Book of Common Prayer
தாவீதின் பாடல்
25 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
2 என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
3 ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள்.
அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
4 கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
உமது வழிகளை எனக்குப் போதியும்.
5 எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
நீரே என் தேவன், என் மீட்பர்.
அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
6 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
7 எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.
8 கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
9 தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக்
கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர்.
11 கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன்.
ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர்.
12 கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால்
அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார்.
13 அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான்.
தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள்.
14 தன்னைப் பின்பற்றுவோருக்கு கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார்.
அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார்.
15 உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன்.
தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார்.
16 கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன்.
என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும்.
17 என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும்.
என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும்.
18 கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும்.
நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும்.
19 என் பகைவர்களையெல்லாம் பாரும்.
அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள்.
20 தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும்.
நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும்.
21 தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர்.
நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும்.
22 தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை
அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும்.
முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
9 என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன்.
2 நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர்.
உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
3 என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள்.
ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள்.
4 நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர்.
கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர்.
எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர்.
5 பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர்.
உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர்.
6 பகைவன் ஒழிக்கப்பட்டான்!
கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன.
அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை.
7 ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்.
கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார்.
உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார்.
8 உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார்.
எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
9 பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர்.
அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர்.
கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும்.
10 உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும்.
கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர்.
11 சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள்.
கர்த்தர் செய்த பெரிய காரியங்களை தேசங்களில் கூறுங்கள்.
12 உதவிநாடிப் போனோரை கர்த்தர் நினைவு கூருவார்.
அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர்.
கர்த்தர் அவர்களை மறக்கவில்லை.
13 நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்:
“கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும்.
பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும்.
14 அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும்.
என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.”
15 பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள்.
அக்குழிகளில் அவர்களே வீழ்ந்தனர்.
பிறரை அகப்படுத்த வலைகளை விரித்தனர். அவ்வலைகளில் அவர்களே சிக்குண்டனர்.
16 கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார்.
தீயவை செய்வோரை கர்த்தர் தண்டிப்பாரென அந்த ஜனங்கள் அறிந்துகொண்டனர்.
17 தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள்.
அந்த ஜனங்கள் மரணத்தின் இடங்களுக்குச் செல்வார்கள்.
18 துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும்.
அந்த ஏழைகள் நம்பிக்கையிழக்கும் நிலை வந்ததென்று தோன்றும்.
ஆனால் தேவன் அவர்களை என்றென்றும் மறப்பதில்லை.
19 கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந்தீரும்.
தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும்.
20 ஜனங்களுக்குப் பாடம் கற்பியும்.
அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.
தாவீதின் பாடல்
15 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
4 தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.
5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.
அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.
1,44,000 இஸ்ரவேல் மக்கள்
7 அதற்குப் பிறகு நான்கு தேவதூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்பதைக் கண்டேன். நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்து வைத்திருந்தனர். பூமியின் மீதும் கடலின் மீதும் மரத்தின் மீதும் காற்று அடியாதபடிக்குக் கட்டுப்படுத்தினர். 2 பிறகு கிழக்குத் திசையில் இருந்து ஒரு தேவதூதன் வருவதைக் கண்டேன். அவனிடம் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல் இருந்தது. அந்தத் தூதன் உரத்த குரலில் ஏனைய நான்கு தூதர்களையும் அழைத்தான். அந்த நான்கு தூதர்களுக்கும் தேவன் பூமியையும் கடலையும் சேதப்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தைக் கொடுத்திருந்தார். 3 அவர்களிடம் அந்தத் தேவ தூதன், “நாம் நமது தேவனின் தொண்டர்களுக்கு அவர்கள் நெற்றியில் அடையாளக்குறி இடவேண்டும். அதுவரை பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள்” என்று கூறினான்.
4 பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பல்வேறு குடும்பக் குழுக்களிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள்.
5 யூதா குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
ரூபன் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
காத் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
6 ஆசேர் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
நப்தலி குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
மனாசே குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
7 சிமியோன் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
லேவி குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
இசக்கார் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
8 செபுலோன் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
யோசேப்பு குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
பென்யமீன் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
ஒரு சமாரிய நகரம்
51 இயேசு உலகை விட்டு பரலோகத்திற்குச் செல்லும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் எருசலேமுக்கு போக முடிவெடுத்தார். 52 இயேசு சில மனிதர்களை அவருக்கு முன்பாக அனுப்பினார். இயேசுவுக்கு எல்லாவற்றையும் ஆயத்தம் செய்வதற்காக அம்மனிதர்கள் சமாரியாவிலுள்ள ஒரு நகரை அடைந்தனர். 53 இயேசு எருசலேமுக்குச் செல்ல விரும்பியதால் அந்நகரத்து மக்கள் இயேசுவை வரவேற்க விரும்பவில்லை. 54 இயேசுவின் சீஷராகிய யாக்கோபும், யோவானும் இதைக் கண்டார்கள். அவர்கள், “ஆண்டவரே, [a] வானிலிருந்து நெருப்பு வரவழைத்து, அம்மக்களை நாங்கள் அழிப்பதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டனர்.
55 ஆனால் இயேசு திரும்பி அவர்களைக் கண்டித்தார். [b] 56 பின்பு இயேசுவும், அவரது சீஷர்களும் மற்றொரு நகரத்துக்குச் சென்றனர்.
இயேசுவைப் பின்பற்றுதல்(A)
57 அவர்கள் எல்லாரும் பாதை வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஒருவன் இயேசுவை நோக்கி, “எந்த இடத்துக்கு நீங்கள் சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றி வருவேன்” என்றான்.
58 இயேசு பதிலாக, “நரிகள் வசிப்பதற்குக் குழிகள் உண்டு. பறவைகள் வசிப்பதற்குக் கூடுகள் உண்டு. ஆனால் மனித குமாரன் தனது தலையைச் சாய்ப்பதற்குக் கூட எந்த இடமும் இல்லை” என்று கூறினார்.
59 இயேசு இன்னொரு மனிதனை நோக்கி, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அம்மனிதன், “ஆண்டவரே, நான் போய் முதலில் எனது தந்தையை அடக்கம் செய்த பின்னர் வருவேன்” என்றான்.
60 ஆனால் இயேசு அவனை நோக்கி, “மரித்த மக்கள் அவர்களுக்குச் சொந்தமான மரித்தோரைப் புதைக்கட்டும். நீ போய் தேவனின் இராஜ்யத்தைப் பற்றிக் கூற வேண்டும்” என்றார்.
61 மற்றொரு மனிதன், “ஆண்டவரே, நான் உம்மை பின்பற்றுவேன். ஆனால் நான் போய் முதலில் என் குடும்பத்தாரிடம் விடை பெற்று வருவேன்” என்றான்.
62 இயேசு, “ஒருவன் வயலை உழ ஆரம்பித்துப் பின்னோக்கி பார்த்தால் அவன் தேவனின் இராஜ்யத்துக்குத் தன்னை ஆயத்தப்படுத்தாதவன் ஆவான்” என்றார்.
2008 by World Bible Translation Center