Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 19-20

யோவாப் தாவீதைக் கடிந்துக் கொள்கின்றான்

19 ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் அரசர் அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள். அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “அரசன் தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று.

ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள். அரசன் முகத்தை மூடிக் கொண்டிருந்தான். “எனது மகன் அப்சலோமே, ஓ அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.

அரசனின் அரண்மனைக்குள் யோவாப் வந்தான். யோவாப் அரசனைப் பார்த்து, “உங்கள் ஒவ்வொரு அதிகாரிகளையும் நீங்கள் புண்படுத்துகிறீர்கள். பாருங்கள் அந்த அதிகாரிகள் இன்று உங்கள் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உங்கள் மகன்கள், மகள்கள், மனைவிகள், வேலைக்காரிகள் ஆகியோரின் உயிர்களையும் காப்பாற்றினார்கள். உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது! இப்போது எழுந்து போய் உங்கள் அதிகாரிகளிடம் பேசுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்! இப்போதே எழுந்து நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று கர்த்தர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நீங்கள் குழந்தையாயிருந்ததிலிருந்து அனுபவித்த எல்லா துன்பங்களையும்விட அது தீமையானதாக இருக்கும்” என்றான்.

அப்போது அரசன் நகரவாயிலுக்குச் சென்றான். அரசன் வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் அரசனைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.

தாவீது மீண்டும் அரசனாகுதல்

எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்த ஜனங்களும் விவாதிக்கக் தொடங்கினார்கள். அவர்கள், “பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவரிடமிருந்தும் தாவீது அரசர் நம்மைக் காப்பாற்றினார். தாவீது, அப்சலோமிடமிருந்து ஓடிப்போனார். 10 நம்மை ஆள்வதற்கு அப்சலோமைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் அவன் போரில் மரித்துப் போனான். நாம் தாவீதை மீண்டும் அரசனாக்க வேண்டும்” என்றார்கள்.

11 தாவீது அரசன் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் செய்தியனுப்பினர். தாவீது, “யூதாவின் தலைவர்களிடம் பேசுங்கள். அவர்களிடம் கூறுங்கள், ‘தாவீதை தன் வீட்டிற்கு அழைத்து வரும் கடைசி கோத்திரமாக நீங்கள் இருப்பதேன்? பாருங்கள், இஸ்ரவேலர் எல்லோரும் அரசனை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 12 நீங்கள் எனது சகோதரர்கள், நீங்கள் என் குடும்பம். அவ்வாறிருக்கையில் அரசனை வீட்டிற்குத் திரும்ப அழைப்பதற்கு நீங்கள் கடைசி கோத்திரமாக இருப்பதேன்?’ என்று சொல்லுங்கள். 13 அமாசாவிடம், ‘நீங்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியினர். யோவாபின் இடத்தில் உங்களைப் படை தலைவன் ஆக்காவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்’ என்று சொல்லுங்கள்” என்றான்.

14 தாவீது யூதாவின் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டான், அவர்கள் ஒரே மனிதனைப்போன்று அவன் கூறியதற்குச் சம்மதித்தனர். யூதா ஜனங்கள் அரசனுக்குச் செய்தியனுப்பினார்கள். அவர்கள், “நீங்களும் உங்கள் அதிகாரிகளும் திரும்பி வாருங்கள்” என்றனர்.

15 பின்பு தாவீது அரசன் யோர்தான் நதிக்கு வந்தான். யூதா ஜனங்கள் அரசனைக் காண கில்காலுக்கு வந்தனர். அரசனை யோர்தான் நதியைத் தாண்டி அழைத்துச் செல்வதற்காக அவர்கள் அங்கு வந்தனர்.

சீமேயி தாவீதிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான்

16 கேராவின் மகனாகிய சீமேயி பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் பகூரிமில் வாழ்ந்தான். தாவீது அரசனைச் சந்திப்பதற்குச் சீமேயி விரைந்தான். யூதாவின் ஜனங்களோடு சீமேயி வந்தான். 17 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த 1,000 ஆட்களும் சீமேயியோடு வந்தனர். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த சீபா என்னும் பணியாளும் வந்தான். சீபா தன் 15 மகன்களையும் 20 பணியாட்களையும் தன்னோடு அழைத்து வந்தான். தாவீது அரசனைச் சந்திப்பதற்கு இவர்கள் எல்லோரும் யோர்தான் நதிக்கு விரைந்தனர்.

18 அரசனின் குடும்பத்தை மீண்டும் யூதாவுக்கு அழைத்து வருவதில் உதவுவதற்காக ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அரசன் விரும்பியவாறே ஜனங்கள் செயல்பட்டனர். அரசன் நதியைக் கடந்துகொண்டிருக்கும்போது, கேராவின் மகனாகிய சீமேயி அவனைச் சந்திப்பதற்கு வந்தான். அரசனுக்கு முன் சீமேயி தரையில் விழுந்து வணங்கினான். 19 சீமேயி அரசனிடம், “என் ஆண்டவனே, நான் செய்த தவறுகளை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனது அரசனாகிய ஆண்டவனே, நீர் எருசலேமை விட்டுப் போனபோது நான் செய்த தீய காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள். 20 நான் பாவம் செய்தேன் என்பதை நீர் அறிவீர். யோசேப்பின் குடும்பத்திலிருந்து வந்து உங்களைச் சந்திக்கிற முதல் மனிதன் நான், எனது ஆண்டவனாகிய அரசனே” என்றான்.

21 ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்குத் தீமை நிகழவேண்டுமென்று வேண்டிக்கொண்டதால் நாம் சீமேயியைக் கொல்லவேண்டும்” என்றான்.

22 தாவீது, “செருயாவின் மகன்களே, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? இன்று நீங்கள் என் எதிராளி. ஆனால் இஸ்ரவேலில் ஒருவனும் இன்று கொல்லப்படமாட்டான். இஸ்ரவேலுக்கு நான் அரசன் என்பது இன்று எனக்குத் தெரியும்” என்றான். 23 பிறகு அரசன் சீமேயியை நோக்கி, “நீ மரிக்கமாட்டாய்” என்றான். அரசன் சீமேயியைக் கொல்லப் போவதில்லை என்று சீமேயிக்கு வாக்களித்தான். [a]

மேவிபோசேத் தாவீதைப் பார்க்கப் போகிறான்

24 தாவீது அரசனைக் காண சவுலின் பேரனாகிய மேவிபோசேத் வந்தான். மேவிபோசேத் அரசன் எருசலேமிலிருந்து போனதிலிருந்து அமைதியோடு திரும்பி வரும் வரைக்கும் அவனது கால்களைச் சுத்தம் பண்ணவில்லை. தாடியை சவரம் செய்து கொள்ளவில்லை. அவனது ஆடைகளை வெளுக்கவுமில்லை. 25 மேவிபோசேத் எருசலேமிலிருந்து அரசனைச் சந்திக்க வந்தான். அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “மேவிபோசேத், நான் எருசலேமிலிருந்து ஓடிப் போனபோது நீ ஏன் என்னோடு வரவில்லை?” என்று கேட்டான்.

26 மேவிபோசேத் பதிலாக, “எனது அரசனாகிய ஆண்டவனே, எனது வேலையாள் (சீபா) என்னை ஏமாற்றிவிட்டான். நான் சீபாவிடம், ‘நான் முடவன் எனவே கழுதையில் ஏற்றி வை. நான் கழுதையின் மேலேறி அரசனோடு போவேன்’ என்றேன். 27 ஆனால் எனது வேலையாள் என்னை ஏமாற்றிவிட்டான். என்னைக் குறித்து தீய செய்திகளை உங்களிடம் சொல்லி இருக்கிறான். தேவதூதனைப் போன்றவன் எனது அரசனாகிய ஆண்டவன் என்பது என் எண்ணம், உங்களுக்கு நல்லதென்று தோன்றுவதைச் செய்யுங்கள். 28 எனது பாட்டனாரின் குடும்பத்தார் எல்லோரையும் நீங்கள் கொன்றிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை. உங்கள் மேசையில் உண்கிறவர்களோடு என்னையும் வைத்தீர்கள். எனவே எதைக் குறித்தும் அரசனோடு முறையிட எனக்கு உரிமையில்லை” என்றான்.

29 அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “உனது கஷ்டங்களைக் குறித்து அதிகமாக எதுவும் சொல்லாதே. இதுவே நான் செய்த முடிவு: நீயும் சீபாவும் தேசத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றான்.

30 மேவிபோசேத் அரசனிடம், “நிலம் முழுவதையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும், ஏனெனில் எனது அரசனாகிய ஆண்டவன் சமாதானத்தோடு சொந்த வீட்டிற்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்! இதுவே எனக்குப் போதும்” என்றான்.

பர்சிலாவைத் தன்னோடு வரும்படியாக தாவீது கேட்கிறான்

31 கீலேயாத்தின் பர்சிலா ரோகிலிமிலிருந்து வந்தான். தாவீது அரசனோடு அவன் யோர்தான் நதிக்கு வந்தான். நதியைக் கடந்து அரசனை அழைத்துச் செல்வதற்காக அவன் அரசனோடு போனான். 32 பர்சிலா மிகவும் வயது முதிர்ந்தவன். அவனுக்கு 80 வயது. மக்னாயீமில் தாவீது தங்கியிருந்தபோது அவனுக்கு உணவும் பிற பொருட்களும் கொடுத்தான். அவன் செல்வந்தனாக இருந்தபடியால் அவனால் இதைச் செய்யமுடிந்தது. 33 தாவீது பர்சிலாவிடம், “என்னோடு நதியைக் கடந்துவா. என்னோடு எருசலேமில் நீ வாழ்ந்தால் நான் உன்னைப் பராமரிப்பேன்” என்றான்.

34 ஆனால் பர்சிலா அரசனிடம், “நான் எவ்வளவு வயது முதிர்ந்தவன் என்பது உனக்குத் தெரியுமா? நான் உன்னோடு எருசலேமுக்குப் போகமுடியும் என நீ நினைக்கிறாயா? 35 எனக்கு 80 வயது! எது நல்லது, எது கெட்டது என்று கூறுவதற்கும் இயலாத முதிர்ந்த வயது. நான் உண்ணும், பருகும் உணவுகளின் சுவையறிய இயலாதவன். பாடுகிற ஆண்களின், பெண்களின் சத்தத்தைக் கேட்கவும் இயலாத அளவிற்கு வயதில் முதிர்ந்தவன். நீ ஏன் என்னைப்பற்றிக் கவலைப்படுகிறாய்? 36 உன்னிடமிருந்து எனக்கு எந்த பரிசும் வேண்டாம். நான் உன்னோடு யோர்தான் நதியைத் தாண்டுவேன். 37 ஆனால் நான் திருப்பிப் போக அனுமதியுங்கள். அப்போது நான் எனது நகரத்தில் மரித்து எனது தந்தை, தாய் ஆகியோரின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவேன். கிம்காம் உங்களுக்குப் பணியாளாயிருப்பான். எனது அரசனாகிய ஆண்டவனே, அவன் உங்களோடு வரட்டும். உங்கள் விருப்பப்படியே அவனை நடத்தும்” என்றான்.

38 அரசன் பதிலாக, “கிம்காம் என்னோடு வருவான். உனக்காக நான் அவனிடம் இரக்கம் காட்டுவேன். நான் உனக்காக எதையும் செய்வேன்” என்றான்.

தாவீது வீட்டிற்குப் போகிறான்

39 அரசன் பர்சிலாவை முத்தமிட்டு வாழ்த்தினான். பர்சிலா வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசனும் அவனது ஜனங்கள் எல்லோரும் நதியைக் கடந்தனர்.

40 அரசன் யோர்தான் நதியைத் தாண்டி, கில்காலுக்குப் போனான். கிம்காம் அவனோடு சென்றான். யூதா ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலில் பாதிப் பகுதியினரும் தாவீதை நதியைத் தாண்டி அழைத்துச் சென்றனர்.

யூதா மக்களோடு இஸ்ரவேலர் வாதாடுகின்றனர்

41 இஸ்ரவேலர் எல்லோரும் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனைப் பார்த்து, “ஏன் எங்கள் சகோதரராகிய யூதா ஜனங்கள் உங்களைத் திருடிச் சென்று, இப்போது உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஆட்களோடு யோர்தான் ஆற்றைத் தாண்டி அழைத்து வந்திருக்கின்றனர்!” என்றார்கள்.

42 யூதாவின் ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலருக்குப் பதிலாக, “ஏனெனில் அரசன் எங்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதே அதன் காரணம். இந்த விஷயம் குறித்து நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? நாங்கள் ஒன்றும் அரசனின் செலவில் சாப்பிடவில்லை. அரசன் எங்களுக்கு எந்தப் பரிசும் தரவில்லை” என்றார்கள்.

43 இஸ்ரவேலர் பதிலாக, “தாவீதிடம் எங்களுக்குப் பத்துப் பங்குகள் உள்ளன. எனவே உங்களைக் காட்டிலும் தாவீதிடம் எங்களுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால் நீங்கள் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் தாம் அரசரை அழைத்து வருவதைக்குறித்து முதலில் எடுத்துரைத்தோம்” என்றார்கள்.

ஆனால் யூதா ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கடுமையாக நடந்துக்கொண்டனர். யூத ஜனங்களுடைய வார்த்தைள் இஸ்ரவேல் ஜனங்களுடைய வார்த்தைகளைக்காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது.

தாவீதுக்கு எதிராக இஸ்ரவேலரை சேபா வழிநடத்துகிறான்

20 பிக்கிரியின் மகனாகிய சேபா என்னும் மனிதன் அந்த இடத்தில் இருந்தான். சேபா எல்லோருக்கும் தொல்லை விளைவிக்கும் பயனற்ற மனிதன். சேபா பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். ஜனங்களைக் கூட்டுவதற்காக அவன் ஒரு எக்காளம் ஊதினான். பின்பு அவன்,

“நமக்கு தாவீதிடம் பங்கெதுவும் இல்லை.
    ஈசாயின் மகனிடத்தில் நமக்கு எந்தப் பாகமும் இல்லை.
இஸ்ரவேலே, நாம் நமது கூடாரங்களுக்குத் திரும்புவோம்” என்றான்.

எனவே இஸ்ரவேலர் எல்லோரும் தாவீதை விட்டு பிக்கிரியின் மகனாகிய சேபாவைப் பின்பற்றினார்கள். ஆனால் யூதா ஜனங்கள் யோர்தான் ஆற்றிலிருந்து எருசலேம்வரைக்கும் வருகிற வழியில் எல்லாம் அவர்களுடைய அரசனோடு தங்கியிருந்தனர்.

தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சென்றான். தாவீது தன் 10 மனைவியரை வீட்டைக் கவனித்துக்கொள்வதற்காக விட்டுச் சென்றிருந்தான். தாவீது அவர்களை ஒரு தனித்த வீட்டில் வைத்தான்.

அந்த வீட்டைச் சுற்றிலும் காவலாளரை நியமித்தான். அவர்கள் மரிக்கும்வரைக்கும் அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். தாவீது அப்பெண்களைப் பராமரித்து அவர்களுக்கு உணவளித்தான். ஆனால் அவர்களோடு பாலின உறவுக்கொள்ளவில்லை. அவர்கள் மரிக்கும்வரைக்கும் விதவைகளைப்போல் வாழ்ந்தார்கள்.

அரசன் அமாசாவை நோக்கி, “இன்னும் மூன்று நாட்களுக்குள் யூதா ஜனங்கள் என்னை வந்து சந்திக்க வேண்டுமென அவர்களுக்குக் கூறு, நீயும் இங்கிருக்க வேண்டும்” என்றான்.

உடனே யூதா ஜனங்களை அழைத்து வருவதற்காக அமாசா சென்றான். ஆனால் அரசன் கொடுத்த கால அவகாசத்தைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொண்டான்.

சேபாவைக் கொல்லும்படி அபிசாயிடம் தாவீது கூறுகிறான்

தாவீது அபிசாயிடம், “பிக்கிரியின் மகனாகிய சேபா அப்சலோமைக் காட்டிலும் அதிகம் ஆபத்தானவன். எனவே என் அதிகாரிகளை அழைத்துச் சென்று சேபாவைத் துரத்து, மதிலுள்ள நகரங்களுக்குள் அவன் நுழையும்முன் விரைந்து செல். பாதுகாப்பான நகரங்களுக்குள் சேபா சென்றுவிட்டால் பிறகு அவனைப் பிடிக்க முடியாது” என்றான்.

எனவே யோவாப் பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்துவதற்காக எருசலேமை விட்டுச் சென்றான். கிரேத்தியர் பிலேத்தியர் மற்ற வீரர்கள் ஆகியோரோடுகூட யோவாப் தன் ஆட்களையும் அழைத்துக் கொண்டான்.

யோவாப் அமாசாவைக் கொல்கிறான்

கிபியோனிலுள்ள பெரும்பாறை அருகே யோவாபும் அவனது படையும் வந்தபோது, அவர்களை சந்திப்பதற்கு அமாசா அங்கு வந்தான். யோவாப் சீருடை அணிந்திருந்தான். யோவாப் கட்டியிருந்த கச்சைக்குள் உறையில் தன் வாளை வைத்திருந்தான். யோவாப் அமாசாவை சந்திக்க நடந்து சென்றபோது யோவாபின் வாள் உறையிலிருந்து வெளியே விழுந்தது. யோவாப் வாளை எடுத்துக் கையில் ஏந்தியிருந்தான். யோவாப் அமாசாவை நோக்கி, “சகோதரனே, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.

பின்பு யோவாப் தனது வலது கையை நீட்டி அமாசாவின் தாடியைப் பிடித்து முத்தமிடுவதுபோல் இழுத்தான். 10 யோவாபின் இடது கையிலிருந்த வாளை அமாசா கவனிக்கவில்லை. ஆனால் உடனே யோவாப் தன் வாளால் அமாசாவை வயிற்றில் குத்தினான். அமாசாவின் குடல் நிலத்தில் சரிந்தது. யோவாப் மீண்டும் அமாசாவைக் குத்த வேண்டியிருக்கவில்லை. அவன் மரித்துப் போயிருந்தான்.

தாவீதின் ஆட்கள் சேபாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்

பின்பு யோவாபும், அவனது சசோதரன் அபிசாயியும் பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தத் தொடங்கினர். 11 யோவாபின் இளம் வீரர்களில் ஒருவன் அமாசாவின் உடல் அருகே நின்றான். இந்த இளம் வீரன், “யோவாபையும் தாவீதையும் ஆதரிக்கின்ற வீரர்களே, நாம் யோவாபைப் பின் தொடர்வோம்” என்றான். 12 பாதையின் நடுவே அமாசாவின் உடல் அவனது குருதியினூடே கிடந்தது. எல்லா ஜனங்களும் அதைப் பார்ப்பதற்கு நின்றதை அந்த இளம் வீரன் கவனித்தான். எனவே அவன் அந்த உடலைப் பாதையிலிருந்து வயலுக்குள் புரட்டித் தள்ளினான். பின் உடலை ஒரு துணியால் மூடினான். 13 அமாசாவின் உடல் பாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, ஜனங்கள் அதைத் தாண்டிச்சென்று யோவாபைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் யோவாபோடு சேர்ந்து பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தினார்கள்.

ஆபேல் பெத்மாக்காவிற்கு சேபா தப்பிக்கிறான்

14 ஆபேல் பெத்மாக்காவை அடையும்வரை வழியில் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களையும் பிக்கிரியின் மகனாகிய சேபா கடந்து சென்றான். பேரீமின் ஜனங்களும் சேபாவைப் பின்தொடர்ந்து சென்றனர்.

15 யோவாபும் அவனது ஆட்களும் ஆபேல் பெத்மாக்காவிற்கு வந்தனர். யோவாபின் படை நகரத்தைச் சூழ்ந்தது. நகரத்து மதிலின் மேல் அவர்கள் புழுதி வீசினார்கள். அவர்கள் மதிலில் ஏறுவதற்கு வசதியாக இதைச் செய்தார்கள். யோவாபின் மனிதர் மதில் கீழே விழும்படியாக மதிலின் கற்களை உடைக்க ஆரம்பித்தார்கள்.

16 ஆனால் அந்நகரத்தில் ஒரு புத்திசாலியானப் பெண் இருந்தாள். அவள், “நான் சொல்வதைக் கேளுங்கள்! யோவாபை இங்கு வரும்படி கூறுங்கள். நான் அவனோடு பேசவேண்டும்” என்றாள்.

17 யோவாப் அப்பெண்ணை சந்தித்துப் பேசுவதற்குச் சென்றான். அப்பெண் அவனிடம், “நீர் யோவாபா?” என்று கேட்டாள்.

யோவாப், “ஆம் நானே” என்று பதில் கூறினான்.

அப்போது அப்பெண்மணி, “நான் கூறுவதைக் கேள்” என்றாள்.

யோவாப், “நான் கேட்கிறேன்” என்றான்.

18 அப்போது அப்பெண்மணி, “முன்பு ஜனங்கள் ‘ஆபேலில் யாரேனும் உதவி வேண்டினால் தேவையானது கிடைக்கும்’ என்று சொல்லிக்கொள்வார்கள். 19 நான் இவ்வூரின் சமாதானமான, உண்மையான ஜனங்களுள் ஒருத்தி. இஸ்ரவேலின் ஒரு முக்கிய நகரத்தை நீ அழிக்கப்போகிறாய். கர்த்தருக்குச் சொந்தமான ஒன்றை நீ ஏன் அழிக்க விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.

20 யோவாப் பதிலாக, “நான் எதையும் அழிக்க விரும்பவில்லை! உங்கள் ஊரை அழிக்க, நான் விரும்பமாட்டேன். 21 ஆனால் மலைநாடாகிய எப்பிராயீமைச் சார்ந்த ஒரு மனிதன் உங்கள் நகரில் இருக்கிறான். அவன் பிக்கிரியின் மகன் சேபா. அவன் தாவீது அரசனை எதிர்க்கிறான். அவனை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் நகரை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றான்.

அப்பெண் யோவாபிடம், “சரி அவனது தலை மதிலின் மேலாக உங்களிடம் வீசப்படும்” என்றாள்.

22 அந்நகரின் ஜனங்களிடம் அப்பெண் மிகவும் புத்திசாதுரியத்தோடு பேசினாள். பிக்கிரியின் மகனாகிய சேபாவின் தலையை ஜனங்கள் வெட்டினார்கள். சேபாவின் தலையை மதிலுக்கு மேலாக யோவாபுக்கு அந்த ஜனங்கள் வீசினார்கள்.

ஆகையால் யோவாப் எக்காளம் ஊதினான். படை நகரைவிட்டு நீங்கிச் சென்றது. ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். யோவாப் எருசலேமில் அரசனிடம் சென்றான்.

தாவீதின் ஆளுகையின் கீழ் மக்கள்

23 இஸ்ரவேல் படைக்கு யோவாப் தலைவனாக இருந்தான். கிரேத்தியரையும் பிலேத்தியரையும் யோய்தாவின் மகன் பெனாயா வழி நடத்தினான். 24 அதோனிராம் கடும் உழைப்பாளிகளுக்குத் தலைவனானான். அகிலூதின் மகன் யோசபாத் வரலாற்றாசிரியனாக இருந்தான். 25 சேவா செயலாளரானான். சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களாக இருந்தார்கள். 26 யயீரியனாகிய ஈரா தாவீதுக்குப் பிரதானியாக [b] இருந்தான்.

லூக்கா 18:1-23

பலன் தரும் தேவன்

18 சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்: “ஓர் ஊரில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனைக் குறித்துக் கவலைப்படவில்லை. மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவன் அக்கறையற்றவனாக இருந்தான். அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள். அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான்.

“தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள். தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார்.

தேவனுக்கு ஏற்றவன் யார்?

தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். 10 “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். 11 வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 12 நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான்.

13 “வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.”

குழந்தைகளும்-இயேசுவும்(A)

15 இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள். 16 ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது. 17 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார்.

செல்வந்தனும் இயேசுவும்(B)

18 ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், “நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

19 இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 20 ஆனால் நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வேன். உனக்கு தேவனுடைய பிரமாணங்கள் தெரியும். ‘நீ தீய ஒழுக்கமாகிய பாவத்தைச் செய்யக்கூடாது. நீ ஒருவரையும் கொலை செய்யக்கூடாது. நீ எந்தப் பொருளையும் திருடக் கூடாது. பிறரைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. உனது தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும்’” [a] என்றார்.

21 ஆனால் அந்த அதிகாரி, “சிறுவனாக இருந்தபோதே இக்கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன்” என்றான்.

22 இதைக் கேட்டதும் இயேசு அதிகாரியை நோக்கி, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. உன் பொருட்கள் எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடு. பரலோகத்தில் உனக்கு பலன் கிடைக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். 23 ஆனால் அம்மனிதன் இதைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தான். அவன் பெரிய பணக்காரன், எல்லாப் பணத்தையும் தானே வைத்துக்கொள்ள விரும்பினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center