Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 19-21

சிமியோனின் நிலம்

19 பின்பு யோசுவா, சிமியோன் கோத்திரத்தை சார்ந்த எல்லா குடும்பங்களுக்கும் அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுத்தான். யூதாவிற்குரிய இடத்திற்குள் சிமியோனின் நிலம் இருந்தது. இதுவே அவர்கள் பெற்ற பகுதியாகும்: பெயர் செபா (சேபா எனவும் அழைக்கப்பட்டது.) மொலாதா, ஆசார் சூகால், பாலா, ஆத்சேம். எல்தோலாத், பெத்தூல், ஒர்மா, சிக்லாக், பெத்மார் காபோத், ஆத்சார்சூசா, பெத்லெபாவோத், சருகேன் ஆகியவை ஆகும். மொத்தம் 13 ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் அமைந்தன.

அவர்கள் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் ஆகிய ஊர்களையும் பெற்றனர். நான்கு ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் கிடைத்தன. பாலாத் பெயேர் (நெகேவின் ராமா) வரைக்குமுள்ள நகரங்களைச் சுற்றிலுமிருந்த வயல்கள் கிடைத்தன. அதுவே சிமியோன் கோத்திரத்தினருக்குக் கிடைத்த நிலமாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேசத்தில் பாகம் கிடைத்தது. யூதாவிற்குக் கிடைத்த இடத்திற்குள் சிமியோனின் நிலம் இருந்தது. யூதா ஜனங்களுக்கு அவர்களின் தேவைக்கதிகமான நிலம் இருந்தது. எனவே அவர்கள் நிலத்தில் ஒரு பகுதி சிமியோன் ஜனங்களுக்குக் கிடைத்தது.

செபுலோனின் நிலம்

10 தங்கள் நிலத்தைப் பெற்ற அடுத்த கோத்திரம், செபுலோன் ஆகும். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலங்களைச் செபுலோனின் குடும்பங்கள் பெற்றன. செபுலோனின் எல்லை சாரீத்வரை நீண்டது. 11 அது மாராலாவின் மேற்கே சென்று தாபசேத்தைத் தொட்டது. யெக்கினேயாமின் கரையோரமாக எல்லை நீண்டது. 12 பின் எல்லை கிழக்கே திரும்பியது. சாரீதிலிருந்து கிஸ்லோத்தாபோர் வரை சென்றது. பிறகு எல்லை தாபாராத்திற்கும் யப்பியாவிற்கும் சென்றது. 13 கித்தாஏபேர், இத்தா காத்சீன் ஆகியவற்றின் கிழக்கு வரைக்கும் எல்லை நீண்டு பின் ரிம்மோனில் முடிவுற்றது. பிறகு எல்லை திரும்பி நியாவிற்குச் சென்றது. 14 நியாவில் எல்லை திரும்பி அன்னத்தோனின் வடக்கே சென்று இப்தா ஏல் பள்ளத்தாக்கு வரை தொடர்ந்தது. 15 இவ்வெல்லையின் உள்ளே கத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் நகரங்கள் இவ்வெல்லைக்குள் இருந்தன. மொத்தம் 12 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களுமிருந்தன.

16 செபுலோனுக்குக் கொடுக்கப்பட்ட ஊர்களும் வயல்களும் இவையே. செபுலோனின் குடும்பங்கள் நிலத்தில் பங்கைப் பெற்றன.

இசக்காரின் நிலம்

17 இசக்காரின் கோத்திரத்திற்கு நிலத்தின் நான்காவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் பங்கைப் பெற்றன. 18 அந்தக் கோத்திரத்தினருக்குக் கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம், 19 அப்பிராயீம், சீகோன், அனாகராத், 20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ், 21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் ஆகியவை அடங்கிய பகுதி ஆகும்.

22 அவர்கள் நிலத்தின் எல்லை தாபோர், சகசீமா, பெத்ஷிமேசு ஆகியவற்றைத் தொட்டது. யோர்தான் நதியில் எல்லை நின்றது. மொத்தம் 16 ஊர்களும் அவற்றைச் சுற்றியிருந்த வயல்களும் இருந்தன. 23 இந்த நகரங்களும் ஊர்களும் இசக்கார் கோத்திரம் பெற்ற நிலத்தில் இருந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது.

ஆசேரின் நிலம்

24 ஆசேர் கோத்திரத்தினருக்கு நிலத்தின் ஐந்தாவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தின் ஒரு பங்கைப் பெற்றது. 25 அந்தக் கோத்திரத்தினருக்கு கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், 26 அலம்மேலெக், ஆமாத், மீஷயால் ஆகியவை.

கர்மேல் மலை, சிகோர்லிப்னாத் வரைக்கும் மேற்கெல்லை தொடர்ந்தது. 27 பிறகு எல்லை கிழக்கே திரும்பியது. பெத்தாகோனுக்கு எல்லை சென்றது. செபுலோனையும், இப்தாவேல் பள்ளத்தாக்கையும் அவ்வெல்லை தொட்டது. பின்னர் மேற்கே பெத்தேமோக்கிற்கும், நேகியேலுக்கும் அவ்வெல்லை சென்றது. கபூலின் வடக்குப் பகுதியை எல்லை தாண்டியது. 28 பின் எல்லை எபிரோன் என்ற அப்தோன் ரேகோப், அம்மோன், கானா வரைக்கும் சென்றது பெரிய சீதோன் பகுதி வரைக்கும் எல்லை நீண்டது. 29 அந்த எல்லை ராமாவிற்குத் தெற்கே போய், தீரு என்னும் வலிய நகருக்கு நேராக சென்றது. பின் அது திரும்பி ஓசாவை அடைந்து, 30 உம்மா, ஆஃபெக், ரேகோப், அத்சீப் அருகில் கடலில் முடிவுற்றது.

மொத்தத்தில் 22 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்நிலங்களும் இருந்தன. 31 இந்நகரங்களும் வயல்களும் ஆசேரின் கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்த கோத்திரத்தின் குடும்பங்களில் உள்ள எல்லாருக்கும் அந்த நிலத்தில் பங்கு கிடைத்தது.

நப்தலியின் நிலம்

32 ஆறாவது பகுதியின் நிலம் நப்தலி கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதில் பங்கு கிடைத்தது. 33 சானானீமிற்கு அருகிலுள்ள பெரிய மரத்தினருகே அவர்கள் நிலத்தின் எல்லை ஆரம்பித்தது. இது ஏலேபிற்கு அருகே இருந்தது. ஆதமி நெகேபிற்கும், யாப்னீயேலுக்கும் ஊடாக எல்லை தொடர்ந்து லக்கூம் வழியாக யோர்தான் நதியில் முடிவுற்றது. 34 அஸ்னோத் தாபோர் வழியாக எல்லை மேற்கே சென்றது. உக்கோக்கில் எல்லை நின்றது. தெற்கெல்லை செபுலோனையும், மேற்கெல்லை ஆசேரையும் தொட்டது. எல்லை யோர்தான், நதிக்கு கிழக்கே யூதாவிற்குச் சென்றது. 35 இவ்வெல்லைகளின் உள்ளே பலமுள்ள நகரங்கள் சில இருந்தன. அந்நகரங்கள் சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத், 36 ஆதமா, ராமா, ஆத்சோர், 37 கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர், 38 ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் ஆகியவை ஆகும். மொத்தம் 19 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களும் இருந்தன.

39 இந்த நகரங்களும் வயல்களும் நப்தலி கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்தக் கோத்திரத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தில் பங்கைப் பெற்றன.

தாணின் நிலம்

40 பின்பு தேசத்தின் ஏழாவது பகுதி தாண் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது. 41 கீழ்க்கண்ட பகுதிகளே அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலமாகும் சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ், 42 சாலாபீன், ஆயலோன், யெத்லா, 43 ஏலோன், திம்னாதா, எக்ரோன், 44 எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத், 45 யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன், 46 மேயார்கோன், ராக்கோன், யாப்போவிற்கு அருகிலுள்ள பகுதிகள் ஆகியவை ஆகும்.

47 தாணின் ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைப் பெறுவதில் தொல்லை நேர்ந்தது. பலமான பகைவர்கள் அங்கே இருந்தனர். தாண் ஜனங்களால் அவர்களை எளிதில் வெல்ல முடியவில்லை. லேசேமின் ஜனங்களுக்கு எதிராக தாண் ஜனங்கள் போர் செய்தனர். லேசேமைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த ஜனங்களைக் கொன்றனர். லேசேம் என்னும் ஊரில் தாண் ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்கள் கோத்திரத்தின் தந்தையாகிய தாண் என்ற பெயரை அதற்குக் கொடுத்தனர். 48 அந்த எல்லா நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் தாண் கோத்திரத்தினருக்கு உரியனவாயின. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்குரிய பங்கு கிடைத்தது.

யோசுவாவின் நிலம்

49 தலைவர்கள் தேசத்தைப் பங்கிட்டு வெவ்வேறு கோத்திரங்களுக்கு கொடுத்து முடித்தனர். அதன் பிறகு, நூனின் குமாரனாகிய யோசுவாவிற்கும் கொஞ்சம் நிலத்தை பங்காகக் கொடுப்பதென இஸ்ரவேல் ஜனங்கள் முடிவெடுத்தனர். அது அவனுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் ஆகும்.

50 கர்த்தர் கட்டளையிட்டபடி எப்பிராயீம் மலை நாட்டிலுள்ள திம்னாத் சேரா நகரத்தை அவர்கள் யோசுவாவிற்குக் கொடுத்தனர். அவ்வூரையே தனக்கு வேண்டுமென யோசுவா கேட்டான். யோசுவா அவ்வூரைப் பலமாகக் கட்டி அங்கு வாழ்ந்தான்.

51 இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களுக்கும் இந்த தேசப் பகுதிகள் முழுவதும் பிரித்து கொடுக்கப்பட்டன. நிலத்தைப் பங்கிட ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா, ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீலோவில் ஒருமித்துக் கூடினார்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் கர்த்தருக்கு முன்னர் அவர்கள் சந்தித்து, தேசத்தைப் பங்கிட்டு முடித்தனர்.

அடைக்கல நகரங்கள்

20 கர்த்தர் யோசுவாவிடம், “நீ இஸ்ரவேலருக்குக் கூறவேண்டியதாவது, உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கும்படி மோசேக்குச் சொன்னேன். பாதுகாப்பிற்கென்று சில குறிப்பிட்ட நகரங்களைத் தேர்ந்தெடுக்குமாறு அவன் உன்னிடம் கூறினான். யாரேனும் ஒருவன் மற்றொருவனைக் கொன்றால், அக்கொலையானது வேண்டுமென்றே செய்த காரியமாக இல்லாமல் தற்செயலாக நிகழ்ந்ததாக இருக்கும் பட்சத்தில் அவன் அடைக்கல நகருக்குள் சென்று ஒளிந்துக்கொள்ளலாம்.

“அவன் செய்யவேண்டிய காரியங்கள் என்ன வெனில்: அவன் ஓடி அந்நகரங்கள் ஒன்றில் ஒளிந்துக்கொள்ளும்போது, அவன் நகரத்தின் நுழைவாயிலருகே நின்று தலைவர்களை நோக்கி நிகழ்ந்ததைச் சொல்ல வேண்டும். பின் தலைவர்கள் நகரத்தினுள்ளே நுழைய அவனுக்கு அனுமதியும், அவர்களோடு சேர்ந்து வாழ அவனுக்கோர் இடமும் தரலாம். அவனைத் துரத்திய மனிதன் அந்நகரை வந்தடையும் பட்சத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவனை அவர்கள் ஒப்படைக்கக் கூடாது. அந்நகரத்தின் தலைவர்கள் அக்கொலை வேண்டுமென்றே நிகழ்ந்த ஒன்றல்ல என்பதால் அவனைக் காப்பாற்ற வேண்டும். அது ஒரு விபத்து. அவன் கோபம் கொண்டு திட்டமிட்டு அக்கொலையைச் செய்யவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்தது. அந்நகரத்து நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்வரை அவன் அந்நகரில் தங்க வேண்டும். தலைமை ஆசாரியன் இறக்கும்மட்டும் அவன் அந்நகரில் இருக்க வேண்டும். பின்னர் அவன் தனது வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்றார்.

எனவே இஸ்ரவேலர், “அடைக்கல நகரங்கள்” என அழைக்கும்பொருட்டு சில நகரங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டனர். அந்நகரங்கள்: நப்தலியின் மலைநாட்டிலுள்ள கலிலேயாவின் கேதேஸ், எப்பிராயீம் மலைநாட்டில் சீகேம், யூதாவின் மலைநாட்டில் கீரியாத்அர்பா (எபிரோன்). ரூபனின் தேசத்தில், வனாந்திரத்தில் எரிகோவிற்கு அருகே யோர்தான் நதியின் கிழக்கிலுள்ள பேசேர், காத்தின் தேசத்தில் கீலேயாத்திலுள்ள ராமோத், மனாசே தேசத்தில் பாசானிலுள்ள கோலான் ஆகியனவாகும்.

யூதனோ, அல்லது அவர்களோடு வாழ்ந்த அந்நியனோ யாரையாவது அசம்பாவிதமாக கொல்ல நேர்ந்தால் இந்நகரங்களில் ஒன்றிற்கு பாதுகாப்பிற்காக ஓடிவிட அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனைத் துரத்தும் எவரும் அவனைக் கொல்லக் கூடாது. அந்நகரின் நீதிமன்றம் அவனுக்கு நீதி வழங்கும்.

ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் உரிய பட்டணங்கள்

21 லேவி கோத்திரத்தின் குடும்பத் தலைவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாரையும், நூனின் மகனாகிய யோசுவாவையும், இஸ்ரவேலின் பிற கோத்திரங்களின் தலைவர்களையும் கண்டு பேசுவதற்குச் சென்றார்கள். கானான் தேசத்திலுள்ள சீலோ என்னும் நகரில் இது நிகழ்ந்தது. லேவியின் தலைவர்கள் அவர்களை நோக்கி, “கர்த்தர் மோசேக்கு ஓர் கட்டளையிட்டார். நாங்கள் வாழ்வதற்கு நகரங்களையும், எங்கள் மிருகங்கள் மேய்வதற்குத் தேவையான வயல்நிலங்களையும் தருமாறு கட்டளையிட்டார்” என்றார்கள். எனவே இஸ்ரவேலர் கர்த்தருடைய இக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். லேவிய ஜனங்களுக்கு இந்த நகரங்களையும், அவர்களின் மிருகங்களுக்காக அவற்றைச் சார்ந்த நிலங்களையும் வழங்கினார்கள்.

கோகாத்தியரின் குடும்பத்தினர் வேவியின் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியனான ஆரோனின் சந்ததியார். யூதா, சிமியோன் மற்றும் பென்யமீன் ஆகியோருக்குரிய பகுதிகளிலிருந்து 13 ஊர்கள் கோகாத் குடும்பத்தின் ஒரு பகுதியினருக்குக் கொடுக்கப்பட்டன.

எப்பிராயீம், தாண், ஆகிய கோத்திரத்தினருக்கும் மனாசே கோத்திரத்தின் பாதி பேர்க்கும் சொந்தமான ஊர்களிலிருந்து பத்து நகரங்கள் கோகாத்தியரின் பிற குடும்பங்களுக்குத் தரப்பட்டன.

கெர்சோனின் குடும்பத்தினருக்கு 13 நகரங்கள் அளிக்கப்பட்டன. இசக்கார், ஆசேர், நப்தலி, மற்றும் பாசானிலிருந்த மனாசேயின் பாதிக்குடும்பத்தினர் ஆகியோருக்குச் சொந்தமான பகுதிகளில் இந்த நகரங்கள் இருந்தன.

மெராரி குடும்பத்தாருக்குப் பன்னிரண்டு ஊர்கள் வழங்கப்பட்டன. ரூபன், காத், செபுலோன் ஆகியோருக்குச் சொந்தமான தேசத்தில் இவை இருந்தன.

இவ்வாறு இஸ்ரவேலர் லேவியருக்கு இந்த நகரங்களையும், அவற்றைச் சுற்றியிருந்த வயல் நிலங்களையும் கொடுத்தனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டதற்குக் கீழ்ப்படும்படியாக அவர்கள் இதைச் செய்தனர்.

யூதாவிற்கும் சிமியோனுக்கும் சொந்தமான பகுதிகளிலிருந்த நகரங்களின் பெயர்கள் இவை: 10 லேவியரில் கோகாத் குடும்பத்தாருக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் கொடுக்கப்பட்டன. 11 கீரியாத்அர்பாவை அவர்களுக்குக் கொடுத்தனர் (இது எபிரோன். அர்பா என்னும் மனிதனின் பெயரால் அழைக்கப்பட்டது. அர்பா ஆனாக்கின் தந்தை.) அவர்களின் மிருகங்களுக்காக நகரங்களின் அருகே சில நிலங்களையும் கொடுத்தார்கள். 12 ஆனால் கீரியாத்அர்பா நகரைச் சுற்றிலுமிருந்த நகரங்களும் நிலங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குச் சொந்தமாயிருந்தது. 13 எனவே எபிரோன் நகரை ஆரோனின் சந்ததிக்குக் கொடுத்தார்கள். (எபிரோன் பாதுகாப்பான நகரமாயிருந்தது.) லிப்னா, 14 யத்தீர், எஸ்தெமொவா, 15 ஓலோன், தெபீர், 16 ஆயின், யுத்தா, பெத்ஷிமேஸ் ஆகிய நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அளித்தனர். இந்த நகரங்களின் அருகேயிருந்த நிலத்தையும் அவர்களின் கால்நடைகளுக்காக அளித்தனர். இந்த இரண்டு கூட்டத்தாருக்கும் ஒன்பது நகரங்களைக் கொடுத்தார்கள்.

17 பென்யமீன் கோத்திரத்திற்கு சொந்தமான நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அவர்கள் கொடுத்தார்கள். அந்நகரங்கள் கிபியோன், கேபா, 18 ஆனாதோத், அல்மோன் ஆகியனவாகும். அவர்களுக்கு இந்த நான்கு நகரங்களையும், மிருகங்களுக்கென அவற்றினருகேயுள்ள நிலங்களையும் கொடுத்தார்கள். 19 மொத்தத்தில், ஆசாரியர்களுக்கு 13 ஊர்களைக் கொடுத்தார்கள். (எல்லா ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார்.) ஒவ்வொரு நகருக்கருகேயும் நிலங்களை மிருகங்களுக்காக ஒதுக்கினர்.

20 கோகாத்திய குடும்பங்களில் மீதியானவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த பகுதியிலுள்ள நகரங்கள் தரப்பட்டன. அவர்கள் இந்த நகரங்களைப் பெற்றனர்: 21 எப்பிராயீம் மலை நாட்டின் சீகேம் நகரம். (சீகேம் அடைக்கல நகரம்.) கேசேர், 22 கிப்சாயீம், பெத்தொரோன் ஆகியவற்றையும் பெற்றார்கள். மொத்தத்தில், எப்பிராயீம் ஜனங்கள் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவ்வூர்களைச் சுற்றியிருந்த நிலங்களையும் வழங்கினர்.

23 தாண் கோத்திரத்தினர்களுக்கு எல்தெக்கே, கிபெத்தோன், 24 ஆயலோன், காத் ரிம்மோன் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தம், நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்த நகரங்களைச் சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தனர்.

25 மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் தானாகையும், காத் ரிம்மோனையும் கொடுத்தனர். அவர்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்நகரங்களை சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தார்கள்.

26 கோகாத்திய குடும்பத்தின் மீதியான ஜனங்கள் பத்து நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் பெற்றார்கள்.

27 கெர்சோன் குடும்பமும் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தது. அவர்கள் இந்த நகரங்களைப் பெற்றனர்:

மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் பாசானிலுள்ள கோலானைக் கொடுத்தனர். (கோலான் அடைக்கல நகரம்.) மனாசே ஜனங்கள் பெயேஸ்திராவையும் கொடுத்தார்கள். மொத்தத்தில், மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்த நிலங்களையும் கொடுத்தனர்.

28 இசக்கார் கோத்திரத்தினர் கீசோன், தாபராத், 29 யர்மூத், என்கன்னீம் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தம் நான்கு நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சார்ந்த நிலங்களையும் இசக்கார் ஜனங்கள் கொடுத்தார்கள்.

30 ஆசேர் கோத்திரத்தினர் மிஷயால், அப்தோன், 31 எல்காத், ரேகோப் ஆகியவற்றைக் கொடுத்தார்கள். ஆசேர் ஜனங்கள் மொத்தம் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்த நகரங்களையும் கொடுத்தனர்.

32 நப்தலி கோத்திரத்தினர் கலிலேயாவிலுள்ள கேதேசைக் கொடுத்தார்கள். (கேதேஸ் அடைக்கல நகரம்.) நப்தலி ஜனங்கள் அம்மோத்தோரையும் கர்தானையும் கொடுத்தனர். நப்தலி ஜனங்கள் மூன்று நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமிருந்த நிலங்களையும் கொடுத்தனர்.

33 மொத்தத்தில், கெர்சோன் குடும்பத்தார் 13 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமிருந்த நிலங்களையும் பெற்றனர்.

34 மற்றொரு லேவியர் குழு மெராரி குடும்பம் ஆகும். மெராரி குடும்பம் இந்த நகரங்களைப் பெற்றது: செபுலோன் கோத்திரத்தினர் யோக்னியாம், கர்தா, 35 திம்னா, நகலால் ஆகியவற்றைக் கொடுத்தனர். செபுலோன் ஜனங்கள் மொத்தம் நான்கு நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் கொடுத்தனர். 36 ரூபன் கோத்திரத்தினர் அவர்களுக்குப் பேசேர், யாகசா, 37 கேதெமோத், மெபகாத் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தத்தில், ரூபன் ஜனங்கள் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் கொடுத்தனர். 38 காத் கோத்திரத்தினர் அவர்களுக்குக் கீலேயாத்திலுள்ள ராமோத்தைக் கொடுத்தனர். (ராமோத் அடைக்கல நகரம்.) மக்னாயீம், எஸ்போன், யாசேர் ஆகியவற்றையும் கொடுத்தனர். 39 மொத்தம் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்நகரங்களைச் சார்ந்த நிலங்களையும் காத் ஜனங்கள் கொடுத்தனர்.

40 மொத்தத்தில், லேவியரின் கடைசி குடும்பத்தினர் ஆகிய, மெராரி குடும்பத்தினர், பன்னிரண்டு நகரங்களைப் பெற்றனர்.

41 எனவே லேவியர்கள் மொத்தம் 48 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமுள்ள நிலங்களையும் பெற்றனர். இந்த நகரங்கள் அனைத்தும் பிற கோத்திரத்தினருக்குச் சொந்தமான பகுதிகளில் இருந்தன. 42 ஒவ்வொரு பகுதியிலும் மிருகங்களுக்கான நிலமும் இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறே இருந்தது.

43 அவ்வாறு கர்த்தர் இஸ்ரவேலருக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்றினார். அவர் வாக்களித்த எல்லா நிலத்தையும் ஜனங்களுக்குக் கொடுத்தார். ஜனங்கள் நிலத்தைப் பெற்று அங்கு வாழ்ந்தனர். 44 கர்த்தர் அந்த ஜனங்களின் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே அவர்களின் தேசத்தைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் அமைதி நிலவும்படி செய்தார். அவர்கள் பகைவர்கள் யாரும் அவர்களை வெல்லவில்லை. இஸ்ரவேலர் தமது பகைவர்களை எல்லாம் முறியடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். 45 கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த எல்லா அருமையான வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். அவர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் இருக்கவில்லை. ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.

லூக்கா 2:25-52

சிமியோன் இயேசுவைக் காணல்

25 எருசலேமில் சிமியோன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் நல்லவனும், பக்திமானுமாக இருந்தான். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை சிமியோன் எதிர்பார்த்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார். 26 கர்த்தரிடமிருந்து வரும் கிறிஸ்துவைக் காணுமட்டும் அவன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியனவர் சிமியோனுக்குக் கூறியிருந்தார். 27 ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர். 28 சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு,

29 “ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.
30 நீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன்.
31     நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர்.
32 யூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர்.
    உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார்”

என்று தேவனுக்கு நன்றி செலுத்தினான்.

33 இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர். 34 சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து இயேசுவின் தாயாகிய மரியாளிடம், “இந்தப் பாலகனின் நிமித்தமாக யூதர்கள் விழுவர்; பலர் எழுவர். சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாத தேவனின் அடையாளமாக இவர் இருப்பார். 35 இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான்.

அன்னாள் இயேசுவைக் காணல்

36 தேவாலயத்தில் அன்னாள் என்னும் பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் ஆசேர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த பானுவேல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அன்னாள் வயது முதிர்ந்தவள். அவள் திருமணமாகித் தன் கணவனுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள். 37 பின் அவள் கணவன் இறந்து போனான். அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். அவள் எண்பத்து நான்கு வயது முதியவளாக இருந்தாள். அன்னாள் எப்போதும் தேவாலயத்திலேயே இருந்தாள். அவள் உபவாசமிருந்து இரவும் பகலும் தேவனை வழிபட்டுக்கொண்டிருந்தாள்.

38 தேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள்.

யோசேப்பும் மரியாளும் வீடு திரும்பல்

39 தேவனின் பிரமாணம் கட்டளையிட்டபடியே அனைத்துக் காரியங்களையும் யோசேப்பும், மரியாளும் செய்து வந்தனர். பின்னர் கலிலேயாவில் உள்ள தங்கள் சொந்த நகரமாகிய நாசரேத்திற்குத் திரும்பினர். 40 சிறு பாலகன் வளர்ந்து வந்தார். அவர் வல்லமையும், ஞானமும் உடையவரானார். தேவனின் ஆசீர்வாதம் அவரோடிருந்தது.

சிறுவனாக இயேசு

41 ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்று வந்தனர். 42 வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர். 43 பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். 44 யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர். 45 ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர்.

46 மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார். 47 எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர். 48 இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள்.

49 இயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார். 50 அவர் கூறியதன் ஆழமான உள் பொருளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

51 இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள். 52 இயேசு மேலும் மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center