Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 24

யோசுவா விடை பெறுதல்

24 இஸ்ரவேல் கோத்திரத்தினர் எல்லோரையும் சீகேமில் கூடுமாறு யோசுவா அழைத்தான். பின் யோசுவா மூத்த தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும் இஸ்ரவேலின் ஆட்சியாளரையும் அழைத்தான். இவர்கள் தேவனுக்கு முன்னே நின்றார்கள்.

பின்பு யோசுவா எல்லா ஜனங்களையும் பார்த்துப் பேசினான். அவன், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குக் கூறுவதை நான் சொல்லுகிறேன்:

‘பலகாலத்திற்கு முன், உங்கள் முற்பிதாக்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் வாழ்ந்தனர். ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தையாகிய தேராகு, போன்றோரைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது, அம்மனிதர்கள் வேறு தெய்வங்களை வணங்கி வந்தனர். ஆனால் கர்த்தராகிய நான், நதிக்கு மறுபுறத்திலுள்ள தேசத்திலிருந்து உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை அழைத்து வந்தேன். கானான் தேசத்தின் வழியாக அவனை வழிநடத்திப் பல பல பிள்ளைகளை அவனுக்குக் கொடுத்தேன். ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்னும் பெயருள்ள மகனைக் கொடுத்தேன். ஈசாக்கிற்கு யாக்போபு, ஏசா என்னும் இரண்டு மகன்களைக் கொடுத்தேன். சேயீர் மலையைச் சுற்றியிருந்த தேசத்தை ஏசாவிற்குக் கொடுத்தேன். யாக்கோபும் அவனது மகன்களும் அங்கு வாழவில்லை. அவர்கள் எகிப்து தேசத்தில் வாழ்வதற்குச் சென்றார்கள்.

‘பிறகு நான் மோசேயையும் ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பினேன். எனது ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வருமாறு அவர்களுக்குச் சொன்னேன். எகிப்து ஜனங்களுக்குப் பல கொடிய காரியங்கள் நிகழுமாறு செய்தேன், பின் உங்கள் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். அவ்வாறு உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் செங்கடலுக்கு வந்தார்கள், எகிப்தியர்கள் தேர்களிலும் குதிரைகளிலும் அவர்களைத் துரத்தினார்கள். ஜனங்கள், கர்த்தராகிய என்னிடம் உதவி வேண்டினார்கள். நான் எகிப்தியருக்குப் பெருந்தொல்லைகள் வரப்பண்ணினேன். கடல் அவர்களை மூடிவிடுமாறு கர்த்தராகிய நான் செய்தேன். நான் எகிப்திய படைக்குச் செய்ததை நீங்களே கண்டீர்கள்.

‘அதன் பிறகு, நீண்டகாலம் நீங்கள் பாலை வனத்தில் வாழ்ந்தீர்கள். எமோரியரின் தேசத்திற்கு உங்களை அழைத்து வந்தேன். அது யோர்தான் நதிக்குக் கிழக்குப் பகுதியாகும். அந்த ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் செய்தனர், ஆனால் நீங்கள் அவர்களைத் தோற்கடிக்குமாறு செய்தேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கான ஆற்றலை உங்களுக்கு கொடுத்தேன். பின்பு அத்தேசத்தை நீங்கள் கைப்பற்றினீர்கள்.

‘பிறகு மோவாபின் அரசனும், சிப்போரின் மகனுமாகிய பாலாக், இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்துப் போரிடத் தயாரானான். பேயோரின் மகனாகிய பிலேயாமுக்கு அரசன் சொல்லினுப்பினான். அவன் பிலேயாமிடம் உங்களைச் சபிக்குமாறு கூறினான். 10 ஆனால் கர்த்தராகிய, நான், பிலேயாம் கூறுவதைக் கேட்க மறுத்தேன். எனவே பிலேயாம் உங்களுக்கு நல்லவை நிகழவேண்டுமெனக் கேட்டான்! அவன் உங்களைப் பலமுறை ஆசீர்வதித்தான். நான் உங்களைக் காப்பாற்றி, தீமைகளினின்று விலக்கினேன்.

11 ‘பின் நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டினீர்கள். எரிகோவிற்குச் சென்றீர்கள். எரிகோ நகர ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும் உங்களுக்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் எல்லோரையும் நீங்கள் வெல்லுமாறு செய்தேன். 12 உங்கள் படை முன்னோக்கிச் சென்றபோது, நான் காட்டுக் குளவிகளை அவர்களுக்கு முன்பாக அனுப்பினேன். காட்டுக் குளவிகள் அந்த ஜனங்களையும் இரண்டு எமோரிய அரசர்களையும் பயமுறுத்தி ஓடச் செய்தன. வாளையும், வில்லுகளையும் பயன்படுத்தாமலே தேசத்தைக் கைப்பற்றினீர்கள்.

13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”

14 பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும். உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த பொய்த் தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.

15 “நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். யாருக்கு சேவை செய்வதென்று இன்றைக்கு முடிவெடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்தபோது உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வங்களுக்கு சேவைபுரிவீர்களா? அல்லது இத்தேசத்தில் வாழ்ந்த எமோரியர் வழிபட்ட தேவர்களையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நானும் எனது குடும்பமும், கர்த்தருக்கே சேவை செய்வோம்!” என்றான்.

16 அப்போது ஜனங்கள் பதிலாக, “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தமாட்டோம். அந்நிய தெய்வங்களுக்கு ஒருபோதும் சேவை செய்யமாட்டோம்! 17 தேவனாகிய கர்த்தர் தான் எகிப்திலிருந்து வெளியேற்றி நம் ஜனங்களை அழைத்து வந்தார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தேசத்தில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் அங்கு பெரிய காரியங்களை கர்த்தர் எங்களுக்காகச் செய்தார். அவர் எங்களை அத்தேசத்திலிருந்து அழைத்து வந்து, பிற தேசங்கள் வழியாக நாங்கள் பிரயாணம் செய்யும்போது எங்களைப் பாதுகாத்து வந்தார். 18 அத்தேசங்களில் வசித்த ஜனங்களைத் தோற்கடிக்க கர்த்தர் எங்களுக்கு உதவினார். நாங்கள் இப்போதிருக்கிற தேசத்தில் வாழ்ந்த எமோரிய ஜனங்களை வெல்லவும் கர்த்தர் எங்களுக்கு உதவினார். கர்த்தருக்குத் தொடர்ந்து நாங்கள் சேவை செய்வோம். ஏனெனில் அவரே எங்கள் தேவன்” என்றார்கள்.

19 அப்போது யோசுவா, “அது உண்மையல்ல. நீங்கள் கர்த்தருக்குத் தொடர்ந்து சேவை செய்வதென்பது இயலாதது. தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். அந்நிய தெய்வங்களை ஆராதிக்கும் ஜனங்களை தேவன் வெறுக்கிறார். தனக்கெதிராக அவ்வாறு திரும்பினால் உங்களை தேவன் மன்னிக்கமாட்டார். 20 ஆனால் நீங்கள் கர்த்தரை விட்டு நீங்கிப் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்வீர்கள். உங்களுக்குக் கொடிய காரியங்கள் நிகழும்படி கர்த்தர் செய்வார். கர்த்தர் உங்களை அழிப்பார். தேவனாகிய கர்த்தர் உங்களிடம் நல்லவராக இருந்தார், ஆனால் நீங்கள் அவருக்கெதிராக திரும்பினால் அவர் உங்களை அழிப்பார்” என்றான்.

21 அதற்கு ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “இல்லை! நாங்கள் கர்த்தருக்கே சேவை செய்வோம்” என்றார்கள்.

22 அப்போது யோசுவா, “உங்களையும், உங்களோடிருக்கிற ஜனங்களையும் சுற்றி நோக்குங்கள். நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சிகளா?” என்றான்.

ஜனங்கள் பதிலாக, “ஆம், அது உண்மை! நாங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்துள்ளோம் என்பதைக் காண்கிறோம்” என்றார்கள்.

23 அப்போது யோசுவா, “உங்களிடமிருக்கிற பொய்த் தெய்வங்களை எடுத்து வீசிவிடுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உங்கள் முழுமனதோடும் நேசியுங்கள்” என்றான்.

24 பின் ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்வோம். நாங்கள் அவருக்குக் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.

25 அந்த நாளில் யோசுவா ஜனங்களுக்காக ஒரு ஒப்பந்தத்தைச் செய்தான். சீகேம் எனப்பட்ட ஊரில் இந்த ஒப்பந்தத்தைச் செய்தான். அது அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாயிற்று. 26 தேவனுடைய சட்ட புத்தகத்தில் யோசுவா இவற்றை எழுதினான். பின் யோசுவா ஒரு பெரிய கல்லை எடுத்தான். அக்கல்லே அந்த ஒப்பந்தத்திற்கு அடையாளமாயிற்று. கர்த்தருடைய பரிசுத்த கூடாரத்தின் அருகே இருந்த கர்வாலி மரத்திற்கு அடியில் அவன் அக்கல்லை வைத்தான்.

27 பிறகு யோசுவா அனைவரையும் நோக்கி, “நாம் இன்று கூறிய காரியங்களை நினைவு கூருவதற்கு இந்தக் கல் உதவும். கர்த்தர் நம்மோடு பேசிக் கொண்டிருந்த இந்த நாளில், இந்த கல் இங்கு இருந்தது. இன்று நடந்தவற்றை நினைவுகூருவதற்கு உதவும் ஒன்றாக இந்த கல் இருக்கும். உங்களுக்கு எதிரான சாட்சியாகவும் இந்த கல் அமையும். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் திரும்புவதை அது தடுக்கும்” என்றான்.

28 பின்பு யோசுவா அனைவரிடமும் தம் வீடுகளுக்குத் திரும்பிப் போகுமாறு கூறினான். எனவே ஒவ்வொருவனும் அவனவன் இருப்பிடத்திற்குச் சென்றான்.

யோசுவா மரணமடைதல்

29 அதன் பின்னர் நூனின் மகனாகிய யோசுவா மரித்தான். யோசுவாவுக்கு அப்போது 110 வயது. 30 திம்னாத் சேராவிலுள்ள அவனது சொந்த நிலத்தில் அவன் அடக்கம் பண்ணப்பட்டான். காயாஸ் மலைக்கு வடக்கேயுள்ள எப்பிராயீமின் மலைநாட்டில் அது இருந்தது.

31 யோசுவா உயிரோடிருந்தபோது இஸ்ரவேலர் கர்த்தருக்கு சேவை செய்தனர். யோசுவா மரித்த பின்னரும், கர்த்தருக்குத் தொடர்ந்து, ஜனங்கள் சேவை செய்து வந்தார்கள். அவர்கள் தலைவர்கள் உயிரோடிருந்தபோது ஜனங்கள் தொடர்ந்து கர்த்தரை சேவித்தனர். கர்த்தர் இஸ்ரவேலருக்குச் செய்த காரியங்களைப் பார்த்தவர்கள் இத்தலைவர்கள் ஆவர்.

யோசேப்பு தன்னிடத்திற்கு வருகிறான்

32 இஸ்ரவேலர் எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது, அவர்கள் யோசேப்பின் எலும்புகளை எடுத்து வந்தனர். சீகேமில் யோசேப்பின் எலும்புகளைப் புதைத்தனர். சீகேம் என்ற மனிதனின் தந்தையாகிய எமோரியரின் மகன்களிடமிருந்து யாக்கோபு வாங்கிய நிலத்தில் அந்த எலும்புகளைப் புதைத்தனர். யாக்கோபு அந்த நிலத்தை 100 சுத்த வெள்ளி பணத்திற்கு வாங்கியிருந்தான். அந்நிலம் யோசேப்பின் பிள்ளைகளுக்குச் சொந்தமானதாக இருந்தது.

33 ஆரோனின் மகன், எலெயாசாரும் மரித்தான். எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள கிபியாவில் அவன் அடக்கம்பண்ணப்பட்டான். எலெயாசாரின் மகன் பினெகாசுக்குக் கிபியா கொடுக்கப்பட்டது.

அப்போஸ்தலர் 4

யூத ஆலோசனைச் சங்கத்தின் முன்

பேதுருவும், யோவானும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் அவர்களிடம் வந்தார்கள். யூத ஆசாரியர்களும், ஆலயத்தைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தலைவனும், சில சதுசேயரும் அவர்களோடு வந்திருந்தனர். பேதுருவும், யோவானும் மக்களிடம் போதித்தவற்றைக் குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து மக்களுக்குக் கூறும்போது, மக்கள் மரணத்திலிருந்து இயேசுவின் வல்லமையால் உயிர்த்தெழுவார் என்பதையும் போதித்தார்கள். யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அது ஏற்கெனவே இரவு நேரமாயிருந்தது. எனவே அடுத்த நாள்வரைக்கும் பேதுருவையும் யோவானையும் சிறையில் வைத்திருந்தார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது.

மறுநாள் யூதத் தலைவர்களும், அதிகாரிகளும், வேதபாரகரும் எருசலேமில் சந்தித்தனர். அன்னா, காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் அங்கிருந்தனர். தலைமை ஆசாரியனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் பேதுருவையும் யோவானையும் அவர்கள் நிறுத்தினர். யூத அதிகாரிகள் பல முறை அவர்களிடம், “ஊனமுற்ற இந்த மனிதனை எவ்வாறு குணப்படுத்தினீர்கள்? எந்த வல்லமையைப் பயன்படுத்தினீர்கள்? யாருடைய அதிகாரத்தினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

அப்போது பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அவன் அவர்களை நோக்கி, “மக்களின் அதிகாரிகளே, முதிய தலைவர்களே, ஊனமுற்ற மனிதனுக்கு ஏற்பட்ட நல்ல காரியத்தைக் குறித்து எங்களை வினவுகிறீர்களா? அவனைக் குணப்படுத்தியது யார் என்று எங்களை வினவுகிறீர்களா? 10 நீங்கள் யாவரும், யூத மக்கள் அனைவரும், இம்மனிதன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் குணம் ஆக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். இந்த மனிதன் ஊனமுற்றவனாயிருந்தான். ஆனால் இப்போது இயேசுவின் வல்லமையால் குணம் பெற்று உங்களுக்கு முன்பாக எழுந்து நிற்கிறான்.

11 “‘கட்டிடம் கட்டுபவர்களாகிய நீங்கள் இயேசுவை முக்கியமற்ற கல்லைப் போன்று கருதினீர்கள்.
    ஆனால் இந்தக் கல்லோ மூலைக்கல்லாயிற்று.’ (A)

12 மக்களை இரட்சிக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. உலகத்தில் மக்களை இரட்சிக்கும் வல்லமையுடன் தரப்பட்ட நாமம் இயேசுவினுடையது மட்டுமே. இயேசுவின் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படவேண்டும்!” என்றான்.

13 பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். 14 இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.

15 அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 16 அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது. 17 ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர்.

18 எனவே யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் மீண்டும் உள்ளே அழைத்தனர். இயேசுவின் பெயரில் எதையும் கூறாதபடியும் போதிக்காதபடியும் அவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கூறினர். 19 ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா? 20 நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டும்” என்றார்கள்.

21-22 நடந்ததற்காக எல்லா மக்களும் தேவனை வாழ்த்திக்கொண்டிருந்தபடியால் யூதத் தலைவர்கள் அப்போஸ்தலரைத் தண்டிப்பதற்கு ஒரு வழியும் காண முடியவில்லை. (இந்த அதிசயம் தேவனிடமிருந்து வந்த ஒரு சான்று. குணமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாயிருந்தான்!) எனவே யூத அதிகாரிகள் மீண்டும் அப்போஸ்தலரை எச்சரித்து விடுவித்தனர்.

விசுவாசிகளின் பிரார்த்தனை

23 பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். 24 விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். 25 அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான்.

“‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்?
    அவர்கள் செய்வது வீணானது.

26 “‘பூமியின் அரசர்கள் போருக்குத் தயாராகின்றனர்.
    தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’ (B)

27 ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். 28 கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது. 29 கர்த்தாவே, இப்போதும் அவர்கள் கூறுவதைக் கவனியும். அவர்கள் எங்களை அச்சமடையும்படியாகச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமக்கு ஊழியம் செய்பவர்கள். 30 நீர் விரும்புகிறவற்றை நாங்கள் தைரியமாகக் கூறுவதற்கு எங்களுக்கு உதவும். நோயுற்றோரைக் குணப்படுத்தும். சான்றுகள் கொடும். உம் தூய பணியாளராகிய இயேசுவின் வல்லமையால் அதிசயங்கள் நடக்கும்படிச் செய்யும்” என்று பிரார்த்தனை செய்தனர்.

31 விசுவாசிகள் பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அச்சமின்றி தேவனுடைய செய்தியைத் தொடர்ந்து கூறினர்.

விசுவாசிகளின் ஒருமித்த வாழ்வு

32 விசுவாசிகள் அனைவரும் இருதயத்தில் ஒருமனமுள்ளவர்களாக ஒரே ஊக்கமுடையோராக இருந்தனர். அவர்களில் ஒருவரும் தன்னிடமிருந்த பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை எனக் கூறவில்லை. மாறாக அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 33 மிகுந்த வல்லமையோடு, அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு மரணத்தினின்று உண்மையாகவே எழுப்பப்பட்டார் என்பதை மக்களுக்குக் கூறினர். 34 விசுவாசிகளை தேவன் அதிகமாக ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் தேவையான பொருட்களைப் பெற்றனர். வயல்களையோ, வீடுகளையோ உடைய ஒவ்வொருவரும் அவற்றை விற்றனர். அப்பணத்தைக் கொண்டு வந்து 35 அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.

36 விசுவாசிகளில் ஒருவன் யோசேப்பு என அழைக்கப்பட்டான். அப்போஸ்தலர்கள் அவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். (இந்தப் பெயர், “பிறருக்கு உதவுகின்ற மனிதன்” எனப் பொருள்படும்) அவன் சீப்புருவில் பிறந்த லேவியன். 37 அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.

எரேமியா 13

அடையாளமான இடுப்புத்துணி

13 இதுதான் கர்த்தர் என்னிடம் கூறுகிறது: “எரேமியா போய் ஒரு சணல் இடுப்புத் துணியை வாங்கு. பிறகு அதனை உன் இடுப்பிலே கட்டிக்கொள். அந்த இடுப்புத்துணி நனையும்படிவிடாதே.”

எனவே நான், கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி ஒரு சணல் இடுப்புத்துணியை வாங்கினேன், அதனை என் இடுப்பிலே கட்டினேன். பிறகு கர்த்தருடைய செய்தி என்னிடம் இரண்டாவது முறையாக வந்தது. இதுதான் செய்தி: “எரேமியா நீ வாங்கினதும் இடுப்பிலே கட்டியிருக்கிறதுமான துணியை எடுத்துக்கொண்டு பேராத்துக்குப் போ. அதை அங்கே பாறையின் வெடிப்பிலே மறைத்துவை.”

எனவே, நான் பேராத்துக்குப் போய் அங்கே கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி இடுப்புத் துணியை மறைத்து வைத்தேன். பல நாட்கள் கழிந்தது; கர்த்தர் என்னிடம், “இப்பொழுது எரேமியா! பேராத்துக்குப் போ. நான் மறைத்து வைக்கச் சொன்ன இடுப்புத்துணியை எடுத்துக்கொள்” என்று சொன்னார்.

எனவே, நான் பேராத்துக்குச் சென்று இடுப்புத் துணியை தோண்டி எடுத்தேன், ஆனால், இப்பொழுது என்னால் அதனை இடுப்பிலே கட்டமுடியவில்லை. ஏனென்றால், அது மிக பழமையாகிப் போயிருந்தது. அது எதற்கும் பயன்படும் அளவில் நன்றாயில்லை.

பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: “இடுப்புத்துணி கெட்டுப்போயிற்று, அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது. இதைப்போலவே, எருசலேமிலும் யூதாவிலும் உள்ள வீண்பெருமைகொண்ட ஜனங்களை அழிப்பேன். 10 யூதாவிலுள்ள வீண் பெருமையும், தீமையும்கொண்ட ஜனங்களை, நான் அழிப்பேன். அவர்கள் எனது வார்த்தையைக் கேட்க மறுத்தனர். அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாக விரும்புகின்றவற்றை மட்டுமே செய்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களைப் பின் பற்றி தொழுதுகொண்டனர். யூதாவிலுள்ள அந்த ஜனங்கள் இந்தச் சணல் இடுப்புத் துணியைப்போன்று ஆவார்கள். அவர்கள் அழிக்கப்பட்டு எதற்கும் பயனற்றுப் போவார்கள். 11 ஒரு இடுப்புத் துணியை ஒரு மனிதன் இடுப்பைச்சுற்றி இறுக்கமாக கட்டுகிறான். இதைப்போலவே நான் என்னைச் சுற்றிலும் இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதாவின் குடும்பத்தையும் கட்டினேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அதைச் செய்தேன். எனவே, அந்த ஜனங்கள் என் ஜனங்களாவார்கள். பிறகு, எனது ஜனங்கள் கனமும் துதியும் மகிமையும் எனக்குக் கொண்டு வருவார்கள். ஆனால் எனது ஜனங்கள் என்னை கவனிக்கவில்லை.”

யூதாவிற்கு எச்சரிக்கை

12 “எரேமியா! யூதாவின் ஜனங்களிடம் சொல்: ‘இதுதான் கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ஒவ்வொரு திராட்சை ஜாடிகளும், திராட்சை ரசத்தால் நிரப்பப்படவேண்டும்’ அந்த ஜனங்கள் சிரிப்பார்கள். உன்னிடம், ‘நிச்சயமாக, ஒவ்வொரு திராட்சை ஜாடியும், திராட்சை ரசத்தால் தான் நிரப்பப்படவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்’ என்பார்கள். 13 பிறகு நீ அவர்களிடம், இதுதான் கர்த்தர் சொல்வது. இந்த நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனையும் குடிகாரனைப் போன்று உதவியற்றவனாகச் செய்வேன். நான் தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அரசர்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் எருசலேமில் வாழும் அனைத்து ஜனங்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். 14 நான் யூதாவின் ஜனங்களை ஒருவர் மீது ஒருவர் மோதி விழும்படி பண்ணுவேன். தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்” என்று கூறுவாய், என்று கர்த்தர் சொல்லுகிறார். “‘நான் அவர்களுக்காக வருத்தமோ இரக்கமோ அடைவது இல்லை. நான் யூதாவின் ஜனங்களை அழிப்பதிலிருந்து நிறுத்த, இரக்கத்தை அனுமதிக்கமாட்டேன்.’”

15 கேள் உன் கவனத்தைச் செலுத்து.
    கர்த்தர் உன்னோடு பேசியிருக்கிறார்.
    வீண் பெருமைகொள்ளாதே.
16 உனது தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவரைத் துதி.
இல்லையெனில் அவர் இருளைக் கொண்டுவருவார்.
    இருளான குன்றுகளின்மேல் விழுமுன், அவரைத் துதி.
இல்லாவிட்டால் யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் ஒளிக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
    ஆனால், கர்த்தர் அடர்த்தியான இருளைக் கொண்டு வருவார்.
    கர்த்தர் ஒளியை மிக அடர்த்தியான இருளாக மாற்றிவிடுவார்.
17 யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் கூறுவதைக் கேட்காவிட்டால்,
    உங்களது வீண்பெருமை எனது அழுகைக்குக் காரணம் ஆகும்.
நான் என் முகத்தை மறைத்து
    மிகக் கடுமையாக அழுவேன்.
எனது கண்கள் கண்ணீரால் நிரம்பும்,
    ஏனென்றால், கர்த்தருடைய மந்தை சிறைப்பிடிக்கப்படும்.
18 அரசனிடமும் அவனது மனைவியிடமும் இவற்றைக்கூறு:
    “உங்களது சிங்காசனங்களில் இருந்து இறங்கி வாருங்கள், உங்களது அழகான கிரீடங்கள் உம் தலைகளிலிருந்து விழுந்திருக்கிறது.”
19 நெகேவ் வனாந்தரத்தின் நகரங்கள் பூட்டப்பட்டுவிட்டன.
    எவராலும் அவற்றைத் திறக்க முடியாது.
யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் சிறைபிடிக்கப்பட்டு
    அவர்களைக் கைதிகளாக வெளியே கொண்டு சென்றனர்.

20 எருசலேமே! பார்.
    பகைவன் வடக்கிலிருந்து வந்துக்கொண்டிருக்கிறான்.
உனது மந்தை எங்கே? தேவன் உனக்கு அந்த அழகிய மந்தையைக் கொடுத்தார்.
    நீங்கள் அந்த மந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியவர்கள்.
21 அந்த மந்தையை குறித்து கணக்கு சொல்ல வேண்டுமென்று கர்த்தர் கேட்டால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?
    நீங்கள் ஜனங்களுக்கு தேவனைப் பற்றி கற்பிக்க வேண்டியவர்கள்.
உங்கள் தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச்செல்ல வேண்டியவர்கள்.
    ஆனால், அவர்கள் தங்கள் வேலையைச் செய்யவில்லை.
எனவே உங்களுக்கு மிகுதியான துன்பங்களும் கஷ்டங்களும் இருக்கும்.
    நீங்கள் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணைப்போன்று இருப்பீர்கள்.
22 நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்கலாம்.
    “ஏன் எனக்கு இத்தீமைகள் ஏற்பட்டன?”
அவை, உங்களது பல பாவங்களாலேயே ஏற்பட்டன.
    உங்களது பாவங்களால் உங்கள் உள்ளாடைகள் கிழிக்கப்பட்டன.
    உங்களது பாதரட்சைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவர்கள் உங்களை அவமானப்படுத்துவதற்காக இவற்றைச் செய்தனர்.
23 ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது.
    ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது.
இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது.
நீ எப்போதும் தீமையே செய்கிறாய்.

24 “உங்களது வீட்டை விட்டு விலகும்படி நான் உங்களைக் கட்டாயப்படுத்துவேன்.
    நீங்கள் எல்லா திசைகளிலும் ஓடுவீர்கள்.
    நீங்கள் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப் போன்றிருப்பீர்கள்.
25 இக்காரியங்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்.
    எனது திட்டங்களில் இதுவே உங்கள் பங்கு”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“இது ஏன் நிகழும்?
    ஏனென்றால், நீ என்னை மறந்தாய்.
    பொய்த் தெய்வங்களிடம் நம்பிக்கை வைத்தாய்.
26 எருசலேமே! நான் உனது உள்ளாடையை உன் முகத்தின்மேல் போடுவேன்.
ஒவ்வொருவரும் உன்னைப் பார்ப்பார்கள்.
    நீ அவமானம் அடைவாய்.
27 நீ செய்த பயங்கரமான செயல்களை எல்லாம் நான் பார்த்தேன்.
    நீ சிரித்ததைப் பார்த்தேன்.
    உனது நேசர்களுடன் நீ கொண்ட பாலின உறவுகளையும் பார்த்தேன்.
    நீ ஒரு வேசியைப் போன்று, போட்டுக்கொண்ட திட்டங்களை நான் அறிவேன்.
மலைகளின் மேலும், வயல்களிலும் நான் உன்னைப் பார்த்திருக்கிறேன்.
எருசலேமே, இது உனக்கு கெட்டதாக இருக்கும்.
    நீ இன்னும் எவ்வளவு காலத்திற்கு உனது தீட்டான பாவங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பாய் என நான் யோசிக்கிறேன்.”

மத்தேயு 27

பிலாத்துவின் முன் இயேசு(A)

27 தலைமை ஆசாரியரும் மூத்த யூதத் தலைவர்களும் மறுநாள் அதிகாலையில் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்தார்கள். அவர்கள் இயேசுவைச் சங்கிலியில் பிணைத்து, ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைத்தார்கள்.

யூதாஸின் தற்கொலை(B)

இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே தனக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமை ஆசாரியர்களிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துச் சென்றான். யூதாஸ்,, “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான்.

அதற்கு யூதத் தலைவர்கள்,, “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்.

ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான்.

வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள்,, “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி, அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். அந்த நிலம் எருசலேமைக் காண வரும் பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. எனவே தான் அந்த நிலம் இன்னமும், “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது. தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது.

, “அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை. 10 கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.” [a]

பிலாத்துவின் விசாரணை(C)

11 இயேசு ஆளுநரான பிலாத்துவின் முன்னால் நின்றார். பிலாத்து இயேசுவிடம் பல கேள்விகள் கேட்டான்., “யூதர்களின் இராஜன் நீர்தானா?” என்று கேட்டான்.

அதற்கு இயேசு,, “ஆம், நானே தான்” என்றார்.

12 தலைமை ஆசாரியர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவைக் குற்றம் சுமத்தியபொழுது, அவர் எதுவும் கூறவில்லை.

13 ஆகவே பிலாத்து இயேசுவிடம்,, “இவர்கள் உன்மீது சுமத்திய இத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டாயல்லவா? நீ ஏன் பதில் சொல்லக் கூடாது?” என்றான்.

14 ஆனால், இயேசு பிலாத்துவிற்கு பதில் ஏதும் கூறவில்லை. அதைக்கண்டு பிலாத்து மிகவும் வியப்படைந்தான்.

இயேசுவை விடுவிக்கப் பிலாத்துவின் முயற்சி(D)

15 ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையின் போது சிறையிலிருந்து ஒருவரை ஆளுநர் விடுவிப்பது வழக்கம். மக்கள் விரும்பும் ஒருவரை விடுவிப்பது வழக்கம். 16 அப்பொழுது துன்மார்க்கனான ஒருவன் சிறையிலிருந்தான். அவன் பெயர் பரபாஸ்.

17 பிலாத்துவின் வீட்டிற்கு முன் மக்கள் கூடினார்கள். பிலாத்து மக்களைப் பார்த்து,, “உங்களுக்காக ஒருவனை விடுதலை செய்கிறேன். நீங்கள் யாரை விடுவிக்க விரும்புகிறீர்கள். பரபாஸையா அல்லது கிறிஸ்து எனப்படும் இயேசுவையா?” என்றான். 18 பொறாமை கொண்டே மக்கள் தன்னிடம் இயேசுவை ஒப்படைத்துள்ளார்கள் என்பதை பிலாத்து அறிந்தான்.

19 நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்து பிலாத்து இவற்றைக் கூறினான். அப்பொழுது அவனது மனைவி ஒரு செய்தி அனுப்பினாள். அதில்,, “இயேசுவை எதுவும் செய்யாதீர்கள். அவர் குற்றமற்றவர். இன்று நான் அவரைப்பற்றி ஒரு கனவு கண்டேன். அது என்னை மிகவும் கலங்க வைத்தது” என்றிருந்தது.

20 ஆனால், தலைமை ஆசாரியர்களும் மூத்த யூதத் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யவும் இயேசுவைக் கொல்ல வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க மக்களைத் தூண்டினார்கள்.

21 பிலாத்து,, “என்னிடம் பரபாசும், இயேசுவும் உள்ளார்கள். யாரை விடுவிக்க நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு மக்கள், “பரபாஸ்” என்று சொன்னார்கள்.

22 ,“அப்படியானால் கிறிஸ்து எனப்படும் இயேசுவை என்ன செய்வது?” என்று பிலாத்து கேட்டான்.

, “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று மக்கள் சொன்னார்கள்.

23 ,“அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?” என்று பிலாத்து மக்களைக் கேட்டான்.

ஆனால் மக்கள் அனைவரும், “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

24 மக்களை மாற்றத் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதைப் பிலாத்து கண்டான். மேலும் மக்கள் பொறுமையிழப்பதையும் பிலாத்து கவனித்தான். ஆகவே தண்ணீரை எடுத்து மக்கள் எல்லோரும் காணுமாறு தன் கைகளைக் கழுவினான். பின்பு,, “இவரது மரணத்திற்கு நான் பொறுப்பல்ல. நீங்களே அதைச் செய்கிறீர்கள்” என்று பிலாத்து கூறினான்.

25 ,“அவரது மரணத்திற்கு நாங்களே பொறுப்பு. அவரது மரணத்திற்கான தண்டனையை எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்குமாக நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று மக்கள் அனைவரும் கூறினார்கள்.

26 பின் பிலாத்து பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவைச் சாட்டையால் அடிக்குமாறு பிலாத்து சில வீரர்களிடம் கூறினான். பிறகு சிலுவையில் அறைந்து கொல்வதற்கு வீரர்களிடம் இயேசுவை ஒப்படைத்தான்.

இயேசுவைக் கேலி செய்தல்(E)

27 பின்னர் பிலாத்துவின் வீரர்கள் இயேசுவை பிலாத்துவின் அரண்மனைக்குள் கொண்டு வந்தார்கள். 28 எல்லா வீரர்களும் இயேசுவைச் சுற்றிக்கொண்டு அவரது ஆடைகளைக் கழற்றி ஒரு சிவப்பு மேலங்கியை அணிவித்தார்கள். 29 வீரர்கள் முட்களால் ஒரு கிரீடம் செய்து அதை இயேசுவின் தலையில் சூட்டினார்கள். அவரது வலது கையில் ஒரு தடியைக் கொடுத்தார்கள். பின்னர் அவ்வீரர்கள் இயேசுவின் முன்னால் குனிந்து கேலி செய்தார்கள்., “வணக்கம் யூதர்களின் அரசரே” என்றார்கள். 30 அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். பின்னர் அவரது கையிலிருந்த தடியை வாங்கி அவரது தலையில் பல முறை அடித்தார்கள். 31 இயேசுவை அவர்கள் கேலி செய்து முடித்ததும், சிவப்பு மேலங்கியை நீக்கியபின் அவரது ஆடைகளை அணிவித்தார்கள். பின்னர் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசுவை வீரர்கள் அழைத்துச் சென்றார்கள்.

இயேசு சிலுவையில் கொல்லப்படுதல்(F)

32 போர்வீரர்கள் இயேசுவுடன் நகரை விட்டு வெளியில் சென்று கொண்டிருந்தார்கள். சிரேனே என்னுமிடத்திலிருந்து வந்த சீமோன் என்பவனை இயேசுவுக்காக சிலுவையைச் சுமந்துவர போர்வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள். 33 மண்டை ஓட்டின் இடம் என்னும் பொருள்படும் கொல்கொதா என்று அழைக்கப்படுமிடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். 34 அங்கு வலியை மறக்கச்செய்யும் மருந்து கலந்த பானத்தை இயேசுவுக்குக் கொடுத்தார்கள். அதைச் சுவைத்த இயேசு அதைக் குடிக்க மறுத்தார்.

35 போர் வீரர்கள் இயேசுவை சிலுவையில் ஆணிகளை வைத்து அறைந்தார்கள். யார் இயேசுவின் ஆடைகளைப் பெறுவது என்பதை சீட்டுப் போட்டு முடிவு செய்தார்கள். 36 போர்வீரர்கள் அங்கு உட்கார்ந்து இயேசுவை கவனித்துக்கொண்டிருந்தார்கள். 37 இயேசுவின் தலைக்கு மேல் ஒரு அறிவிப்பு பலகையை அவர்கள் அறைந்தார்கள். அதில் , “இவர் இயேசு, யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.

38 இயேசுவின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு கொள்ளைக்காரர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள். 39 மக்கள் இயேசுவின் அருகில் நடந்துச்சென்று அவரைத் திட்டினார்கள். தலையைக் குலுக்கியபடி மக்கள் கூறினார்கள், 40 ,“தேவாலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட முடியும் எனக் கூறினாயே! உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! நீ தேவனின் குமாரன் என்பது உண்மையானால், சிலுவையிலிருந்து இறங்கி வா!” என்றனர்.

41 தலைமை ஆசாரியர், வேதபாரகர் மற்றும் மூத்த யூதத்தலைவர்கள் ஆகிய அனைவரும் அங்கிருந்தனர். மக்கள் செய்தது போலவே அவர்களும் இயேசுவைக் கேலி செய்தார்கள். 42 அவர்கள்,, “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான்! ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவனை (இஸ்ரவேலின்) யூதர்களின் அரசன் என்று மக்கள் கூறுகிறார்கள். இவன் அரசனானால் இப்பொழுது சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். 43 இவன் தேவனை நம்பினான். எனவே தேவன் விரும்பினால் இவனைக் காப்பாற்றட்டும் ‘நான் தேவ குமாரன்’ என இவன் கூறினான்” என்றார்கள். 44 அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர்.

இயேசுவின் மரணம்(G)

45 நடுப்பகலில் நாடு முழுவதும் இருண்டது. இருள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. 46 சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் , “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினார். இதன் பொருள்,, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” [b] என்பதாகும்.

47 அங்கு நின்றிருந்த சிலர் இதைக் கேட்டார்கள். அவர்கள்,, “அவன் எலியாவை அழைக்கிறான்” என்றார்கள்.

48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடல் பஞ்சைக் கொண்டுவந்தான். அதைப் புளிப்பான பானத்தில் தோய்த்து குச்சியில் கட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். 49 ஆனால் மற்றவர்கள்,, “அவனைத் தொந்தரவு செய்யாதே. எலியா அவனைக் காப்பாற்ற வருவானா என்பதைக் காணவேண்டும்” என்றார்கள்.

50 மீண்டும் இயேசு ஒரு முறை சத்தமிட்டுக் கதறினார். பின்னர், இயேசுவின் ஆவி பிரிந்தது.

51 இயேசு இறந்தபொழுது, தேவாலயத்திலிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கிழிசல் திரைச்சீலையின் மேலிருந்துத் துவங்கி கீழே வரைக்கும் வந்தது. மேலும், நிலம் நடுங்கியது. பாறைகள் நொறுங்கின. 52 கல்லறைகள் அனைத்தும் திறந்தன. தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். 53 கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள்.

54 இயேசுவுக்குக் காவலிருந்த படைத் தலைவனும் போர்வீரர்களும் நில நடுக்கம் ஏற்பட்டதையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கண்டார்கள். மிகவும் பயந்துபோன அவர்கள்,, “இவர் உண்மையிலேயே தேவகுமாரன்தான்” என்றார்கள்.

55 பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள். 56 மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாள் மற்றும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தார்கள்.

இயேசு அடக்கம் செய்யப்படுதல்(H)

57 அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான் 58 யோசேப்பு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். பிலாத்து இயேசுவின் சரீரத்தை யோசேப்பிடம் கொடுக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். 59 பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான். 60 இயேசுவின் சரீரத்தை ஒரு பாறையில் தோண்டிய புதிய கல்லறையில் யோசேப்பு அடக்கம் செய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு கல்லறை வாயிலை மூடினான்.

இவற்றைச் செய்தபின் யோசேப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். 61 மகதலேனா மரியாளும், மரியாள் என்னும் பெயர் கொண்ட மற்றொரு பெண்ணும் கல்லறைக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.

இயேசுவின் கல்லறைக்கு காவல்

62 ஆயத்தநாளுக்கு [c] மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று, 63 ,“ஐயா, தான் உயிருடன் இருந்தபொழுது அப்பொய்யன், ‘நான் மூன்று நாட்களுக்குப் பின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன்’ என்று கூறினான். 64 ஆகவே மூன்று நாட்களாகிறவரையிலும் கல்லறையை நன்கு காவல் காக்க உத்தரவிடுங்கள். அவனது சீஷர்கள் வந்து சரீரத்தை திருட முயற்சிக்கலாம். பின், மக்களிடம் சென்று அவன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டதாகக் கூறக்கூடும். அவனைப் பற்றி அவர்கள் முன்னர் கூறிய பொய்களைக் காட்டிலும் இது அதிக மோசமானதாக இருக்கும்” என்றார்கள்.

65 அதற்கு பிலாத்து,, “சில போர் வீரர்களை அழைத்துச் சென்று உங்களால் முடிந்த அளவு கல்லறையைக் காவல் செய்யுங்கள்” என்று கூறினான். 66 ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center