Revised Common Lectionary (Semicontinuous)
யோசுவா விடை பெறுதல்
24 இஸ்ரவேல் கோத்திரத்தினர் எல்லோரையும் சீகேமில் கூடுமாறு யோசுவா அழைத்தான். பின் யோசுவா மூத்த தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும் இஸ்ரவேலின் ஆட்சியாளரையும் அழைத்தான். இவர்கள் தேவனுக்கு முன்னே நின்றார்கள்.
2 பின்பு யோசுவா எல்லா ஜனங்களையும் பார்த்துப் பேசினான். அவன், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குக் கூறுவதை நான் சொல்லுகிறேன்:
‘பலகாலத்திற்கு முன், உங்கள் முற்பிதாக்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் வாழ்ந்தனர். ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தையாகிய தேராகு, போன்றோரைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது, அம்மனிதர்கள் வேறு தெய்வங்களை வணங்கி வந்தனர். 3 ஆனால் கர்த்தராகிய நான், நதிக்கு மறுபுறத்திலுள்ள தேசத்திலிருந்து உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை அழைத்து வந்தேன். கானான் தேசத்தின் வழியாக அவனை வழிநடத்திப் பல பல பிள்ளைகளை அவனுக்குக் கொடுத்தேன். ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்னும் பெயருள்ள மகனைக் கொடுத்தேன்.
14 பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும். உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த பொய்த் தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.
15 “நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். யாருக்கு சேவை செய்வதென்று இன்றைக்கு முடிவெடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்தபோது உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வங்களுக்கு சேவைபுரிவீர்களா? அல்லது இத்தேசத்தில் வாழ்ந்த எமோரியர் வழிபட்ட தேவர்களையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நானும் எனது குடும்பமும், கர்த்தருக்கே சேவை செய்வோம்!” என்றான்.
16 அப்போது ஜனங்கள் பதிலாக, “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தமாட்டோம். அந்நிய தெய்வங்களுக்கு ஒருபோதும் சேவை செய்யமாட்டோம்! 17 தேவனாகிய கர்த்தர் தான் எகிப்திலிருந்து வெளியேற்றி நம் ஜனங்களை அழைத்து வந்தார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தேசத்தில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் அங்கு பெரிய காரியங்களை கர்த்தர் எங்களுக்காகச் செய்தார். அவர் எங்களை அத்தேசத்திலிருந்து அழைத்து வந்து, பிற தேசங்கள் வழியாக நாங்கள் பிரயாணம் செய்யும்போது எங்களைப் பாதுகாத்து வந்தார். 18 அத்தேசங்களில் வசித்த ஜனங்களைத் தோற்கடிக்க கர்த்தர் எங்களுக்கு உதவினார். நாங்கள் இப்போதிருக்கிற தேசத்தில் வாழ்ந்த எமோரிய ஜனங்களை வெல்லவும் கர்த்தர் எங்களுக்கு உதவினார். கர்த்தருக்குத் தொடர்ந்து நாங்கள் சேவை செய்வோம். ஏனெனில் அவரே எங்கள் தேவன்” என்றார்கள்.
19 அப்போது யோசுவா, “அது உண்மையல்ல. நீங்கள் கர்த்தருக்குத் தொடர்ந்து சேவை செய்வதென்பது இயலாதது. தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். அந்நிய தெய்வங்களை ஆராதிக்கும் ஜனங்களை தேவன் வெறுக்கிறார். தனக்கெதிராக அவ்வாறு திரும்பினால் உங்களை தேவன் மன்னிக்கமாட்டார். 20 ஆனால் நீங்கள் கர்த்தரை விட்டு நீங்கிப் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்வீர்கள். உங்களுக்குக் கொடிய காரியங்கள் நிகழும்படி கர்த்தர் செய்வார். கர்த்தர் உங்களை அழிப்பார். தேவனாகிய கர்த்தர் உங்களிடம் நல்லவராக இருந்தார், ஆனால் நீங்கள் அவருக்கெதிராக திரும்பினால் அவர் உங்களை அழிப்பார்” என்றான்.
21 அதற்கு ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “இல்லை! நாங்கள் கர்த்தருக்கே சேவை செய்வோம்” என்றார்கள்.
22 அப்போது யோசுவா, “உங்களையும், உங்களோடிருக்கிற ஜனங்களையும் சுற்றி நோக்குங்கள். நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சிகளா?” என்றான்.
ஜனங்கள் பதிலாக, “ஆம், அது உண்மை! நாங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்துள்ளோம் என்பதைக் காண்கிறோம்” என்றார்கள்.
23 அப்போது யோசுவா, “உங்களிடமிருக்கிற பொய்த் தெய்வங்களை எடுத்து வீசிவிடுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உங்கள் முழுமனதோடும் நேசியுங்கள்” என்றான்.
24 பின் ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்வோம். நாங்கள் அவருக்குக் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.
25 அந்த நாளில் யோசுவா ஜனங்களுக்காக ஒரு ஒப்பந்தத்தைச் செய்தான். சீகேம் எனப்பட்ட ஊரில் இந்த ஒப்பந்தத்தைச் செய்தான். அது அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாயிற்று.
ஆசாபின் ஒரு மஸ்கீல்
78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
2 நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
3 நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
4 நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.
5 கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார்.
தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார்.
நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார்.
தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார்.
6 புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள்.
அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள்.
இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள்.
7 எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள்.
தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்.
கர்த்தரின் வருகை
13 சகோதர சகோதரிகளே! இறந்து போனவர்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனைய நம்பிக்கையற்ற மக்களைப் போன்று நீங்கள் வருத்தம் கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை. 14 இயேசு இறந்தார், ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறோம். ஆகையால் இயேசுவை விசுவாசித்து மரித்துப்போன எல்லாரையும் தேவன் இயேசுவோடுகூட ஒன்று சேர்ப்பார்.
15 கர்த்தரின் செய்தியையே நாங்கள் இப்போது உங்களுக்குக் கூறுகிறோம். இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் கர்த்தர் வரும்போதும் ஒருவேளை வாழ்ந்துகொண்டிருப்போம். ஏற்கெனவே மரித்தவர்கள் கர்த்தரோடு இருப்பார்கள். உயிரோடிருக்கிற நாமும் அவரோடிருப்போம். ஆனால் நாம் அவர்களுக்கு (ஏற்கெனவே இறந்தவர்களுக்கு) முந்திக்கொள்வதில்லை. 16 கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள். 17 அதற்குப் பிறகு, அவர்களோடு அப்பொழுது வாழும் நாமும் எடுத்துச்செல்லப்படுவோம். கர்த்தரை வான வெளியில் சந்திப்போம். அதன் பின் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். 18 ஆகவே இவ்வார்த்தைகளால் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
பத்துப் பெண்கள் பற்றிய உவமை
25 ,“மணமகனுக்காக காத்திருந்த பத்துப் பெண்களுக்கு ஒப்பாக பரலோக இராஜ்யம் இருக்கும். அப்பெண்கள் தங்களுடன் விளக்குகளைக் கொண்டுவந்தனர். 2 அவர்களில் ஐந்து பெண்கள் முட்டாள்கள்; ஐந்து பெண்கள் புத்திசாலிகள். 3 ஐந்து முட்டாள் பெண்களும் தம்முடன் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவற்றுக்குத் தேவையான அதிக எண்ணெயைக் கொண்டு வரவில்லை. 4 புத்திசாலிப் பெண்களோ விளக்குகளையும் தேவையான அதிக எண்ணெயை ஜாடிகளிலும் கொண்டு வந்திருந்தனர். 5 மணமகன் வர நேரமானதால் அப்பெண்கள் களைப்பு மிகுதியால் தூங்க ஆரம்பித்தனர்.
6 ,“நள்ளிரவில் யாரோ, ‘மணமகன் வந்தாயிற்று! வந்து மணமகனை சந்தியுங்கள்!’ என்று அறிவித்தார்கள்.
7 ,“பின் பெண்கள் அனைவரும் விழித்தெழுந்தார்கள். தம் விளக்குகளைத் தயார் செய்தார்கள். 8 முட்டாள் பெண்கள் புத்திசாலிப் பெண்களிடம் ‘எங்களிடம் விளக்குகளிலிருந்த எண்ணெய் தீர்ந்துவிட்டது. உங்களிடமுள்ள எண்ணெயிலிருந்து சிறிது கொடுங்கள்’ என்று கேட்டார்கள்.
9 ,“அதற்கு புத்திசாலிப் பெண்கள், ‘இல்லை. எங்களிடமுள்ள எண்ணெய் எங்களுக்கே போதாது, எண்ணெய் விற்பவர்களிடம் சென்று உங்களுக்கு எண்ணெய் வாங்கி வாருங்கள்’ என்று பதிலளித்தார்கள்.
10 ,“ஆகவே, முட்டாள் பெண்கள் எண்ணெய் வாங்கச் சென்றார்கள். அவர்கள் வெளியில் சென்றிருந்தபொழுது மணமகன் வந்தான். தயாராக இருந்த பெண்கள் மணமகனுடன் விருந்துண்ண சென்றார்கள். உடனே, கதவு மூடப்பட்டு பூட்டப்பட்டது.
11 ,“பின்னர், வெளியில் சென்ற பெண்கள் திரும்பினார்கள். அவர்கள், ‘ஐயா! ஐயா! கதவைத் திறந்து எங்களை உள்ளே விடுங்கள்’ என்றார்கள்.
12 ,“ஆனால் மணமகனோ, ‘உண்மையாகவே நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டான்.
13 ,“எனவே நீங்கள் எப்பொழுதும் தயாராக இருங்கள். மனித குமாரன் வரப்போகும் நாளோ நேரமோ உங்களுக்குத் தெரியாது.
2008 by World Bible Translation Center