Revised Common Lectionary (Semicontinuous)
புதிய காலம் வந்துகொண்டிருக்கிறது
17 “நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன்.
ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள்.
அவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள்.
18 எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
அவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
நான் என்ன செய்யப்போகிறேன்?
நான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன்.
அவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன்.
19 “பிறகு, நான் எருசலேமோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.
நான் என் ஜனங்களோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.
அந்த நகரத்தில் மீண்டும் அழுகையும் துக்கமும் இராது.
20 இனி ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்காது.
இனி நகரத்தில் எவரும் குறுகிய வாழ்வுடன் மரிக்கமாட்டார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் நீண்ட காலம் வாழும்.
ஒவ்வொரு வயோதிகனும் நீண்ட காலம் வாழ்வான்.
100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவன் இளைஞன் என்று அழைக்கப்படுவான்.
பாவம் செய்தவன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வு முழுவதும் துன்பத்தை அடைவான்.
21 “அந்த நகரத்தில், ஒருவன் வீடுகட்டினால் அவன் அங்கே வாழ்வான்.
ஒருவன் திராட்சைத் தோட்டத்தை வைத்தால், அவன் அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைகளை உண்பான்.
22 மீண்டும் ஒருவன் வீடுகட்ட இன்னொருவன் அதில் குடியேறமாட்டான்.
மீண்டும் ஒருவன் திராட்சைத் தோட்டத்தை அமைக்க இன்னொருவன் பழம் உண்ணமாட்டான்.
எனது ஜனங்கள் மரங்கள் வாழும்மட்டும் வாழ்வார்கள்.
நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தாங்கள் செய்தவற்றை அனுபவித்து மகிழ்வார்கள்.
23 பெறும் குழந்தை மரித்துப்போவதற்காக
இனிமேல் பெண்கள் பிரசவிக்கமாட்டார்கள்.
பிரசவத்தின்போது என்ன ஆகுமோ என்று பெண்கள் இனிமேல் பயப்படமாட்டார்கள்.
எனது அனைத்து ஜனங்களும் அவர்களது பிள்ளைகளும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
24 அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு என்ன தேவை என்று நான் அறிவேன்.
அவர்கள் கேட்டு முடிப்பதற்குள்ளாக நான் அவர்களுக்கு உதவுவேன்.
25 ஓநாயும் ஆட்டுக் குட்டிகளும் சேர்ந்து புல்மேயும்.
சிங்கங்கள் மாடுகளோடு சேர்ந்து வைக்கோலை உண்ணும்.
எனது பரிசுத்தமான மலையில் தரையில் உள்ள பாம்பு யாரையும் பயப்படுத்தாது.
அது எவரையும் தீண்டாது” கர்த்தர் இவை அனைத்தையும் கூறினார்.
தேவனைத் துதிக்கும் பாடல்
12 அப்போது நீ கூறுவாய்,
“கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்
நீர் என் மீது கோபமாக இருந்தீர்.
ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்!
என் மீது உமது அன்பைக் காட்டும்”.
2 என்னை தேவன் காப்பாற்றுகிறார்.
நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை.
அவர் என்னைக் காப்பாற்றுகிறார்.
கர்த்தராகிய யேகோவா எனது பெலம்.
அவர் என்னைக் காப்பாற்றுகிறார்.
நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன்.
3 உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள்.
பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய்.
4 பிறகு நீ கூறுவாய்:
“கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்
அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!”
5 கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்!
ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள்.
எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள்.
6 சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப்பற்றிச் சத்தமிடுங்கள்!
இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!
வேலைக்கான பொறுப்புகள்
6 சகோதர சகோதரிகளே! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தால் உங்களுக்கு ஆணை இடுகிறோம். வேலை செய்ய மறுக்கிற விசுவாசியிடம் இருந்து விலகிச் செல்லுங்கள். வேலை செய்ய மறுக்கிறவர்கள், எங்களிடமிருந்து நீங்கள் பெற்ற போதனையைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல. 7 நாங்கள் வாழ்வது போன்றே நீங்களும் வாழவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களோடு நாங்கள் இருந்தபோது சோம்பேறிகளாக இருந்ததில்லை. 8 அடுத்தவர்கள் உணவை உண்டபோது அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மேலும் மேலும் வேலை செய்தோம். எனவே, எவருக்கும் தொந்தரவு தந்ததில்லை. நாங்கள் இரவும் பகலுமாக உழைத்தோம். 9 எங்களுக்கு உதவும்படி உங்களிடம் கேட்க எங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் எங்கள் தேவைக்கு நாங்களே வேலை செய்தோம். எனவே உங்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருந்தோம். இதனை நீங்கள் பின்பற்றவேண்டும். 10 “ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம்.
11 உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் உழைக்க மறுப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் ஏனைய மக்களின் வாழ்வில் குறுக்கிடுபவர்களாக இருக்கிறார்கள். 12 மற்றவர்களுக்குத் தொந்தரவு தர வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணை இடுகிறோம். உழைத்து உங்கள் உணவை சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் இதனைக் கேட்டுக்கொள்கிறோம். 13 சகோதர சகோதரிகளே! நல்லவற்றைச் செய்வதில் சோர்வு அடையாதீர்கள்.
தேவாலயத்தின் அழிவு(A)
5 சில சீஷர்கள் தேவாலயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், “இது மிக நல்ல கற்களாலான ஓர் அழகான தேவாலயம். தேவனுக்கு அளிக்கப்பட்ட நல்ல காணிக்கைகளைப் பாருங்கள்” என்றனர்.
6 ஆனால் இயேசு, “இங்கு நீங்கள் பார்க்கிற அனைத்தும் அழிக்கப்படும் காலம் வரும். இந்தக் கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லும் தரையில் தள்ளப்படும். ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் இருக்காது” என்றார்.
7 சில சீஷர்கள் இயேசுவிடம், “போதகரே, இவை எப்போது நடக்கும்? இவை நடைபெறும் காலம் இதுவென எங்களுக்குக் காட்டுவது எது?” என்று கேட்டார்கள்.
8 இயேசு, “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். 9 யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார்.
10 பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும். 11 பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும்.
12 “ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். அரசர்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். 14 நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள். 15 உங்கள் பகைவர்கள் பதில் கூற முடியாதபடி அல்லது மறுக்க முடியாதபடி செய்திகளைச் சொல்லும் ஞானத்தை உங்களுக்குத் தருவேன். 16 உங்கள் பெற்றோரும், சகோதரரும், உறவினரும், நண்பரும் கூட உங்களை ஏமாற்றுவார்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொல்வார்கள். 17 எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள். 18 ஆனால் இவற்றில் ஒன்றும் உண்மையில் உங்களைத் தீங்கு செய்யமுடியாது. 19 இக்காரியங்கள் மூலமாக உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதால் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும்.
2008 by World Bible Translation Center