Revised Common Lectionary (Semicontinuous)
148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
2 தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது சேனைகள் [a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
3 சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
4 மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
5 கர்த்தருடைய நாமத்தைத் துதி.
ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
6 இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
7 பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
8 தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
9 மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார்.
தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
அவர் நாமத்தை என்றென்றும்
மகிமைப்படுத்துங்கள்!
பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்.
தேவன் அவரது ஜனங்களை வீட்டிற்குக் கொண்டு வருகிறார்
54 “பெண்களே மகிழ்ச்சியோடு இருங்கள்!
உங்களுக்கு எந்தப் பிள்ளைகளும் இல்லை.
ஆனால், நீங்கள் மிக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்!”
கர்த்தர் கூறுகிறார்,
“தனியாக இருக்கும் பெண் கணவனோடு இருக்கும் பெண்ணைவிட மிகுதியான பிள்ளைகளைப் பெறுவாள்.”
2 “உனது கூடாரத்தைப் பெரிதாக்கு.
உனது கதவுகளை அகலமாகத் திற.
உன் வீட்டில் சேர்த்துக்கொள்வதை நிறுத்தாதே.
உனது கூடாரத்தைப் பெரிதாகவும் பலமாகவும் செய்.
3 ஏனென்றால், நீ மிகவும் வளருவாய்.
உனது பிள்ளைகள் பல நாடுகளிலிருந்து ஜனங்களைப் பெறுவார்கள்.
உனது பிள்ளைகள், அழிந்துபோன இந்த நகரத்தில் மீண்டும் வாழ்வார்கள்.
4 அஞ்சாதே! நீ ஏமாற்றம் அடையமாட்டாய்.
உனக்கு எதிராக ஜனங்கள் தீயவற்றைச் சொல்லமாட்டார்கள்.
நீ இலச்சையடைவதில்லை.
நீ இளைஞனாக இருந்து அவமானத்தை உணர்ந்தாய்.
ஆனால், இப்போது அந்த அவமானத்தை மறந்துவிட்டாய்.
நீ உன் கணவனை இழந்தபோது அடைந்த அவமானத்தை இப்போது நினைக்கமாட்டாய்.
5 ஏனென்றால், உன் கணவனாகிய ஒருவரே (தேவன்) உன்னைச் செய்தவர்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறவர் அவர் ஒருவரே.
அவர் இஸ்ரவேலின் பரிசுத்தமானவர்.
அவர் பூமி முழுவதற்குமான தேவன் என்று அழைக்கப்படுவார்.
6 “கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய்.
உன் ஆவியில் மிகவும் துக்கமுடையவளாக இருந்தாய்.
ஆனால், கர்த்தர் அவருடையவளாக உன்னை அழைத்தார்.
இளம் வயதில் திருமணம் செய்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய்.
ஆனால், தேவன் உன்னை அவருடையவளாக அழைத்தார்.”
7 தேவன் கூறுகிறார், “நான் உன்னை விட்டு விலகினேன்.
ஆனால், அது கொஞ்சக் காலத்திற்குத்தான்.
நான் மீண்டும் உன்னை என்னிடம் கூட்டிக்கொள்வேன்.
நான் உன்னிடம் பெருங்கருணையைக் காட்டுவேன்.
8 நான் மிகவும் கோபம்கொண்டேன்.
கொஞ்ச காலத்திற்கு உன்னிடமிருந்து மறைந்திருந்தேன்.
ஆனால் என்றென்றும் உன்னைத் தயவுடன் ஆறுதல்படுத்துவேன்” உனது மீட்பரான கர்த்தர் இதனைக் கூறினார்.
9 தேவன் கூறுகிறார், “நினைவுகொள்!
நோவாவின் காலத்தில் நான் உலகத்தை வெள்ளத்தால் தண்டித்தேன்.
ஆனால், நான் மீண்டும் இந்த உலகத்தை வெள்ளத்தால் அழிக்கமாட்டேன் என்று நோவாவிற்கு வாக்குறுதி அளித்தேன்!
இதே வழியில், நான் மீண்டும் கோபங்கொண்டு உன்னைக் கடிந்துகொள்வதில்லை என்று வாக்களிக்கிறேன்.”
10 கர்த்தர் கூறுகிறார், “மலைகள் மறைந்து போகலாம்!
குன்றுகள் புழுதி (தூள்) ஆகலாம்! ஆனால், எனது தயவு உன்னைவிட்டு விலகாது!
நான் உன்னோடு சமாதானம் செய்துகொள்வேன்.
அது எப்பொழுதும் முடிவுபெறாது” கர்த்தர் உன்மீது இரக்கம் காட்டுகிறார்.
இவற்றையெல்லாம் சொன்னவர் அவர் ஒருவரே.
11 “ஏழை நகரமே!
பகைவர்கள் புயலைப்போன்று உனக்கு எதிரே வந்தார்கள். எவரும் உனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.
ஆனால், நான் உன்னை மீண்டும் கட்டுவேன்.
நான் ஒரு அழகான கல்லை உனது சுவர்களுக்கு வைப்பேன்.
நான் நீல ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி அஸ்திபாரம் அமைப்பேன்.
12 சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன்.
நான் வாசல்களுக்கு மாணிக்கக் கற்களைப் பயன்படுத்துவேன்.
உன்னைச் சுற்றி சுவர்கள் கட்ட விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்துவேன்.
13 உனது பிள்ளைகள் தேவனைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அவர் கற்பிப்பார்.
உனது பிள்ளைகள் உண்மையான சமாதானத்தை அடைவார்கள்.
புதிய எருசலேம்
21 பிறகு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முதலாவது வானமும், பூமியும் மறைந்து போயிற்று. இப்போது கடல் இல்லை. 2 தேவனிடமிருந்து பரலோகத்தை விட்டுக் கீழே இறங்கிவரும் பரிசுத்த நகரைக் கண்டேன். தேவன் அனுப்பிய அந்நகரமே புதிய எருசலேம். [a] அது, தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல தயார்படுத்தப்பட்டது.
3 சிம்மாசனத்திலிருந்து ஓர் உரத்தகுரல் கேட்டது: “இப்போது தேவனுடைய வீடு அவரது மக்களோடு உள்ளது. அவர் அவர்களோடு வாழ்வார். அவர்களே அவரது மக்களாக இருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடிருந்து அவர்களுடைய தேவனாய் இருப்பார். 4 அவர்களின் கண்களில் வடியும் கண்ணீரை தேவன் துடைப்பார். இனிமேல் அங்கே மரணம் இருக்காது. துக்கமும், அழுகையும், வேதனையும் இல்லாமல் போகும். பழைய முறைகள் எல்லாம் போய்விட்டன” என்றது.
5 சிம்மாசனத்தில் இருந்தவர், “பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். “பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை” என்றார்.
6 சிம்மாசனத்தில் இருந்தவர் என்னிடம், “இது முடிந்து விட்டது. நானே அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். அதாவது நானே துவக்கமும் முடிவுமாக இருக்கிறேன். நான் தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவ நீரூற்றிலிருந்து நீரைக் கொடுப்பேன். 7 எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு இவை எல்லாம் கொடுக்கப்படும். அவனுக்கு நான் தேவனாகவும் அவன் எனக்கு மகனாகவும் இருப்பான்.
2008 by World Bible Translation Center