Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 125

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

125 கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள்.
    அவர்கள் அசைக்கப்படுவதில்லை.
    அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
    என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக் காப்பார்.
நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை.
    அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.

கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும்.
    பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும்.
கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள்.
    அக்கொடியோரை கர்த்தர் தண்டிப்பார்.

இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!

2 இராஜாக்கள் 2:9-22

பின்னர் எலியா எலிசாவிடம், “என்னை உன்னிடத்திலிருந்து தேவன் எடுத்துக்கொள்வதற்கு முன் உனது விருப்பம் என்ன?” என்று கேட்டான்.

அதற்கு எலிசா, “உங்களிடம் உள்ள ஆவி எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்கவேண்டும்” என்றான்.

10 எலியா, “கஷ்டமானதையே கேட்டிருக்கிறாய். நான் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் பொழுது நீ என்னைப் பார்ப்பாயானால், இது நடக்கும். ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில் என்னை உன்னால் பார்க்க முடியாமல் போகுமேயானால் இது நடக்காது” என்றான்.

தேவன் எலியாவை பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டது

11 எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துச் சென்றார்கள். திடீரென்று இரதமும் குதிரைகளும் வந்து இருவரையும் பிரித்தன. அவை நெருப்பாகத் தோன்றின! எலியா சுழற்காற்றால் வானுலகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்.

12 எலிசா இதனைப் பார்த்து, “என் தந்தையே! என் தந்தையே! இஸ்ரவேலின் இரதமும் குதிரை வீரருமானவரே!” என்று சத்தமிட்டான்.

இதற்குப் பிறகு எலியாவை எலிசா பார்க்கவில்லை. அவன் தனது ஆடையைக் கிழித்து தன் சோகத்தை வெளிப்படுத்தினான். 13 எலியாவின் மேலாடை தரையிலே விழுந்து கிடந்தது. அதனை எலிசா எடுத்துக்கொண்டு யோர்தான் கரைக்குப் போனான். மேலாடையை தண்ணீரில் அடித்து, “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்று கேட்டான்.

14 மேலாடையால் தண்ணீரை அடித்த உடனே தண்ணீர் வலதுபுறமாகவும் இடது புறமாகவும் பிரிந்துபோயிற்று! எலிசா ஆற்றைக் கடந்து போனான்.

தீர்க்கதரிசிகள் எலியாவைப்பற்றி கேட்டது

15 இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்த எரிகோவின் தீர்க்கதரிசிகள் எலிசாவைப் பார்த்து, “எலியாவின் ஆவி இப்பொழுது எலிசாவின் மேல் உள்ளது!” என்றார்கள். அவர்கள் எலிசாவை சந்திக்க வந்தார்கள். அவர்கள் அவனுக்கு முன்பாகத் தரையில் குனிந்து வணங்கினார்கள். 16 அவர்கள் எலிசாவிடம், “பாருங்கள், எங்களிடம் தகுதியான 50 பேர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து நாங்கள் சென்று உங்கள் எஜமானைத் தேட எங்களை அனுமதியுங்கள். ஒரு வேளை தேவனுடைய ஆவி அவரைத் தூக்கிச்சென்று எங்காவது மலையிலோ, அல்லது பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கலாம்!” என்றார்கள்.

அதற்கு எலிசா, “இல்லை, எலியாவைத் தேட ஆட்களை அனுப்பாதீர்கள்!” என்றான்.

17 எலிசா குழப்பமடையும்வரை தீர்க்கதரிசி குழு அவனைக் கெஞ்சியது. பின் எலிசா, “நல்லது, எலியாவைத் தேட ஆட்களை அனுப்புங்கள்” என்றான்.

எலியாவைத் தேட தீர்க்கதரிசி குழு 50 ஆட்களை அனுப்பியது. மூன்று நாட்கள் தேடியும், அவர்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 18 எனவே அந்த ஆட்கள் எலிசா தங்கியிருந்த எரிகோவிற்குச் சென்றார்கள். அவர்கள் எலிசாவிடம் தங்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றார்கள். எலிசா அவர்களிடம், “நான் உங்களிடம் போகவேண்டாம் என்று கூறினேன்” என்றான்.

எலிசா தண்ணீரை சுத்தமாக்கியது

19 நகர ஜனங்கள் எலிசாவிடம் வந்து, “ஐயா, இந்த நகரம் நல்ல இடத்தில் அமைந்துள்ளதை நீங்கள் பார்க்கமுடியும். ஆனால் தண்ணீரோ மிகவும் மோசம். அதனால் இங்கு நல்ல விளைச்சல் இல்லை” என்றனர்.

20 எலிசாவோ, “ஒரு புதிய தோண்டியில் உப்பைப் போட்டுக்கொண்டு வாருங்கள்” என்றான்.

அவர்கள் அப்பாத்திரத்தை எலிசாவிடம் கொண்டு வந்தனர். 21 அவன் தண்ணீர் பாய்கிற இடத்திற்கு போனான். அதில் உப்பைப் போட்டான். “அவன், ‘நான் இந்த தண்ணீரை சுத்தமாக்குகிறேன்! இப்பொழுதிலிருந்து இந்த தண்ணீர் எவ்வித மரணத்துக்கும் காரணமாக இருக்காது. விளை நிலங்களில் தொடர்ந்து நல்ல விளைச்சலைத் தரும்’ என்று கர்த்தர் சொல்கிறார்” என்றான்.

22 எலிசா சொன்னதுபோல் தண்ணீர் பரிசுத்தமானது. இன்றளவும் அத்தண்ணீர் சுத்தமாக இருக்கிறது. அனைத்துமே எலிசா சொன்னதுபோல் நடந்தது.

அப்போஸ்தலர் 3:17-4:4

17 “எனது சகோதரர்களே, நீங்கள் செய்வதை அறியாததால் அவற்றை இயேசுவுக்குச் செய்தீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் தலைவர்களும் அதைப் புரிந்துகொள்ளவில்லை. 18 இக்காரியங்கள் நடந்தேறுமென தேவன் கூறினார். அவரது கிறிஸ்து துன்புற்று இறப்பார் என்பதை தேவன் தம் தீர்க்கதரிசிகள் மூலமாகக் கூறினார். தேவன் இதை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை உங்களுக்குக் கூறியுள்ளேன். 19 எனவே நீங்கள் உங்கள் இருதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள்! தேவனிடம் திரும்புங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார். 20 பின் ஆண்டவர் உங்களுக்கு ஆவிக்குரிய இளைப்பாறுதலை நல்குவார். கிறிஸ்துவாக இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய இயேசுவை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

21 “ஆனால் எல்லாக் காரியங்களும் மீண்டும் சரியாகும் வரை இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன்னரே தேவன் தனது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியபோதே, இவற்றைப்பற்றிக் கூறியுள்ளார். 22 மோசே, ‘கர்த்தராகிய உங்கள் தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளிப்பார். உங்கள் சொந்த மக்களிடையேயிருந்து அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார். அவர் என்னைப் போலவே இருப்பார். அத்தீர்க்கதரிசி உங்களுக்குக் கூறுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். 23 எந்த மனிதனாகிலும் அந்தத் தீர்க்கதரிசிக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அப்போது அம்மனிதன் தேவனுடைய மக்களிடமிருந்து பிரிந்து இறப்பான்’” [a] என்றான்.

24 “தேவனுக்காகப் பேசிய சாமுவேலும் அவருக்குப் பின் வந்த மற்ற எல்லாத் தீர்க்கதரிசிகளும் இக்காலத்தைக் குறித்துப் பேசினார்கள். 25 தீர்க்கதரிசிகள் பேசிய அனைத்தையும் நீங்கள் பெற்றீர்கள். அதைப் போலவே தேவன் உங்கள் முன்னோரோடு செய்த உடன்படிக்கையையும் நீங்கள் பெற்றீர்கள். தேவன் உங்கள் தந்தையாகிய ஆபிரகாமிடம், ‘உன் தலைமுறையினரால் உலகின் ஒவ்வொரு தேசமும் ஆசீர்வதிக்கப்படும்’ [b] என்று கூறினார். 26 தேவன் தனது விசேஷ ஊழியரை அனுப்பியுள்ளார். தேவன் அவரை முதலாவதாக உங்களிடம் அனுப்பினார். உங்களை ஆசீர்வதிப்பதற்கு தேவன் இயேசுவை அனுப்பினார். நீங்கள் ஒவ்வொருவரும் தீய செயல்களைச் செய்கிறதிலிருந்து உங்களைத் திருப்புவதின் மூலம் தேவன் இதைச் செய்கிறார்” என்றான்.

யூத ஆலோசனைச் சங்கத்தின் முன்

பேதுருவும், யோவானும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் அவர்களிடம் வந்தார்கள். யூத ஆசாரியர்களும், ஆலயத்தைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தலைவனும், சில சதுசேயரும் அவர்களோடு வந்திருந்தனர். பேதுருவும், யோவானும் மக்களிடம் போதித்தவற்றைக் குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து மக்களுக்குக் கூறும்போது, மக்கள் மரணத்திலிருந்து இயேசுவின் வல்லமையால் உயிர்த்தெழுவார் என்பதையும் போதித்தார்கள். யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அது ஏற்கெனவே இரவு நேரமாயிருந்தது. எனவே அடுத்த நாள்வரைக்கும் பேதுருவையும் யோவானையும் சிறையில் வைத்திருந்தார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center