Book of Common Prayer
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
120 நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது,
உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்!
2 கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள்.
3 பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா?
நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா?
4 வீரனின் கூரிய அம்புகளும்,
சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும்.
5 பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும்
கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும்.
6 சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு
நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.
7 நான் சமாதானம் வேண்டும் என்றேன்.
ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
121 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன்.
ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும்
படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.
3 தேவன் உன்னை விழவிடமாட்டார்.
உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.
4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை.
தேவன் ஒருபோதும் உறங்கார்.
5 கர்த்தர் உன் பாதுகாவலர்.
அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார்.
6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது.
இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.
7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்.
கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்
122 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது
நான் மிகவும் மகிழ்ந்தேன்.
2 இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.
3 இது புதிய எருசலேம்.
ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
4 இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள்.
அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
5 அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.
தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.
6 எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.
“உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
7 உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.
உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”
8 என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,
இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
9 நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,
இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
123 தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
நீர் பரலோகத்தில் அரசராக வீற்றிருக்கிறீர்.
2 தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காக
அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள்.
அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம்.
நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம்.
3 கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும்.
நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும்.
4 நாங்கள் வெறுப்படையும் அளவுக்கு இழிவுரைகளையும் அவமானங்களையும், சோம்பேறி ஜனங்களாகிய பெருமைக்காரர்களினால் பெற்றிருந்தோம்.
பிறரைக் காட்டிலும் தாங்கள் மேலானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல்
124 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு.
2 ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில்
இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
3 கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை
உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4 நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும்,
நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும்
நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும்.
5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும்
தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.
6 கர்த்தரைத் துதியுங்கள்!
நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்கு கர்த்தர் அனுமதிக்கவில்லை.
7 வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம்.
வலை அறுந்தது, நாம் தப்பினோம்.
8 நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது.
கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
125 கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள்.
அவர்கள் அசைக்கப்படுவதில்லை.
அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
2 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக் காப்பார்.
3 நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை.
அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
4 கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும்.
பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும்.
5 கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள்.
அக்கொடியோரை கர்த்தர் தண்டிப்பார்.
இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
126 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது
அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.
2 நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப்
பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள்,
“இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள்.
3 ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால்
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
4 கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின்
தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.
5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம்.
ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
6 அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும்,
ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்
127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.
2 வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.
3 பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
4 ஒரு இளைஞனின் மகன்கள்
ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
5 தன் அம்புகள் வைக்கும் பையை மகன்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது மகன்கள் அவனைக் காப்பார்கள்.
சமாரியாவும் இஸ்ரவேலும் தண்டிக்கப்பட வேண்டும்
1 கர்த்தருடைய வார்த்தை மீகாவிடம் வந்தது. இது யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் அரசர்களின் காலங்களில் நிகழ்ந்தது. இவர்கள் யூதாவின் அரசர்கள். மீகா, மொரேசா என்னும் ஊரைச் சேர்ந்தவன். மீகா இந்தத் தரிசனத்தைச் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துப் பார்த்தான்.
2 அனைத்து ஜனங்களே, கவனியுங்கள்!
பூமியே அதிலுள்ள உயிர்களே, கவனியுங்கள்,
எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது பரிசுத்த ஆலயத்திலிருந்து வருவார்.
எனது ஆண்டவர் உங்களுக்கு எதிரான சாட்சியாக வருவார்.
3 பாருங்கள், கர்த்தர் அவரது இடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்.
அவர் இறங்கி வந்து பூமியிலுள்ள உயர்ந்த மேடைகளை மிதிப்பார்.
4 அவருக்குக் கீழே மலைகள் உருகும்.
அவை நெருப்புக்கு முன்னாலுள்ள
மெழுகைப் போன்று உருகும்.
பள்ளத்தாக்குகள் பிளந்து மலைகளிலிருந்து தண்ணீர் பாயும்.
5 ஏனென்றால், இதற்கு காரணம் யாக்கோபின் பாவம்.
இதற்கு இஸ்ரவேல் நாடு செய்த பாவங்களும் காரணமாகும்.
சமாரியா, பாவத்தின் காரணம்
யாக்கோபு செய்த பாவத்திற்கு காரணம் என்ன?
அது சமாரியா,
யூதாவிலுள்ள, வழிபாட்டிற்குரிய இடம் எங்கே?
அது எருசலேம்.
6 எனவே, நான் சமாரியாவை வயலிலுள்ள குன்றுகளின் குவியலாக்குவேன்.
அது திராட்சைக் கொடி நடுவதற்கான இடம்போல் ஆகும்.
நான் சமாரியவின் கற்களைப் பள்ளத்தாக்கில் புரண்டு விழப் பண்ணுவேன்.
நான் அவளது அஸ்திபாரங்களைத் தவிர எல்லாவற்றையும் அழிப்பேன்.
7 அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாக உடைக்கப்படும்.
அவள் வேசித்தனத்தின் சம்பளம் (விக்கிரகங்கள்) நெருப்பில் எரிக்கப்படும்.
நான் அவளது அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்கள் அனைத்தையும் அழிப்பேன்.
ஏனென்றால் சமாரியா எனக்கு விசுவாசமற்ற முறையில் அச்செல்வத்தைப் பெற்றாள்.
எனவே அவை எனக்கு விசுவாசம்
அற்றவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படும்.
மீகாவின் பெருந்துக்கம்
8 என்ன நிகழும் என்பதைப்பற்றி நான் மிகவும் துக்கப்படுவேன்.
நான் பாதரட்சையும் ஆடையும் இல்லாமல் போவேன்.
நான் ஒரு நாயைப்போன்று அழுவேன்.
நான் ஒரு பறவையைப்போன்று துக்கங்கொள்வேன்.
9 சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது.
அவளது (பாவம்) நோய் யூதா முழுவதும் பரவியிருக்கிறது.
இது எனது ஜனங்களின் நகரவாசலை அடைந்திருக்கிறது.
எருசலேமின் எல்லா வழிகளிலும் பரவியிருக்கிறது,
பவுலைக் கொல்ல சில யூதர்களின் திட்டம்
12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். 13 நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். 14 இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.
16 பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் மகனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.
19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.
22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.
செசரியாவிற்குப் பவுல் அனுப்பப்படுதல்
23 பின்பு அதிகாரி இரண்டு படை அதிகாரிகளை அழைத்தான். அவன் அவர்களை நோக்கி, “செசரியாவுக்குப் போவதற்குச் சில மனிதர்கள் வேண்டும். இருநூறு படை வீரர்களை ஆயத்தப்படுத்துங்கள். எழுபது குதிரை வீரர்களையும் இருநூறு ஈட்டியேந்திய வீரர்களையும் தயார்படுத்துங்கள். இன்றிரவு ஒன்பது மணிக்குப் புறப்படத் தயாராக இருங்கள். 24 பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான்.
இயேசு ஒரு வேலைக்காரனைக் குணமாக்குதல்(A)
7 இயேசு இந்த எல்லாக் காரியங்களையும் மக்களுக்குச் சொல்லி முடித்தார். பின்பு இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார். 2 கப்பர்நகூமில் இராணுவ அதிகாரி ஒருவன் இருந்தான். அவனுடைய வேலைக்காரன் ஒருவன் நோயுற்றிருந்தான். அவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அந்த அதிகாரி அவ்வேலைக்காரனை மிகவும் நேசித்தான். 3 அந்த அதிகாரி இயேசுவைப் பற்றிக்கேள்விப்பட்டபோது, சில வயதான யூதத்தலைவர்களை இயேசுவிடம் அனுப்பினான். இயேசு வந்து வேலைக்காரனைக் குணப்படுத்தக் கேட்டுக்கொள்ளும்பொருட்டு அவர்களை அதிகாரி அனுப்பினான். 4 அவர்கள் இயேசுவிடம் சென்றனர். அதிகாரிக்கு உதவுமாறு இயேசுவை அவசரமாக வேண்டினர். அவர்கள், “உம்முடைய உதவியைப் பெறும் அளவுக்கு இந்த அதிகாரி உண்மையிலேயே தகுதி வாய்ந்தவன்தான். 5 அவன் நம் மக்களை நேசிக்கிறான். நமக்காக ஜெப ஆலயத்தைக் கட்டியிருக்கிறான்” என்றனர்.
6 எனவே இயேசு அந்த மனிதர்களோடு புறப்பட்டார். இயேசு அந்த அதிகாரியின் வீட்டை நெருங்குகையில் அதிகாரி தனது நண்பர்களை அனுப்பினான். அவர்களை இயேசுவிடம் “கர்த்தாவே, நீர் என் வீட்டுக்கு வர வேண்டியதில்லை. எங்கள் வீட்டிற்கு உம்மை அழைத்துச் செல்லும் அளவுக்கு நான் தகுதி உடையவன் அல்லன். 7 அதனால்தான் நான் நேரிடையாக உம்மிடம் வரவில்லை. நீர் கட்டளையிடும். என் வேலைக்காரன் குணம் பெறுவான். 8 உம்முடைய அதிகாரத்தை நான் அறிவேன். பிற மனிதர்களின் அதிகாரத்துக்குட்பட்ட மனிதன் நான். எனக்குக் கீழ் பல வீரர்கள் உண்டு. அவர்களில் ஒருவனை நான் ‘போ’ என்றால் போகிறான். மற்றொருவனை ‘வா’ என்றால் வருகிறான். என் வேலையாளிடம் ‘இதைச் செய்’ என்றால் உடனே அவன் கீழ்ப்படிகிறான்” என்று கூறுமாறு அனுப்பினான்.
9 இதைக் கேட்டபோது இயேசு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தன்னைத் தொடர்ந்து வருகிற மக்களை நோக்கித் திரும்பினார். “இஸ்ரவேல் மக்களிடம் கூட இல்லாத வேறெங்கும் காணப்படாத, உயர்ந்த விசுவாசத்தை இவனிடம் கண்டேன்” என்றார்.
10 இயேசுவைக் காண அனுப்பப்பட்ட மனிதர்கள் அதிகாரியின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டனர்.
மரித்தவன் எழுப்பப்படுதல்
11 மறுநாள் இயேசு நாயீன் என்னும் நகரத்திற்குச் சென்றார். இயேசுவின் சீஷர்களும், மிகப் பெரிய கூட்டமான மக்கள் பலரும் அவரோடு பிராயாணம் செய்தனர். 12 நகர வாசலை இயேசு நெருங்கியபோது ஒரு மரண ஊர்வலத்தைக் கண்டார். விதவையான ஒரு தாய் தனது ஒரே மகனை இழந்திருந்தாள். அவனது உடலைச் சுமந்து சென்றபோது தாயுடன் அந்நகர மக்கள் பலரும் கூட இருந்தனர். 13 கர்த்தர் (இயேசு) அவளைப் பார்த்தபோது, அவளுக்காக மனதுருகினார். இயேசு அவளிடம் சென்று, “அழாதே” என்றார். 14 பாடையின் அருகே வந்து இயேசு அதைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் நின்றனர். இயேசு இறந்த மனிதனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார். 15 இறந்துபோன மகன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், இயேசு ஒப்படைத்தார்.
16 எல்லா மக்களும் ஆச்சரியமுற்றனர். அவர்கள், “ஒரு மகா தீர்க்கதரிசி நம்மிடையே வந்துள்ளார்” என்றனர். மேலும் அவர்கள், “தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார்” என்றார்கள்.
17 இயேசுவைப் பற்றிய இச்செய்தி யூதேயா முழுவதும் அதைச் சூழ்ந்த எல்லா இடங்களிலும் பரவிற்று.
2008 by World Bible Translation Center