Revised Common Lectionary (Semicontinuous)
கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்
87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
2 இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
3 தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
4 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
5 சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
6 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.
7 விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.
போருக்காக ஆயத்தப்படுதல்
9 நாடுகளுக்கு இவற்றை அறிவியுங்கள்.
போருக்குத் தயாராகுங்கள்.
வலிமையுள்ளவர்களை எழுப்புங்கள்.
போர்வீரர்கள் எல்லோரும் நெருங்கி வரட்டும்.
அவர்கள் மேலே வரட்டும்.
10 உங்கள் மண்வெட்டிகளை வாள்களாக அடியுங்கள்.
உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகச் செய்யுங்கள்.
பலவீனமான மனிதன்
“நான் வலிமையான போர்வீரன்” என்று சொல்லட்டும்.
11 அனைத்து நாட்டினரே, விரையுங்கள்.
அந்த இடத்திற்குச் சேர்ந்து வாருங்கள்.
கர்த்தாவே உமது வலிமையுள்ள வீரர்களைக் கொண்டுவாரும்.
12 நாடுகளே எழும்புங்கள்.
யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வாருங்கள்.
சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் நியாந்தீர்க்க
நான் அங்கே உட்காருவேன்.
13 அரிவாளைக் கொண்டுவாருங்கள்.
ஏனென்றால் அறுவடை தயாராகிவிட்டது.
வாருங்கள், திராட்சைகளை மிதியுங்கள்.
ஏனென்றால் திராட்சை ஆலை நிரம்பியுள்ளது.
தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.
ஏனென்றால் அவர்களின் தீமை பெரியது.
14 நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஏராளமான ஜனங்கள் இருக்கிறார்கள்.
கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள்
விரைவில் வரும்.
இது நியாயத்தீர்ப்பின் பள்ளதாக்கில் நடைபெறும்.
15 சூரியனும் சந்திரனும் இருண்டுவிடும்.
நட்சத்திரங்கள் ஒளி வீசாமல் போகும்.
16 தேவனாகிய கர்த்தர் சீயோனிலிருந்தும் எருசலேமிலிருந்தும் சத்தமிடுவார்.
ஆகாயமும் பூமியும் நடுங்கும்.
ஆனால் தேவனாகிய கர்த்தர் அவரது ஜனங்களுக்குப் பாதுகாப்பின் இடமாக இருப்பார்.
அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருப்பார்.
தேவனுடைய மந்தை
5 உங்கள் குழுவிலுள்ள முதியோருக்கு இப்பொழுது நான் சிலவற்றைக் கூறவேண்டும். நானும் ஒரு முதியவன். நான் கிறிஸ்துவின் துன்பங்களை நேரில் கண்டிருக்கிறேன். நமக்குக் காட்டப்படும் மகிமையிலும் நான் பங்கு கொள்வேன். 2 ஒரு ஆட்டு மந்தையைக் கவனித்துக்கொள்கிற மேய்ப்பர்கள்போல உங்கள் பொறுப்பில் இருக்கிற மக்களின் கூட்டத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தேவனுடைய கூட்டத்தினர். விருப்பத்தோடு அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்விதமான நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் அப்படிச் செய்ய வேண்டாம். நீங்கள் அதை விருப்பத்தோடு செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார். பணத்துக்காகப் பேராசை பிடித்திருப்பதால் கண்காணிப்பாளர்களைப்போல சேவை செய்யாதீர்கள். சேவை செய்யும் வாஞ்சை இருப்பதால் சேவை செய்யுங்கள். 3 நீங்கள் பொறுப்பேற்றுள்ள மக்களிடம் கொடுமையான அதிகாரியாக நடந்துகொள்ளாதீர்கள். ஆனால் அம்மக்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். 4 அப்போது, தலைமை மேய்ப்பர் வரும்போது நீங்கள் கிரீடம் பெறுவீர்கள். அக்கிரீடம் மகிமை நிரம்பியதாகவும், ஒருபோதும் அழகு குன்றாததாகவும் இருக்கும்.
5 இளைஞர்களே, நான் உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும். முதியோரின் அதிகாரத்திற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் தாழ்மையோடு சேவை புரிந்துகொள்ள வேண்டும்.
“அகம்பாவம்மிக்க மனிதருக்கு தேவன் எதிரானவர்.
ஆனால் தாழ்மையுள்ள மனிதருக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.” (A)
6 எனவே தேவனுடைய வல்லமை வாய்ந்த கைகளுக்குக் கீழே தாழ்மையோடு இருங்கள். தகுந்த காலம் வரும்போது அவர் உங்களை உயர்த்துவார். 7 அவர் உங்களைக் கவனிப்பதால் உங்கள் கவலைகளை அவரிடம் விட்டு விடுங்கள்.
8 உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவனமாக வாழுங்கள்! பிசாசு உங்கள் பகைவன். உண்ணும்பொருட்டு எந்த மனிதனாவது அகப்படுவானா என்று தேடிக்கொண்டே கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவே அவன் அலைகிறான். பிசாசைப் பின்பற்ற மறுத்துவிடுங்கள். 9 உங்கள் விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நீங்கள் அனுபவிக்கிற அதே துன்பங்களை உலகத்தின் எல்லா பாகங்களிலுமுள்ள உங்கள் சகோதரரும் சகோதரிகளும் அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
10 ஆம், குறுகிய காலம் நீங்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் அதற்குப் பிறகு, தேவன் எல்லாவற்றையும் சரிப்படுத்துவார். அவர் உங்களை பலப்படுத்துவார். அவர் உங்களைத் தாங்கிக்கொண்டு, நீங்கள் விழாதபடி பாதுகாப்பார். எல்லா கிருபையையும் அருளுகின்ற தேவன் அவரே. கிறிஸ்துவின் மகிமையில் பங்குகொள்ளும்படி அவர் உங்களை அழைத்தார். அம்மகிமை என்றென்றும் தொடரும். 11 எல்லா வல்லமையும் என்றென்றும் அவருக்குரியது. ஆமென்.
2008 by World Bible Translation Center