக்கக்கூடும் என்பதையோ தீக்கோழி மறந்துவிடுகிறது.
16 தீக்கோழி அதன் குஞ்சுகளை விட்டுச் செல்கிறது.
அவை தனக்குரியனவல்ல என்பதைப்போல் அவற்றைக் கருதுகிறது (நடத்துகிறது).
அதன் குஞ்சுகள் மரித்துப்போனால், அது வருந்துவதில்லை.
அதன் உழைப்பு வீணானதுதான்.
17 ஏனெனில், நான் (தேவன்) தீக்கோழிக்கு ஞானத்தைக் கொடுக்கவில்லை.
தீக்கோழி முட்டாள்தனமானது, நான் அதனை அவ்வாறு படைத்திருக்கிறேன்.
18 ஆனால் தீக்கோழி ஓடுவதற்கென எழுந்திருக்கும்போது, அது குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் பார்த்துச் சிரிக்கும்.
ஏனெனில் எந்தக் குதிரையையும் விட அதனால் வேகமாக ஓட இயலும்.
19 “யோபுவே, நீ குதிரைக்கு அதன் வலிமையைக் கொடுத்தாயா?
அதன் பிடரியில் பிடரி மயிரை வளரச் செய்தாயா?
20 யோபுவே, நீ குதிரையை ஒரு வெட்டுக் கிளியைப்போல, வெகுதூரம் தாண்ட வைப்பாயா?
குதிரை உரக்க கனைக்கிறது, அது ஜனங்களைப் பயப்படுத்துகிறது.
21 குதிரை அதன் மிகுந்த வலிமையால் சந்தோஷப்படும்.
அது பூமியைத் தன் பாதங்களால் கீறி, விரைந்து போருக்கென ஓடி நுழையும்.
22 அச்சத்தைப் பார்த்துக் குதிரை நகைக்கும் அது அஞ்சுவதில்லை!
அது யுத்தத்திற்கஞ்சி (யுத்தத்திலிருந்து) ஓடுவதில்லை.
23 குதிரையின் புறத்தே வீரனின் அம்பறாத்தூணி அசையும்.
அதனை சவாரிச் செய்பவன் ஏந்தும் ஈட்டியும் போர்க்கருவிகளும் சூரியனின் ஒளியில் பிரகாசிக்கும்.
24 குதிரை மிகவும் உணர்ச்சிவசப்படுகிறது!
அது பூமியில் மிக விரைந்தோடுகிறது. எக்காள சத்தத்தைக் குதிரை கேட்கும்போது அதனால் அமைதியாக இருக்க இயலாது.
25 எக்காளம் ஒலிக்கும்போது, குதிரை ஆர்ப்பரிக்கும்.
அது யுத்தத்தைத் தூரத்திலேயே நுகரும்!
அது அதிகாரிகளின் கட்டளைகளையும் யுத்தத்தின் பிற ஒலிகளையும் கேட்கும்.
4 ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை. 5 ஊழியம் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் கர்த்தரிடமிருந்தே வருபவை. 6 மனிதரிடம் தேவன் செயல்படும் வழிகள் பல உண்டு. ஆனால் அவை அனைத்தும் நமக்குள் செயல்படுகிற தேவனிடமிருந்து வருபவை. நாம் ஒவ்வொன்றையும் செய்ய தேவன் நம்மில் செயல்படுகிறார்.
7 ஆவியானவரின் வரங்களில் சில ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும். பிறருக்கு உதவும்படியாய் ஆவியானவர் இதை ஒவ்வொருவருக்கும் அளிப்பார். 8 ஒருவனுக்கு ஞானத்துடன் பேசும் ஆற்றலைப் பரிசுத்த ஆவியானவர் வழங்குகிறார். அதே பரிசுத்த ஆவியானவர் அறிவோடு பேசும் ஆற்றலை இன்னொருவனுக்குக் கொடுக்கிறார். 9 அதே பரிசுத்த ஆவியானவர் விசுவாசத்தை ஒருவனுக்கு அளிக்கிறார். குணப்படுத்தும் வல்லமையை மற்றொருவனுக்கு அதே பரிசுத்த ஆவியானவர் தருகிறார். 10 அதிசயங்களைச் செய்யும் சக்தியை இன்னொரு மனிதனுக்கு ஆவியானவர் கொடுக்கிறார். இன்னொருவனுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லும் திறனையும், மற்றொருவனுக்கு நல்ல, தீய ஆவிகளின் வேறுபாட்டைக் காணும் திறனையும் அளிக்கிறார். பல்வேறு மொழிகளிலும் பேசும் ஆற்றலை ஒருவனுக்கும், அம்மொழிகளை விளக்கியுரைக்கும் திறமையை மற்றொருவனுக்கும் அளிக்கிறார். 11 ஒரே ஆவியானவரே இவற்றையெல்லாம் செய்கிறார். ஒவ்வொருவனுக்கும் எதனைக் கொடுக்க வேண்டும் என்பதை ஆவியானவரே தீர்மானிக்கிறார்!
கிறிஸ்துவின் சரீரம்
12 ஒருவனின் சரீரம் முழுமையான ஒன்றாக இருந்தாலும், அதில் பல உறுப்புகள் உண்டு. ஆம், சரீரம் பல உறுப்புகளால் ஆனது. ஆனால், அத்தனை உறுப்புகளும் ஒரே சரீரத்துக்குரியவை. கிறிஸ்துவும் அதைப் போன்றவர். 13 நம்மில் சிலர் யூதர்கள். மற்றும் சிலர் கிரேக்கர்கள். சிலர் அடிமைகள். சிலர் சுதந்திரமானவர்கள். ஆனால் நாம் எல்லாரும் ஒரே சரீரமாக ஒரே ஆவியானவர் மூலம் ஞானஸ்நானம் பெற்றோம். நாம் எல்லாரும் ஒரே ஆவியைப் பெற்றோம்.
2008 by World Bible Translation Center