Old/New Testament
18 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “ஜனங்களாகிய நீங்கள் இப்பழமொழியை மீண்டும், மீண்டும் சொல்கிறீர்கள்:
“‘ஏன்? நீங்கள் பெற்றோர்கள் புளித்த திராட்சை தின்றார்கள்.
ஆனால் குழந்தைகள் புளிப்புச் சுவையைப் பெறுகிறார்கள்’” என்று சொல்லுகிறீர்கள்.
3 ஆனால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “எனது உயிரைக்கொண்டு நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களிக்கிறேன். இப்பழமொழி இனிமேல் உண்மையாக இருக்காது. 4 நான் ஒவ்வொரு மனிதனையும் அவ்வாறே நடத்துகிறேன். அவன் பெற்றவனா, பிள்ளையா என்பதைப்பற்றி கவலையில்லை. பாவம் செய்கிற ஒருவன் அதற்கேற்றபடி மரிப்பான்!
5 “ஒருவன் நல்லவனாக இருந்தால் அவன் நன்றாக வாழ்வான்! அந்நல்லவன் ஜனங்களிடம் நியாயமாக இருக்கிறான். 6 அந்நல்லவன் மலைகளுக்குச் சென்று பொய்த் தெய்வங்களுக்கு உணவு காணிக்கை தரவில்லை. இஸ்ரவேலில் உள்ள அசுத்த பொய்த் தெய்வங்களிடம் வேண்டுதல் செய்யவில்லை. அவன் அயலானின் மனைவியோடு விபச்சாரப் பாவத்தைச் செய்யவில்லை. அவன் தனது மனைவியுடன் அவளது விலக்குக் காலத்தில் பாலின உறவுவைத்துக் கொள்ளவில்லை. 7 அந்நல்லவன் பிறரை தன் நன்மைக்காகப் பயன்படுத்தவில்லை. எவராவது அவனிடமிருந்து பணம் கடன் வாங்கினால் திருப்பித் தரும்போது அடமானத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறான். அந்நல்லவன் பசித்தவர்களுக்கு உணவைத் தருகிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். 8 ஒருவன் அந்நல்லவனிடம் கடன் வாங்க விரும்பினால் அவன் கடன் கொடுப்பான். அவன் அந்தக் கடனுக்காக வட்டி பெறவில்லை. அவன் வஞ்சகமாக நடந்துகொள்ளவில்லை. அவன் எல்லோரிடமும் நேர்மையாக நடந்து கொள்கிறான். ஜனங்கள் அவனை நம்பலாம். 9 அவன் எனது சட்டங்களுக்கு அடிபணிகிறான், அவன் எனது முடிவுகளைப்பற்றி எண்ணுகிறான், நியாயமாக இருக்கக் கற்றிருக்கிறான். அவன் நல்லவன், அதனால் வாழ்வான்.
10 “ஆனால் அந்நல்லவனுக்கு ஒரு குமாரன் பிறந்து அவன் தன் தந்தையைப்போல் இந்நற்காரியங்களில் எதையும் செய்யாதவனாக இருக்கலாம். அந்த குமாரன் பொருட்களைத் திருடலாம், பிறரைக் கொலை செய்யலாம். 11 அந்த குமாரன் இத்தீமைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அவன் மலைகளுக்குப் போய் பொய்த் தெய்வங்களுக்கு உணவுக் காணிக்கை தரலாம். அப்பாவியாகிய குமாரன் அயலான் மனைவியோடு கள்ள உறவு வைத்திருக்கலாம். 12 அவன் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் தவறாக நடத்தலாம். அவன் ஜனங்களை ஏமாற்றி பயன்பெறலாம். ஒருவன் தனது கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அவன் அடமானத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கலாம். அந்தப் பாவி குமாரன் அந்த ஆபாசமான விக்கிரங்களுக்கு பிரார்த்தனை செய்து வேறு பயங்கரமான செயல்களைச் செய்யலாம். 13 ஒருவனுக்கு இப்பாவி மகனிடம் இருந்து பணம் கடன் வாங்கும் தேவை ஏற்படலாம். அம்மகன் அவனுக்குக் கடன் கொடுக்கலாம். ஆனால் அவன் அக்கடனுக்கு வட்டி கொடுக்கும்படி வற்புறுத்துவான். எனவே அப்பாவி குமாரன் வாழமாட்டான். அவன் எல்லா அருவருப்பான செயல்களையும் செய்தான். அதனால் மரணம் அடைவான். அவனது மரணத்திற்கு அவனே பொறுப்பாவான்.
14 “இப்பொழுது, இப்பாவி குமாரனுக்கு ஒரு குமாரன் பிறந்திருக்கலாம். ஆனால் இந்த குமாரன் தன் தந்தை செய்த எல்லாப் பாவங்களையும் பார்த்து அவன் தந்தையைப்போன்று வாழ மறுக்கலாம். அந்த நல்ல குமாரன் ஜனங்களை நியாயமாக நடத்தலாம். 15 அந்நல்ல குமாரன் மலைகளுக்குப் போய் தனது உணவைப் பொய்த் தெய்வங்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில்லை. இஸ்ரவேலில் அசுத்தத் தெய்வங்களிடம் அவன் விண்ணப்பம் செய்வதில்லை. அவன் அயலானின் மனைவியோடு விபச்சாரம் செய்வதில்லை. 16 அந்நல்ல குமாரன் ஜனங்களை ஒடுக்குவதில்லை. ஒருவன் இவனிடம் வந்து கடன் கேட்டால் இவன் அடமானத்தைப் பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கிறான். அவன் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அடமானத்தை இவன் திருப்பிக் கொடுக்கிறான். இந்நல்ல குமாரன் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். 17 இவன் ஏழைகளுக்கு உதவுகிறான். ஒருவன் இவனிடம் பணம் கடன் கேட்க விரும்பினால் கடன் கொடுக்கிறான். இவன் அக்கடனுக்கு வட்டி வசூலிக்கவில்லை. இந்நல்ல குமாரன் எனது நியாயங்களுக்கு அடிபணிந்து எனது நியாயங்களைப் பின்பற்றுகிறான். இந்நல்ல குமாரன் தந்தையின் பாவங்களுக்காக மரணமடையமாட்டான். இந்நல்ல குமாரன் வாழ்வான். 18 இத்தந்தை ஜனங்களுக்குக் கொடுமை செய்து அவர்களின் பொருட்களைத் திருடியிருக்கலாம். அவன் தனது ஜனங்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் இருக்கலாம். இத்தந்தை தனது சொந்தப் பாவங்களுக்காக மரிப்பான். ஆனால் அம்மகன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான்.
19 “நீ, ‘அந்த குமாரன் தந்தையின் பாவங்களுக்காக ஏன் தண்டிக்கப்படவில்லை?’ என்று கேட்கலாம், குமாரன் நல்லவனாக இருந்து நன்மையைச் செய்தான் என்பதுதான் காரணம்! அவன் வெகு கவனமாக எனது நியாயங்களுக்குக் கீழ்ப்படிந்தான்! எனவே அவன் வாழ்வான். 20 பாவங்கள் செய்கிற ஒருவனே மரணத்திற்கு ஆளாவான். ஒரு குமாரன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு தந்தை தன் மகனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு நல்லவனின் நன்மை அவனை மட்டுமே சேரும். ஒரு கெட்டவனின் பாவங்கள் அவனை மட்டுமே சேரும்.
21 “இப்பொழுது, தீயவன் தனது வாழ்க்கை முறையை மாற்றினால் பிறகு அவன் மரிக்கமாட்டான் வாழ்வான். அவன் தான் செய்த பாவங்களை நிறுத்திவிடலாம் அவன் எனது சட்டங்களுக்கு கவனமாகக் கீழ்ப்படியலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம். 22 தேவன் அவன் செய்த தீயவைகளை நினைக்கமாட்டார். தேவன் அவனது நன்மைகளை மட்டுமே நினைப்பார்! எனவே அம்மனிதன் வாழ்வான்!”
23 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் தீயவர்கள் மரிப்பதை விரும்பவில்லை. நான் அவர்கள் தம் வாழ்வை மாற்றுவதை விரும்புகிறேன். எனவே, அவர்கள் வாழமுடியும்!
24 “இப்பொழுது, ஒரு நல்ல மனிதன் தனது நற்செயல்களை நிறுத்தலாம். அவன் தன் வாழ்வை மாற்றி முன்பு தீயவர்கள் என்னென்ன பாவங்களைச் செய்தார்களோ அவற்றைச் செய்யத் தொடங்கலாம். (அத்தீயவன் மாறினான் எனவே அவன் வாழமுடியும்). எனவே, அந்நல்ல மனிதன் மாறிப் தீயவனானால் பிறகு தேவன் அவன் செய்த நன்மைகளைப்பற்றி நினைக்கமாட்டார். அவன் அவருக்கு எதிராக மாறி பாவம் செய்யத் தொடங்கிவிட்டான் என்பதையே நினைப்பார். எனவே அம்மனிதன் தனது பாவங்களுக்காக மரிப்பான்.”
25 தேவன் சொன்னார்: “நீங்கள், ‘எனது தேவனாகிய ஆண்டவர் நியாயமானவராக இல்லை!’ என்று சொல்லலாம். ஆனால், கவனியுங்கள், இஸ்ரவேல் குடும்பத்தாரே, நியாயமற்றவர்கள் நீங்கள்தான்! 26 ஒரு நல்ல மனிதன் மாறிப் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் தனது பாவங்களுக்காக மரிப்பான். 27 ஒரு தீயமனிதன் மாறி நன்மை செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தனது வாழ்வைக் காப்பாற்றுவான். அவன் வாழ்வான்! 28 அந்த மனிதன், எவ்வளவு தீயவனாக இருந்தான், அவன், தான் எவ்வளவு மோசமானவன் என்று உணர்ந்து என்னிடம் திரும்பிவரத் தீர்மானித்தான். அவன் கடந்த காலத்தில் செய்த பாவத்தை நிறுத்தினான். எனவே அவன் வாழ்வான், மரிக்கமாட்டான்!”
29 இஸ்ரவேல் ஜனங்கள் சொன்னார்கள்: “அது செம்மையில்லை! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்கக்கூடாது!”
தேவன் சொன்னார்: “நான் நியாயமாகவே இருக்கிறேன். நீங்களே நியாயமற்றவர்கள்! 30 ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் ஒவ்வொரு மனிதரையும் அவர்கள் செய்தவற்றுக்காகவே நியாயம் தீர்க்கிறேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். “எனவே என்னிடம் திரும்பி வாருங்கள்! அந்த அருவருப்பான பொருட்கள் (விக்கிரகங்கள்) உங்களைப் பாவம் செய்யத் தூண்ட அனுமதிக்காதீர்கள்! 31 எல்லா அருவருப்பான பொருட்களையும் தூர எறியுங்கள். அவை நீங்கள் செய்தவை. அவையே உங்களது பாவங்களுக்கெல்லாம் காரணம்! உங்களது இருதயங்களையும் ஆவிகளையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஜனங்களே, உங்களது மரணத்தை ஏன் நீங்களே வரவழைத்துக்கொள்கிறீர்கள்? 32 நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. தயவுசெய்து திரும்பிவந்து வாழ்ந்திருங்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.
19 தேவன் என்னிடம் கூறினார்: “இஸ்ரவேல் தலைவர்களைப்பற்றிய இந்த சோகப் பாடலை நீ பாடவேண்டும்.
2 “‘உன்னுடைய தாய், அங்கு
ஆண் சிங்கங்களுடன் படுத்திருக்கும் பெண் சிங்கத்தைப் போலிருக்கிறாள்.
அவள், இளம் ஆண் சிங்கங்களுடன் படுக்கச் சென்றாள்.
பல குட்டிகளை பெற்றெடுத்தாள்.
3 தனது குட்டிகளில் ஒன்று எழும்புகிறது.
அது பலமான இளஞ்சிங்கமாக வளர்ந்திருக்கிறது.
அது தனது உணவைப் பிடிக்கக் கற்றிருக்கிறது.
அது மனிதனைக் கொன்று தின்றது.
4 “‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர்.
அவர்கள் அதனை வலையில் பிடித்தனர்!
அதன் வாயில் கொக்கிகளைப் போட்டனர்:
அதனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.
5 “‘அக்குட்டி தலைவனாகும் என்று தாய்ச்சிங்கம் நம்பிக்கை வைத்திருந்தது.
ஆனால் இப்போது அது நம்பிக்கையிழந்துவிட்டது.
எனவே அது தனது அடுத்த குட்டியை எடுத்தது.
சிங்கமாவதற்குரிய பயிற்சியைக் கொடுத்தது.
6 அது பெரிய சிங்கத்தோடு வேட்டைக்குப் போனது.
அது பலமான இளம் சிங்கமாயிற்று.
அது தனது உணவைப் பிடிக்கக் கற்றது.
அது மனிதனைக் கொன்று தின்றது.
7 அது அரண்மனைகளைத் தாக்கியது.
அது நகரங்களை அழித்தது.
அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் கெர்ச்சினையைக் கேட்டு பேசப் பயந்தனர்.
8 பிறகு அதனைச் சுற்றி வாழ்ந்த ஜனங்கள் அதற்கு ஒரு வலை அமைத்தனர்.
அவர்கள் அதனைத் தம் வலையில் பிடித்தனர்.
9 அவர்கள் கொக்கிகளைப் போட்டு அதனைப் பூட்டினார்கள்.
அவர்கள் அதனை வலைக்குள் வைத்தனர்.
எனவே அவர்கள் பாபிலோன் ராஜாவிடம் கொண்டு போனார்கள்.
இப்பொழுது அதன் கர்ச்சனையை
இஸ்ரவேல் மலைப் பகுதிகளில் நீங்கள் கேட்க முடியாது,
10 “‘உனது தாய் தண்ணீர் கரையில் நடப்பட்ட
திராட்சைக் கொடியைப் போன்றவள்.
அவளுக்கு மிகுதியான தண்ணீர் இருந்தது.
எனவே அவள் தழைத்த திராட்சைக் கொடியாயிருந்தாள்.
11 பிறகு அவள் நிறைய கிளைகளோடு வளர்ந்தாள்.
அந்தக் கிளைகள் கைத்தடிகளைப் போன்றிருந்தன.
அக்கிளைகள் ராஜாவின் செங்கோலைப் போன்றிருந்தன.
அத்திராட்சைக் கொடி மேலும், மேலும் உயரமாக வளர்ந்தது,
அது பல கிளைகளைப் பெற்று மேகங்களைத் தொட்டன.
12 ஆனால் அக்கொடி வேரோடு பிடுங்கப்பட்டு
தரையில் வீசியெறியப்பட்டது.
சூடான கிழக்குக் காற்று வந்து பழங்களை காய வைத்தது.
பலமான கிளைகள் ஒடிந்தன. அவை நெருப்பில் எறியப்பட்டன.
13 “‘இப்போது திராட்சைக் கொடி வனாந்தரத்தில் நடப்படுகிறது.
இது வறண்ட தாகமுள்ள நிலம்.
14 பெரிய கிளையிலிருந்து நெருப்பு பரவியது.
அந்நெருப்பு அதன் கிளைகளையும் பழங்களையும் எரித்தது.
எனவே இனிமேல் அதில் கைத்தடி இல்லை.
ராஜாவின் செங்கோலும் இல்லை.’
இது மரணத்தைப்பற்றிய சோகப் பாடல். இது மரணத்தைப்பற்றிய துன்பப் பாடலாகப் பாடப்பட்டது.”
தேவனுக்கு உங்களையே கொடுங்கள்
4 உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா? 2 நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை. 3 மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள்.
4 தன் கணவனின் நம்பிக்கைக்கு உரியவளாக இல்லாத ஒரு பெண்ணைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். உலகின் பகுதியாக இருக்க விரும்புதல் என்பது தேவனை வெறுப்பது போல் என்று நீங்கள் அறியமாட்டீர்களா? 5 அல்லது “தேவன் நமக்குள் வசிக்க வைத்த ஆவியானவர் நம்மில் வைராக்கியத்தோடு இருக்கிறார்”[a] என்று வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பொருளற்றது என நீங்கள் எண்ணுகிறீர்களா? 6 ஆனால் நம்மீதான அவரது கிருபை மிகவும் உயர்ந்தது. வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பது போல், “பெருமை பாராட்டுபவர்களுக்கு எதிராக தேவன் இருக்கிறார். ஆனால் அவர் பணிவான மக்களுக்குக் கிருபையை வழங்குகிறார்.”(A)
7 எனவே, உங்களையே தேவனிடம் ஒப்படையுங்கள். சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிவிடுவான். 8 தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 9 சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள். 10 தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.
நீங்கள் நியாயாதிபதி அல்ல
11 சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும். 12 சட்டத்தை உருவாக்கியவர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவர் தேவனாவார். சட்டத்தையே கேள்விக்குட்படுத்தினால், சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாக இருப்பதை விட்டு நீ நீதிபதியாகிறாய் என்பது பொருளாகும். சட்டத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் அதிகாரம் கொண்டவர் அவர் ஒருவரே. எனவே உன் சகோதரனையும் சகோதரியையும் நீ தான் நியாயம் தீர்க்க வேண்டும் என நினைக்க நீ யார்?
தேவன் உன் வாழ்வைத் தீர்மானிக்கட்டும்
13 “இன்று அல்லது நாளை நாம் ஒரு நகரத்திற்குப் போவோம். அங்கே ஓராண்டு தங்குவோம். வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று உங்களில் சிலர் கூறுகிறார்கள். கவனியுங்கள். 14 “நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை பனி புகையைப் போன்றது. கொஞ்ச காலத்திற்கே உங்களால் பார்க்கமுடியும். ஆனால் பிறகு மறைந்துவிடும்” என்பதை நினைத்துப்பாருங்கள். 15 எனவே, “தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்” என்று எண்ணுங்கள். 16 ஆனால், இப்போது நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிற பெரிய காரியங்கள் எல்லாவற்றைப்பற்றியும் பெருமை பாராட்டிக்கொள்கிறீர்கள். அது தவறாகும். 17 எனவே இப்போது கவனம் செலுத்துங்கள். ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் போனால், அவன் ஒரு பாவியாகிறான்.
2008 by World Bible Translation Center