Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 21-22

சவுலின் குடும்பம் தண்டிக்கப்படுகிறது

21 தாவீது ராஜாவாக இருந்தபோது ஒரு பஞ்சம் வந்தது. இம்முறை பஞ்சம் மூன்று ஆண்டுகள் நீடித்தது. தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தரும் அவனுக்குப் பதில் தந்தார். கர்த்தர், “சவுலும் கொலைக்காரரான அவனது குடும்பத்தாரும் இப்பஞ்சத்திற்குக் காரணமானார்கள். இப்பஞ்சம் சவுல் கிபியோனியரைக் கொன்றதால் வந்ததாகும்” என்றார். (கிபியோனியர் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் எமோரியர் குழுவினராகும். இஸ்ரவேலர் கிபியோனியரைத் துன்புறுத்துவதில்லை என்று வாக்களித்திருந்தனர். ஆனால் சவுல் கிபியோனியரைக் கொல்ல முயன்றான். அவன் இஸ்ரவேலர் மீதும் யூதா ஜனங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் இப்படிச் செய்தான்.)

ராஜாவாகிய தாவீது கிபியோனியரை அழைத்து அவர்கள் எல்லோரிடமும் பேசினான். தாவீது கிபியோனியரிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இஸ்ரவேலின் பாவத்தைப் போக்குவதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனவே நீர் கர்த்தருடைய ஜனங்களை ஆசிர்வதிக்கலாம்” என்றான்.

கிபியோனியர் தாவீதிடம், “தாம் செய்த காரியத்திற்கு ஈடாக கொடுப்பதற்கு சவுலின் குடும்பத்தினரிடம் போதிய அளவு வெள்ளியோ, தங்கமோ இல்லை. ஆனால் இஸ்ரவேலரைக் கொல்வதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது” என்றனர்.

தாவீது, “அப்படியெனில், நான் உங்களுக்காக என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.

அதற்கு கிபியோனியர் ராஜா தாவீதிடம், “எங்களுக்கெதிராக சவுல் திட்டங்கள் தீட்டினான். இஸ்ரவேலில் வாழும் எங்கள் அத்தனைபேரையும் அழிப்பதற்கு அவன் முயன்றான். சவுலின் ஏழு குமாரர்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா. ஆகையால் நாங்கள் கிபியா மலையில் கர்த்தரின் முன்னால் சவுலின் குமாரர்களைத் தூக்கில் இடுவோம்” என்றார்கள்.

ராஜாவாகிய தாவீது, “நல்லது, அவர்களை நான் உங்களிடம் ஒப்படைப்பேன்” என்றான். ஆனால் ராஜா யோனத்தானின் குமாரனாகிய மேவிபோசேத்தைப் பாதுகாத்தான். யோனத்தான் சவுலின் குமாரன். ஆனால் கர்த்தருடைய பெயரில் யோனத்தானுக்கு தாவீது ஒரு வாக்குறுதி அளித்திருந்தான்.[a] ஆகையால் ராஜா மேவிபோசேத்தை அவர்கள் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டான். சவுலுக்கும் அவன் மனைவி ரிஸ்பாவுக்கும் பிறந்தவர்கள் அர்மோனியும் மேவிபோசேத்தும்[b] ஆவார்கள். சவுலுக்கு மீகாள் என்னும் குமாரத்தி இருந்தாள். அவளை மேகோலாவிலுள்ள பர்சிலாவின் குமாரன் ஆதரியேலுக்கு மணம் புரிந்து வைத்தனர். ஆதரியேலுக்கும் மீகாளுக்கும் பிறந்த ஐந்து குமாரர்களைத் தாவீது அழைத்தான். இவ்வாறு தாவீது ஏழுபேரைக் கிபியோனியருக்குக் கொடுத்தான். கிபியோனியர் கர்த்தருக்கு முன்பாக அவர்களை கிபியா மலையில் தூக்கிலிட்டனர். ஏழு பேரும் ஒரே சமயத்தில் மடிந்தனர். அறுவடையின் ஆரம்ப நாட்களில் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டனர். இது வசந்தக் காலத்தில் பார்லி அறுப்புக்கு முன் நடந்தது.

தாவீதும் ரிஸ்பாவும்

10 ஆயாவின் குமாரத்தியான ரிஸ்பாள் துக்கத்திற்கு அறிகுறியான துணியை எடுத்து பாறை மீது வைத்தாள். அந்த ஆடை அறுவடை தொடங்கியக் காலத்திலிருந்து மழை வரும்வரை பாறை மீதே இருந்தது. ரிஸ்பாள் மரித்தவர்களின் உடலை இரவும் பகலும் காத்தாள். காட்டுப் பறவைகள் பகலிலும், காட்டு விலங்குகள் இரவிலும் உடலை நெருங்கி விடாத வண்ணம் கண்காணித்தாள்.

11 ஜனங்கள் தாவீதிடம் சென்று சவுலின் வேலைக் காரியான ரிஸ்பாவின் செயலைப் பற்றிக் கூறினார்கள். 12 பின்பு தாவீது யாபேஸ் கீலேயாத்திலுள்ள ஜனங்களிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளை எடுத்தனர். (கிலேயாத்திலுள்ள யாபேசின் ஆட்கள் கில்போவாவில் சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்ட பிறகு இந்த எலும்புகளை எடுத்தார்கள். பெலிஸ்தர்கள் சவுல், மற்றும் யோனத்தானின் உடல்களை பெத்சானிலுள்ள ஒரு சுவரில் தொங்கவிட்டனர். ஆனால் யாபேஸ் கீலேயாத்தின் ஆட்கள் அங்குச்சென்று பொது இடத்திலிருந்து உடல்களைத் திருடினார்கள்.)

13 தாவீது கீலேயாத்திலுள்ள யாபேசிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டு வந்தான். அவர்கள் தூக்கிலிடப்பட்ட ஏழு பேரின் உடல்களையும் கொண்டுவந்தனர். 14 அவர்கள் பென்யமீன் பகுதியில் சவுல் மற்றும் யோனத்தானின் எலும்பைப் புதைத்தனர். அவர்கள் சவுலின் தந்தையாகிய கீசின் கல்லறையில் அவர்களைப் புதைத்தனர். ராஜா சொன்னபடி ஜனங்கள் செய்தனர். ஆகையால் தேவன் அந்த ஜனங்களின் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டார்.

பெலிஸ்தரோடு போர்

15 பெலிஸ்தர் இஸ்ரவேலருடன் இன்னொரு போரை ஆரம்பித்தனர். தாவீதும் அவனது ஆட்களும் பெலிஸ்தரோடு போரிடச் சென்றனர். தாவீது சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். 16 இஸ்பிபெனோப் இராட்சதர்களில் ஒருவன். இஸ்பிபெனோபின் ஈட்டி 7 1/2 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. அவனிடம் புதிய வாள் ஒன்றும் இருந்தது. அவன் தாவீதைக் கொல்ல முயன்றான். 17 ஆனால் செருயாவின் குமாரனாகிய அபிசாய் பெலிஸ்தனைக் கொன்று தாவீதைக் காப்பாற்றினான்.

பின்பு தாவீதின் ஆட்கள் தாவீதிற்கு சிறப்பான ஒரு வாக்குறுதி அளித்தனர். அவர்கள் தாவீதிடம், “இனி நீங்கள் எங்களோடு சேர்ந்து போருக்கு வர வேண்டாம். அவ்வாறு வந்தால் இஸ்ரவேல் தனது சிறந்த தலைவரை இழக்கக்கூடும்” என்றனர்.

18 பின்பு கோப் என்னுமிடத்தில் பெலிஸ்தரோடு மற்றொரு போர் நடந்தது. ஊசாத்தியனாகிய சீபேக்காய் இன்னொரு இராட்சதனான (ரஃபா குடும்பத்தவனான) சாப் என்பவனைக் கொன்றான்.

19 மீண்டும் பெலிஸ்தருக்கு எதிராக கோப் என்னுமிடத்தில் போர் நடந்தது. யாரெயொர்கிமின் குமாரனான எல்க்கானான் பென்யமீன் குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் காத்தியனாகிய (காத் ஊரானாகிய) கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டி நெய்கிறவர்களின் படைமரம் போன்று பெரியதாக இருந்தது.

20 மற்றொரு போர் காத் என்னுமிடத்தில் நடந்தது. அங்கு மிகப்பெரிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்களும், ஒவ்வொரு பாதத்திலும் ஆறு விரல்களும் காணப்பட்டன. இவ்வாறு அவனுக்கு மொத்தம் 24 விரல்கள் இருந்தன. இவனும் ரஃபா (இராட்சதக்) குடும்பத்தைச் சார்ந்தவன். 21 அவன் இஸ்ரவேலை சவாலுக்கு அழைத்தான். இஸ்ரவேலரை பார்த்து நகைத்தான். ஆனால் யோனத்தான் அவனைக் கொன்றான். (யோனத்தான் தாவீதின் சகோதரனான சீமேயின் குமாரன்.)

22 இவ்வாறு மரித்த நான்கு பேரும் காத் ஊரைச் சார்ந்த ரஃபாவின் ஜனங்களாவார்கள். அவர்கள் தாவீதினாலும் அவனது ஆட்களாலும் கொல்லப்பட்டார்கள்.

கர்த்தருடைய துதிகளைப் பாடும் தாவீதின் பாட்டு

22 கர்த்தர் தாவீதை சவுல் மற்றும் பகைவர்களிடமிருந்து பாதுகாத்த போது, தாவீது கர்த்தரைப் புகழ்ந்து பாடிய பாட்டு.

கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம்.
    அவர் எனது தேவன்.
    நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை.
தேவன் எனது கேடயம்.
அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது.
    மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த்தர் ஆவார்.
கொடிய பகைவரிடமிருந்து
    அவர் என்னைக் காக்கிறார்.
அவர்கள் என்னைக் கேலிச் செய்தனர்.
    ஆனால் நான் கர்த்தரை உதவிக்கு அழைத்தேன்.
என் பகைவரிடமிருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்!

என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்!
மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன.
    மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின.
    மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது.
மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன்.
    ஆம், எனது தேவனை அழைத்தேன்.
தேவன் தமது ஆலயத்தில் இருந்து என் குரலைக் கேட்டார்.
    அவர் என் அழுகையைக் கேட்டார்.
பின்பு பூமி அசைந்து நடுங்கியது, பரலோகத்தின் அடித்தளம் ஆடியது.
    ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்.
தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது.
    எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது.
    எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன.
10 கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார்!
    அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார்!
11 அவர் பறந்துக்கொண்டிருந்தார், கேருபீன்கள் மீது பறந்து வந்தார்.
    காற்றின் மீது பயணம் வந்தார்.
12 கர்த்தர் கருமேகத்தைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரம்போல் அணிந்தார்.
    அவர் கட்டியான இடி மேகங்களில் தண்ணீரைச் சேகரித்தார்.
13 அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது!
14 வானிலிருந்து இடியைப்போல கர்த்தர் முழங்கினார்!
    உன்னதமான தேவன் தனது குரலை எல்லோரும் கேட்கும்படி செய்தார்.
15 கர்த்தர் தனது அம்புகளை எய்து
    பகைவர்களைப் பயந்தோடச் செய்தார்.
கர்த்தர் மின்னலை அனுப்பினார்
    ஜனங்கள் குழம்பிச் சிதறியோடினார்கள்.

16 கர்த்தாவே நீர் பலமாகப் பேசினீர்.
    பலமுள்ள காற்று உங்கள் வாயிலிருந்து அடித்தது.
தண்ணீர் விலகிற்று.
    எங்களால் கடலின் அடிப்பாகத்தைப் பார்க்கமுடிந்தது.
    பூமியின் அடித்தளத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது.

17 கர்த்தர் எனக்கும் உதவினார்!
    கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார்.
18 என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள்.
    அவர்கள் என்னை வெறுத்தார்கள்.
என் பகைவர்கள் என்னை வெல்லக் கூடியவர்கள்!
    எனவே தேவன் தாமே என்னை பாதுகாத்தார்.
19 நான் தொல்லையில் இருந்தேன்.
    என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்!
20 கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார்.
எனவே என்னைக் காத்தார்.
    பாதுகாப்பான இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
21 கர்த்தர் எனக்கான வெகுமதியை எனக்குத் தருவார்.
    ஏனெனில் நான் சரியானவற்றையே செய்தேன்.
நான் தவறிழைக்கவில்லை.
    எனவே அவர் எனக்கு நல்லதைச் செய்வார்.
22 ஏனென்றால் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்!
    எனது தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்யவில்லை.
23 நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன்,
    அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!
24 நான் பரிசுத்தமானவனாகவும் களங்கமற்றவனாகவும் அவர் முன்னிலையில் இருந்தேன்.
25 எனவே கர்த்தர் எனக்கு வெகுமதியைத் தருவார்!
    ஏனெனில் சரியானதையே நான் செய்தேன்!
அவர் எதிர்பார்ப்பதையே நான் செய்கிறேன்.
    நான் தவறு செய்யவில்லை.
எனவே அவர் எனக்கு நலமானதைச் செய்வார்.

26 ஒருவன் உண்மையிலேயே உம்மை விரும்பினால் அவனுக்கு உண்மையான அன்பை நீர் காட்டுவீர்.
    ஒருவன் உம்மிடம் உண்மையாக இருந்தால் நீர் அவனிடம் உண்மையாக இருப்பீர்.
27 கர்த்தாவே, யார் நல்லவராகவும் பரிசுத்தமானவராகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் நல்லவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்கிறீர்.
    உம்மிடம் மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் நடந்துகொள்வீர்.
28 கர்த்தாவே, சிறுமைப்பட்ட ஜனங்களுக்கு உதவுகிறீர்.
    மேட்டிமையானவர்களை நாணமுற வைக்கிறீர்.
29 கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு.
    கர்த்தர் என்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்கி ஒளி தருகிறார்!
30 கர்த்தாவே, உம்முடைய உதவியால் நான் வீரர்களுடன் பாயமுடியும்.
    தேவனுடைய உதவியால் பகைவர்களின் சுவர்களில் என்னால் ஏறமுடியும்.

31 தேவனுடைய ஆற்றல் முழுமையானது.
    கர்த்தருடைய சொல் சோதித்துப்பார்க்கப்பட்டது.
    அவரை நம்புகிறவர்களை அவர் பாதுகாக்கிறார்.
32 கர்த்தரைத் தவிர வேறு தேவன் கிடையாது.
    நமது தேவனைத் தவிர வேறு கன்மலை இல்லை.
33 தேவன் என் அரண்.
    அவர் தூயவர்களைச் சரியாக வாழவைக்கிறார்.
34 தேவன் நான் ஒரு மானைப்போல வேகமாக ஓடும்படி செய்கிறார்!
    உயரமான இடங்களில் நான் நிலையாக நிற்கும்படி செய்கிறார்.
35 தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார்.
    அதனால் என் கைகள் சக்தி வாய்ந்த அம்புகளைச் செலுத்த முடியும்.

36 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர்.
    எனக்கு வெற்றி அளித்தீர்.
என் பகைவரை நான் வெல்ல உதவினீர்.
37 என் கால்களையும் மூட்டுகளையும் பலப்படுத்தினீர்.
    எனவே நான் தடுமாறாமல் வேகமாக நடக்க முடியும்.
38 நான் பகைவர்களை விரட்ட வேண்டும்.
    அவர்களை இறுதியில் அழிக்கும்வரை!
அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை நான் திரும்பி வரமாட்டேன்.
39 என் பகைவர்களைத் தோற்கடித்தேன்.
    அவர்களை வென்றேன்!
அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.
    ஆம், என் பகைவர்கள் என் பாதத்தில் விழுந்தார்கள்.

40 தேவனே நீர் என்னை போரில் வலிமையுடையவன் ஆக்கினீர்.
    என் பகைவர்கள் என் முன்னே வந்து விழும்படி செய்தீர்.
41 என் பகைவர்களைத் தலைக்குனிய வைப்பதில் நீர் உதவினீர்,
    என் பகைவர்களின் கழுத்தை வெட்டும்படியாக அவர்கள் கழுத்தை என் முன் ஒப்புவித்தீர்!
42 என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள்.
    ஆனால் யாரும் அவர்கள் உதவிக்கு வரவில்லை.
அவர்கள் கர்த்தரிடம் கூட கேட்டார்கள்.
    ஆனால் அவர் அவர்களுக்குப் பதில் அளிக்கவில்லை.
43 என் பகைவர்களைத் துண்டு துண்டாக்கினேன்.
    அவர்கள் நிலத்தின் மீது புழுதியானார்கள்.
என் பகைவர்களை நான் சிதறடித்தேன்.
    அவர்கள் மீது தெருப்புழுதியென நினைத்து நடந்தேன்.

44 நீர் எனக்கு எதிராக போரிட்டவரிடமிருந்து என்னைக் காத்தீர்.
    நீர் அந்தத் தேசங்களை ஆள்பவனாக என்னை ஆக்கினீர்.
    எனக்குத் தெரியாதவர்கள் இப்போது எனக்குப் பணி செய்கிறார்கள்!
45 பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்!
    என்னுடைய கட்டளையைக் கேட்கும்போது விரைந்து பணிவிடை செய்கிறார்கள், அயல் நாட்டவர்கள் எனக்குப் பயப்படுகிறார்கள்!
46 அந்த அயல்நாட்டினர் பயத்தால் நடுங்குகிறார்கள்.
    பயந்துகொண்டே அவர்களின் மறைவிடங்களிலிருந்து வெளியில் வருகிறார்கள்.

47 கர்த்தர் உயிரோடிருக்கிறார்.
    எனது கன்மலையான அவரைத் துதிப்பேன்!
தேவன் உயர்ந்தவர்!
    என்னைப் பாதுகாக்கும் ஒரு கன்மலை அவர்.
48 என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர்.
    ஜனங்களை என் ஆட்சியின் கீழ் அவர் வைக்கிறார்.
49 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காத்தீர்!

என்னை எதிர்த்தவர்களைத் தோற்றோடச் செய்தீர்.
    கொடியவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தீர்!
50 கர்த்தாவே, ஆகையால் எல்லா தேசங்களும் அறியும்படி நாம் உம்மைத் துதிப்பேன்.
    எனவே உமது பேரில் நான் பாடல்கள் பாடுகிறேன்.

51 கர்த்தர், தன் ராஜா போரில் வெல்லும்படி செய்கிறார்!
    கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவுக்கு உண்மையான அன்பைக் காட்டுகிறார்.
    அவர் தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் எப்போதும் உண்மையாக இருப்பார்!

லூக்கா 18:24-43

24 அவன் வருத்தமடைந்ததை இயேசு கண்டபோது அவர், “செல்வந்தர் தேவனின் இராஜ்யத்தில் நுழைவது மிகவும் கடினமானது! 25 ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார்.

மீட்கப்படக்கூடியவர் யார்?

26 மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள்.

27 பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார்.

28 பேதுரு “ஆண்டவரே, எங்களுக்குரிய அனைத்தையும் விட்டு உங்களைப் பின்பற்றினோமே” என்றான்.

29 இயேசு, “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். வீடு, மனைவி, சகோதரர்கள், பெற்றோர் அல்லது குழந்தைகளை தேவனின் இராஜ்யத்துக்காகத் துறந்த ஒவ்வொருவனும் தான் விட்டவற்றைக் காட்டிலும் மிகுதியாகப் பெற்றுக்கொள்வான். 30 இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். அவன் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ்வான்” என்றார்.

இயேசு மரணத்தினின்று எழுவார்

(மத்தேயு 20:17-19; மாற்கு 10:32-34)

31 பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும். 32 அவரது மக்களே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை யூதரல்லாத மக்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவர் மீது உமிழ்வார்கள். அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவார்கள். 33 அவரைச் சாட்டையினால் அடித்து பின்னர் கொல்வார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிரோடு மீண்டும் எழுவார்” என்றார். 34 சீஷர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பொருள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது.

குருடனைக் குணமாக்குதல்

(மத்தேயு 20:29-34; மாற்கு 10:46-52)

35 எரிகோ பட்டணத்திற்கு அருகே, இயேசு வந்தார். பாதையருகே ஒரு குருடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் மக்களிடம் பணத்துக்காகப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். 36 மக்கள் பாதையைக் கடந்து வருவதைக் கேட்டதும் அம்மனிதன், “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” எனக் கேட்டான்.

37 மக்கள் அவனுக்கு, “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.

38 குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.

39 அக்கூட்டத்திற்கு முன்னால் நடந்து கொண்டிருந்த மக்கள் அக்குருடனை அதட்டினார்கள். அவனைப் பேசாதிருக்கும்படியாகக் கூறினார்கள். ஆனால் அக்குருடன் இன்னும் அதிகமாகச் சத்தமிட்டவாறே, “தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.

40 இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி, 41 “நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?” என்று கேட்டார்.

குருடன், “ஐயா, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.

42 இயேசு அவனை நோக்கி, “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.

43 அப்போது அம்மனிதனால் பார்க்க முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி கூறியவாறே இயேசுவைத் தொடர்ந்தான். இதைக் கண்ட எல்லா மக்களும் நடந்ததற்காக தேவனை வாழ்த்தினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center