Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 80

“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று

80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
    நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் அரசராக நீர் வீற்றிருக்கிறீர்.
    நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
    வந்து எங்களைக் காப்பாற்றும்.
தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
    எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
    என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
    உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
    அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
    எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
    எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
    நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
    உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
“திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
    அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
    உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
    அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
    அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி”யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
    இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
    காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
    பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி”யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
    நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16 உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
    நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.

17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது மகனை நெருங்கும்.
    நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
    அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
    எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.

சங்கீதம் 77

எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று

77 தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன்.
    தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன்.
    நான் சொல்வதைக் கேளும்.
என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன்.
    இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன்.
    என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது.
நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன்,
    நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை.
நீர் என்னை உறங்கவொட்டீர்.
    நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன்.
நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
    முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன்.
    நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன்.
நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா?
    மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா?
தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா?
    அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா?
இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா?
    அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன்.

10 பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது.
    ‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன்.

11 கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன்.
    தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன்.
12 நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன்.
    அக்காரியங்களை நான் நினைத்தேன்.
13 தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை.
    தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை.
14 அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே.
    நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர்.
15 உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர்.
    நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர்.

16 தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது.
    ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று.
17 கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன.
    உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள்.
    அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன.
18 உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின.
    உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று.
    பூமி அதிர்ந்து நடுங்கிற்று.
19 தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர்.
    நீர் ஆழமான கடலைக் கடந்தீர்.
    ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை.
20 உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு
    நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர்.

சங்கீதம் 79

ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று

79 தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள்.
    அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள்.
    அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள்.
காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள்.
    உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.
தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான்.
    மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை.
எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின.
    எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.
தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா?
    உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?
தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும்.
    உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.
அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன.
    அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும்.
    விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்!
    நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!
எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்!
    எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்!
உமது நாமத்துக்கு அது மகிமையை தரும்.
    உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.
10 பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே?
    அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்று கேட்கவிடாதேயும்.
தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும்.
    உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
11 சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்!
    தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும்.
12 தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும்
    ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும்.
    உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
13 நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள்.
    நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம்.
    தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.

நெகேமியா 9:1-25

இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறார்கள்

பிறகு அதே மாதத்தின் 24வது நாள் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு நாள் உபவாசத்திற்காகக் கூடினார்கள். அவர்கள் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்தனர்; தங்கள் தலையில் சாம்பலைப் போட்டுக்கொண்டனர். இதன் மூலம் தாங்கள் துக்கமாகவும், கலக்கமாகவும் இருப்பதாகக் காட்டினார்கள். இஸ்ரவேல் சந்ததியினர் அயல் நாட்டினவர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் ஆலயத்தில் எழுந்து நின்று தங்களது பாவங்களையும் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டனர். அவர்கள் மூன்று மணி நேரம் எழுந்து நின்று, ஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். பிறகு மேலும் மூன்று மணிநேரம் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர். தங்கள் தேவனாகிய கர்த்தரை குனிந்து தொழுதுகொண்டனர்.

யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியர்களுடைய படிகளின் மேல் நின்றார்கள். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை உரத்தக்குரலில் அழைத்தார்கள். பிறகு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா ஆகியோர் ஜனங்களைப் பார்த்து பேசினார்கள். அவர்கள், “எழுங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்!” என்றனர்.

“தேவன் என்றென்றும் வாழ்கிறார்!
    தேவன் என்றென்றும் வாழ்வார்!
ஜனங்கள் உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்க வேண்டும்!
    உமது நாமம் எல்லாத் துதிக்கும் போற்றுதலுக்கும் மேலானதாக இருப்பதாக!.
நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்!
    நீர் வானத்தை உண்டாக்கினீர்!
நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்!
    நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்!
நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்!
நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்!
    தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்!
நீரே தேவனாகிய கர்த்தர்.
    நீர் ஆபிராமைத் தேர்ந்தெடுத்தீர்.
பாபிலோனிலுள்ள ஊரிலிருந்து அவரை வழிநடத்தினீர்.
    அவனது பெயரை ஆபிரகாம் என்று மாற்றினீர்.
அவன் உமக்கு உண்மையாகவும் நம்பிக்கையுடையவனாகவும் இருந்ததைக் கண்டீர்.
    நீர் அவனோடு ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டீர்.
நீர் அவனுக்கு கானானியர்,
ஏத்தியர், எமோரியர், பெரிசியர்,
எபூசியர், கிர்காசியர் ஆகியோரது நாடுகளைக் கொடுப்பதாக வாக்களித்தீர்.
    ஆனால் நீர் அத்தேசத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்குக் கொடுப்பதாக வாக்களித்தீர்.
உமது வாக்குறுதியைக் காப்பாற்றினீர்!
    ஏன்? ஏனென்றால் நீர் நல்லவர்!
எங்கள் முற்பிதாக்கள் எகிப்தில் துன்பப்படுவதை நீர் பார்த்தீர்.
    செங்கடலில் அவர்கள் உதவிக்காகக் கூப்பிட்டதைக் கேட்டீர்.
10 பார்வோனிடத்தில் நீர் அற்புதங்களைக் காட்டினீர்.
    அவனது அதிகாரிகளிடமும் ஜனங்களிடமும் அற்புதங்களை செய்தீர்.
நமது முற்பிதாக்களைவிட எகிப்தியர்கள் தம்மைச் சிறந்தவர்களாக நினைத்தனர் என்பது உமக்குத் தெரியும்.
    ஆனால் நீர் எவ்வளவு சிறந்தவர் என நிரூபித்தீர்! அவர்கள் இன்றும் கூட அதனை நினைக்கின்றனர்!
11 அவர்களுக்கு முன் நீர் செங்கடலைப் பிரித்தீர்.
    அவர்கள் காய்ந்த நிலத்தின் வழியாக நடந்தனர்.
எகிப்திய வீரர்கள் அவர்களைத் துரத்தினர்.
    ஆனால் அவர்களை நீர் கடலுக்குள் எறிந்தீர். அவர்கள் கடலுக்குள் பாறை மூழ்குவது போன்று மூழ்கினார்கள்.
12 அந்த நேரத்தில் அவர்களை வழி நடத்த பகல் நேரத்தில் நீர் உயர்ந்த மேகத்தைப் பயன்படுத்தினீர்.
    இரவில் நீர் அக்கினி தூணைப் பயன்படுத்தினீர்.
இவ்வாறு நீர் அவர்களின் பாதையை வெளிச்சமாக்கினீர்.
    அவர்களுக்கு எங்கே போகவேண்டும் என்றும் வழிக்காட்டினீர்.
13 பிறகு நீர் சீனாய் மலையிலிருந்து இறங்கினீர்.
    நீர் பரலோகத்திலிருந்து அவர்களோடு பேசினீர்.
நீர் அவர்களுக்கு நல்ல சட்டங்களையும் கொடுத்தீர்.
    நீர் அவர்களுக்கு மிக நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமானவற்றை கொடுத்தீர்.
14 உமது பரிசுத்தமான ஓய்வுநாளைப் பற்றியும் சொன்னீர்.
    உமது தாசனாகிய மோசேயைப் பயன்படுத்தி, நீர் அவர்களுக்கு கற்பனைகளையும் போதனைகளையும் சட்டங்களையும் கொடுத்தீர்.
15 அவர்கள் பசியோடு இருந்தார்கள்.
    எனவே, பரலோகத்திலிருந்து அவர்களுக்கு உணவைக் கொடுத்தீர்.
அவர்கள் தாகமாய் இருந்தார்கள்.
    எனவே, பாறையிலிருந்து அவர்களுக்கு தண்ணீரைக் கொடுத்தீர்.
நீர் அவர்களிடம், ‘வாருங்கள், இந்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றீர்.
    நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி அவர்களுக்காக நாட்டை எடுத்துக்கொண்டீர்.
16 ஆனால் எங்கள் முற்பிதாக்களான அந்த ஜனங்கள் பெருமைகொண்டனர்.
    அவர்கள் பிடிவாதமானவர்களானார்கள்.
    அவர்கள் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தனர்.
17 அவர்கள் கவனிக்க மறுத்தனர். நீர் செய்த அற்புதங்களை மறந்தனர்.
    அவர்கள் எகிப்திற்கு மீண்டும் சென்று அடிமைகளாகத் தலைவரை அமர்த்தினார்கள்!

“ஆனால் நீர் மன்னிக்கிற தேவன்!
    நீர் கருணையும் மிகுந்த இரக்கமும் உடையவர்‌.
நீர் பொறுமையும் முழு அன்பும் உடையவர்.
எனவே நீர் அவர்களைவிட்டு விலகவில்லை.
18 அவர்கள் தங்கத்தால் கன்றுக்குட்டிகைளைச் செய்து,
    ‘இவை தான் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள்’ என்று சொன்னபோதுங்கூட நீர் அவர்களை விட்டு விலகவில்லை.
19 நீர் மிகவும் கருணை உடையவர்!
    எனவே, நீர் அவர்களை வனாந்தரத்தில் கைவிடவில்லை.
பகலில் அவர்களிடமிருந்த உயர்ந்த மேகங்களை எடுக்கவில்லை.
    நீர் அவர்களைத் தொடர்ந்து வழி காட்டினீர்.
இரவில் விளக்குத்தூணை அவர்களிடமிருந்து எடுக்கவில்லை.
    அவர்களது பாதைக்குத் தொடர்ந்து வெளிச்சம் தந்தீர்.
    எந்த வழியில் போக வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டினீர்.
20 அவர்களை அறிவாளிகளாக்க உமது நல் ஆவியைக் கொடுத்தீர்.
    அவர்களுக்கு உணவாக மன்னாவைக் கொடுத்தீர்.
    நீர் அவர்களின் தாகத்திற்கு தண்ணீரைக் கொடுத்தீர்.
21 40 ஆண்டுகளுக்கு அவர்களை கவனித்து வந்தீர்!
    வனாந்தரத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அவர்கள் ஆடைகள் பழையதாய் போகவில்லை.
    அவர்களின் பாதங்கள் வீங்கவோ புண்ணாகவோ இல்லை.
22 கர்த்தாவே, நீர் அவர்களுக்கு இராஜ்யங்களையும் நாடுகளையும் கொடுத்தீர்.
    நீர் அவர்களுக்குக் குறைந்த அளவான ஜனங்கள் வாழ்கிற தூர நாடுகளையும் கொடுத்தீர்.
அவர்கள் எஸ்போனின் அரசனாகிய சீகோன் நாட்டையும் பெற்றனர்.
    அவர்கள் பாசானின் அரசனாகிய ஓகின் நாட்டையும் பெற்றனர்.
23 வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போன்று அவர்களது சந்ததியினரைப் பெருக்கினீர்.
    அவர்களது முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தீர்.
    அவர்கள் உள்ளே சென்று நாட்டை எடுத்துக்கொண்டார்கள்.
24 அப்பிள்ளைகளும் நாட்டை எடுத்துக்கொண்டனர்.
    அங்கே வாழ்ந்த கானானியர்களை அவர்கள் தோற்கடித்தனர்.
நீர் அந்த ஜனங்களை தோற்கடிக்கும்படி செய்தீர்!
    அந்நாடுகளையும் ஜனங்களையும் அரசர்களையும் அவர்களது விருப்பப்படிச் செய்ய நீர் அனுமதித்தீர்!
25 அவர்கள் பலமிக்க நகரங்களைத் தோற்கடித்தனர்.
    அவர்கள் வளமான நிலங்களை எடுத்தனர்.
அவர்கள் நல்ல பொருட்கள் நிறைந்த வீடுகளைப் பெற்றனர்.
    அவர்கள் ஏற்கெனவே தோண்டப்பட்ட கிணறுகளைப் பெற்றனர்.
அவர்கள் திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் மற்றும் பழமரங்களைப் பெற்றனர்!
    அவர்கள் வயிறு நிறையும் வரை உண்டுக் கொழுத்தனர்.
நீர் கொடுத்த அற்புதமான பொருட்களை எல்லாம் அனுபவித்தனர்.

வெளி 18:1-8

பாபிலோன் அழிக்கப்படுதல்

18 பிறகு வேறொரு தூதன் பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதைக் கண்டேன். அவனுக்கு மிகுதியான அதிகாரம் இருந்தது. அவனுடைய மகிமையால் பூமி ஒளி பெற்றது. அத்தூதன் உரத்த குரலில் கூவினான்:

“அவள் அழிக்கப்பட்டாள்!
    மாநகரமான பாபிலோன் அழிக்கப்பட்டது!
அவள் பிசாசுகளின் குடியிருப்பானாள்.
    அந்நகரம் ஒவ்வொரு அசுத்தமான ஆவியும் வசிக்கிற இடமாயிற்று.
    எல்லாவிதமான அசுத்தமான பறவைகளுக்கும் அது ஒரு கூடானது.
    அசுத்தமானதும் வெறுக்கத்தக்கதுமான ஒவ்வொரு மிருகத்திற்கும் அது ஒரு நகரமாயிற்று.
அவளுடைய வேசித்தனத்தினுடையதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லாத் தேசங்களும் குடித்தன.
உலகிலுள்ள அரசர்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்.
    உலகிலுள்ள வியாபாரிகள் அவளது மாபெரும் செல்வச் செழிப்பில் இருந்து செல்வர்கள் ஆனார்கள்.”

பிறகு நான் பரலோகத்திலிருந்து இன்னொரு குரலையும் கேட்டேன்.

“ஓ! என் மக்களே, அவளுடைய பாவத்தில்
    உங்களுக்குப் பங்கில்லாதபடிக்கு வெளியே வாருங்கள்.
பிறகு அவளுக்கிருக்கும் வாதைகள் எதுவும் உங்களுக்கிருக்காது.
அந்நகரத்தின் பாவங்கள் பரலோகம் வரை எட்டிவிட்டன.
    தேவன் அவளது குற்றங்களை மறக்கவில்லை.
அவள் கொடுத்ததைப்போலவே நீங்களும் அந்நகருக்கு கொடுங்கள்.
    அவள் கொடுத்ததைப்போல இருமடங்கு திருப்பிச் செலுத்துங்கள்.
மற்றவர்களுக்கு அவள் தயாரித்த அடர்த்தியான மதுவைப்போல இருமடங்கு அடர்த்தியான மதுவை அவளுக்காகத் தயார் செய்யுங்கள்.
அவள் தனக்கு செல்வ வாழ்வையும் அதிக மகிமையையும் அளித்துக்கொண்டாள்.
    அதே அளவு துன்பத்தையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள்.
அவள் தனக்குத் தானே, ‘என் சிம்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிற நான் ஒரு ராணி.
    நான் விதவை அல்ல.
    நான் எக்காலத்திலும் துக்கப்படமாட்டேன்’ என்று சொல்லிக்கொள்கிறாள்.
எனவே ஒருநாளில் இக்கேடுகள் அவளுக்கு வரும்.
    அவை மரணம், அழுகை, பெரும் பசியாய் இருக்கும்.
அவள் நெருப்பால் அழிக்கப்படுவாள்.
    ஏனென்றால் அவளை நியாயந்தீர்க்கிற தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.”

மத்தேயு 15:1-20

தேவனின் பிரமாணங்களும் மனிதர் விதிமுறைகளும்(A)

15 அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம், ,“நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களுக்கு,, “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் ஏன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? ‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’ [a] என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’ [b] என்றும் தேவன் சொல்லியுள்ளார். ஆனால் நீங்கள் ஒருவனுக்கு தன் தாய் தந்தையரிடம், ‘நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். ஆனால், அதை உங்களுக்குச் செய்யமாட்டேன். அதைத் தேவனுக்குக் காணிக்கையாக்குவேன்’ என்று கூறுவதற்குப் போதிக்கிறீர்கள். தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் மாயமானவர்கள்! உங்களைப்பற்றி ஏசாயா சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:

,“இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள்.
    ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை.
என்னை வணங்குவதில் பொருளில்லை.
    அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!” (B)

10 இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து,, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.

12 பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து,, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

13 அதற்கு இயேசு,, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். 14 பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார்.

15 அப்பொழுது பேதுரு,, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான்.

16 அதற்கு இயேசு,, “புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்? 17 ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது. 18 ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. 19 தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. 20 இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center