Old/New Testament
சவுல் அரசனின் மரணம்
10 பெலிஸ்தர்கள், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தோற்று ஓடிப்போனார்கள். கில்போவா மலையில் அவர்கள் வெட்டுண்டு மரித்துப்போனார்கள். 2 சவுலையும், அவனது மகன்களையும் பெலிஸ்தர்கள் தொடர்ந்து துரத்திக்கொண்டு போனார்கள். அவர்கள், இவர்களைப் பிடித்து கொன்றார்கள். பெலிஸ்தர்கள் சவுலின் மகன்களான யோனத்தான், அபினதாப், மல்கிசூவா ஆகியோரைக் கொன்றனர். 3 சவுலைச் சுற்றி போர் பலமடைந்தது. வில் வீரர் அவனை அம்பால் எய்து காயப்படுத்தினார்கள்.
4 பிறகு சவுல் அவனது ஆயுதந்தாங்கியிடம், “உனது வாளை எடு. அதனால் என்னைக் கொல். அதனால் அந்த அந்நியர்கள் என்னைக் காயப்படுத்தமாட்டார்கள். அவர்கள் வரும்போது என்னைக் கேலிச் செய்யமாட்டார்கள்” என்றான்.
ஆனால், சவுலின் ஆயுதந்தாங்கி பயந்தான். அவன் சவுலைக் கொல்ல மறுத்தான். பிறகு சவுல், தனது சொந்த வாளையே தன்னைக் கொல்வதற்கு பயன்படுத்தினான். 5 சவுல் மரித்துப்போனதை ஆயுதந்தாங்கி பார்த்தான். பின் அவனும் தற்கொலை செய்துக்கொண்டான். அவனும் சவுலைப் போலவே தன் வாளின் நுனியிலே விழுந்து மரித்துப் போனான். 6 இவ்வாறு சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துப்போனார்கள். சவுலின் குடும்பம் முழுவதுமே மொத்தமாக மரித்துப்போனது.
7 அப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் அனைவரும் தமது சொந்த படை ஓடுவதைக் கண்டனர். சவுலும், அவனது மகன்களும் மரித்துப் போனதைக் கண்டனர். எனவே, இவர்கள் தமது நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். இவர்கள் விட்டுப்போன இடங்களில், பெலிஸ்தர்கள் வந்து நுழைந்தனர். அவ்விடங்களிலே பெலிஸ்தர்கள் குடியேறினார்கள்.
8 மறுநாள், பெலிஸ்தர்கள் மரித்துப்போனவர்களின் உடலில் இருந்து விலைமதிப்புடைய பொருட்களை எடுக்கவந்தனர். அப்போது அவர்கள் சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கில்போவா மலையில் கண்டுபிடித்தனர். 9 பெலிஸ்தர்கள் சவுலின் உடம்பிலுள்ள சில பொருட்களை எடுத்துக்கொண்டனர். அவர்கள் சவுலின் தலையையும் ஆயுதங்களையும் எடுத்தனர். அவர்கள் தூதுவர்களை அனுப்பி தங்கள் நாடுகளில் உள்ள ஜனங்களுக்கும், பொய்த் தெய்வங்களுக்கும் செய்தியை பரப்பினார்கள். 10 பெலிஸ்தர்கள், சவுலின் ஆயுதங்களைத் தமது பொய்த் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்தனர். சவுலின் தலையைத் தாகோன் ஆலயத்திலே தொங்கவிட்டனர்.
11 பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்தவற்றைப் பற்றி கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் கேள்விப்பட்டனர். 12 சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கைப்பற்ற தைரியமுள்ள கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் போனார்கள். அவற்றை எடுத்துவந்தனர். அவர்கள், சவுல் மற்றும் மகன்களின் எலும்புகளை யாபேசில் ஒரு பெரிய மரத்தடியில் அடக்கம்செய்தனர். பின் ஏழு நாட்கள் உபவாசமிருந்தார்கள்.
13 சவுல் கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லாதபடியால் அவன் கொல்லப்பட்டான். சவுல் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. 14 அவன் தன் எதிர்காலத்தைப் பற்றி கர்த்தரிடம் கேட்பதற்குப் பதிலாக குறி சொல்வோரை நாடினான். அதனால்தான் கர்த்தர் அவனைக் கொன்று ஆட்சியை ஈசாயின் மகனான தாவீதிடம் தந்தார்.
இஸ்ரவேலர்களுக்கு தாவீது அரசன் ஆகிறான்
11 இஸ்ரவேலர் அனைவரும் எப்ரோன் நகரத்தில் தாவீதிடம் வந்தனர். அவர்கள் தாவீதிடம், “நாங்கள் உம்முடைய சொந்த சதையும் இரத்தமுமாய் இருக்கிறோம்.” 2 முன்பு, போரில் வழிநடத்தினீர். சவுல் அரசனாக இருந்தபோதிலும் நீர் வழி நடத்தினீர். கர்த்தர் உம்மிடம், “தாவீது, நீதான் என் இஸ்ரவேல் ஜனங்களின் மேய்ப்பனாக இருப்பாய், என் ஜனங்களின் தலைவன் ஆவாய் என்று சொன்னார்” என்றார்கள்.
3 இஸ்ரவேலரின் தலைவர்கள் அனைவரும் எப்ரோன் நகரில் தாவீதிடம் வந்தனர். தாவீது அவர்களிடம் கர்த்தருக்கு முன்பாக எப்ரோனில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். தலைவர்கள் தாவீதுக்கு அபிஷேகம் செய்தனர். அதனால் அவன் இஸ்ரவேலருக்கு அரசன் ஆனான். கர்த்தர் சொன்னபடியே நடந்தது. கர்த்தர் அந்த வாக்குறுதியைக் கூற சாமுவேலைப் பயன்படுத்தினார்.
தாவீது எருசலேமை கைப்பற்றுகிறான்
4 தாவீதும், இஸ்ரவேல் ஜனங்களும் எருசலேம் நகரத்திற்குச் சென்றனர். அப்போது அந்நகரம் எபூசு என்று அழைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த ஜனங்கள் எபூசியர் என அழைக்கப்பட்டனர். நகரத்தில் வாழ்ந்த ஜனங்கள் 5 தாவீதிடம், “எங்கள் நகருக்குள் நீ நுழைய முடியாது” என்றனர். ஆனால் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினான். அது தாவீதின் நகரமாயிற்று.
6 தாவீது, “எவனொருவன் எபூசியரோடு போரிட வழிநடத்திச் சென்றானோ அவன் என் படை முழுவதற்கும் தளபதியாவான்” என்றான். எனவே, யோவாப் போருக்கு வழிநடத்தினான். யோவாப், செருயாவின் மகன். யோவாப் படைத் தளபதியானான்.
7 தாவீது கோட்டைக்குள் தனது வீட்டை அமைத்துக்கொண்டான். அதனால் அது தாவீதின் நகரம் என்ற பெயரைப்பெற்றது. 8 கோட்டையைச் சுற்றிலும் மில்லோவிலிருந்து சுற்றுச்சுவர்வரைக்கும் தாவீது நகரத்தை நிர்மாணித்தான். நகரத்தின் மற்ற பகுதிகளை யோவாப் பழுதுபார்த்தான். 9 தாவீது தொடர்ந்து பெரியவன் ஆனான். சர்வவல்லமையுள்ள கர்த்தர் அவனோடு இருந்தார்.
மூன்று வீரர்கள்
10 தாவீதினுடைய படைவீரர்களின் சிறப்பான தலைவர்கள் பட்டியல் இது. தாவீதின் அரசாங்கத்தில் இவ்வீரர்கள் வல்லமை உடையவர்களாக விளங்கினார்கள். இவர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்கு முழுமையாக உதவி அவனை அரசன் ஆக்கினார்கள். இதுவும் தேவன் சொன்னபடியே ஆயிற்று.
11 இதுதான் தாவீதின் விசேஷ வீரர்களின் விபரம்: அக்மோனியின் மகன் யாஷோபியாம். யாஷோபியாம், இரதப் படைத் தலைவன். இவன் தனது ஈட்டியால் ஒரே நேரத்தில் 300 பேர்களைக் கொன்றுப்போட்டான்.
12 அடுத்து அகோயைச் சேர்ந்த தோதாயின் மகன் எலெயாசார். இவன் மூன்று மாபெரும் வீரர்களில் ஒருவன். 13 எலெயாசார் தாவீதோடு பாஸ்தம்மீமில் இருந்தான். அங்கு பெலிஸ்தர்கள் போரிடுவதற்காக வந்தனர். அங்கு ஒரு வயல் முழுவதும் பார்லி பயிரிடப்பட்டிருந்தது. இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்குத் தப்பி ஓடினார்கள். 14 ஆனால் மூன்று வீரர்கள் அங்கே வயலில் நின்று தோற்கடித்தனர். இஸ்ரவேலர்களுக்கு, கர்த்தர் மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்.
15 ஒருமுறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். அப்போது பெலிஸ்தியர் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டது. முப்பது வீரர்களில் மூன்று பேர் தரையில் ஊர்ந்துப்போய் குகையில் இருந்த தாவீதை அடைந்தார்கள்.
16 இன்னொருமுறை, தாவீது கோட்டையில் இருந்தான். அப்போது பெலிஸ்தர் படைக்குழு ஒன்று பெத்லெகேமில் இருந்தது. 17 அவனது சொந்த ஊரில் உள்ள தண்ணீர் மீது அவனுக்குத் தாகம் ஏற்பட்டது. எனவே, அவன் “பெத்லேகேம் வாசல் அருகேயுள்ள கிணற்று தண்ணீர் மீது எனக்குத் தாகமாய் உள்ளது. யாராவது ஒருவர் கொண்டுவந்து தரவேண்டும் என விரும்புகிறேன்” என்றான். அவன் உண்மையில் அந்த தண்ணீரின் மீது தாகம் கொள்ளவில்லை. எனினும் அவன் அவ்வாறு பேசிக்கொண்டான். 18 ஆனால் மூன்று பேரும் பெலிஸ்தரோடு வழியில் போரிட்ட பிறகே உள்ளே நுழைய முடிந்தது. அவர்கள் பெத்லேகேம் வாசல் அருகில் உள்ள கிணற்று தண்ணீரைக் கொண்டுவந்து தாவீதிடம் கொடுத்தனர். தாவீது அதனைக் குடிக்க மறுத்துவிட்டான். அதனை கர்த்தருக்கு காணிக்கையாகத் தரையில் ஊற்றினான். 19 பிறகு தாவீது, “தேவனே! என்னால் இத்தண்ணீரைக் குடிக்கமுடியாது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் இத்தண்ணீரைக் கொண்டுவந்தனர். இதனைக் குடிப்பது இவர்களின் இரத்தத்தைக் குடிப்பது போன்றதாகும்” என்றான். இதற்காகத்தான் தாவீது அந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தான். இதுபோல பல்வேறு சாகசங்களை மூன்று வீரர்களும் செய்தனர்.
தாவீதின் மற்ற வீரர்கள்
20 மூன்று வீரர்களுக்கும் தலைவனாக அபிசாய் இருந்தான். இவன் யோவாப்பின் சகோதரன். அவன் 300 வீரர்களோடு சண்டையிட்டு தன் ஈட்டியால் அவர்களைக் கொன்றான். மூன்று வீரர்களைப் போன்றே அபிசாயும் பிரபலமாக இருந்தான். 21 இவன் அவர்களைவிட இரண்டு மடங்கு பிரபலமாக இருந்தான். இவன் அவர்களில் ஒருவனாக இல்லாவிட்டாலும் இவன் அவர்களின் தலைவன் ஆனான்.
22 பெனாயா, யோய்தானின் மகன், யோய்தா ஒரு வல்லமை மிக்கவன். இவன் கப்சேயேல் ஊரான். பெனாயாவும் வல்லமைகொண்டவன். இவன் மோவாபில் உள்ள இருபலம் பொருந்திய மனிதர்களைப் போரிட்டுக் கொன்றான். ஒருமுறை பனி பெய்துகொண்டிருக்கும் சமயத்தில், அவன் ஒரு குகைக்குள்ளே சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். 23 மேலும் அவன் ஒரு எகிப்திய வீரனையும் கொன்றான். அவன் 7 1/2 அடி உயரம் உள்ளவன். எகிப்திய வீரனிடம் இருந்த ஈட்டி மிக நீளமாகவும் கனமுள்ளதாகவும் இருந்தது. அது நெய்கிறவனின் படை மரக்கனதிபோல் பெரிதாய் இருந்தது. பெனாயாவிடம் ஒரு தடிமட்டுமே இருந்தது. பெனாயா அவனிடமுள்ள ஈட்டியைப் பிடுங்கி அதனாலேயே அவனைக் கொன்றான். 24 யோய்தாவின் மகனாகிய பெனாயா இதுபோல் பல வேலைகளைச் செய்தான். பெனாயாவும் மூன்று வீரர்களைப் போன்று பிரபலமாக இருந்தான். 25 இவன், முப்பது வீரர்களைவிடவும் பிரபலமானவன். ஆனாலும் அவன் அம்மூன்று வீரர்களுள் ஒருவன் அல்ல. தாவீது, இவனை மெய்க்காப்பாளர்களின் தலைவனாக ஆக்கினான்.
முப்பது வீரர்கள்
26 முப்பது நாயகர்களானவர்கள்:
ஆசகேல், யோவாபின் சகோதரன்; பெத்லகேமைச் சேர்ந்த தோதோவின் மகனான எல்க்கானான்.
27 ஆரோதியனான சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
28 தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
29 ஊசாத்தியனான சிபெக்காய், ஆகோகியனான ஈலாய்,
30 நெத்தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத்,
31 பென்யமீன் வம்சத்தானான இபேயா ஊரைச் சேர்ந்த ரிபாயின் மகனான இத்தாயி, பிரத்தோனியனான பெனாய,
32 காகாஸ் நீரோடை நாட்டானான ஊராயி, அர்பாத்தியனான அபியேல்,
33 பகரூமியனான அஸ்மாவேத், சால்போனியனான எலியாபா,
34 கீசோனியனான ஆசேமின் மகன்கள்,
35 ஆராரியனாகிய சாகியின் மகனான யோனத்தான், ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் எலிபால்,
36 மெகராத்தியனான எப்பேர், பெலோனியனான அகியா,
37 கர்மேலியனான எஸ்ரோ, எஸ்பாயின் மகன் நாராயி,
38 நாத்தானின் சகோதரனான யோவேல், அகரியின் மகனான மிப்கார்,
39 அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனான நாராயி,
40 இத்தரியனான ஈரா, இத்தாரியனான காரெப்,
41 ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,
42 ரூபனியரின் கோத்திரத்திலிருந்து சீசாவின் மகன் அதினா, அவனோடு சேர்ந்த 30 பேர்,
43 மாகாவின் மகன் ஆனான், மிதினியனான யோசபாத்,
44 அஸ்தரேத்தியனான உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் மகன் சமா, யேகியேல்,
45 சிம்ரியின் மகன் எதியாயேல், தித்சியனான அவன் சகோதரன் யோகா,
46 மாகாவியரின் மகன் எலியேல், எல்நாமின் மகன் எலிபாய், யொசவியா, மோவாபியனான இத்மா,
47 மெசோபாயா ஊராராகிய எலியேல், ஓபேது, யாசீயேல் ஆகியோர்.
தாவீதோடு சேர்ந்த துணிச்சல்காரர்கள்
12 தாவீது சிக்லாகில் இருக்கும்போது அவனிடம் வந்தவர்களின் பட்டியல்: கீசின் மகனாகிய சவுலுக்குப் பயந்து மறைந்துகொள்ளும் காலமது. இவர்கள் போரில் தாவீதிற்கு உதவினார்கள். 2 இவர்கள் தம் வில்களிலிருந்து அம்புகளை வலது அல்லது இடது கைகளால் எய்தனர். இவர்கள் தம் வலது அல்லது இடது கைகளால் கற்களை கவண்களிலிருந்தும் எய்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள், பென்யமீன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களின் பெயர்களாவன:
3 அகியேசர் எனும் தலைவன், கிபியேத்தியனான சேமாவின் மகன் யோவாசு, அஸ்மாவேத்தின் மகனான எசியேல், அஸ்மாவேத்தின் மகனான பேலேத்து, பெராக்கா, மற்றும் ஆனதோத்தியனான ஏகூ, ஆகியோர். 4 கிபியோனியனான இஸ்மாயா 30 வீரர்களில் வல்லவன்; அந்த 30 வீரர்களுக்கும் அவன் தலைவன். எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத், 5 எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா, 6 எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யாசொபெயாம் என்னும் கோரேகியனும், கோராவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். 7 யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் மகன்கள்.
காத்தியர்கள்
8 அந்த வனாந்தரத்திலே, காத்தியரின் கோத்திரத்தில் ஒரு பகுதியினர் தாவீதின் பக்கம் அவனது கோட்டைக் காவலர்களாகச் சேர்ந்துக்கொண்டனர். அவர்கள் போர் பயிற்சிகொண்டவர்கள், வலிமையுள்ளவர்கள். அவர்கள் போரில் ஈட்டியும் கேடயமும் கையாளுவதில் வல்லவர்கள். அவர்கள் சிங்கத்தைப்போன்று காட்சியளித்தார்கள். மலையிலிருந்த கசேலியர்களைப்போன்று வேகமானவர்கள்.
9 எத்சேர் படைத்தலைவன். இவன் காத்தியர் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இரண்டாம் தலைமை நிலையில் ஒபதியா இருந்தான். எலியாப் மூன்றாவது தலைமை நிலையில் இருந்தான். 10 மிஸ்மன்னா நாலாவதாகவும், எரேமியா ஐந்தாவதாகவும், 11 அத்தாயி் ஆறாவதாகவும், எலியேல் ஏழாவதாகவும், 12 யோகனான் எட்டாவதாகவும், எல்சபாத் ஒன்பதாகவும், 13 எரேமியா பத்தாவதாகவும், மக்பன்னாயி பதினோராவதாகவும் இருந்தனர்.
14 இவர்கள் காத்தியப் படைவீரர்களின் தலைவர்கள். இவர்களில் பலவீனமானவர்கள் 100 பேருக்கும் பலமுள்ளவன் 1,000 பேருக்கும் எதிராகப் போரிட வல்லவர்கள். 15 காத்தியர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்கள் யோர்தான் கரைபுரண்டு ஓடிய ஆண்டின் முதல் மாதத்தில் ஆற்றைக் கடந்தனர். அப்பள்ளத்தாக்கில் உள்ளவர்களை விரட்டி அடித்தனர். இவர்கள் அவர்களைக் கிழக்கிலிருந்து மேற்காகத் துரத்தினார்கள்.
தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்
16 பென்யமீன் மற்றும் யூதா கோத்திரங்களில் உள்ளவர்களும் கோட்டைக்கு வந்து தாவீதோடு சேர்ந்துகொண்டனர். 17 தாவீது அவர்களைச் சந்திக்க வெளியே வந்தான். தாவீது அவர்களிடம், “எனக்கு உதவும் எண்ணத்தோடு சமாதானமாய் வந்தால், உங்களை வரவேற்கிறேன். என்னோடு சேர்ந்துக்கொள்ளுங்கள். அவ்வாறில்லாமல் நான் ஒரு தவறும் செய்யாமல் இருக்கும்போது, என்னைக் கவனித்து எதிரிகளிடம் காட்டிக்கொடுக்க நீங்கள் வந்திருந்தால், நம் முற்பிதாக்களின் தேவன் உங்கள் தீய காரியங்களைக் கவனித்து அதற்குரிய தண்டனையைக் கொடுப்பார்” என்றான்.
18 முப்பது வீரர்களின் தலைவன் அமாசாயி, அவன் மேல் ஆவி வந்து இறங்கியது. அதனால் அவன்,
“தாவீது! நாங்கள் உம்முடையவர்கள், ஈசாயின் மகனே!
நாங்கள் உம்மோடு இருப்போம், சமாதானம், உனக்குச் சமாதானம்! ஏனென்றால் உன் தேவன் உனக்கு உதவுகிறார்!” என்றான்.
எனவே தாவீது அவர்களை வரவேற்றான். அவர்களைப் படைக்குத் தலைவர்களாக்கினான்.
19 மனாசேயின் கோத்திரத்தில் உள்ள சிலர் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவன் பெலிஸ்தர்களோடு சேர்ந்துகொண்டு சவுலுக்கு எதிராகச் சண்டை செய்யப் போனபோது மனாசே கோத்திரத்தினர் அவனோடு சேர்ந்தனர். ஆனால், தாவீதும் அவனது ஆட்களும் உண்மையில் பெலிஸ்தர்களுக்கு உதவி செய்யவில்லை. பெலிஸ்திய தலைவர்கள் தாவீது தமக்கு உதவுவதாகப் பேசிக்கொண்டனர். ஆனால், பிறகு அவனை அனுப்பிவிட முடிவு செய்தனர். இராஜாக்கள், “தாவீது தனது எஜமான் சவுலோடு போய் சேர்ந்துகொண்டால் பிறகு நமது தலைகள் அறுபடும்” என்றனர். 20 தாவீது சிக்லாகுக்குத் திரும்பிப் போகும்போது கீழ்க்கண்ட மனாசேயர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி ஆகியோர். இவர்கள் மனாசே கோத்திரத்தினர். தாவீதின் படைக் குழு தலைவர்களானார்கள். 21 இவர்கள், தாவீதின் தீயவர்களுக்கு எதிராகப் போரிட உதவினார்கள். அத்தீயவர்கள் நாடு முழுவதும் சுற்றி ஜனங்களிடம் கொள்ளையடித்தனர். மனாசேயின் வீரர்கள் அனைவரும் பலசாலிகள். இவர்கள் தாவீதின் படையில் தலைவர்களானார்கள்.
22 ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வீரர்கள் தாவீதிற்கு உதவ வந்தனர். எனவே தாவீதிடம் ஒரு பெரியப் பலமிக்க படை இருந்தது.
எப்ரோனில் தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்
23 எப்ரோன் நகரத்தில் கீழ்க்கண்ட ஆட்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவர்கள் போர் செய்ய தயாராக இருந்தனர். சவுலின் அரசைத் தாவீதிற்கு அளிப்பதற்காக அவர்கள் வந்தனர். அது கர்த்தர் சொன்னபடி நிகழ்ந்தது. இது அவர்களின் எண்ணிக்கையாகும்.
24 யூதா கோத்திரத்தில் இருந்து 6,800 பேர் போர் செய்ய தயாராயிருந்தனர். அவர்கள் ஈட்டிகளையும் கேடயங்களையும் கொண்டுவந்தனர்.
25 சிமியோனின் கோத்திரத்தில் இருந்து 7,100 பேர் வந்தனர். அவர்கள் தைரியமுள்ளவர்களாக போர் செய்யத் தயாராக இருந்தனர்.
26 லேவியின் கோத்திரத்தில் இருந்து 4,600 பேர் வந்தனர். 27 யோய்தாவும் அந்த குழுவில் உள்ளவன். இவன் ஆரோனின் கோத்திரத்தில் உள்ளவன். இவனும் தலைவன். யோய்தாவுடன் 3,700 பேர் இருந்தனர். 28 சாதோக்கும் அந்த குழுவில் இருந்தான். இவன் வீரமிக்க இளைஞன். இவன் தன் குடும்பத்தில் உள்ள 22 வீரர்களோடு வந்தான்.
29 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து 3,000 பேர் வந்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள். இதுவரை இவர்கள் சவுலின் குடும்பத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.
30 எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து 20,800 பேர் வந்தனர். இவர்கள் பலமிக்க வீரர்கள். இவர்கள் தம்தம் குடும்பங்களில் பிரபலமானவர்கள்.
31 மனாசே கோத்திரத்தின் பாதிப்பிரிவில் இருந்து 18,000 பேர் வந்தனர். தாவீதை அரசனாக்குவதற்காக அவர்கள் ஒவ்வொருவராகப் பேர் சொல்லி அழைக்கப்பட்டனர்.
32 இசக்காரின் கோத்திரத்திலிருந்து 200 அறிஞர்கள் வந்தனர். இவர்கள் சரியான காலத்தில் சரியானவற்றை இஸ்ரவேலர்களுக்குச் செய்யத் தெரிந்தவர்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்குக் கீழாக இவர்களின் கட்டளைப்படி இருந்தனர்.
33 செபுலோனின் கோத்திரத்திலிருந்து 50,000 பயிற்சிப் பெற்ற வீரர்கள் வந்தனர். இவர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்த பயிற்சிப் பெற்றிருந்தனர். இவர்கள் தாவீதிற்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.
34 நப்தலி கோத்திரத்திலிருந்து 1,000 அதிகாரிகள் வந்தனர். இவர்களோடு 37,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் ஈட்டியையும் கேடயத்தையும் கொண்டு வந்தனர்.
35 தாணின் கோத்திரத்திலிருந்து 28,600 பேர் போர் செய்ய தயாராக இருந்தனர்.
36 ஆசேரின் கோத்திரத்திலிருந்து 40,000 பயிற்சிப் பெற்ற போர் வீரர்கள் போர் செய்ய தயாராய் இருந்தார்கள்.
37 யோர்தான் ஆற்றுக்குக் கீழ்ப்பகுயில் இருந்து 1,20,000 பேர் வந்தனர். இவர்கள் ரூபன், காத் மற்றும் பாதி மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் எல்லா வகையான ஆயுதங்களும் இருந்தன.
38 இவர்கள் அனைவரும் பலமிக்க போர் வீரர்கள். இவர்கள் தாவீதை அரசனாக்குவதற்கு சம்மதம் தெரிவித்தே எப்ரோன் நகருக்கு வந்தனர். இஸ்ரவேலில் உள்ள மற்ற ஜனங்களும் தாவீது அரசனாக வேண்டும் என எண்ணினார்கள். 39 இவர்கள் எப்ரோனில் தாவீதோடு 3 நாட்களைக் கழித்தனர். இவர்களின் உறவினர்கள் உணவு தயாரித்துக் கொடுத்ததால் இவர்கள் உண்ணுவதும், குடிப்பதுமாய் இருந்தனர். 40 இசக்கார், செபுலோன், நப்தலி ஆகிய கோத்திரங்கள் வசிக்கிற இடத்தின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கழுதைகள், ஒட்டகம், கோவேறு கழுதை, மாடுகள் மீது உணவைக் கொண்டு வந்தனர். இவர்கள் மாவு, அத்திப்பழ அடைகள், காய்ந்த திராட்சைப் பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
45 இது தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டிருக்கிறது, ‘தேவன் எல்லா மக்களுக்கும் கற்றுத் தருவார்.’ [a] மக்கள் அப்பிதாவைக் கவனிக்கிறார்கள். கற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்னிடம் வருகிறார்கள். 46 எவரும் பிதாவைப் பார்த்திருப்பதாக நான் கருதவில்லை. தேவனிடம் இருந்து வந்தவர் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறார்.
47 “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒருவன் நம்பிக்கை வைத்தால் அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். 48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார்.
52 பிறகு யூதர்கள் தங்களுக்குள் விவாதம் செய்துகொண்டனர். “எவ்வாறு இந்த மனிதன் தனது சரீரத்தை நாம் உண்ணும்படி தருவான்?” என்றனர் அவர்கள்.
53 “நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் மனித குமாரனின் சரீரத்தை உண்ணவேண்டும். அவரது இரத்தத்தை அருந்த வேண்டும். இதனை நீங்கள் செய்யாவிட்டால், உங்களுக்கு உண்மையான வாழ்க்கை கிடைக்காது. 54 எனது சரீரத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான். நான் அவனை இறுதி நாளில் எழுப்புவேன். 55 எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். 56 ஒருவன் எனது சரீரத்தைப் புசித்து என் இரத்தத்தை அருந்துவானேயானால் அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்.
57 “பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான். 58 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் புசித்த அப்பத்தைப்போல் அல்ல நான். அவர்கள் அந்த அப்பத்தை உண்டார்கள். ஆனால், மற்றவர்களைப்போன்று அவர்கள் இறந்துபோயினர். நானோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அப்பம். இதனை உண்ணுகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான்” என்றார் இயேசு.
59 இவை எல்லாவற்றையும் இயேசு, கப்பர்நகூமிலுள்ள யூதர்களின் ஜெப ஆலயத்தில் போதனைசெய்யும்போது கூறினார்.
நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகள்
60 இயேசுவின் சீஷர்கள் இவற்றைக் கேட்டார்கள். “இந்த உபதேசங்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவை, இவற்றை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்?” என சீஷர்கள் கூறினர்.
61 அவருடைய சீஷர்கள் முறுமுறுப்பதை இயேசு அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நான் சொன்னவற்றை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
62 “அப்படியானால் மனித குமாரன் தாம் வந்த இடத்திற்கே திரும்பி ஏறிப்போவதைக் காண்பது எப்படியிருக்கும்? 63 ஒரு மனிதனுக்கு அவனது சரீரம் மட்டுமே வாழ்வு அளிப்பது இல்லை. அவனது ஆவியே ஜீவனைத் தருகிறது. நான் உங்களுக்குச் சொன்ன வசனங்கள் யாவும் ஆவியே. இவையே ஜீவனைத் தருவன. 64 ஆனால் உங்களில் சிலர் விசுவாசம் இல்லாமல் இருக்கிறீர்கள்” என்றார். (தன்னை விசுவாசிக்காதவர்களை இயேசு புரிந்துகொண்டார். இதனை அவர் துவக்கம் முதலே புரிந்துகொண்டார். தனக்கு எதிராகத் திரும்புகிறவனையும் இயேசு அறிந்திருந்தார்.) 65 அதனால்தான், “நான், ‘பிதா அனுமதித்தால் ஒழிய ஒருவனும் என்னிடம் வரமாட்டான்’ என்று சொன்னேன்” என்றார் இயேசு.
66 இயேசு இவ்வாறு சொன்னபிறகு அவரது சீஷர்களில் அநேகர் அவரை விட்டுப் போயினர். அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்தினர்.
67 பிறகு இயேசு தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் பார்த்து, “நீங்களும் விட்டுவிட்டு விலகிச் செல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
68 சீமோன் பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை நீரே வைத்திருக்கிறீர். 69 நாங்கள் உம்மை நம்புகிறோம். நீரே தேவனிடமிருந்து வந்த பரிசுத்தமானவர் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார்.
70 பிறகு இயேசு அவர்களிடம், “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவர் நீங்கள். ஆனால் உங்களில் ஒருவன் பிசாசு” என்றார். 71 இயேசு யூதாஸைப்பற்றியே இவ்வாறு கூறினார். அவன் சீமோன் ஸ்காரியோத்தின் மகன். பன்னிருவரில் ஒருவன். ஆனால் பிற்காலத்தில் யூதாஸ் இயேசுவிற்கு எதிராகத் திரும்பிவிட்டான்.
2008 by World Bible Translation Center