Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 126

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

126 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது
    அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.
நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப்
    பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள்,
    “இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள்.
ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால்
    நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின்
    தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.
ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம்.
    ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும்,
    ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.

நெகேமியா 9:1-8

இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறார்கள்

பிறகு அதே மாதத்தின் 24வது நாள் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு நாள் உபவாசத்திற்காகக் கூடினார்கள். அவர்கள் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்தனர்; தங்கள் தலையில் சாம்பலைப் போட்டுக்கொண்டனர். இதன் மூலம் தாங்கள் துக்கமாகவும், கலக்கமாகவும் இருப்பதாகக் காட்டினார்கள். இஸ்ரவேல் சந்ததியினர் அயல் நாட்டினவர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் ஆலயத்தில் எழுந்து நின்று தங்களது பாவங்களையும் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டனர். அவர்கள் மூன்று மணி நேரம் எழுந்து நின்று, ஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். பிறகு மேலும் மூன்று மணிநேரம் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர். தங்கள் தேவனாகிய கர்த்தரை குனிந்து தொழுதுகொண்டனர்.

யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியர்களுடைய படிகளின் மேல் நின்றார்கள். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை உரத்தக்குரலில் அழைத்தார்கள். பிறகு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா ஆகியோர் ஜனங்களைப் பார்த்து பேசினார்கள். அவர்கள், “எழுங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்!” என்றனர்.

“தேவன் என்றென்றும் வாழ்கிறார்!
    தேவன் என்றென்றும் வாழ்வார்!
ஜனங்கள் உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்க வேண்டும்!
    உமது நாமம் எல்லாத் துதிக்கும் போற்றுதலுக்கும் மேலானதாக இருப்பதாக!.
நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்!
    நீர் வானத்தை உண்டாக்கினீர்!
நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்!
    நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்!
நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்!
நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்!
    தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்!
நீரே தேவனாகிய கர்த்தர்.
    நீர் ஆபிராமைத் தேர்ந்தெடுத்தீர்.
பாபிலோனிலுள்ள ஊரிலிருந்து அவரை வழிநடத்தினீர்.
    அவனது பெயரை ஆபிரகாம் என்று மாற்றினீர்.
அவன் உமக்கு உண்மையாகவும் நம்பிக்கையுடையவனாகவும் இருந்ததைக் கண்டீர்.
    நீர் அவனோடு ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டீர்.
நீர் அவனுக்கு கானானியர்,
ஏத்தியர், எமோரியர், பெரிசியர்,
எபூசியர், கிர்காசியர் ஆகியோரது நாடுகளைக் கொடுப்பதாக வாக்களித்தீர்.
    ஆனால் நீர் அத்தேசத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்குக் கொடுப்பதாக வாக்களித்தீர்.
உமது வாக்குறுதியைக் காப்பாற்றினீர்!
    ஏன்? ஏனென்றால் நீர் நல்லவர்!

லூக்கா 6:12-19

அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தல்(A)

12 அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். 13 மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்:

14 சீமோன் (இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்)

அந்திரேயா என்னும் பேதுருவின் சகோதரன்,

யாக்கோபு,

யோவான்,

பிலிப்பு,

பர்தொலொமேயு,

15 மத்தேயு,

தோமா,

யாக்கோபு (அல்பேயுவின் மகன்),

சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்)

16 யூதா, (யாக்கோபின் மகன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள்.

இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான்.

போதனையும்-குணமாக்குதலும்(B)

17 இயேசுவும் அவருடைய சீஷர்களும் மலையிலிருந்து இறங்கினர். இயேசு சமவெளியான இடத்தில் நின்றார். அவருடைய சீஷர்கள் கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். மேலும் யூதேயா, எருசலேம் ஆகிய பகுதிகளிலிருந்தும், தீரு, சீதோன் ஆகிய கடலோரத்துப் பட்டணங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். 18 அவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்கவும் தங்கள் நோய்களில் இருந்து குணம் பெறவும் அங்கு வந்தனர். பிசாசின் அசுத்த ஆவிகளால் துன்புற்ற மக்களை இயேசு குணமாக்கினார். 19 எல்லா மக்களும் இயேசுவைத் தொடும்படியாக முயன்றனர். ஏனெனில் அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இயேசு அவர்கள் எல்லோரையும் குணப்படுத்தினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center