Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 40-43

இஸ்ரவேலின் தண்டனை முடியும்

40 உனது தேவன் கூறுகிறார்,
    “ஆறுதல்படுத்துங்கள்! எனது ஜனங்களை ஆறுதல்படுத்துங்கள்!
எருசலேமுடன் அன்பாகப் பேசுங்கள்.
    உனது சேவைக்கான காலம் முடிந்துவிடுகிறது.
    ‘உனது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து விட்டாய்’ என்று எருசலேமிடம் கூறு.
கர்த்தர் எருசலேமை அவள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும்
    இருமுறை தண்டித்தார்.”

கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறான்!
“கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள்!
    நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு சாலை அமையுங்கள்!
ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள்.
    ஒவ்வொரு மலையையும் பள்ளத்தாக்கையும் நேராக்குங்கள்.
    கரடுமுரடான சாலையை மென்மையாக்குங்கள்.
பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும்.
    கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள்.
ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!”
ஒரு குரல் சொன்னது, “பேசு!”
    எனவே ஒருவன் கேட்டான், “நான் என்ன சொல்லவேண்டும்?”
அந்த குரல் சொன்னது, “ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள்.
    அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
    அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது.
கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும்.
    அந்த புல்களும் காட்டு மலர்களும் வாடி செத்துப்போகும்.
    உண்மையாகவே அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும்.
    ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.”

மீட்பு: தேவனுடைய நற்செய்தி

சீயோனே! உன்னிடம் சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன.
    உயரமான மலைக்கு மேலே போய் நற்செய்திகளை சத்தமாய் சொல்! எருசலேமே!
உன்னிடம், சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன அஞ்சவேண்டாம்.
    சாந்தமாய் பேசு! யூதாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் இந்தச் செய்திகளைக் கூறு: “பார், உன் தேவன் இங்கே இருக்கிறார்!”
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் வல்லமையோடு வருகிறார்.
    எல்லா ஜனங்களையும் ஆள அவர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார்.
கர்த்தர் தமது ஜனங்களுக்காக விருதுகளைக் கொண்டுவருவார்.
    அவரோடு அவர்களது பலன் இருக்கும்.
11 ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை வழிநடத்திச் செல்வது போன்று கர்த்தர் தமது ஜனங்களை வழி நடத்துகிறார்.
    கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்தி அவரது ஆடுகளை ஒன்று சேர்ப்பார்.
    கர்த்தர் சிறிய ஆடுகளை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொள்வார். அவற்றின் தாய் ஆடுகள் அவர் பின்னால் நடக்கும்.

தேவன் உலகைப் படைத்தார், அவர் அதனை ஆளுகிறார்

12 யார் கடல்களைக் கைப்பிடியால் அளந்தார்கள்?
    யார் வானத்தை கையளவால் அளந்தார்கள்?
யார் பூமியில் உள்ள மண்ணைக் கிண்ணத்தால் அளந்தார்கள்?
    யார் அளவு கோல்களால் மலைகளையும் பாறைகளையும் அளந்தார்கள்? அது கர்த்தர்தான்.
13 கர்த்தருடைய ஆவியிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
    கர்த்தரிடம் அவர் எப்படிச் செய்யவேண்டும் என யாரும் கூறவில்லை.
14 கர்த்தர் யாருடைய உதவியையாவது கேட்டாரா?
    கர்த்தருக்கு நேர்மையாக இருக்கும்படி யாராவது கற்பித்தார்களா?
கர்த்தருக்கு அறிவை யாராவது கற்பித்தார்களா கர்த்தருக்கு ஞானத்தோடு இருக்குபடி யார் கற்பித்தது?
    இல்லை! கர்த்தர் இவற்றைப்பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கிறார்.
15 பார், நாடுகள் எல்லாம் வாளியில் ஒரு சிறு துளி போன்றது.
    வெகு தொலைவிலுள்ள நாடுகளை கர்த்தர் எடுத்துக்கொண்டால்
    அவரது தராசில் அவற்றை வைத்தால் அவை மணலின் சிறு பொடிகள் போன்று இருக்கும்.
16 லீபனோனில் உள்ள அனைத்து மரங்களும் கர்த்தருக்கு எரித்துப்போட போதாது.
    லீபனோனில் உள்ள அனைத்து மிருகங்களும் பலிக்காக கொல்வதற்குப்போதாது.
17 தேவனோடு ஒப்பிடும்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுமில்லை.
    தேவனோடு ஒப்பிடும்போது அனைத்து நாடுகளும் ஈடு ஒன்றுமே இல்லாமல் போகும்.

தேவன் எப்படிப்பட்டவர் என்று ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது

18 எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது!
    தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது!
19 ஆனால், சில ஜனங்கள் பாறை அல்லது மரத்தால் சிலைகள் செய்து
    அவர்கள் அதனைத் தெய்வங்கள் என்று அழைக்கின்றனர்.
ஒரு வேலைக்காரன் ஒரு சிலையைச் செய்கிறான்.
    பிறகு, இன்னொரு வேலைக்காரன் அதனைத் தங்கத்தால் மூடுகிறான்.
    வெள்ளிச் சங்கிலிகளையும் அதற்காகச் செய்கிறான்.
20 அடிப்பகுதிக்காக அவன் ஒரு சிறப்பான மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.
    அது உளுத்துப்போகாத மரவகையைச் சேர்ந்தது.
பிறகு, அவன் ஒரு சிறந்த மரத்தச்சனைக் கண்டுபிடிக்கிறான்.
    அந்த வேலைக்காரன் விழாமல் இருக்கிற ஒரு தெய்வம் செய்கிறான்.
21 நீங்கள் உண்மையை நிச்சயமாக அறிவீர்கள், இல்லையா?
    நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்!
உங்களுக்கு நிச்சயமாக ஒருவன் நீண்ட காலத்துக்குமுன் சொன்னான்!
    இந்த உலகத்தைப் படைத்தவர் யார் என்று நிச்சயமாக நீ புரிந்திருக்கிறாய்!
22 கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
    அவரோடு ஒப்பிடும்போது, ஜனங்கள் வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள்.
அவர் வானங்களை ஒரு துண்டு துணியைப்போல் பரப்புகிறார்.
    அவர் வானங்களைக் குடியிருப்பதற்கான கூடாராமாக்குகிறார்.
23 ஆளுவோரை அவர் முக்கியமற்றவர்களாகச் செய்கிறார்.
    அவர் இந்த உலகத்தில் உள்ள நீதிபதிகளை முழுமையாகப் பயனற்றவர்களாகச் செய்கிறார்.
24 ஆளுவோர் தாவரங்களைப்போன்றவர்கள் அவர்கள் தரையில் நடப்படுகிறார்கள்.
    ஆனால், அவை தரைக்குள் தன் வேர்களைச் செலுத்துவதற்குமுன்,
தேவன் அத்தாவரங்களின் மேல் ஊதுகிறார்.
    அவை செத்து காய்ந்து போகின்றன.
    பெருங்காற்று அவற்றை புல்லைப்போல அடித்துப்போகும்.
25 பரிசுத்தமானவர் (தேவன்) சொல்கிறார் என்னை எதனோடும் உன்னால் ஒப்பிட முடியுமா? முடியாது.
    எனக்கு இணையாக ஒருவரும் இல்லை.

26 மேலே வானங்களைப் பாருங்கள்.
    இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்?
வானத்தில் இந்தப் “படைகளை” எல்லாம் படைத்தது யார்?
    ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்?
உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர்.
    எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.

27 யாக்கோபே, இது உண்மை. இஸ்ரவேலே, நீ இதனை நம்பவேண்டும்!
    எனவே, நீ எதற்காக இதைக் கூறுகிறாய்?
“கர்த்தர் நான் வாழும் வழியை அறியமாட்டார்.
    தேவன் என்னைக் கண்டுபிடித்துத் தண்டிக்கமாட்டார்.”
28 தேவனாகிய கர்த்தர் மிகவும் ஞானமுள்ளவர் என்று நீ உறுதியாகக் கேள்விப்பட்டு அறிந்திருக்கிறாய்.
    ஜனங்கள் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கற்றுக்கொள்ள இயலாது.
கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை.
    கர்த்தர் தொலைதூர இடங்களைப் பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவிக்கிறார்.
29 கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார்.
    ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார்.
30 இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர்
    சிறு பையன்களும் கூடத் தடுமாறி விழுகிறார்கள்.
31 ஆனால், கர்த்தரை நம்புகிற ஜனங்கள்
    புதிய சிறகுகள் முளைக்கின்ற கழுகுகளைப்போல மீண்டும் பலம் பெறுகின்றனர்.
இந்த ஜனங்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள்.
    இந்த ஜனங்கள் நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.

கர்த்தரே நித்திய சிருஷ்டிகர்

41 கர்த்தர் கூறுகிறார், “தூரத்திலுள்ள நாடுகளே, அமைதியாக இருங்கள் என்னிடம் வாருங்கள்!
    நாடுகளே மறுபடியும் தைரியம் கொள்ளுங்கள்.
என்னிடம் வந்து பேசுங்கள். நாம் சந்தித்து கூடுவோம்.
    யார் சரியென்று முடிவு செய்வோம்.
இந்த வினாக்களுக்கு என்னிடம் பதில் சொல்லுங்கள்.
    கிழக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிற மனிதனை எழுப்பியது யார்?
நன்மையானது அவரோடு நடக்கிறது.
அவர் தமது வாளைப் பயன்படுத்தி நாடுகளைத் தாக்குகிறார்.
    அவைகள் தூசிபோல ஆகின்றன.
    அவர் தமது வில்லைப் பயன்படுத்தி அரசர்களை வென்றார்.
    அவர்கள் காற்றால் அடித்துச் செல்லப்படும் துரும்புகளைப்போன்று ஓடிப்போனார்கள்.
அவர் படைகளைத் துரத்துகிறார். அவர் காயப்படுத்தவில்லை.
    இதற்கு முன்னால் போகாத இடங்களுக்கு எல்லாம் அவர் போகிறார்.
இவை நிகழக் காரணமாக இருந்தது யார்?இதனைச் செய்தது யார்?
    தொடக்கத்திலிருந்து அனைத்து ஜனங்களையும் அழைத்தது யார்?
    கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
கர்த்தராகிய நானே முதல்வர்!
    தொடக்கத்திற்கு முன்னரே நான் இங்கே இருந்தேன்.
    எல்லாம் முடியும்போதும் நான் இங்கே இருப்பேன்.
வெகு தொலைவிலுள்ள இடங்களே பாருங்கள் பயப்படுங்கள்!
    பூமியிலுள்ள தொலைதூர இடங்களே அச்சத்தால் நடுங்குங்கள்.
    இங்கே வந்து என்னைக் கவனியுங்கள்!” அவர்கள் வந்தார்கள்.

“தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். அவர்கள் பலம் பெற ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினார்கள். ஒரு வேலைக்காரன் சிலை செதுக்க மரம் வெட்டினான். அவன் தங்க வேலை செய்பவனை உற்சாகப்படுத்தினான். இன்னொரு வேலைக்காரன் சுத்தியலைப் பயன்படுத்தி உலோகத்தை மென்மைப்படுத்தினான். பிறகு, அந்த வேலைக்காரன் அடைக்கல்லில் வேலை செய்பவனை உற்சாகப்படுத்துகிறான். இந்த இறுதி வேலைக்காரன், ‘இந்த வேலை நன்று. இந்த உலோகம் வெளியே வராது’ என்று கூறுகிறான். எனவே, அவன் சிலையை ஒரு பீடத்தின் மேல் அசையாமல் ஆணியால் இறுக்குகிறான். அந்தச் சிலை கீழே விழாது. அது எப்பொழுதும் அசையாது.”

கர்த்தர் மாத்திரமே நம்மைக் காப்பாற்ற முடியும்

கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன்.
    யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
    ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன்.
பூமியில் நீங்கள் வெகு தொலைவில் இருந்தீர்கள்.
    நீங்கள் தொலைதூர நாட்டில் இருந்தீர்கள்.
ஆனால் நான் உன்னிடம் தேடிவந்து உன்னை அழைத்துச் சொன்னேன்,
    ‘நீ எனது ஊழியன்.’
    நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நான் உன்னைத் தள்ளிவிடவில்லை!
10 கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.
    பயப்படாதே, நான் உனது தேவன்.
நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன்.
    நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.
11 பார், சில ஜனங்கள் உன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் அவமானம் அடைவார்கள்.
    உங்கள் பகைவர்கள் மறைந்து தொலைந்து போவார்கள்.
12 நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள்.
    ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது.
    உங்களுக்கு எதிராகப்போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள்.
13 நான் உனது தேவனாகிய கர்த்தர்.
    நான் உனது வலது கையைப் பற்றியிருக்கிறேன்.
‘நான் உனக்குச் சொல்கிறேன்: பயப்படாதே!
    நான் உனக்கு உதவுவேன்.’
14 விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே.
    எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்!
    நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்”.

கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார்.

“நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்)
    உன்னைக் காப்பாற்றுகிறவரும் இதனைக் கூறுகிறார்.
15 பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன்.
    அது கூர்மையான பற்களை உடையது.
விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள்.
    அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள்.
    நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய்.
    நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய்.
16 நீ அவற்றைக் காற்றில் தூற்றிவிடுவாய்.
    அவற்றைக் காற்று அடித்துச்சென்று, சிதறடித்துவிடும்.
பிறகு, நீ கர்த்தருக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.
    இஸ்ரவேலின் பரிசுத்தமானவரைப்பற்றி (தேவன்) நீ மிகவும் பெருமை அடைவாய்”.

17 “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள்.
    ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் தாகமாக இருக்கிறார்கள்.
    அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று.
அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன்.
    நான் அவர்களை விடமாட்டேன்.
    அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன்.
18 வறண்ட மலைகளில் நதிகளை நான் பாயச் செய்வேன்.
    பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை நான் எழச்செய்வேன்.
வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன்.
    வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும்.
19 வனாந்திரங்களில் மரங்கள் வளரும்.
    அங்கு கேதுரு மரங்களும், சித்தீம் மரங்களும், ஒலிவ மரங்களும், சைப்பிரஸ் மரங்களும், ஊசி இலை மரங்களும், பைன் மரங்களும் இருக்கச் செய்வேன்.
20 ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
    கர்த்தருடைய வல்லமை இவற்றைச் செய்தது என்று அவர்கள் அறிவார்கள்.
ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
    அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தமானவர் (தேவன்) இவற்றைச் செய்தார்”.

பொய்த் தெய்வங்களுக்கு கர்த்தர் சவால் விடுகிறார்

21 யாக்கோபின் அரசரான கர்த்தர், “வா, உனது வாதங்களைக் கூறு. உனது சான்றுகளைக் காட்டு. சரியானவற்றை நாம் முடிவு செய்வோம். 22 உங்கள் சிலைகள் (பொய்த் தெய்வங்கள்) வந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் என்ன நடந்தது? எதிர்காலத்தில் என்ன நடக்கும்? எங்களிடம் கூறு. நாங்கள் கடினமாகக் கவனிப்போம். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவோம். 23 என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கும்படி எங்களுக்குக் கூறுங்கள். பிறகு நாங்கள் உங்களை உண்மையான தெய்வங்கள் என்று நம்புவோம். ஏதாவது செய்யுங்கள்! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நல்லதோ அல்லது கெட்டதோ! பிறகு நீங்கள் உயிரோடு இருப்பதாக நாங்கள் பார்ப்போம். நாங்கள் உங்களைப் பின்பற்றுவோம்.

24 “பாருங்கள், பொய்த் தெய்வங்களான நீங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கிறீர்கள்! உங்களால் எதுவும் செய்யமுடியாது! அருவருப்பானவன் மட்டுமே உங்களை வழிபட விரும்புவான்!”

கர்த்தர் தாமே ஒரே தேவன் என நிரூபிக்கிறார்

25 “வடக்கே நான் ஒருவனை எழுப்பினேன் அவன் சூரியன் உதிக்கிற கிழக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறான்.
    அவன் எனது நாமத்தைத் தொழுதுகொள்கிறான்.
பானைகளைச் செய்பவன் களிமண்னை மிதிப்பதுபோல
    அந்தச் சிறப்பானவன் அரசர்களை அழிப்பான் (மிதிப்பான்).

26 “இது நடைபெறுவதற்கு முன்னால் யார் இதைப்பற்றிச் சொன்னது.
    நாம் அவனை தேவன் என்று அழைப்போம்.
எங்களுக்கு இவற்றை உனது சிலைகளில் ஒன்று சொன்னதா? இல்லை! சிலைகளில் எதுவும் எதையும் சொல்லவில்லை.
    அந்தச் சிலைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
    அந்தப் பொய்த் தெய்வங்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்க முடியாது.
27 கர்த்தராகிய நானே சீயோனிடம் இதைப் பற்றிச் சொன்ன முதல் நபர்.
    இந்தச் செய்திகளோடு ஒரு தூதுவனை நான் எருசலேமிற்கு அனுப்பினேன்.
    ‘பாருங்கள், உங்கள் ஜனங்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்!’”

28 நான் அந்தப் பொய்த் தெய்வங்களைப் பார்த்தேன்.
    அவைகளில் ஒன்றும் எதுவும் சொல்லும் வகையில் ஞானமுள்ளவையல்ல.
    அவைகளிடம் நான் கேள்விகள் கேட்டேன், அவைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை!
29 அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்!
    அவைகளால் எதுவும் செய்யமுடியாது!
    அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை!

கர்த்தருடைய விசேஷ ஊழியன்

42 “என் தாசனைப் பாருங்கள்!
    அவரை நான் ஆதரிக்கிறேன்.
நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே.
    நான் அவரை மிகவும் விரும்புகிறேன்.
அவரில் எனது ஆவியை வைக்கிறேன்.
    அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார்.
அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார்.
    அவர் கூக்குரலிடவும்மாட்டார்.
அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார்.
    அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார்.
    அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார்.
உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை.
    ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்”.

கர்த்தரே ஆளுகிறார் உலகத்தை உருவாக்கினார்

உண்மையான தேவனாகிய கர்த்தர் இவற்றைச் சொன்னார். (கர்த்தர் வானங்களை உருவாக்கினார். கர்த்தர் பூமியின்மேல் வானத்தை விரித்தார். அவர் பூமியின்மேல் எல்லாவற்றையும் செய்தார். கர்த்தர் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் சுவாசத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் பூமியில் நடமாடுகிற ஒவ்வொரு மனிதருக்கும் ஆவியைக் கொடுக்கிறார்).

“கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன்.
    நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன்.
நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய்.
    அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய்.
குருடர்களின் கண்களை நீ திறப்பாய், அவர்களால் பார்வையைப் பெறமுடியும்.
    சிறையில் இருக்கிறவர்களை நீ விடுவிப்பாய்.
    பலர் இருளில் இருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருவாய்.

“நானே கர்த்தர்! எனது நாமம் யேகோவா!
    நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன்.
    நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு (பொய்த் தெய்வங்களுக்கு) கொடேன்.
தொடக்கத்தில் சில காரியம் நடைபெறும் என்று சொன்னேன். அவை நடந்தன.
    இப்போது, இது நடக்கும் முன்னால்!
நான் சிலவற்றைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.”
    இவை எதிர்காலத்தில் நடைபெறும்.

தேவனைத் துதிக்கும் ஒரு பாடல்

10 ஒரு புதிய பாடலை கர்த்தருக்குப் பாடுங்கள்.
    தொலைதூர நாடுகளில் உள்ள ஜனங்களே, கடலில் பயணம் செய்கிற ஜனங்களே, கடலில் உள்ள மிருகங்களே, தொலைதூர இடங்களில் உள்ள ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
11 வனாந்திரங்களே, நகரங்களே, கேதாரியரின் வயல்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
    சீலோவில் வாழுகின்ற ஜனங்களே!
மகிழ்ச்சியோடு பாடுங்கள்.
    உங்கள் மலை உச்சியில் இருந்து பாடுங்கள்.
12 கர்த்தருக்கு மகிமையைக் கொடுங்கள்.
    தொலை தூர நாடுகளில் உள்ள ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
13 கர்த்தர் ஒரு பலம் பொருந்திய வீரனைப்போல வெளியே போவார்.
    அவர் போர் செய்யத் தயாராக உள்ள வீரனைப்போன்றிருப்பார்.
அவர் மிகுந்த கிளர்ச்சியுள்ளவராக இருப்பார்.
    அவர் உரத்த குரலில் சத்தமிடுவார். அவரது பகைவரைத் தோற்கடிப்பார்.

தேவன் மிகவும் பொறுமையானவர்

14 “நீண்ட காலமாக நான் எதையும் சொல்லவில்லை.
    என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை.
ஆனால், இப்போது நான் அலறுகிறேன், ஒரு பெண் பிள்ளை பெறும்போது கதறுவதுபோல,
    நான் கடினமாகவும் உரக்கவும் மூச்சுவிடுகிறேன்.
15 நான் மலைகளையும் குன்றுகளையும் அழிப்பேன்.
    நான் அங்கே வளருகின்ற தாவரங்களை வாடச் செய்வேன்.
நான் ஆறுகளை வறண்ட நிலமாக்குவேன்.
    நான் தண்ணீருள்ள குளங்களையும் வறளச் செய்வேன்.
16 பிறகு, நான் குருடர்களை அவர்கள் அதுவரை அறியாத வழிகளில் நடத்திச் செல்வேன்.
    நான் குருடர்களை அவர்கள் அதுவரை சென்றிராத இடங்களுக்கு அழைத்துச் செல்வேன்.
நான் அவர்களுக்காக இருளை வெளிச்சமாக்குவேன்.
    நான் கரடு முரடான பாதையை மென்மையாக்குவேன்.
நான் வாக்களித்ததைச் செய்வேன்!
    நான் எனது ஜனங்களை விட்டுவிடமாட்டேன்.
17 ஆனால், சிலர் என்னைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள்.
    அவர்களிடம் பொன்னால் மூடப்பட்ட சிலைகள், இருக்கின்றன.
‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று அவர்கள் அந்தச் சிலைகளிடம் கூறுகின்றனர்.
    அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை நம்புகின்றனர்.
    ஆனால் அந்த ஜனங்கள் ஏமாற்றப்படுவார்கள்.

தேவனுக்குச் செவிசாய்க்க இஸ்ரவேலர்கள் மறுத்தார்கள்

18 செவிடர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்!
    குருடர்களே என்னைப் பாருங்கள், உங்களால் காணமுடியும்!
19 உலகத்தில் என் தாசனே மிகவும் குருடன்.
    இந்த உலகத்திற்கு நான் அனுப்பிய தூதுவனே செவிடன்.
    நான் உடன்படிக்கை செய்துக்கொண்ட ‘கர்த்தருடைய தாசனே’ மிகவும் குருடனாயிருக்கின்றான்.
20 எனது தாசன் அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்கின்றான்.
    ஆனால் அவன் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
அவன் தனது காதுகளால் கேட்க முடியும்.
    ஆனால் அவன் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறான்”.
21 கர்த்தர் தமது தாசன் நல்லவனாக இருக்க விரும்புகிறார்.
    கர்த்தர் தமது அற்புதமான போதனைகளை மகிமைப்படுத்த விரும்புகிறார்.
22 ஆனால் ஜனங்களைப் பாருங்கள்.
    மற்ற ஜனங்கள் அவர்களைத் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பொருட்களைத் திருடியிருக்கிறார்கள்.
இளைஞர்களெல்லாம் பயப்படுகிறார்கள்.
    அவர்கள் சிறைகளுக்குள் அடைப்பட்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் அவர்களிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள்.
    அவர்களைக் காப்பாற்ற அங்கே எவருமில்லை.
மற்ற ஜனங்கள் அவர்களின் பணத்தை எடுத்தார்கள்.
    “அதனைத் திருப்பிக் கொடு” என்று சொல்ல அங்கே எவருமில்லை.

23 தேவனுடைய வார்த்தைகளை உங்களில் எவரும் கவனித்தீர்களா? இல்லை! ஆனால், நீங்கள் அவரது வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். என்ன நடந்தது என்று சிந்திக்க வேண்டும். 24 யாக்கோபு மற்றும் இஸ்ரவேலிடமிருந்து செல்வத்தை எடுத்துக்கொள்ள ஜனங்களை அனுமதித்தது யார்? கர்த்தர் அவர்களை அனுமதித்தார். நாம் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தோம். எனவே கர்த்தர் நமது செல்வங்களை எடுத்துக்கொள்ளும்படி அனுமதித்துள்ளார். கர்த்தர் விரும்பிய வழியில் இஸ்ரவேல் ஜனங்கள் வாழவில்லை. அவரது போதனைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கவனிக்கவில்லை. 25 எனவே, கர்த்தர் அவர்கள்மீது கோபங்கொண்டார். கர்த்தர் அவர்களுக்கு எதிராக வலிமைமிக்கப்போர்களை உண்டாக்கினார். இஸ்ரவேல் ஜனங்களைச் சுற்றி நெருப்பு சூழ்ந்ததுபோல் இருந்தது. ஆனால் அவர்கள் நிகழ்வதை அறியாமல் இருந்தார்கள். அவர்கள் எரிந்துகொண்டிருப்பதுபோல் இருந்தனர். ஆனால் அவர்கள் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை.

தேவன் எப்போதும் தமது ஜனங்களோடு இருக்கிறார்

43 யாக்கோபே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இஸ்ரவேலே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இப்போது கர்த்தர் கூறுகிறார் “அஞ்சாதே! நான் உன்னைக் காப்பாற்றினேன். நான் உனக்குப் பெயரிட்டேன். நீ என்னுடையவன். உனக்குத் தொல்லைகள் இருக்கும்போது நான் உன்னோடு இருக்கிறேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது, நீ பாதிக்கப்படமாட்டாய். நீ நெருப்பினூடே நடக்கும்போது, நீ எரிக்கப்படமாட்டாய். நெருப்புச் ஜூவாலைகள் உன்னைப் பாதிக்காது. ஏனென்றால், கர்த்தராகிய நான் உனது தேவன். இஸ்ரவேலின் பரிசுத்தரான நான் உனது மீட்பர். உன்னை மீட்கும் பொருளாக எகிப்தைக் கொடுத்தேன். உன்னை என்னுடையவனாக்க எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுத்தேன். நீ எனக்கு மிகவும் முக்கியமானவன். எனவே, நான் உன்னைப் பெருமைப்படுத்துவேன். நான் உன்னை நேசிக்கிறேன். நான் (உன் ஜீவனுக்குப் பதிலாக) அனைத்து ஜனங்களையும் தேசங்களையும் கொடுப்பேன். எனவே நீ வாழலாம்”.

“அஞ்ச வேண்டாம்! நான் உன்னோடு இருக்கிறேன். நான் உனது பிள்ளைகளைச் சேர்த்து அவர்களை உன்னிடம் அழைத்து வருவேன். நான் அவர்களைக் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஒன்று சேர்ப்பேன். நான் வடக்குக்குச் சொல்வேன், எனது ஜனங்களை எனக்குக் கொடு. தெற்குக்கு நான் சொல்லுவேன், எனது ஜனங்களைச் சிறையில் வைக்காதீர்கள். தொலைதூர இடங்களில் இருந்து எனது மகன்களையும், மகள்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள். எனக்குரிய அனைத்து ஜனங்களையும், என்னிடம் கொண்டு வாருங்கள். எனது நாமத்தை வைத்திருக்கிற ஜனங்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்! அவர்களை நான் எனக்காக படைத்தேன். அவர்களை நான் படைத்தேன். அவர்கள் என்னுடையவர்கள்”.

தேவன் கூறுகிறார், கண்களிருந்தும் குருடாக இருக்கிற ஜனங்களை என்னிடம் அழைத்து வா, காதுகளிருந்தும் கேட்காதவர்களை என்னிடம் அழைத்து வா.

அனைத்து ஜனங்களும் அனைத்து நாடுகளும் ஒன்றுசேர வேண்டும். அவர்களது பொய்த் தெய்வங்களில் ஒன்று தொடக்கத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்லட்டும். அவர்கள் தங்கள் சாட்சிகளை அழைத்து வரட்டும். சாட்சிகள் உண்மையைப் பேச வேண்டும். அவர்கள் சரியானவர்கள் என்பதை இது காட்டும்.

10 கர்த்தர் கூறுகிறார், “நீங்களே எனது சாட்சிகள். நீயே நான் தேர்ந்தெடுத்த தாசன். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, ஜனங்கள் என்னை நம்புவதற்கு நீங்கள் உதவவேண்டும். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, நான்தான் அவர் என்பதையும் நான் உண்மையான தேவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனக்கு முன்பாக வேறு தேவன் இருந்ததில்லை, எனக்குப் பிறகும் வேறு தேவன் இருக்கப்போவதில்லை. 11 நான், நானே கர்த்தர்! என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை! நான் ஒருவர் மட்டுமே! 12 உங்களோடு பேசியவர் நான் ஒருவரே. நான் உங்களைக் காப்பாற்றினேன். நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உங்களோடு இருப்பது வேறு யாரும் அந்நியர் அல்ல. நீங்கள் என்னுடைய சாட்சிகள், நான் தேவன்!” (கர்த்தர் தாமாகவே இதனைச் சொன்னார்). 13 “நான் எப்பொழுதும் தேவனாக இருக்கிறேன். நான் ஏதாவது செய்யும்போது, நான் செய்ததை எவராலும் மாற்றமுடியாது. எனது வல்லமையிலிருந்து எவரும் ஜனங்களைக் காப்பாற்றமுடியாது”.

14 இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தர் உங்களைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் சொல்கிறார், “நான் உங்களுக்காகப் படைகளை பாபிலோனுக்கு அனுப்புவேன். பலர் சிறைப்பிடிக்கப்படுவார்கள். கல்தேயர்களான அவர்கள் தங்கள் படகுளில் எடுத்துச் செல்லப்படுவார்கள். (அப்படகுகளைப்பற்றிக் கல்தேயர்களுக்குப் பெருமை உண்டு). 15 நானே பரிசுத்தரான கர்த்தர். நான் இஸ்ரவேலைப் படைத்தேன். நானே உங்கள் இராஜா”.

மீண்டும் தேவன் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்

16 கர்த்தர் கடலின் வழியே சாலை அமைப்பார். அது வலிமையான தண்ணீராக இருந்தாலும், அவர் தமது ஜனங்களுக்காகப் பாதை அமைப்பார். கர்த்தர் சொல்கிறார், 17 “எனக்கு எதிராகத் தங்கள் இரதங்களோடும், குதிரைகளோடும், படைகளோடும் போரிடுகிற ஜனங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள். அவர்கள் அழிக்கப்படுவார்கள். ஒரு மெழுகின் திரி அணைக்கப்படுகிறதுபோல் அவை அணைந்துபோகும். 18 எனவே, தொடக்கத்தில் நிகழ்ந்ததை எண்ணவேண்டாம். வெகு காலத்திற்கு முன்னால் நடந்ததைப்பற்றி நினைக்கவேண்டாம். 19 ஏனென்றால், நான் புதியவற்றைச் செய்வேன். இப்போது நீங்கள் புதிய செடியைப்போல வளருவீர்கள். இது உண்மை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்தீர்கள். நான் உண்மையில் இந்த வனாந்திரத்தில் சாலை அமைப்பேன். நான் உண்மையில் இந்த வறண்ட நிலத்தில் ஆறுகளை உருவாக்குவேன். 20 காட்டு மிருகங்களும் எனக்கு நன்றியுடையவையாக இருக்கும். பெரிய மிருகங்களும் பறவைகளும் என்னைப் பெருமைப்படுத்தும். நான் வனாந்திரத்திலே தண்ணீரை ஊற்றும்போது அவை என்னை பெருமைப்படுத்தும். வறண்ட நிலத்தில் ஆறுகளைக் கொண்டுவரும்போது அவை என்னைப் பெருமைப்படுத்தும். எனது ஜனங்களுக்காக, என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்காகத் தண்ணீர் கொடுக்கும்படி நான் இதனைச் செய்வேன். 21 நான் சிருஷ்டித்த ஜனங்கள் இவர்கள்தான். இவர்கள் என்னைத் துதித்துப் பாடுவார்கள்.

22 “யாக்கோபே! நீ என்னிடம் ஜெபம் செய்யவில்லை. ஏனென்றால், இஸ்ரவேலாகிய நீ என்னிடத்தில் சோர்வடைந்து விட்டாய். 23 நீ உனது ஆடுகளை தகன பலிகளாக எனக்குச் செலுத்தவில்லை. நீ என்னை மகிமைப்படுத்தவுமில்லை. நீ எனக்குப் பலிகளும் கொடுக்கவில்லை. நீ எனக்குப் பலிகள் கொடுக்கும்படி நான் உன்னை வற்புறுத்தவில்லை. நீ சோர்ந்து போகும்வரை நறுமணப் பொருட்களை எரிக்கும்படி நான் உன்னை வற்புறுத்தவில்லை. 24 என்னைக் கனப்படுத்தும்படி படைக்கும் பொருட்களை நீ வாங்கவில்லை. உனது அடிமையைப்போல இருக்கும்படி நீ என்னை பலவந்தப்படுத்தினாய். அதே சமயம், உனது பாவங்களால் நீ என்னைப் பாரப்படுத்தினாய்.

25 “நான், நான் ஒருவரே உனது பாவங்கள் அனைத்தையும் துடைத்துப்போடுகிறவர். என்னைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே நான் இதனைச் செய்கிறேன். நான் உனது பாவங்களை நினைத்துப்பார்க்கமாட்டேன். 26 ஆனால், நீ என்னை நினைக்க வேண்டும். நாம் சந்தித்து எது சரியென்று முடிவு செய்யலாம். நீ செய்திருப்பதைச் சொல்லி நீ சரியென்று காட்ட வேண்டும். 27 உங்கள் முதல் தந்தை பாவம் செய்தான். உங்களது வழக்கறிஞர்களும் எனக்கு எதிராகச் செய்தார்கள். 28 உங்களது பரிசுத்தமான தலைவர்களைப் பரிசுத்தமில்லாமல் ஆக்குவேன். யாக்கோபை முழுமையாக என்னுடையவனாக ஆக்குவேன். இஸ்ரவேலுக்குத் தீயவை நிகழும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center