Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 81:1

கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று

81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
    இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.

சங்கீதம் 81:10-16

10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
    நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
    நான் உன்னைப் போஷிப்பேன்.

11 “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
    இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன்.
    இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால்,
    என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன்.
    இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள்.
    அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.
16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார்.
    அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்”.

எரேமியா 12:1-13

எரேமியா தேவனிடம் முறையிடுகிறான்

12 கர்த்தாவே, நான் உம்மோடு வாதம் செய்தால் நீர் எப்பொழுதும் சரியாகவே இருப்பீர்!
    ஆனால், நான் உம்மிடம் சரியாக தோன்றாத சிலவற்றைப்பற்றி கேட்க விரும்புகிறேன்.
கெட்டவர்கள் ஏன் சித்தி பெறுகிறார்கள்?
    உம்மால் நம்பமுடியாதவர்கள், ஏன் இத்தகைய இலகுவான வாழ்க்கையைப் பெறுகிறார்கள்?
நீர் அந்த கெட்ட ஜனங்களை இங்கே வைத்திருக்கிறீர்,
    அவர்கள் பலமான வேர்களையுடைய செடிகளைப்போல் உள்ளனர்.
அவர்கள் வளர்ந்து கனிகளை உற்பத்தி செய்கின்றனர்.
    அவர்கள் தம் வாயில் நீர் அவர்களோடு அன்பாகவும்
நெருக்கமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்;
    ஆனால், அவர்கள் இதயத்தில் உண்மையில் உம்மை விட்டுத் தூரத்தில் உள்ளனர்.
ஆனால், கர்த்தாவே!
    நீர் என் இதயத்தை அறிவீர், நீர் என்னைப் பார்க்கிறீர்.
    என் மனதை சோதிக்கிறீர்.
வெட்டுவதற்கு இழுத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போன்று அந்தத் தீய ஜனங்களை வெளியே இழுத்துப்போடும்.
    அவர்களை வெட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடும்.
இந்தப் பூமி இன்னும் எவ்வளவு காலத்திற்கு வறண்டிருக்கும்?
    இந்தப் புல் நிலங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குக் காய்ந்து மடிந்திருக்கும்?
இந்தப் பூமியிலுள்ள மிருகங்களும், பறவைகளும், செத்திருக்கின்றன.
    இது தீய ஜனங்களின் குற்றமாகும்,
எனினும் அத்தீய ஜனங்கள்,
    “எரேமியா நமக்கு நிகழப்போவதைப் பார்க்க நீண்டகாலம் உயிர்வாழமாட்டான்”
    என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

எரேமியாவிற்கு தேவனுடைய பதில்

“எரேமியா! நீ மனிதர்களோடும் ஓடும் பந்தயத்திலேயே சோர்வடைந்துவிட்டால்,
    குதிரைகளோடு பந்தயத்தில் எப்படி ஓடுவாய்?
பாதுகாப்பான இடங்களிலேயே நீ சோர்வடைந்துவிட்டால்,
    ஆபத்தான இடங்களில் நீ என்ன செய்யப்போகிறாய்?
யோர்தான் ஆற்றோரங்களில் வளர்ந்துள்ள
    முட்புதர்களின் மத்தியில் நீ என்ன செய்யப் போகிறாய்?
இந்த மனிதர்கள் உனது சொந்தச் சகோதரர்கள்.
    உனது சொந்தக் குடும்பத்து உறுப்பினர்களே உனக்கு எதிராகத் திட்டங்களைப் போடுகிறார்கள்.
    உனது சொந்தக் குடும்பத்து ஜனங்களே உனக்கெதிராய் கூச்சல் போடுகிறார்கள்.
அவர்கள் நண்பர்களைபோன்று
    பேசினாலும் கூட நம்பாதே.”

கர்த்தர் தமது ஜனங்களான யூதாவை ஏற்க மறுக்கிறார்

“நான் (கர்த்தர்) எனது வீட்டைத் தள்ளிவிட்டிருக்கிறேன்.
    நான் எனது சொந்த சொத்தை விட்டுவிட்டேன்.
நான் நேசம் வைத்த ஒன்றை (யூதா) அவளின் பகைவர்களிடமே விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
ஒரு காட்டுச் சிங்கத்தைப்போன்று, எனது சொந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் என்மீது கெர்ச்சிக்கிறார்கள்.
    எனவே நான் அவர்களிடமிருந்து திரும்பி வந்துவிட்டேன்.
எனது சொந்த ஜனங்கள், கருடகழுகுகளின் நடுவிலே சூழப்பட்ட,
    மரிக்கிற மிருகத்தைப் போல ஆனார்கள்.
அப்பறவைகள் அவனைச் சுற்றி பறக்கின்றன.
    காட்டு மிருகங்களே வாருங்கள்.
    நீங்கள் உண்பதற்குப் பெற்றுக்கொள்ளுங்கள்.
10 பல மேய்ப்பர்கள் (தலைவர்கள்) எனது திராட்சைத் தோட்டங்களை அழித்திருக்கின்றனர்.
    அந்த மேய்ப்பர்கள் எனது வயல்களில் அந்தச் செடிகளின் மேல் நடந்திருந்தார்கள்:
    அந்த மேய்ப்பர்கள் எனது அழகிய வயலை வெறுமையான வனாந்தரமாக ஆக்கிவிட்டனர்.
11 அவர்கள் எனது வயலை வனாந்தரமாக்கினார்கள்.
    இது காய்ந்து செத்துப்போனது.
எந்த ஜனங்களும் அங்கே வாழவில்லை.
    நாடு முழுவதும் ஒரு வறுமையான வனாந்தரமாக ஆயிற்று.
அந்த வயலை கவனித்துக்கொள்ள எவரும் விடப்படவில்லை.
12 வனாந்தரத்தின் பசுஞ்சோலையைக் கொள்ளையடிக்க சிப்பாய்கள் வந்தனர்.
    தேசத்தைத் தண்டிக்கும்படி கர்த்தர் அந்தப் படைகளை பயன்படுத்தினார்.
தேசத்தின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர்.
    ஒருவனும் பத்திரமாக இருக்கவில்லை.
13 ஜனங்கள் கோதுமையை விதைப்பார்கள்.
    ஆனால் அவர்கள் முட்களையே அறுவடை செய்வார்கள்.
அவர்கள் களைத்து போகிறவரை கடுமையாக உழைப்பார்கள்.
    ஆனால் அவர்கள் தமது வேலைக்காக எதையும் பெறமாட்டார்கள்.
அவர்கள் தங்கள் விளைச்சலுக்காக வெட்கப்படுவார்கள்.
    கர்த்தருடைய கோபம் அவற்றுக்குக் காரணமாயிற்று.”

1 பேதுரு 4:7-11

தேவனுடைய வரங்கள்

எல்லாம் முடிகிற காலம் நெருங்குகிறது. எனவே உங்கள் மனங்களைத் தெளிவுடையதாக வைத்திருங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்ய அது உதவும். அன்பு எத்தனையோ பாவங்களை மூடி விடுவதால் ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இதுவே ஆகும். குற்றம் சாட்டாமல் உங்கள் வீடுகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். 10 உங்களில் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரங்களைப் பெற்றுக்கொண்டீர்கள். பல வகையான வழிகளில் தேவன் தம் இரக்கத்தை உங்களுக்குக் காட்டியுள்ளார். தேவனுடைய வரங்களைப் பயன்படுத்தும் பொறுப்புக்கு உரியவர்களான பணியாட்களைப் போல நீங்கள் இருக்கிறீர்கள். எனவே நல்ல பணியாட்களாக இருந்து தேவனுடைய வரங்களை ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள். 11 பேசுகிற மனிதன் தேவனிடமிருந்து வார்த்தைகளைக் கொண்டு வருவதுபோல பேசவேண்டும். சேவை செய்யும் மனிதன் தேவன் தரும் வல்லமையோடு சேவை புரிதல் வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் எல்லாவற்றிலும் மகிமையுறும்படி நீங்கள், இக்காரியங்களைச் செய்ய வேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center