Revised Common Lectionary (Semicontinuous)
த்சாதே
137 கர்த்தாவே, நீர் நல்லவர்,
உமது சட்டங்கள் நியாயமானவை.
138 நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர்.
நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
139 என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன.
என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.
140 கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
நான் அதை நேசிக்கிறேன்.
141 நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை.
ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.
142 கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும்.
உமது போதனைகள் நம்பக் கூடியவை.
143 எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன.
ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.
144 உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது.
நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.
தேவன் ஆபகூக்குக்குப் பதிலளிக்கிறார்
5 கர்த்தர், “மற்ற நாடுகளைப் பாருங்கள். அவர்களைக் கவனியுங்கள். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நான் உங்கள் வாழ்நாட்களுக்குள் சிலவற்றைச் செய்வேன். அவை உங்களை ஆச்சரியப்படுத்தும். நீங்கள் அவற்றைக் கண்டபின்தான் நம்புவீர்கள். அதை உங்களுக்குச் சொல்லியிருந்தால் நம்பமாட்டீர்கள். 6 நான் பாபிலோனிய ஜனங்களை ஒரு பலமுள்ள நாட்டினராகச் செய்வேன். அந்த ஜனங்கள் இழிவான, வல்லமை பொருந்திய போராளிகளாக இருப்பார்கள். அவர்கள் பூமியைக் கடந்து செல்வார்கள். அவர்கள் தங்களுக்கு உரிமையில்லாத வீடுகளையும் நகரங்களையும் எடுத்துக்கொள்வார்கள். 7 பாபிலோனிய ஜனங்கள் பிற ஜனங்களை பயமுறுத்துவார்கள். பாபிலேனிய ஜனங்கள் தாம் விரும்புவதைச் செய்வார்கள், தாம் போகவிரும்பும் இடத்துக்குப் போவார்கள். 8 அவர்களின் குதிரைகள் சிறுத்தையைவிட வேகமாகச் செல்லும், மாலைநேரத்து ஓநாய்களைவிடவும் கொடியவராக இருப்பார்கள். அவர்களின் குதிரைவீரர்கள் தொலை தூரங்களிலிருந்து வருவார்கள். அவர்கள் தங்கள் பகைவர்களை வானத்திலிருந்து பாய்ந்து தாக்கும் பசிகொண்ட கழுகுகளைப்போன்று தாக்குவார்கள். 9 அவர்கள் விரும்பும் ஒரே செயல் சண்டையிடுவதுதான். அவர்களது படைகள் பாலைவனத்து காற்றைப்போன்று வேகமாகச் செல்லும். பாபிலேனிய வீரர்கள் பல சிறைக்கைதிகளை மணல்போன்ற எண்ணிக்கையில் கைபற்றுவார்கள்.
10 “பாபிலோனிய வீரர்கள் பிறநாடுகளில் உள்ள அரசர்களைப் பார்த்து நகைப்பார்கள். அந்நிய ஆளுநர்கள் இவர்களுக்குப் பரிகாசத்துக்குரியவர்களாவார்கள். பாபிலோனிய வீரர்கள் நகரங்களில் உயர்ந்த உறுதியான சுவர்களைப் பார்த்து சிரிப்பார்கள். வீரர்கள் மண்மேடுகளை சுவர்களின் உச்சிவரை குவித்து எளிதாக நகரங்ளை தோற்கடிப்பார்கள். 11 பிறகு அவர்கள் காற்றைப் போன்று விரைந்துசென்று, மற்ற இடங்களில் போரிடச் செல்வார்கள். பாபிலோனியர்கள் தம் சொந்த பலத்தையே தொழுதுகொள்வார்கள்” என்று பதில் சொன்னார்.
ஆபகூக்கின் இரண்டாவது முறையீடு
12 பிறகு ஆபகூக் சொன்னான்,
“கர்த்தாவே, நீரே என்றென்றும் வாழ்கிற கர்த்தர்.
நீர் என்றென்றும் மரணமடையாத என் பரிசுத்தமான தேவன்.
கர்த்தாவே, நீர் பாபிலோனிய ஜனங்களை எதைச் செய்ய வேண்டுமோ அதற்காகப் படைத்தீர்.
எங்கள் அடைக்கலப் பாறையே, நீர் அவர்களை யூதாவிலுள்ள ஜனங்களை தண்டிப்பதற்காகப் படைத்தீர்.
13 உம்முடைய கண்கள் மிகவும் பரிசுத்தமானதால் அவை தீமையை நோக்குவதில்லை.
ஜனங்கள் பாவம் செய்வதை உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
எனவே, இத்தீய ஜனங்கள் வெற்றிப்பெறுவதை எப்படி உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியும்.
தீய ஜனங்கள் நல்லவர்களை அழிப்பதைக் கண்டு ஒன்றும் செய்யாமல் நீர் எப்படி பார்த்திருக்கக்கூடும்?
14 “நீர் ஜனங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும்,
கடலில் உள்ள தலைவனற்ற சிறிய உயிரினங்களைப்போன்றும் படைத்துள்ளீர்.
15 பகைவர் அவர்களனைவரையும் தூண்டிலாலும் வலைகளாலும் பிடிப்பார்கள்.
பகைவன் தனது வலையால் அவர்களை பிடித்து இழுத்துப் போவான்.
பகைவன் தான் கைப்பற்றியதுப்பற்றி மகிழுவான்.
16 அவனது வலை அவன் செல்வந்தனாக வாழ்ந்து
நல்ல உணவை உண்டு மகிழ உதவுகிறது.
எனவே பகைவன் தனது வலைகளை தொழுதுகொள்கிறான்,
அவன் தனது வலையைக் கௌரவப்படுத்த பலிகளை செலுத்தி நறுமணப் பொருட்களையும் எரிக்கிறான்.
17 அவன் தனது வலையுடன் செல்வத்தைத் தொடர்ந்து எடுப்பானா?
அவன் தொடர்ந்து இரக்கமில்லாமல் ஜனங்களை அழிப்பானா?
1 இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுருவிடமிருந்து, எங்களைப் போலவே மதிப்புமிக்க விசுவாசத்தைப் பெற்ற மக்களாகிய உங்களுக்கு: நம்முடைய தேவனுடைய நீதியாலும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாலும் இந்த விசுவாசத்தை நீங்கள் பெற்றீர்கள். சரியானதையே அவர் செய்கிறார்.
2 தேவனை உண்மையாக அறிவதன் மூலமும், நமது கர்த்தராகிய இயேசுவின் மூலமும் உங்களுக்கு மென்மேலும் கிருபையும் சமாதானமும் கொடுக்கப்படுவதாக!
நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் கொடுத்திருக்கிறார்
3 தேவனுடைய வல்லமை இயேசுவிடம் உள்ளது. நாம் வாழ்வதற்கும், தேவனுக்கு சேவை செய்வதற்கும் தேவையான எல்லாவற்றையும் அவரது வல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. நாம் அவரை அறிவதால் நமக்கு இவை கொடுக்கப்பட்டுள்ளன. இயேசு தன் மகிமையாலும், கருணையினாலும் நம்மை அழைத்தார். 4 அவரது மகிமையாலும், நன்மையினாலும் அவர் நமக்கு வாக்களித்த மிகப் பெரிய உயர்ந்த பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அப்பரிசுகளால் நீங்கள் தேவனுடைய தன்மையை பகிர்ந்து அடைய முடியும். தீய ஆசைகளால் உலகில் உருவாகும் அழிவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
5 உங்களுக்கு இந்த ஆசிகள் இருப்பதால், நல்லதை உருவாக்கவும், நல்லவற்றின் மூலம் அறிவை உருவாக்கவும் உங்கள் விசுவாசத்தின் மூலம் எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். 6 அறிவால் சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கவும், சுயக்கட்டுப்பாட்டால் சகிப்புத்தன்மையை உருவாக்கவும், சகிப்புத்தன்மையால் தேவனுக்கான அர்ப்பணிப்பை உருவாக்கவும் முயல வேண்டும். 7 தேவ பக்தியின் மூலம் சகோதர சகோதரிகளின் மேல் நேசமும், உங்கள் சகோதர சகோதரிகளின் மேல் உள்ள இந்த நேசத்தின் மூலம் அன்பை உருவாக்கவும் முயற்சி செய்யுங்கள். 8 இவையனைத்தும் உங்களைத் துடிப்பானவர்களாகவும், ஆக்கம் உள்ளவர்களாகவும் ஆக்கும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுக்க அறிந்துகொள்ள இத்தகுதிகள் உங்களுக்கு உதவும். 9 ஆனால் இவையனைத்தும் ஒருவனிடம் இல்லாதிருந்தால் அவனால் தெளிவாகப் பார்க்க இயலாது. அம்மனிதன் குருடனாக இருப்பான். தனது பழைய பாவங்களினின்று அவன் கழுவப்பட்டவன் என்பதை அவன் மறந்து போனவனாவான்.
10 எனது சகோதர சகோதரிகளே, தேவன் உங்களை அழைத்து, அவருக்குரியோராகத் தேர்ந்துகொண்டார். எனவே உங்கள் அழைப்பையும் தேர்வையும் நிரந்தரமாக்கிக்கொள்ள இன்னும் அதிக ஆவலுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அவையனைத்தையும் நீங்கள் செய்தால், நீங்கள் ஒருபோதும் வீழ்ச்சியைடைவதில்லை. 11 நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்தில் நீங்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறுவீர்கள்.
2008 by World Bible Translation Center