Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 48

கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்

48 கர்த்தர் மேன்மையானவர்.
    தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.
    அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும்.
சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை.
    அதுவே பேரரசரின் நகரமாகும்.
அந்நகரத்து அரண்மனைகளில்
    தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து,
    இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
    அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
    அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்
    பெருங்கப்பல்களை உடைத்தீர்.
ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.
    ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.
    தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.

தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,
    பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர்.
    நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.
    யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட.
    நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.
    சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார்.
    வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.
    அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.

எண்ணாகமம் 24:1-14

பிலேயாமின் மூன்றாவது செய்தி

24 இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புவதை பிலேயாம் கவனித்தான். எனவே, பிலேயாம் அதனை மாற்ற எவ்வகையான மந்திரத்தையும் பயன்படுத்த முயற்சி செய்யவில்லை. ஆனால் பிலேயாம் திரும்பி பாலைவனத்தை நோக்கிப் பார்த்தான். பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பார்த்தான். அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் தங்கள் கோத்திரங்களோடு கூடாரமிட்டுத் தங்கி இருந்தார்கள். தேவனுடைய ஆவி பிலேயாமின் மீது வந்தது. அதனால் அவன் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்:

“பேயோரின் குமாரனான பிலேயாமிடமிருந்து வரும் செய்தி.
நான் தெளிவாக பார்த்தவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.
நான் தேவனிடமிருந்து இந்த செய்தியைக் கேட்டேன்.
    சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குக் காட்டியதை நான் பார்த்தேன்.
    நான் தெளிவாகப் பார்த்தவற்றைப் பணிவாகக் கூறுகிறேன்.

“யாக்கோபின் ஜனங்களே, உங்கள் கூடாரங்கள் அழகாக இருக்கின்றன!
    இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் வீடுகள் அழகாக இருக்கின்றன!
நீங்கள் நதிக்கரையில் அமைக்கப்பட்ட தோட்டம் போன்றும்,
    ஆற்றங்கரையில் வளர்ந்த தோட்டம் போன்றும் இருக்கின்றீர்கள்.
கர்த்தரால் நடப்பட்ட வாசனை நிறைந்த
    அடர்ந்த செடிகளைப் போன்று இருக்கின்றீர்கள்.
தண்ணீர்க் கரையில் வளர்ந்திருக்கும்
    அழகான மரங்களைப் போன்று இருக்கின்றீர்கள்.
    உங்கள் விதைகள் வளர்வதற்கேற்ற
    போதுமான தண்ணீரை நீங்கள் பெறுவீர்கள்.
ஆகாக் அரசனைவிட உங்கள் அரசன் பெரியவன்.
    உங்கள் ராஜ்யம் மிகப் பெரியதாகும்.

“தேவன் அந்த ஜனங்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்தார்.
    அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலமுள்ளவர்கள்.
அவர்கள் பகைவர்கள் அனைவரையும் தோற்கடிப்பார்கள்.
    அவர்களின் எலும்பை நொறுக்கி, தங்கள் அம்புகளை எய்வார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் சிங்கம் போன்றவர்கள்.
    அவர்கள் சுருண்டு படுத்திருக்கிறார்கள்.
ஆமாம்! அவர்கள் இளம் சிங்கத்தைப் போன்றவர்கள்.
    எவரும் அவர்களை எழுப்ப விரும்பவில்லை!
உங்களை ஆசீர்வதிப்பவர்கள்
    ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
உங்களை சபிப்பவர்கள்
    சபிக்கப்படுவார்கள்.”

10 பிலேயாம் மீது பாலாக்குக்கு பெருங்கோபம் ஏற்பட்டது. பாலாக் பிலேயாமிடம், “நீ வந்து என் பகைவருக்கு எதிராகப் பேசும்படி அழைத்தேன். ஆனால் நீ அவர்களை மூன்று முறை ஆசீர்வதித்திருக்கிறாய். 11 இப்போது இந்த இடத்தைவிட்டு வீட்டிற்கு ஓடிப்போ. நான் உனக்கு ஒரு நல்ல தொகையைக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் உனது பரிசை நீ இழப்பதற்கு கர்த்தர் காரணமாக இருந்துவிட்டார்” என்றான்.

12 ஆனால் பிலேயாம், “நீ என்னிடம் சிலரை அனுப்பினாய், அவர்கள் என்னை அழைத்தனர். ஆனால் நான் அவர்களிடம், 13 ‘பாலாக் தனது அழகான வீடு நிறைய வெள்ளியும் தங்கமும் எனக்குத் தரலாம். ஆனால் கர்த்தர் எதைச் சொல்லவேண்டும் என்று ஆனையிடுகிறாரோ அதை மட்டுமே சொல்வேன். நானாக எதையும் என்னால் செய்ய முடியாது. அது நன்மையோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். கர்த்தர் ஆணையிட்டபடியே நான் சொல்ல வேண்டும்’ என்றேன். நான் உன் ஆட்களிடம் கூறியதை நினைத்துப்பார். 14 நான் இப்போது என் சொந்த ஜனங்களிடம் திரும்பிச் செல்கிறேன். ஆனால் நான் உனக்கு இந்த எச்சரிக்கையை கொடுக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் உனக்கும் உன் ஜனங்களுக்கும் வரும் நாட்களில் என்ன செய்வார்கள் என்பதையும் உனக்குக் கூறிவிடுகிறேன்” என்றான்.

லூக்கா 1:26-38

கன்னி மரியாள்

26-27 எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள். 28 தூதன் அவளிடம் வந்து, “கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்றான்.

29 தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். “இதன் பொருள் என்ன?” என்று மரியாள் அதிசயித்தாள்.

30 தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். 31 கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32 அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். 33 சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான்.

34 மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.

35 தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். 36 உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு மகனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். 37 தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான்.

38 மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center