Revised Common Lectionary (Semicontinuous)
கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்
87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
2 இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
3 தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
4 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
5 சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
6 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.
7 விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.
யூதாவின் பகைவர்கள் தண்டிக்கப்படுவார்கள்
3 “ஆம் அந்த வேளையில், நான் யூதாவையும் எருசலேமையும் சிறையிருப்பிலிருந்து மீட்டுவருவேன். 2 நான் அனைத்து நாட்டு ஜனங்களையும் ஒன்று சேர்ப்பேன். நான் யோசபாத்தின் பள்ளதாக்கிலே அனைத்து நாட்டு ஜனங்களையும் அழைத்து வருவேன். அங்கே நான் அவர்களை நியாயம் தீர்ப்பேன். அந்நாடுகள் என் இஸ்ரவேல் ஜனங்களைச் சிதறடித்தன. அவைகள் அவர்களை வேறு நாடுகளில் வாழும்படி வற்புறுத்தின. எனவே நான் அந்நாடுகளைத் தண்டிப்பேன். அந்நாடுகள் எனது நிலத்தை பிரித்தன. 3 அவர்கள் எனது ஜனங்களுக்காகச் சீட்டுப் போட்டார்கள். அவர்கள் ஆண் குழந்தைகளை விபச்சாரிகளை வாங்குவதற்காக விற்றார்கள். அவர்கள் திராட்சைரசத்தை வாங்கிக் குடிப்பதற்காகப் பெண்குழந்தைகளை விற்றார்கள்.
4 “தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் அனைத்து எல்லைகளே, நீங்கள் எனக்கு முக்கியமானவர்கள் அல்ல. நான் செய்த ஏதோ சில காரியங்களுக்காக நீங்கள் என்னைத் தண்டிக்கப் போகிறீர்களா? என்னைத் தண்டித்துக்கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், நான் உங்களை விரைவில் தண்டிப்பேன். 5 நீங்கள் எனது பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக்கொண்டீர்கள். எனது விலையுயர்ந்த பொக்கிஷங்களைக் கொண்டுபோய் உங்கள் அந்நிய தெய்வங்களின் கோவில்களில் வைத்துக்கொண்டீர்கள்.
6 “நீங்கள் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைக் கிரேக்கர்களுக்கு விற்றீர்கள். அவ்வாறு நீங்கள் அவர்களை அவர்கள் நாட்டிலிருந்து வெகுதூரம் கொண்டு செல்ல முடிந்தது. 7 நீங்கள் எனது ஜனங்களை அத்தொலை தூர நாடுகளுக்கு அனுப்பினீர்கள். ஆனால் நான் அவர்களை மீண்டும் கொண்டுவருவேன். நான் உங்களை நீங்கள் செய்தவற்றுக்காகத் தண்டிப்பேன். 8 நான் உங்களது மகன்களையும், மகள்களையும் யூத ஜனங்களுக்கு விற்கப்போகிறேன். பிறகு அவர்கள் உங்களைத் தொலைவிலுள்ள சபேயரிடத்தில் விற்பர்” என்று கர்த்தர் சொன்னார்.
கிறிஸ்தவனாகத் துன்புறுதல்
12 எனது நண்பர்களே, நீங்கள் தற்சமயம் அனுபவிக்கிற வருத்தங்களையும் இன்னல்களையும் கண்டு ஆச்சரியப்படாதீர்கள். இவை உங்கள் விசுவாசத்தை சோதிப்பன. ஏதோ விசித்திரமான செயல் உங்களுக்கு நிகழ்வதாக நினைக்காதீர்கள். 13 கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்வதால், நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். இதன் மூலம் கிறிஸ்து தம் மகிமையைக் காட்டும்போது நீங்கள் மகிழ்ச்சி அடைந்து, சந்தோஷத்தால் மனம் நிறைவீர்கள். 14 நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால், மக்கள் உங்களைப் பற்றிப் தீயன கூறும்போது, நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். தேவனுடைய மகிமைமிக்க ஆவியானவர் உங்களோடிருப்பதால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். 15 உங்களில் யாரும் கொலைக்காரர்களாகவோ, திருடர்களாகவோ, அடுத்தவர்களின் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவோ, இக்காரியங்களுக்கான தண்டனையை அனுபவிக்கிறவர்களாகவோ இருக்கக் கூடாது. 16 ஒருவன் கிறிஸ்துவுக்காகத் துன்புறுவதற்காக வெட்கப்படக்கூடாது. அப்பெயருக்காக நீங்கள் தேவனை வாழ்த்தவேண்டும். 17 நியாயந்தீர்க்கப்படுதல் ஆரம்பமாகும் காலம் இது. தேவனுடைய குடும்பத்தில் அந்நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகும். நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் ஆரம்பித்தால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாத மக்களுக்கு என்ன நிகழும்?
18 “ஒரு நல்ல மனிதனே இரட்சிக்கப்படுவது மிகவும் கடுமையானது என்றால், தேவனுக்கு எதிரானவனும்,
பாவத்தால் நிரம்பியவனுமான மனிதனுக்கு என்ன நேரிடக்கூடும்?” (A)
19 தேவனுடைய விருப்பப்படி துன்புறுகிற மக்கள் தங்கள் ஆன்மாக்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தேவன் அவற்றை உண்டாக்கினார், எனவே அவர்கள் அவரை நம்பலாம். ஆகையால் அவர்கள் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்.
2008 by World Bible Translation Center