Revised Common Lectionary (Semicontinuous)
4 யாக்கோபின் குடும்பமே கர்த்தருடைய வார்த்தையைக் கேள்,
இஸ்ரவேலின் கோத்திரங்களே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5 கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:
“நான், உங்கள் முற்பிதாக்களிடம் நீதியுடன் இல்லை என நினைக்கிறீர்களா?
அதனால்தான் அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்களா?
உங்கள் முற்பிதாக்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
அவர்கள், தாங்களே உதவாக்கரைகள் ஆனார்கள்.
6 உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார்,
கர்த்தர் எங்களை வனாந்திரத்தில் வழிநடத்தினார்.
கர்த்தர் எங்களை வறண்ட பாறை நிலத்தின் வழியாக நடத்தினார்.
கர்த்தர் எங்களை இருண்ட ஆபத்தான நாடுகள் வழியாக நடத்தினார்,
ஜனங்கள் எவரும் அங்கு இதற்குமுன்பு வாழவில்லை.
ஜனங்கள் அவ்வழியாகப் பயணம் செய்ததுமில்லை,
ஆனால் கர்த்தர் எங்களை அந்த தேசத்தின் வழியாக நடத்தி வந்தார்;
எனவே, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’” என்று சொல்லவில்லை.
7 கர்த்தர் கூறுகிறார்: “நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன்,
பல நன்மைகள் நிறைந்த ஒரு நாட்டிற்கு கொண்டுவந்தேன்.
நான் இதனைச் செய்தேன், எனவே நீ அங்கு வளர்ந்த பழங்கள் மற்றும் அறுவடைகளை உண்ணமுடியும்,
ஆனால் நீங்கள் என் நாட்டை ‘அசுத்தம்’ மட்டுமே செய்தீர்கள்.
நான் அந்த நல்ல நாட்டை உங்களுக்குக் கொடுத்தேன்,
ஆனால் நீங்கள் அதனை தீய இடமாகச் செய்தீர்கள்.
8 “‘கர்த்தர் எங்கே?’
என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை,
சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை,
இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்;
தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டார்கள்.”
9 எனவே கர்த்தர் சொல்லுகிறதாவது: “இப்பொழுது நான் மீண்டும் உன்னைக் குற்றம்சாட்டுவேன்,
நான் உனது பேரப் பிள்ளைகளையும் குற்றம்சாட்டுவேன் என்று சொல்லுகிறார்.
10 கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ.
கேதாருக்கு யாராவது ஒருவனை அனுப்பு,
மிகக் கவனமாகப் பார்,
எவராவது இதுபோல செய்திருக்கிறார்களா, என்று பார்.
11 எந்த நாட்டவர்களாவது எப்போதாவது புதிய தெய்வங்களை தொழுதுகொள்ள
தங்கள் பழைய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நிறுத்தினார்களா?
அவர்களின் தெய்வங்கள், தெய்வங்களே அல்ல!
ஆனால், என் ஜனங்கள், தங்கள் மகிமைமிக்க தேவனை ஆராதிப்பதைவிட்டு,
எதற்கும் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
12 “வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம்
திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
13 “எனது ஜனங்கள் இரு தீயச்செயல்களைச் செய்திருக்கின்றனர்;
அவர்கள் என்னிடமிருந்து விலகினார்கள்,
(நான் உயிருள்ள தண்ணீரின் ஊற்றாக இருக்கிறேன்).
அவர்கள் தங்களுக்குரிய தண்ணீர்க் குழிகளைத் தோண்டினார்கள்.
(அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பினார்கள்).
ஆனால், அவர்களுடைய தண்ணீர்க்குழிகள் உடைந்தன,
அத்தொட்டிகளில் தண்ணீர் தங்குவதில்லை.
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று
81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
நான் உன்னைப் போஷிப்பேன்.
11 “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன்.
இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால்,
என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன்.
இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள்.
அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.
16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார்.
அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்”.
தேவனை பிரியப்படுத்தும் வழிபாடு
13 கிறிஸ்துவுக்குள் நீங்கள் சகோதர சகோதரிகளாவீர்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 2 மக்களை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யுங்கள். இதனால் சிலர் அறியாமலேயே தேவ தூதர்களையும் உபசரிப்பதுண்டு. 3 நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோல் சிறையிலுள்ள மக்களை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்களே துன்பமுறுவதைப்போல், துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்.
4 திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார். 5 பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன்,
“நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.
நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார். (A)
6 எனவே,
“கர்த்தர் எனக்கு உதவுபவர்.
நான் அச்சப்படத் தேவையில்லை.
எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம். (B)
7 உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள். 8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், நாளையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவர்.
15 எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். 16 மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும்.
ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?
14 ஓய்வு நாளில் இயேசு பரிசேயர்களின் தலைவனாகிய ஒருவனின் வீட்டுக்கு அவனோடு உணவு உண்ணச் சென்றார். அங்கிருந்த ஜனங்கள் இயேசுவைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
சுயமுக்கியத்துவம் வேண்டாம்
7 விருந்தினர்களில் சிலர் மதிப்புக்குரிய உயர்ந்த இடத்தில் அமருவதற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதை இயேசு கவனித்தார். எனவே இயேசு இவ்வுவமையைச் சொன்னார். 8 “ஒருவன் உங்களை ஒரு திருமணத்திற்காக அழைக்கும்போது, மிக முக்கியமான இருக்கையில் அமராதீர்கள். அந்த மனிதன் உங்களைக் காட்டிலும் முக்கியமான மனிதர் ஒருவரை அழைத்திருக்கக் கூடும். 9 நீங்கள் முக்கியமான இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கையில் உங்கள் இருவரையும் அழைத்த மனிதன் வந்து, ‘உங்கள் இருக்கையை இவருக்குக் கொடுங்கள்’ என்று கூறக்கூடும். எனவே கடைசி இடத்தை நோக்கி, நீங்கள் செல்லக் கூடும். உங்களுக்கு அது அவமானமாக இருக்கும்.
10 “எனவே ஒருவன் உங்களை அழைக்கும்போது முக்கியமற்ற இடத்தில் உட்காருங்கள். அப்போது உங்களை அழைத்த மனிதன் உங்களிடம் வந்து, ‘நண்பனே, இன்னும் முக்கியமான இருக்கையில் வந்து அமருங்கள்’ என்பான். அப்போது மற்ற எல்லா விருந்தினர்களும் உங்களை மதிப்பார்கள். 11 தன்னை முக்கியமாகக் கருதும் எந்த மனிதனும் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்திக்கொள்கிற மனிதன் உயர்வாக வைக்கப்படுவான்” என்றார்.
நீ பலன் பெறுவாய்
12 பின்பு இயேசு தன்னை அழைத்த பரிசேயனை நோக்கி, “நீ பகலுணவோ, இரவுணவோ அளிக்கையில், உன் நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், செல்வந்தர்களாகிய அக்கம் பக்கத்தார் ஆகியோரை மட்டும் அழைக்காதே. மற்றொரு முறை அவர்கள் உன்னைத் தம்மோடு உண்ணுவதற்காக அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு உன் பலன் கிடைத்துவிடும். 13 அதற்கு மாறாக, நீ விருந்தளிக்கும் போது, ஏழைகளையும், முடமானவர்களையும், நொண்டிகளையும், குருடர்களையும் அழைத்துக்கொள். 14 அந்த ஏழைகள் உனக்கு மீண்டும் எதுவும் அளிக்க முடியாததால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நல்லோர் மரணத்திலிருந்து எழுகையில் உனக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்” என்றார்.
2008 by World Bible Translation Center