M’Cheyne Bible Reading Plan
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்
3 எருசலேமில் உள்ள மோரியா என்னும் மலை மீது கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும் வேலையை சாலொமோன் ஆரம்பித்தான். மோரியா மலையில்தான் கர்த்தர் சாலொமோனின் தந்தையான தாவீதிற்கு காட்சியளித்தார். தாவீது தயார்செய்து வைத்திருந்த இடத்திலேயே சாலொமோன் ஆலயம் கட்டினான். இந்த இடம் எபூசியனாகிய ஒர்னானின் களத்தில் இருந்தது. 2 சாலொமோன் இஸ்ரவேலின் அரசனான நான்காவது ஆண்டின் இரண்டாவது மாதத்தில் ஆலய வேலையைத் தொடங்கினான்.
3 தேவாலயத்தின் அடித்தளத்திற்கு சாலொமோன் பயன்படுத்திய அளவு முறைகள் வருமாறு: அடித்தளமானது 90 அடி நீளமும், 30 அடி அகலமும் உடையது. சாலொமோன் ஆலயத்தை அளந்தபொழுது பழைய அளவு முறையையே பயன்படுத்தினான். 4 முகப்பு மண்டபமானது ஆலயத்திற்கு முன்பாய் இருபது முழ நீளமும் 180 அடி உயரமுமாய் இருந்தது. சாலொமோன் முகப்பு மண்டபத்தின் உட்பாகத்தை சுத்தமான தங்கத் தகட்டால் மூடினான். 5 ஆலயத்தின் பெரிய மாளிகை சுவர்களைத் தேவதாரு மரப்பலகைகளால் செய்தான். அவற்றைப் பசும்பொன்னால் இழைத்தான். அதன் மேல் பேரீச்சு வேலைகளையும், சங்கிலி வேலைகளையும் சித்தரித்தான். 6 அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான். இவன் பயன்படுத்திய தங்கமானது பர்வாயீமினுடையது. 7 அந்த ஆலயத்தின் உத்திரங்கள், நிலைகள், சுவர்கள், கதவுகள் போன்றவற்றைப் பொன் தகட்டால் மூடினான். சுவர்களிலே கேருபீன்களைச் செய்து வைத்தான்.
8 பிறகு, சாலொமோன் மகாபரிசுத்தமான இடத்தையும் கட்டினான். இது 20 முழ நீளமும், 20 முழ அகலமும் உடையதாய் இருந்தது. இதன் அகலம் ஆலயத்தைப் போன்றதே. இதன் சுவர்களைப் பசும் பொன்னால் இழைத்தான். இப்பொன்னின் எடை 600 தாலமாகும். 9 தங்க ஆணிகள் 50 சேக்கல் எடையுள்ளது. மேல் அறைகளையும் பொன்னால் இழைத்தான். 10 சாலொமோன் இரண்டு கேருபீன்களைச் செய்து மகாபரிசுத்தமான இடத்தில் வைத்தான். அவற்றையும் பொன் தகட்டால் மூடினான். 11 கேருபீன்களின் ஒவ்வொரு சிறகும் 5 முழ நீளமுடையது. ஆக மொத்தம் சிறகுகளின் நீளம் 20 முழ நீளமாயிருந்தது. முதல் கேருபீனின் ஒரு சிறகு அந்த அறையின் ஒரு சுவரைத் தொட்டது. அதன் இன்னொரு சிறகு இன்னொரு கேருபீனின் சிறகைத் தொட்டது. 12 இரண்டாவது கேருபீனின் இன்னொரு சிறகானது அவ்வறையின் இன்னொரு சுவரைத் தொட்டது. 13 கேருபீன்களின் சிறகுகள் மொத்தமாக 30 அடி நீளத்தில் பரவியிருந்தன. கேருபீன்கள் பரிசுத்த இடத்தை நோக்கிய வண்ணம் நின்றன.
14 சாலொமோன் திரையை இளநீலம், சிவப்பு, இரத்தாம்பரம், மெல்லிய லினன் போன்ற நூல்களால் செய்தான். அதன்மேல் கேருபீன் வடிவங்களையும் அமைத்தான்.
15 சாலொமோன் ஆலயத்திற்கு முன்னால் இரண்டு தூண்களை அமைத்தான். அவற்றின் உயரம் 35 முழமாகும். அவற்றின் மேல் முனையில் 5 முழ உயர கும்பங்களையும் வைத்தான். 16 சாலொமோன் சங்கிலிகளையும் செய்தான். அவற்றைத் தூண்களின் மேல் முனையில் பொருத்தினான். அச்சங்கிலிகளில் 100 மாதளம் பழங்களைச் செய்து தொங்கவிட்டான். 17 பிறகு சாலொமோன் அத்தூண்களை ஆலயத்திற்கு முன்னர் தூக்கி நிறுத்தினான். ஒரு தூண் வலது பக்கத்திலும் இன்னொரு தூண் இடது பக்கத்திலும் நிறுத்தினான். வலது பக்கமுள்ள தூணுக்கு சாலொமோன் “யாகீன்” என்றும் இடது பக்கமுள்ள தூணுக்கு “போவாஸ்” என்றும் பெயரிட்டான்.
ஆலயத்திற்கானப் பொருட்கள்
4 சாலொமோன் ஒரு பலிபீடத்தை வெண்கலத்தால் செய்தான். அது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டது. 2 பிறகு ஒரு பெரிய தொட்டியைச் செய்ய சாலொமோன் உருக்கிய வெண்கலத்தைப் பயன்படுத்தினான். இது வட்ட வடிவத்தில் ஒரு விளிம்பிலிருந்து மறுவிளிம்புவரை 18 அடி அகலம் கொண்டதாக இருந்தது. 7 1/2 அடி உயரமும், 45 அடி சுற்றளவும் கொண்டிருந்தது. 3 தொட்டியின் கீழ்ப்புறமாய் காளைகளின் உருவங்கள் வெண்கலத்தால் வார்க்கப்பட்டு 18 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு வரிசைகளில் காளையின் உருவங்கள் தொட்டியோடு வார்க்கப்பட்டன. 4 இத்தொட்டி 12 காளை உருவங்களின் மேல் வைக்கப்பட்டது. அவற்றில் 3 காளைகள் வடக்கு நோக்கியும், 3 காளைகள் மேற்கு நோக்கியும், 3 காளைகள் கிழக்கு நோக்கியும், 3 காளைகள் தெற்கு நோக்கியும் இருந்தன. பெரிய தொட்டியானது இக்காளைகளின் மேல் இருந்தது. அவற்றின் பின்பக்கம் உட்புறமாய் இருந்தது. 5 பெரிய வெண்கலத் தொட்டியின் கனம் 4 விரல்கடை அளவுள்ளது. தொட்டியின் விளிம்பானது கப்பின் விளிம்புபோல் இருந்தது. அவ்விளிம்பானது லீலி பூ போலவும் இருந்தது. இது 3,000 குடம் தண்ணீர் கொள்ளளவு கொண்டது.
6 சாலொமோன் 10 குழாய்கள் பொருத்தப்பட்ட கிண்ணங்களைச் செய்தான். இவற்றில் 5 கிண்ணங்களைத் தொட்டியின் வலது பக்கத்திலும், 5 கிண்ணங்களை இடது பக்கத்திலும் வைத்தான். தகனபலிக்கான பொருட்களைச் சுத்தப்படுத்த இக்கோப்பைகள் பயன்பட்டன. பலிகளைக் கொடுக்கும் முன்பு குளித்து பரிசுத்தமாகும் பொருட்டு ஆசாரியர்களால் வெண்கலத் தொட்டி பயன்படுத்தப்பட்டது.
7 சாலொமோன் 10 விளக்குத் தண்டுகளைத் தங்கத்தில் செய்தான். அவன் விளக்குத் தண்டுகளைச் செய்வதற்கான விதிமுறைகளைப் பயன்படுத்தினான். அவன் அவ்விளக்குத் தண்டுகளை ஆலயத்தில் வைத்தான். 5 விளக்குத் தண்டுகளை வலது பக்கத்திலும், 5 விளக்குத் தண்டுகளை இடது பக்கத்திலும் வைத்தான். 8 சாலொமோன் 10 மேஜைகளைச் செய்து ஆலயத்தில் வைத்தான். அவற்றில் 5 மேஜைகளை வலது பக்கத்திலும், 5 மேஜைகளை இடது பக்கத்திலும் வைத்தான். சாலொமோன் 100 குழாய் பொருத்தப்பட்ட கிண்ணங்களைத் தங்கத்தால் செய்தான். 9 சாலொமோன் ஆசாரியர்களின் பிரகாரத்தையும், பெரிய பிரகாரத்தையும், மற்ற பிரகாரங்களையும் வாசலோடு அமைத்தான். அவன் பிரகாரக் கதவுகளை வெண்கலத் தகடுகளால் மூடினான். 10 தொட்டியை ஆலயத்தின் வலதுபுறத்தில் தென்கிழக்காக வைத்தான்.
11 ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், கலங்களையும் செய்தான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் அரசனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தான்.
12 அதுவரை அவன் இரண்டு தூண்களையும், தூண்களின் மேல் உள்ள கும்பங்களையும் குமிழ்களையும் இவற்றை மூடுவதற்கான வலைகளையும் செய்திருந்தான்.
13 இரண்டு வலைகளையும் அலங்கரிப்பதற்காக 400 மாதளம் பழங்களையும் செய்தான். ஒவ்வொரு வலையிலும் இருவரிசையாக மாதளம் பழங்களைத் தொங்கவிட்டான். இவ்வலைகள் இரண்டு தூண்களின் மேலுள்ள கும்பங்களை மூடிக்கொண்டிருந்தன.
14 தாங்கிகளையும் தாங்கிகளின் மேலுள்ள பாத்திரங்களையும் ஈராம் செய்தான்.
15 ஈராம் ஒரு பெரிய வெண்கலத் தொட்டியையும் அதற்கடியில் 12 காளைகளையும் செய்துமுடித்தான்.
16 ஈராம் செப்புச் சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள் துறடுகள் போன்ற பணிமூட்டுகள் போன்றவற்றையும் அரசன் சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தான்.
இவை பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்டன. 17 அரசன் சாலொமோன் முதலில் இவற்றைக் களிமண் வார்ப்படங்களில் வடித்தான். அக்களிமண் வார்ப்படங்கள் யோர்தான் பள்ளத்தாக்கில் சுக்கோத் மற்றும் சரேத்தா ஆகிய ஊர்களுக்கு இடையில் செய்யப்பட்டன. 18 இதுபோல் ஏராளமான பொருட்களை சாலொமோன் செய்தான். இதற்குரிய வெண்கலத்தின் எடையை அளக்க யாரும் முயற்சி செய்யவில்லை.
19 தேவனுடைய ஆலயத்திற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் சாலொமோன் செய்தான். அவன் தங்கத்தாலான பலிபீடத்தைச் செய்தான். சமூகத்து அப்பங்களை வைக்கும் மேஜைகளையும் அவன் செய்தான். 20 சாலொமோன் விளக்குத் தண்டுகளையும் அதன்மேல் வைக்க விளக்குகளையும் சுத்தமான தங்கத்தால் செய்தான். உள்புறமிருந்த பரிசுத்த இடத்தில் சன்னதிக்கு முன்பு முறைப்படி விளக்கு ஏற்றுவதற்காக இவைச் செய்யப்பட்டன. 21 பூக்களையும், விளக்குகளையும், இடுக்கிகளையும், 22 கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் செய்ய சாலொமோன் தூய பொன்னையே பயன்படுத்தினான். மகா பரிசுத்தமான இடத்தின் உட்கதவுகளையும் ஆலயத்தின் கதவுகளையும் வாசல் கதவுகளையும் பொன்னால் செய்வித்தான்.
நாம் தேவனின் பிள்ளைகள்
3 பிதா நம்மை மிகவும் நேசித்தார்! நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் உலகத்தின் மக்களோ நாம் தேவனின் பிள்ளைகள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அதற்குக் காரணம் தேவனை அவர்கள் அறியாமல் இருப்பது ஆகும். 2 அன்பான நண்பர்களே, நாம் இப்போது தேவனின் பிள்ளைகள். நாம் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் நமக்குக் காட்டப்படவில்லை. கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போல இருப்போம் என்பதை நாம் அறிவோம். 3 கிறிஸ்து தூய்மையானவர். கிறிஸ்துவில் இந்த நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவைப் போலவே தன்னைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.
4 ஒருவன் பாவம் செய்யும்போது, அவன் தேவனின் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். ஆம், தேவனின் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக வாழ்வதைப்போன்றதே பாவம் செய்தலாகும். 5 மனிதரின் பாவங்களை நீக்குவதற்காக கிறிஸ்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். கிறிஸ்துவில் பாவம் இல்லை. 6 எனவே கிறிஸ்துவில் வாழ்கிற மனிதனும் பாவத்தைச் செய்வதில்லை. ஒருவன் தொடர்ந்து பாவம் செய்தால், அவன் கிறிஸ்துவை உண்மையாகவே புரிந்துகொண்டதில்லை என்றும், கிறிஸ்துவை அறிந்துகொண்டதே இல்லை. என்றுமே பொருள்படும்.
7 அன்பான பிள்ளைகளே, தவறான வழிக்குள் ஒருவன் உங்களை நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்து நீதியுள்ளவர். கிறிஸ்துவைப்போல சரியானவராக இருப்பதற்கு ஒரு மனிதன் சரியானதை மட்டுமே செய்யவேண்டும். 8 துவக்கத்தலிருந்தே பிசாசு பாவம் செய்துகொண்டிருக்கிறான். பாவத்தைத் தொடர்ந்து செய்யும் மனிதன் பிசாசுக்குரியவன். தேவ குமாரன் பிசாசின் செயலை அழிக்கும்பொருட்டே வந்தார்.
9 தேவன் ஒருவனை அவரது பிள்ளையாக மாற்றும்போது அவன் பாவத்தைத் தொடர்ந்து செய்வதில்லை. ஏன்? தேவன் அவனுக்கு அளித்த புது வாழ்க்கை அவனில் நிலைத்திருக்கிறது. எனவே அம்மனிதன் பாவத்தில் தொடர முடியாது. ஏன்? அவன் தேவனின் பிள்ளையாக மாறியிருக்கிறான். 10 எனவே தேவனின் பிள்ளைகள் யாரென்பதையும் பிசாசின் பிள்ளைகள் யாரென்பதையும் நாம் பார்க்க முடியும். மேலும் தனது சகோதரனை நேசிக்காத ஒருவனும் தேவனின் பிள்ளை இல்லை.
நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும்
11 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்கிற போதனை இது. நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். 12 காயீனைப்போல இராதீர்கள். காயீன் தீயவனுக்கு உரியவனாக இருந்தான். காயீன் அவனது சகோதரனைக் கொன்றான். ஆனால் காயீன் அவனது சகோதரனை ஏன் கொன்றான்? காயீன் செய்தவை தீயனவாக இருந்ததாலும், அவன் சகோதரன் செய்தவை நல்லனவாக இருந்ததாலுமே.
13 சகோதர சகோதரிகளே, இவ்வுலகத்தின் மக்கள் உங்களை வெறுக்கும்போது ஆச்சரியப்படாதீர்கள். 14 நாம் மரணத்தை விட்டு, ஜீவனுக்குள் வந்திருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்துவில் நமது சகோதரரையும் சகோதரிகளையும் நாம் நேசிப்பதால் இதனை அறிவோம். சகோதரனை நேசிக்காத மனிதன் இன்னும் மரணத்தில் இருக்கிறான். 15 தன் சகோதரனை வெறுக்கிற ஒருவன் கொலையாளி ஆவான். எந்த கொலையாளிக்கும் தேவன் தரும் நித்திய வாழ்வு இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
16 உண்மையான அன்பு எதுவென்பதை இவ்வாறே நாம் அறிவோம். இயேசு அவரது ஜீவனை நமக்காகக் கொடுத்தார். எனவே நாம் நமது ஜீவனைக் கிறிஸ்துவில் நமது சகோதரருக்காகவும் சகோதரிகளுக்காகவும் கொடுக்க வேண்டும். 17 தேவைப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் பெறுகிற அளவுக்குப் போதுமான செல்வந்தனாக ஒரு விசுவாசி இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஏழையானவனும் தேவையான பொருள்கள் கிடைக்காதவனுமாகிய கிறிஸ்துவில் சகோதரனை அவன் பார்க்கிறான். தேவையானவற்றைப் பெற்ற சகோதரன் ஏழை சகோதரனுக்கு உதவாமலிருந்தால் பயன் என்ன? அவன் இதயத்தில் தேவனின் அன்பு இல்லை. 18 எனது பிள்ளைகளே, நம் அன்பு வார்த்தைகளிலும் பேச்சிலும் மட்டும் இருக்கலாகாது. நம் அன்பு உண்மையான அன்பாக இருக்க வேண்டும். நாம் செய்கிற காரியங்களால் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
19-20 நாம் உண்மையின் வழியைச் சார்ந்தவர்கள் என்பதை இந்த வழியால் அறியலாம். நம்மைக் குற்றவாளிகளாக நமது இருதயங்களே உணர்த்தும்போது, நமது இருதயங்களைக் காட்டிலும் தேவன் உயர்ந்தவராக இருப்பதால் அவர் எல்லாவற்றையும் அறிவார்.
21 எனது அன்பான நண்பர்களே, நாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணராவிட்டால் நாம் தேவனிடம் அச்சமற்றவர்களாக இருக்கமுடியும். 22 நாம் கேட்கிற பொருட்களை தேவன் கொடுப்பார். நாம் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாலும், தேவனை மகிழ்வூட்டுகிற காரியங்களைச் செய்வதாலும் இவற்றைப் பெறுகிறோம். 23 தேவன் கட்டளையிடுவது இதுவே. நாம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது தேவனின் கட்டளை ஆகும். 24 தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார். தேவன் நம்மில் வாழ்கிறார் என்பதை நாம் எப்படி அறிகிறோம்? தேவன் நமக்களித்த ஆவியானவரால் நாம் அறிகிறோம்.
நினிவே அழிக்கப்படும்
2 ஒரு பகைவன் உன்னைத் தாக்க வந்துகொண்டிருக்கிறான்.
எனவே உன் நகரத்தின் வலிமையான பகுதிகளைக் காவல் செய்.
சாலைகளைக் காவல் காத்திடு.
போருக்குத் தயாராக இரு.
யுத்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்.
2 ஆம், கர்த்தர் யாக்கோபின் மகிமையை மாற்றினார்.
இது இஸ்ரவேலரின் மகிமை போன்றிருக்கும்.
பகைவன் அவற்றை அழித்தான்.
அவர்களின் திராட்சைக் கொடிகளை அழித்தான்.
3 அவ்வீரர்களின் கேடயங்கள் சிவந்திருக்கிறது.
அவர்களின் சீருடைகள் பிரகாசமான சிவப்பாக உள்ளது.
அவர்களின் இரதங்கள் போருக்கு வரிசையாக உள்ளன,
நெருப்பின் ஜூவாலையைப் போன்று மின்னுகின்றன.
அவர்களின் குதிரைகள் போவதற்கு தயாராக உள்ளன.
4 அவர்களின் இரதங்கள் தெருக்களில் போட்டியிட்டு ஓடுகின்றன.
தெருக்களின் இடது சாரியாகவும் வலதுசாரியாகவும் ஓடுகின்றன.
அவை எரியும் பந்தங்களைப் போன்றும்,
அங்குமிங்கும் மின்னும் மின்னலைப் போலவும் காணப்படுகின்றன.
5 விரோதி தனது சிறந்த வீரர்களை அழைக்கிறான்.
ஆனால் அவர்கள் மதிற்சுவரை நோக்கி ஓடி,
அங்குள்ள சுவர்களைத் தகர்க்கும் கருவியின்மேல்
அவர்களின் கேடயத்தை நிறுவுகிறார்கள்.
6 ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன.
எதிரிகள் அவ்வழியாக வந்து அரசனின் வீட்டை அழிக்கிறார்கள்.
7 பகைவர்கள் ராணியைப் பிடித்துச் செல்வார்கள்.
அவளது அடிமைப்பெண்கள் புறாக்களைப் போன்று துக்கத்துடன் அழுவார்கள்.
அவர்கள் தம் மார்பில் அடித்துக்கொண்டு தமது துக்கத்தைக் காட்டுவார்கள்.
8 நினிவே, தண்ணீர் வற்றிப்போன
குளத்தைப்போன்று இருக்கிறது.
ஜனங்கள், “நிறுத்துங்கள்! ஓடுவதை நிறுத்துங்கள்!” என்று சொன்னார்கள்.
ஆனால் அது பயன் தரவில்லை.
9 நினிவேயை அழிக்கப்போகும் வீரர்களாகிய நீங்கள், வெள்ளியை எடுங்கள்!
தங்கத்தை எடுங்கள்!
அங்கே எடுப்பதற்கு ஏராளமாக உள்ளன.
அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன.
10 இப்பொழுது, நினிவே காலியாக இருக்கிறது.
எல்லாம் திருடப்பட்டன.
நகரம் அழிக்கப்பட்டது.
ஜனங்கள் தங்கள் தைரியத்தை இழந்தனர்.
அவர்களது இதயங்கள் அச்சத்தால் உருகின.
அவர்களது முழங்கால்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டன,
அவர்களது உடல்கள் நடுங்குகின்றன, முகங்கள் அச்சத்தால் வெளுத்தன.
11 இப்பொழுது சிங்கத்தின் குகை (நினிவே) எங்கே?
ஆண்சிங்கமும் பெண்சிங்கமும் அங்கே வாழ்ந்தன.
அவற்றின் குட்டிகள் அஞ்சவில்லை.
12 சிங்கமானது (நினிவேயின் அரசன்) தனது குட்டிகளுக்கும் பெண்சிங்கத்திற்கும்
உணவு கொடுப்பதற்காக ஏராளமான ஜனங்களைக் கொன்று அழித்தது.
அது தனது குகையை (நினிவே) ஆண்களின் உடல்களால் நிறைத்தது.
அது தான் கொன்ற பெண்களின் உடல்களால் குகையை நிறைத்தது.
13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நான் உனது இரதங்களை எரிப்பேன், உனது ‘இளஞ்சிங்கங்களைப்’ போரில் கொல்வேன்.
நீ இந்த பூமியில் மீண்டும் எவரையும் வேட்டையாடமாட்டாய்.
ஜனங்கள் உனது தூதுவர்களிடமிருந்து மீண்டும் கெட்ட செய்திகளைக் கேட்கமாட்டார்கள்.”
பலன் தரும் தேவன்
18 சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்: 2 “ஓர் ஊரில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனைக் குறித்துக் கவலைப்படவில்லை. மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவன் அக்கறையற்றவனாக இருந்தான். 3 அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள். 4 அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். 5 ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான்.
6 “தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள். 7 தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். 8 நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார்.
தேவனுக்கு ஏற்றவன் யார்?
9 தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். 10 “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். 11 வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 12 நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான்.
13 “வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.”
குழந்தைகளும்-இயேசுவும்(A)
15 இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள். 16 ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது. 17 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார்.
செல்வந்தனும் இயேசுவும்(B)
18 ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், “நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
19 இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 20 ஆனால் நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வேன். உனக்கு தேவனுடைய பிரமாணங்கள் தெரியும். ‘நீ தீய ஒழுக்கமாகிய பாவத்தைச் செய்யக்கூடாது. நீ ஒருவரையும் கொலை செய்யக்கூடாது. நீ எந்தப் பொருளையும் திருடக் கூடாது. பிறரைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. உனது தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும்’” [a] என்றார்.
21 ஆனால் அந்த அதிகாரி, “சிறுவனாக இருந்தபோதே இக்கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன்” என்றான்.
22 இதைக் கேட்டதும் இயேசு அதிகாரியை நோக்கி, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. உன் பொருட்கள் எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடு. பரலோகத்தில் உனக்கு பலன் கிடைக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். 23 ஆனால் அம்மனிதன் இதைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தான். அவன் பெரிய பணக்காரன், எல்லாப் பணத்தையும் தானே வைத்துக்கொள்ள விரும்பினான்.
24 அவன் வருத்தமடைந்ததை இயேசு கண்டபோது அவர், “செல்வந்தர் தேவனின் இராஜ்யத்தில் நுழைவது மிகவும் கடினமானது! 25 ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார்.
மீட்கப்படக்கூடியவர் யார்?
26 மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள்.
27 பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார்.
28 பேதுரு “ஆண்டவரே, எங்களுக்குரிய அனைத்தையும் விட்டு உங்களைப் பின்பற்றினோமே” என்றான்.
29 இயேசு, “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். வீடு, மனைவி, சகோதரர்கள், பெற்றோர் அல்லது குழந்தைகளை தேவனின் இராஜ்யத்துக்காகத் துறந்த ஒவ்வொருவனும் தான் விட்டவற்றைக் காட்டிலும் மிகுதியாகப் பெற்றுக்கொள்வான். 30 இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். அவன் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ்வான்” என்றார்.
இயேசு மரணத்தினின்று எழுவார்(C)
31 பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும். 32 அவரது மக்களே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை யூதரல்லாத மக்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவர் மீது உமிழ்வார்கள். அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவார்கள். 33 அவரைச் சாட்டையினால் அடித்து பின்னர் கொல்வார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிரோடு மீண்டும் எழுவார்” என்றார். 34 சீஷர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பொருள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது.
குருடனைக் குணமாக்குதல்(D)
35 எரிகோ பட்டணத்திற்கு அருகே, இயேசு வந்தார். பாதையருகே ஒரு குருடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் மக்களிடம் பணத்துக்காகப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். 36 மக்கள் பாதையைக் கடந்து வருவதைக் கேட்டதும் அம்மனிதன், “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” எனக் கேட்டான்.
37 மக்கள் அவனுக்கு, “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.
38 குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.
39 அக்கூட்டத்திற்கு முன்னால் நடந்து கொண்டிருந்த மக்கள் அக்குருடனை அதட்டினார்கள். அவனைப் பேசாதிருக்கும்படியாகக் கூறினார்கள். ஆனால் அக்குருடன் இன்னும் அதிகமாகச் சத்தமிட்டவாறே, “தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.
40 இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி, 41 “நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?” என்று கேட்டார்.
குருடன், “ஐயா, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.
42 இயேசு அவனை நோக்கி, “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.
43 அப்போது அம்மனிதனால் பார்க்க முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி கூறியவாறே இயேசுவைத் தொடர்ந்தான். இதைக் கண்ட எல்லா மக்களும் நடந்ததற்காக தேவனை வாழ்த்தினர்.
2008 by World Bible Translation Center