Revised Common Lectionary (Semicontinuous)
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று
80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் அரசராக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2 இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி”யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி”யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16 உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது மகனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
18 அப்போது, பெருமைக்காரர்களிடம் உள்ள பொருட்களை கர்த்தர் எடுத்துக்கொள்வார். அழகான தண்டைகளையும், சுட்டிகளையும், சூரியனும், பிறையும் போன்ற சிந்தாக்குகளையும் எடுத்துக்கொள்வார். 19 ஆரங்களையும், அஸ்தகடகங்களையும் தலைமுக்காடுகளையும், 20 தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்த பரணிகளையும், 21 தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், 22 விநோத ஆடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், 23 கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துப்போடுவார்.
24 இப்பொழுது அப்பெண்களிடம் சுகந்த நறு மணம் வீசுகிறது. ஆனால் அப்பொழுது அவர்களிடம் துர்மணமும் அழுகியவாசமும் வீசும். இப்பொழுது அவர்கள் கச்சைகளை அணிந்திருக்கின்றனர். ஆனால் அப்போது வெறும் கயிறுகளைக் கட்டியிருப்பார்கள். இப்பொழுது அவர்கள் தலை மயிரை அலங்காரமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அப்போது மொட்டையாக இருப்பார்கள். இப்பொழுது அவர்கள் ஆடம்பரமான ஆடைகளை அணிந்துள்ளனர். ஆனால் அப்பொழுது, துக்கத்துக்குரிய ஆடைகளையே அணிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்களின் முகங்களில் அழகான அடையாளங்கள் உள்ளன. ஆனால் அப்பொழுது அவர்களின் முகத்தில் கருகிய தீ வடு போடப்படும்.
25 அப்போது, உங்கள் ஆட்கள் வாளால் கொல்லப்படுவார்கள். உங்கள் வீரர்கள் போரில் மரிப்பார்கள். 26 நகர வாசல்களின் சந்திகளில் அழுகை ஒலியும், துக்கமும் நிறைந்திருக்கும். எருசலேமோ, கள்ளர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் அனைத்தையும் இழந்துவிட்ட பெண்ணைப்போன்று இருப்பாள். அவள் தரையில் அமர்ந்து அழுவாள்.
4 அப்போது, ஏழு பெண்கள் ஒருவனை பற்றிக்கொள்வார்கள். அவர்கள், “நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த ஆடைகளை அணிந்துகொள்கிறோம். இவை அனைத்தையும் நாங்களே எங்களுக்குச் செய்துகொள்கிறோம். எங்களை நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை மட்டுமே உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நாங்கள் உன் பெயரை மட்டும் வைத்துக்கொள்வோம். எங்கள் அவமானத்தை நீக்கு” என்று சொல்வார்கள்.
2 அப்போது, கர்த்தருடைய செடியானது (யூதா) அழகாகவும் உயர்வாகவும் இருக்கும். இஸ்ரவேலில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்கள் தம் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைவார்கள். 3 அப்போது, சீயோனிலும் எருசலேமிலும் வாழ்கின்ற மீதியான ஜனங்கள் பரிசுத்தமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். சிறப்புப் பெயர் பட்டியலில் தம் பெயருள்ள அனைவருக்கும் இது நிகழும். பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.
4 சீயோன் பெண்களின் இரத்தத்தை கர்த்தர் கழுவிவிடுவார். எருசலேமில் உள்ள அனைத்து இரத்தக் கறைகளையும் கர்த்தர் கழுவி போக்குவார். தேவன் நீதியின் ஆவியினால் நியாயம்தீர்ப்பார். சுட்டெரிப்பின் ஆவியினால் அனைத்தையும் சுத்தப்படுத்துவார்.
5 அப்போது, தேவன் தன் ஜனங்களோடு இருப்பதை நிரூபிப்பார். அந்நாளின் பகலில், தேவன் புகை மேகத்தை தோன்றச் செய்வார். இரவில், தேவன் ஒளிரும் நெருப்புச்சுடரையும் தோன்றச் செய்வார். இச்சாட்சிகள் வானத்தில் ஒவ்வொரு கட்டிடத்தின் மேலும் சீயோன் மலையில் நடைபெறும் ஒவ்வொரு ஜனங்கள் கூட்டத்தின் மேலும் தோன்றும், ஒவ்வொருவரைச் சுற்றிலும் அவர்களைப் பாதுகாக்க ஒரு மூடி அமையும். 6 இம்மூடியானது பாதுகாப்புக்கான இடம். இது ஜனங்களை சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். இம்மூடி வெள்ளம் மற்றும் மழையிலிருந்து காத்துக்கொள்ள உதவும்.
15 ,“அழிவை ஏற்படுத்துகிற கொடிய காரியத்தைப்பற்றி தீர்க்கதரிசி தானியேல் கூறியுள்ளார். ‘இக்கொடியதை தேவாலயத்தில் நின்றிருக்க நீங்கள் காண்பீர்கள்.’ (இதைப் படிக்கிற நீங்கள் அது என்னவென்பதை அறிந்துகொள்ளவேண்டும்.) 16 அந்நேரத்தில், யூதேயாவில் வசிப்பவர்கள் மலைகளுக்கு ஓடிவிட வேண்டும். 17 கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் ஓடிவிட வேண்டும். வீட்டின் கூரையின் மீதிருப்பவன், வீட்டிலுள்ள பொருட்களை வெளியே எடுப்பதற்காக கீழே இறங்கக் கூடாது. 18 வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது.
19 ,“கர்ப்பிணிகளுக்கும் கைக் குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது. 20 இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்கப் பிரார்த்தியுங்கள். 21 ஏனென்றால், அக்காலத்தில் துன்பங்கள் அதிகரிக்கும். உலகம் தோன்றிய நாள் முதலாக இல்லாத அளவிற்கு அப்பொழுது துன்பங்கள் ஏற்படும். அதைவிட மோசமானது பிற்காலத்தில் ஏற்படாது.
22 ,“அக்கொடிய காலத்தை குறுகியதாக்க தேவன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு குறுகியதாகாவிடில், பின் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆனால், தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உதவ தேவன் அக்கொடிய காலத்தை குறுகியதாக்குவார்.
23 ,“அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். 24 கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். 25 ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன்.
26 ,“‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்’, என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். 27 மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும்.
2008 by World Bible Translation Center