Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 139:1-6

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று

139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
    என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
    வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
    நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
    என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
    நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
    நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.

சங்கீதம் 139:13-18

13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
    என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
    நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
    நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!

15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
    என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
    உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
    நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
17 உமது எண்ணங்கள் எனக்கு
    முக்கியமானவை.
    தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
    நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.

எரேமியா 16:14-17:4

14 “ஜனங்கள் வாக்குறுதிச் செய்கிறார்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு, கர்த்தர் ஒருவரே எகிப்து நாட்டுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார்’ என்பார்கள். ஆனால் காலம் வந்துகொண்டிருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்தச் செய்திகளை ஜனங்கள் சொல்லமாட்டார்கள், 15 ஜனங்கள் புதியவற்றைச் சொல்வார்கள். அவர்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு அவர் ஒருவரே வட நாடுகளுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார். அவர்களை அவர் அனுப்பியிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் வெளியே அழைத்து வந்தார்’ என்றனர். ஏன் ஜனங்கள் இவற்றைச் சொல்வார்கள்? ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவேன்.

16 “நான் விரைவில் பல மீன் பிடிப்பவர்களை இந்த நாட்டிற்கு வரும்படி அனுப்புவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்த மீனவர்கள் யூதாவின் ஜனங்களைப் பிடிப்பார்கள். அது நிகழந்த பிறகு, இந்த நாட்டுக்கு சில வேட்டைக்காரர்களை அனுப்புவேன். அந்த வேட்டைக்காரர்கள் ஒவ்வொரு மலையிலும், குன்றிலும், பாறை பிளவுகளிலும், யூதா ஜனங்களை வேட்டையாடுவர். 17 அவர்கள் செய்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் நான் பார்க்கிறேன். யூதா ஜனங்கள் தாம் செய்கின்றவற்றை என்னிடம் மறைக்க முடியாது. அவர்களது பாவம் என்னிடம் மறைக்கப்படாமல் போகும். 18 நான் யூதா ஜனங்களுக்கு அவர்கள் செய்கின்றவற்றுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களது ஒவ்வொரு பாவத்திற்கும் நான் இருமடங்கு தண்டிப்பேன். நான் இதனைச் செய்வேன். ஏனென்றால், அவர்கள் எனது நாட்டை அருவருப்பான விக்கிரகங்களால் ‘தீட்டு’ ஆக்கிவிட்டனர். நான் அந்த விக்கிரகங்களை வெறுக்கிறேன். ஆனால் அவர்கள் எனது நாட்டை அந்த விக்கிரகங்களால் நிறைத்துவிட்டனர்.”

19 கர்த்தாவே, நீரே எனது பலமும் காவலும்!
    நீரே துன்பக்காலத்தில் நான் ஓடி வரத்தக்கப் பாதுகாப்பான இடம்.
உலகம் முழுவதிலுமிருந்து நாடுகள் உம்மிடம் வரும்.
    அவர்கள், “எங்கள் தந்தையர்கள் அந்நிய தெய்வங்களை வைத்திருந்தனர்.
அவர்கள் அந்தப் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுகொண்டனர்.
    ஆனால் அந்த விக்கிரகங்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் உதவவில்லை” என்பார்கள்.
20 ஜனங்கள் உண்மையான தெய்வங்களை தங்களுக்கென உருவாக்க முடியுமா?
இல்லை! அவர்கள் சிலைகளைச் செய்துக்கொள்ளலாம்.
ஆனால் அச்சிலைகள் உண்மையில் தெய்வங்கள் இல்லை.

21 கர்த்தர், “எனவே, விக்கிரகங்களை உருவாக்கும் அவர்களுக்கு நான் பாடம் கற்பிப்பேன்.
    இப்போது நான் அவர்களுக்கு எனது அதிகாரம் மற்றும் பலம் பற்றி கற்பிப்பேன்.
பிறகு, அவர்கள் நானே தேவன் என்பதை அறிந்துகொள்வார்கள்.
    நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறார்.

இதயத்தில் எழுதப்பட்ட குற்றம்

17 “யூதா ஜனங்களின் பாவம், அவர்களால்
    அழிக்க முடியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அந்தப் பாவங்கள் இரும்பு எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளது.
    அவர்களின் பாவங்கள் வைர முனையிலுள்ள எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளன.
    அந்தக் கல்தான் அவர்களது இதயம்.
அப்பாவங்கள் அவர்களது பலிபீடங்களில் உள்ள கொம்புகளில் வெட்டப்பட்டுள்ளன.
அவர்களின் பிள்ளைகள் அஷேரா தேவதைக்காக
    அர்ப்பணிக்கப்பட்ட பலிபீடங்களை நினைவுக்கொள்வார்கள்.
அவர்கள் அஷேராவிற்குச் சமர்பிக்கப்பட்ட மரத்தூண்களை நினைத்துக்கொள்கிறார்கள்.
    அவர்கள் பச்சை மரங்களுக்குக் கீழேயும், பாறைகளுக்கு மேலேயும் உள்ள பீடங்களை நினைத்துக்கொள்கிறார்கள்.
சிறந்த நாடுகளில் உள்ள மலைகளில் மேலே
    உள்ளவற்றை அவர்கள் நினைக்கிறார்கள்.
யூதாவின் ஜனங்களுக்கு பல கருவூலங்கள் உள்ளன.
    நான் மற்ற ஜனங்களுக்கு அவற்றைக் கொடுப்பேன்.
ஜனங்கள், உங்கள் நாட்டிலுள்ள அனைத்து மேடைகளையும் அழிப்பார்கள்.
    நீங்கள் அந்த இடங்களில் சிலைகளைத் தொழுதுகொண்டீர்கள், அது ஒரு பாவம்.
நான் கொடுத்த நாட்டை நீங்கள் இழப்பீர்கள்.
    உங்கள் பகைவர்கள் உங்களை சிறைபிடிக்க நான் அனுமதிப்பேன்.
நீங்கள் அறியாத தேசத்தில் அவர்களது அடிமைகளாக இருப்பீர்கள்.
    ஏனென்றால், நான் கோபத்தோடு இருக்கிறேன்.
எனது கோபம் சூடான நெருப்பைப்போன்றது.
    நீங்கள் என்றென்றும் எரிக்கப்படுவீர்கள்.”

கொலோசெயர் 4:7-17

பவுலோடிருந்த மக்களைப் பற்றிய செய்தி

தீகிக்கு கிறிஸ்துவுக்குள் என் அன்பான சகோதரன். கர்த்தருக்குள் அவன் நம்பிக்கைக்கு உரிய ஊழியன். என்னோடு பணியாற்றும் கர்த்தரின் வேலையாள். என் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். அதற்காகத் தான் அவனையும் அனுப்புகிறேன். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்த அவனை அனுப்புகிறேன். ஒநேசிமுவோடு அவனை அனுப்புகிறேன். ஒநேசிமுவும் கிறிஸ்துவுக்குள் எனது அன்பான நம்பிக்கைக்கு உரிய சகோதரன். அவன் உங்கள் கூட்டத்திலிருந்து வந்தவன். எங்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் தீகிக்குவும், ஒநேசிமுவும் உங்களிடம் கூறுவார்கள்.

10 அரிஸ்தர்க்கு தன் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறான். அவன் என்னோடு சிறையில் இருக்கிறான். பர்னபாவின் உறவினனான மாற்கும் வாழ்த்து கூறுகிறான். நான் ஏற்கெனவே சொன்ன தகவல்களின்படி இவன் வந்தால் வரவேற்றுக்கொள்ளுங்கள். 11 இயேசுவும் வாழ்த்து கூறுகிறான். (யுஸ்து என்பது அவனது மறு பெயர்) யூதர்களாகிய இவர்கள் தேவனுடைய இராஜ்யத்திற்காக என்னோடு பாடுபடுகிறார்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறார்கள்.

12 எப்பாப்பிராவும் வாழ்த்து கூறுகிறான். அவன் இயேசு கிறிஸ்துவின் ஊழியன். அவனும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன். அவன் எப்போதும் உங்களுக்காகவே பிரார்த்தனை செய்கிறான். நீங்கள் ஆன்மீக வாழ்வில் முழுமை பெறவும், தேவன் விரும்புகிறவைகளை நீங்கள் பெற வேண்டும் என்றும் அவன் பிரார்த்திக்கிறான். 13 அவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும் கடுமையாகப் பாடுபட்டான் என அவனுக்காக நான் சான்றுரைக்கிறேன். 14 தேமாவும் நமது அன்பான நண்பனும் மருத்துவனுமான லூக்காவும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.

15 லவோதிக்கேயாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்து கூறுங்கள். நிம்பாவுக்கும் அவனது வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்து கூறுங்கள். 16 உங்களிடத்தில் இந்த கடிதம் வாசிக்கப்பட்ட பின்பு லவோதிக்கேயா சபைக்கும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் லவோதிக்கேயா சபைக்கு எழுதிய நிருபத்தையும் வாசியுங்கள். 17 அர்க்கிப்பைக் கண்டு, “கர்த்தர் நமக்குக் கொடுத்த பணியை முழுமையாய் செய்வதில் உறுதியாய் இரு” என்று சொல்லுங்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center