M’Cheyne Bible Reading Plan
மோசே ஜனங்களை ஆசீர்வதிக்கிறான்
33 மோசே மரிப்பதற்கு முன்பு, தேவனுடைய மனுஷனான அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் இதுதான்.
2 மோசே சொன்னான்:
“சீனாயிலிருந்து கர்த்தர் வந்தார்.
கர்த்தர் சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமாகும் ஒளிபோன்று தோன்றினார்.
அவர் பாரான் மலையிலிருந்து ஒளி வீசும் வெளிச்சத்தைப் போன்று இருந்தார்.
கர்த்தர் 10,000 பரிசுத்தரோடு வந்தார்.
தேவனின் பலமிக்க படை வீரர்கள் அவரது பக்கத்திலேயே இருந்தார்கள்.
3 ஆம்! கர்த்தர் அவரது ஜனங்களை நேசிக்கிறார்.
அவரது பரிசுத்தமான ஜனங்கள் அனைவரும் அவரது கைக்குள் இருக்கிறார்கள்.
அவர்கள் அவரது காலடியில் இருந்து, அவரது போதனையைக் கற்கிறார்கள்!
4 மோசே சட்டத்தை கொடுத்தான்.
அந்தப் போதனைகள் எல்லாம் யாக்கோபின் ஜனங்களுக்குரியது.
5 அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள்.
கர்த்தர் யெஷுரனுக்கு அரசரானார்!
ரூபனுக்கான ஆசீர்வாதம்
6 “ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்!
ஆனால், அவனது குடும்பத்தில் கொஞ்சம் ஜனங்கள் மட்டும் இருக்கட்டும்!”
யூதாவுக்கான ஆசீர்வாதம்
7 மோசே யூதாவைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
“கர்த்தாவே, யூதாவிலிருந்து தலைவன் உதவிக்காக அழைக்கும்போது கேளும்.
அவனை அவனது ஜனங்களிடம் கொண்டு வாரும்.
அவனைப் பலப்படுத்தும், அவனது பகைவர்களை தோற்கடிக்கும்படி உதவும்.”
லேவிக்கான ஆசீர்வாதம்
8 மோசே லேவியைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
“லேவி உமது உண்மையான சீடன்.
அவன் ஊரீம் மற்றும் தும்மீமை வைத்திருக்கிறான்.
நீர் மாசாவிலே லேவியின் ஜனங்களைச் சோதித்தீர்.
மேரிபாவின் தண்ணீரிடத்திலே அவர்கள் உமது ஜனங்களாக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தீர்.
9 கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உமக்கென்று மிகவும் கவனம் செலுத்தினார்கள்.
அவர்களது தந்தை மற்றும் தாயைப் பற்றியும் கவலைப்படவில்லை.
அவர்கள் தமது சகோதரர்களையும் அடையாளம் காணவில்லை.
அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகள் மேலும் அக்கறை செலுத்தவில்லை.
ஆனால், அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
அவர்கள் உமது உடன்படிக்கையைக் காத்தார்கள்.
10 அவர்கள் உமது விதிகளை யாக்கோபிற்குப் போதிப்பார்கள்.
அவர்கள் உமது சட்டத்தை இஸ்ரவேலுக்குப் போதிப்பார்கள்.
அவர்கள் உமக்கு முன்னால் நறுமண பொருட்களை எரிப்பார்கள்.
அவர்கள் உமது பலிபீடத்தில் தகன பலிகளைச் செலுத்துவார்கள்.
11 “கர்த்தாவே, லேவியின் உடமைகளை ஆசீர்வதியும்.
அவன் செய்கின்றவற்றை ஏற்றுக்கொள்ளும்.
அவனைத் தாக்குகிறவர்களை அழித்துப்போடும்!
அவனது பகைவர்களைத் தோற்கடியும் அப்போது அவர்கள் மீண்டும் அவனை தாக்கமாட்டார்கள்.”
பென்யமீனுக்கான ஆசீர்வாதம்
12 மோசே பென்யமீனைப் பற்றி இதனைச் சொன்னான்:
“கர்த்தர் பென்யமீனை நேசிக்கிறார்.
பென்யமீன் அவர் அருகில் பாதுகாப்பாக வாழ்வான்.
கர்த்தர் எல்லா நேரத்திலும் அவனைக் காப்பாற்றுகிறார்.
கர்த்தர் அவனது நாட்டில் வாழ்வார்.”
யோசேப்புக்கான ஆசீர்வாதம்
13 மோசே யோசேப்பைப் பற்றி இதனைச் சொன்னான்:
“கர்த்தர் யோசேப்பின் நாட்டை ஆசீர்வதிக்கட்டும்.
கர்த்தாவே, வானத்தின் மேலிருந்து மழையையும் பூமிக்குக் கீழிருந்து நீரூற்றுகளையும் அனுப்பும்.
14 அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
15 குன்றுகளும், பழைமையான மலைகளும்
அவற்றின் சிறந்த கனியைத் தயார் செய்யட்டும்.
16 பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும்.
யோசேப்பு தனது சகோதரர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டான்.
எனவே, எரியும் முட்செடிகளில் இருந்து கர்த்தர் தன்னிடமுள்ள சிறந்தவற்றை யோசேப்பிற்குக் கொடுக்கட்டும்.
17 யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான்.
அவனது இரு மகன்களும் காளையின் கொம்புகளைப் போன்றுள்ளனர்.
அவர்கள் மற்ற ஜனங்களைத் தாக்கிப்
பூமியின் கடைசிவரை தள்ளுவர்!
ஆமாம், மனாசே ஆயிரக்கணக்கான ஜனங்களையும்,
எப்பிராயீம் பத்தாயிரக்கணக்கான ஜனங்களையும் தள்ளியிருக்கிறார்கள்.”
செபுலோன் மற்றும் இசக்காருக்கான ஆசீர்வாதம்
18 மோசே இதனை செபுலோனுக்குச் சொன்னான்:
“செபுலோன், நீ வெளியே போகும்போது மகிழ்ச்சியாய் இரு.
இசக்கார், நீ உன் கூடாரங்களாகிய தாபரத்தில் மகிழ்ச்சியாய் இரு.
19 அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள்.
அவர்கள் அங்கே நல்ல பலிகளை செலுத்துவார்கள்.
அவர்கள் கடலிலிருந்து செல்வங்களையும்
கடற்கரையிலிருந்து பொக்கிஷங்களையும் எடுப்பார்கள்.”
காத்துக்குரிய ஆசீர்வாதம்
20 மோசே இதனைச் சொன்னார்.
“தேவனைப் போற்றுங்கள்.அவர் காத்திற்கு மிகுதியான நாட்டைக் கொடுத்தவர்!
காத் ஒரு சிங்கத்தைப் போன்றவன். அவன் படுத்துக் காத்திருக்கிறான். பிறகு, அவன் தாக்கி மிருகத்தைத் துண்டுகளாகக் கிழிப்பான்.
21 அவன் அவனுக்குரிய சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான்.
அவன் அரசனின் பாகத்தை எடுக்கிறான்.
ஜனங்களின் தலைவர்கள் அவனிடம் வருகிறார்கள்.
கர்த்தர் சொன்ன நல்லவற்றை அவன் செய்கிறான்.
இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சரியானதை அவன் செய்கிறான்.”
தாணுக்குரிய ஆசீர்வாதம்
22 மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்:
“தாண் சிங்கத்தின் குட்டியாக இருக்கிறான்.
அது பாசானிலிருந்து வெளியே குதித்தது.”
நப்தலிக்கான ஆசீர்வாதம்
23 மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்:
“நப்தலி, ஏராளமான நல்லவற்றைப் பெறுவாய்.
கர்த்தர் உன்னை உண்மையாக ஆசீர்வதிப்பார்.
நீ கலிலேயா ஏரி உள்ள நாட்டைப் பெறுவாய்.”
ஆசேருக்கான ஆசீர்வாதம்
24 மோசே ஆசேரைப் பற்றி இதனைச் சொன்னான்:
“மகன்கள் அனைவரிலும், ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆசேர் இருக்கிறான்.
அவன் தனது சகோதரர்களுக்கு பிரியமானவனாக இருக்கட்டும். அவன் தனது கால்களை எண்ணெயில் கழுவட்டும்.
25 உனது வாசல்கள் இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பூட்டுகளைப் பெறட்டும்.
உனது வாழ்நாள் முழுவதும் நீ பலத்தோடு இருப்பாய்.”
மோசே தேவனைப் புகழுகிறான்
26 “யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை!
தேவன் உனக்கு உதவுவதற்காகத் தமது மகிமையோடு மேகங்களின் மேல் சவாரி செய்து வானங்களின் மேல் வருகிறார்.
27 தேவன் என்றென்றும் வாழ்கிறார்.
அவர் உனது பாதுகாப்பான இடம்.
தேவனின் வல்லமை என்றென்றும் தொடரும்!
அவர் உன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்.
உனது பகைவர்கள் உன் நாட்டை விட்டு விலகும்படி தேவன் துரத்துவார்.
அவர், ‘பகைவரை அழித்துப்போடு’ என்று சொல்லுவார்.
28 எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும்.
யாக்கோபின் ஊற்று அவர்களுக்கு உரியதாக இருக்கும்.
அவர்கள் தானியமும், திராட்சை ரசமும் நிறைந்த நாட்டைப் பெறுவார்கள்.
அந்த நாடு மிகுதியான மழையைப் பெறும்.
29 இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்.
வேறு எந்த நாடும் உன்னைப் போன்றில்லை.
கர்த்தர் உன்னைக் காப்பாற்றினார்.
கர்த்தர் உனக்குப் பாதுகாப்பான கேடயத்தைப் போன்றிருக்கிறார்!
கர்த்தர் பலமுள்ள வாளைப் போன்றும் இருக்கிறார்.
உனது பகைவர்கள் உனக்குப் பயப்படுவார்கள்.
நீ அவர்களது பரிசுத்த இடங்களை மிதிப்பாய்!”
மோசே மரணமடைதல்
34 மோசே நேபோ மலைமீது ஏறினான். மோசே மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியிலிருந்து பிஸ்காவின் உச்சிக்குச் சென்றான். இது எரிகோவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு எதிர்புறத்தில் உள்ளது. கர்த்தர் மோசேக்கு கீலேயாத் முதல் தாண்வரையுள்ள அனைத்து நாடுகளையும் காட்டினார். 2 கர்த்தர் அவனுக்கு நப்தலி, எப்பிராயீம், மற்றும் மனாசேயின் நாடுகள் எல்லாவற்றையும் காட்டினார். அவர் அவனுக்கு மத்தியதரைக் கடல் வரையுள்ள யூதா நாடு முழுவதையும் காட்டினார். 3 கர்த்தர் மோசேக்கு பாலைவனத்தையும், பேரீச்ச மரங்களின் நகரம் என்னும் சோவார் முதல் எரிகோவரையுள்ள பள்ளத்தாக்கையும் காட்டினார். 4 கர்த்தர் மோசேயிடம், “நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்த நாடு இதுதான். நான் அவர்களிடம் சொன்னேன் ‘நான் இந்த நாட்டை உங்கள் சந்ததிகளுக்குத் தருவேன். அந்த நாட்டை நீ பார்க்கும்படி செய்வேன். ஆனால் அங்கே உன்னால் போகமுடியாது’” என்று கூறினார்.
5 பின்னர் கர்த்தருடைய தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் மரித்தான். கர்த்தர் மோசேயிடம் இவை நிகழும் என்று சொல்லியிருந்தார். 6 கர்த்தர் மோசேயை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆனால் இன்றுவரை மோசேயின் கல்லறை எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. 7 மோசே மரணமடையும்போது 120 வயதுடையவனாக இருந்தான். அவன் எப்பொழுதும்போல் பலமுள்ளவனாக இருந்தான். அவனது கண்கள் அப்பொழுதும் நன்றாக இருந்தது. 8 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்காக 30 நாட்கள் அழுதனர். அவர்கள் துக்ககாலம் முடியும்வரை மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியில் தங்கினார்கள்.
யோசுவா புதிய தலைவனாகுதல்
9 யோசுவாவின்மேல் மோசே தனது கைகளை வைத்து அவனைப் புதிய தலைவனாக நியமித்திருந்தான். பிறகு நூனின் மகனான யோசுவா ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவிற்குக் கீழ்ப்படியத் தொடங்கினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தவற்றை எல்லாம் அவர்கள் செய்தனர்.
10 இஸ்ரவேல் மோசேயைப் போன்று இன்னொரு தீர்க்கதரிசியைப் பெறவில்லை. கர்த்தர் மோசேயை நேருக்கு நேர் தெரிந்து வைத்திருந்தார். 11 எகிப்து நாட்டில் அற்புதங்களைச் செய்வதற்கு கர்த்தர் மோசேயை அனுப்பினார். பார்வோன், அவனது அதிகாரிகள் மற்றும் எகிப்திலுள்ள அனைத்து ஜனங்களும் அந்த அற்புதங்களைப் பார்த்தனர். 12 மோசே செய்ததுபோன்று வேறு எந்த தீர்க்கதரிசியும் சகல வல்லமையும், பயங்கரமும் கொண்ட செயல்களைச் செய்யவில்லை. அவன் செய்ததை இஸ்ரவேலில் உள்ள எல்லா ஜனங்களும் பார்த்தனர்.
கோப்
145 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன்.
எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
146 கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்!
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
147 நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன்.
நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.
148 உமது வார்த்தைகளைக் கற்பதற்கு
இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்.
149 உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும்.
கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.
150 ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.
151 கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர்.
உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.
152 பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம்,
உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.
ரேஷ்
153 கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும்.
நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
154 கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும்.
நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.
155 தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால்
அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.
156 கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர்.
நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.
157 என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு.
ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
158 நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன்.
கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை.
நான் அதை வெறுக்கிறேன்.
159 பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.
160 கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை.
உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஷீன்
161 எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.
162 கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும்
சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
163 நான் பொய்களை வெறுக்கிறேன்!
நான் அவற்றை அருவருக்கிறேன்!
ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
164 உமது நல்ல சட்டங்களுக்காக
ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165 உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள்.
அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.
166 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
167 நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
168 நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன்.
கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
தௌ
169 கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும்.
நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவனாக்கும்.
170 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
171 நான் துதிப் பாடல்களைப் பாடிக் களிப்படைகிறேன்.
ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.
172 உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும்.
கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
173 என்னருகில் வந்து எனக்கு உதவும்.
ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
174 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன்.
ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.
175 கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும்.
உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.
176 காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன்.
கர்த்தாவே, என்னைத் தேடிவாரும்.
நான் உமது ஊழியன்,
நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.
தேவன் வந்துகொண்டிருக்கிறார்
60 “எருசலேமே! என் வெளிச்சமே! எழு!
உனது வெளிச்சம் (தேவன்) வந்துகொண்டிருக்கிறது.
கர்த்தருடைய மகிமை உன் மேல் ஒளிவீசும்.
2 இப்போது பூமியை இருள் மூடியிருக்கிறது.
ஜனங்கள் இருளில் உள்ளனர்.
ஆனால் கர்த்தர் உன்மேல் ஒளிவீசுகிறார்.
அவரது மகிமை உன்மேல் தோற்றம் தரும்.
3 தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும்.
அரசர்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள்.
4 உன்னைச் சுற்றிப் பார்!
ஜனங்கள் ஒன்றுகூடி உன்னிடம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உனது மகன்கள், வெகு தொலைவிலிருந்து வருகிறார்கள்.
உனது மகள்களும் அவர்களோடு வருகிறார்கள்.
5 “இது எதிர்காலத்தில் நடைபெறும்.
அப்போது, நீ உனது ஜனங்களைக் காண்பாய். உனது முகம் மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கும்.
முதலில் நீ பயப்படுவாய்!
ஆனால் பிறகு நீ கிளர்ச்சியடைவாய்.
கடல்களைத் தாண்டி வரும் ஜனங்களின் கூட்டம் உன் முன் இருக்கும்.
பலநாட்டு ஜனங்களும் உன்னிடம் வருவார்கள்.
6 மீதியான் ஏப்பாத் நாடுகளில் உள்ள ஒட்டகக் கூட்டங்கள் உனது நாட்டைக் கடக்கும்.
சேபாவிலிருந்து நீள வரிசையாக ஒட்டகங்கள் வரும்.
அவர்கள் பொன்னையும் நறுமணப் பொருட்களையும் கொண்டுவருவார்கள்.
ஜனங்கள் கர்த்தரைத் துதித்துப் பாடுவார்கள்.
7 கேதாரிலுள்ள அனைத்து ஆடுகளையும் சேகரித்து ஜனங்கள் உன்னிடம் தருவார்கள்.
நெபாயோத்திலிருந்து அவர்கள் ஆட்டுக் கடாக்களைக் கொண்டுவருவார்கள்.
எனது பலிபீடத்தில் அந்த மிருகங்களை நீங்கள் பலியிடுவீர்கள்.
நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன்.
எனது அற்புதமான ஆலயத்தை
மேலும் நான் அழகுபடுத்துவேன்.
8 ஜனங்களைப் பாருங்கள்!
மேகங்கள் விரைவாக வானத்தைக் கடப்பதுபோன்று அவர்கள் உன்னிடம் விரைந்து வருகின்றனர்.
புறாக்கள் தம் கூடுகளுக்குப் பறந்து போவதுபோல் போகின்றனர்.
9 எனக்காகத் தொலைதூர நாடுகள் எல்லாம் காத்திருக்கின்றன.
பெரிய சரக்குக் கப்பல்களும் பயணத்திற்குத் தயாராக உள்ளன.
அக்கப்பல்கள் தொலை தூர நாடுகளிலிருந்து, உனது பிள்ளைகளைக் கொண்டுவரத் தயாராக உள்ளன.
அவர்கள் பொன்னையும், வெள்ளியையும் தங்களோடு எடுத்து வந்து
உங்கள் தேவனாகிய கர்த்தரும், இஸ்ரவேலின் பரிசுத்தருமானவரை மகிமைப்படுத்துவார்கள்.
கர்த்தர் உனக்காக அற்புதச் செயல்களைச் செய்கிறார்.
10 மற்ற நாடுகளில் உள்ள பிள்ளைகள், உனது சுவர்களை மீண்டும் கட்டுவார்கள்.
அவர்களின் அரசர்கள் உனக்குச் சேவைசெய்வார்கள்.
“நான் கோபமாக இருந்தபோது, நான் உன்னைக் காயப்படுத்தினேன்.
ஆனால் இப்போது, நான் உன்னிடம் தயவாயிருக்க விரும்புகிறேன்.
எனவே உனக்கு நான் ஆறுதல் செய்வேன்.
11 உனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.
அவை, இரவு அல்லது பகல் எவ்வேளையிலும் மூடப்படாதவை.
நாடுகளும் அரசர்களும் தங்கள் செல்வங்களை உனக்குக் கொண்டுவருவார்கள்.
12 உனக்குச் சேவைசெய்யாத
எந்த நாடும், இராஜ்யமும் அழிக்கப்படும்.
13 லீபனோனில் உள்ள மிகச்சிறந்த பொருட்கள் உனக்குக் கொடுக்கப்படும்.
ஜனங்கள் உனக்கு தேவதாரு, பாய்மரம், புன்னை போன்ற மரங்களைக் கொண்டுவருவார்கள்.
இம்மரங்கள் எனது பரிசுத்தமான இடத்தைக் கட்டவும் மேலும் அழகுபடுத்தவும் பயன்படும்.
இந்த இடம் சிங்காசனத்திற்கு முன்பு உள்ள சிறு நாற்காலிபோல் இருக்கும்.
நான் இதற்கு பெருமதிப்பு கொடுப்பேன்.
14 கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னைக் காயப்படுத்தினார்கள்,
அந்த ஜனங்கள் இப்பொழுது உன் முன்னால் பணிவார்கள்.
கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னை வெறுத்தனர்.
அந்த ஜனங்கள் உன் காலடியில் பணிவார்கள்.
அவர்கள் உன்னை ‘கர்த்தருடைய நகரம்’
‘இஸ்ரவேலுடைய பரிசுத்தமானவரின் சீயோன்’ என்றும் அழைப்பார்கள்.
15 “நீ மீண்டும் தனியாகக் கைவிடப்படமாட்டாய்.
நீ மீண்டும் வெறுக்கப்படமாட்டாய்.
நீ மீண்டும் வெறுமையாக்கப்படமாட்டாய்.
நான் என்றென்றும் உன்னை பெரியவனாக்குவேன்.
நீ என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பாய்.
16 உனக்குத் தேவையான அனைத்தையும் நாடுகள் தரும்.
இது குழந்தை தன் தாயிடமிருந்து பால் குடிப்பதுபோன்று இருக்கும்.
ஆனால் நீ அரசர்களிடமிருந்து செல்வத்தைக் குடிப்பாய்.
பிறகு நீ, அது நான் என்றும் உன்னைக் காப்பாற்றும் கர்த்தர் என்றும் அறிந்துகொள்வாய்.
யாக்கோபின் பெரிய தேவன் உன்னைக் காப்பாற்றுகிறவர், என்பதை நீ அறிந்துகொள்வாய்.
17 “இப்போது உன்னிடம் வெண்கலம் உள்ளது.
நான் உனக்குப் பொன்னைக் கொண்டுவருவேன்.
இப்போது, உன்னிடம் இரும்பு உள்ளது.
நான் உனக்கு வெள்ளியைக் கொண்டுவருவேன்.
நான் உனது மரத்தை வெண்கலமாக மாற்றுவேன்.
நான் உனது கற்களை இரும்பாக மாற்றுவேன்.
நான் உனது தண்டனைகளைச் சமாதானம் ஆக்குவேன்.
ஜனங்கள் இப்போது, உன்னைப் புண்படுத்துகிறார்கள். ஆனால், ஜனங்கள் உனக்காக நல்லவற்றைச் செய்வார்கள்.
18 உனது நாட்டில் வன்முறைபற்றிய செய்திகள் இனி இராது.
உனது நாட்டை ஜனங்கள் மீண்டும் தாக்கி உனக்குள்ளதைப் பறிக்கமாட்டார்கள்.
நீ உனது சுவர்களுக்கு ‘இரட்சிப்பு’ என்றும்
உனது வாசல்களுக்கு ‘துதி’ என்றும் பெயரிடுவாய்.
19 “பகலில் இனி சூரியன் உனக்கு வெளிச்சத்தைத் தராது.
இரவில் சந்திரன் இனி உனக்கு வெளிச்சத்தைத் தராது.
ஏனென்றால், என்றென்றும் கர்த்தரே உனக்கு வெளிச்சமாய் இருப்பார்.
உனது தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
20 உனது சூரியன் மீண்டும் அஸ்தமிக்காது.
உனது சந்திரன் மீண்டும் மறையாது.
ஏனென்றால், கர்த்தரே என்றென்றும் உன் வெளிச்சமாய் இருப்பார்!
உனது துக்கத்திற்குரிய காலம் முடிந்துவிட்டது.
21 “உனது ஜனங்கள் அனைவரும் நல்லவர்கள் ஆவார்கள்.
அந்த ஜனங்கள் பூமியை என்றென்றும் பெறுவார்கள்.
நான் அந்த ஜனங்களைப் படைத்தேன்.
அவர்கள் அற்புதமான செடிகள். நான் அவர்களை எனது கைகளினால் படைத்தேன்.
22 மிகச் சிறிய குடும்பம்கூட மிகப்பெரிய கோத்திரமாக வளரும்.
சிறிய குடும்பங்கள் வலிமை மிகுந்த நாடாகும்.
காலம் சரியாகும்போது நான் சீக்கிரமாய் வருவேன்.
நான் இவற்றையெல்லாம் நடக்கும்படிச் செய்வேன்.”
தொழுநோயாளி குணமடைதல்(A)
8 இயேசு குன்றின்மீதிருந்து கீழிறங்கி வந்தார். ஏராளமான மக்கள் அவரைத் தொடர்ந்தார்கள். 2 அப்பொழுது தொழு நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்பாகப் பணிந்து,, “கர்த்தாவே, நீர் விரும்பினால், என்னைக் குணப்படுத்த முடியும். அவ்வல்லமையைப் பெற்றிருக்கிறீர்” என்று சொன்னான்.
3 இயேசு அவனைத் தொட்டு,, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணம் அடைவாயாக!” என்று சொன்னார். உடனே அந்த மனிதன் தொழுநோயிலிருந்து குணமாக்கப்பட்டான். 4 பின் இயேசு அவனிடம்,, “என்ன நடந்தது என்பதை எவரிடமும் கூறாதே. ஆனால் ஆசாரியரிடம் சென்று உன்னைக் காட்டு. [a] நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் செலுத்தவேண்டிய காணிக்கையை மோசே கட்டளையிட்டபடி செலுத்து. அதுவே நீ குணமடைந்ததை மக்களுக்குக் காட்டும்” என்று கூறி அனுப்பினார்.
வேலைக்காரன் குணமாகுதல்(B)
5 இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். இயேசு அந்நகரத்திற்குள் நுழைந்த பொழுது, படை அதிகாரி ஒருவன் வந்து அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சினான். 6 அந்த அதிகாரி,, “கர்த்தாவே, என் வேலைக்காரன் மிக நோய் வாய்ப்பட்டு வீட்டில் படுத்திருக்கிறான். அவனால் சரீரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. மிகுந்த வலியினால் அவதிப்படுகிறான்” என்று சொன்னான்.
7 இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று கூறினார்.
8 அதற்கு அந்த அதிகாரி,, “கர்த்தாவே, நீர் என் வீட்டிற்குள் வருமளவிற்கு நான் மேலானவனல்ல. நீர் செய்யவேண்டுவதெல்லாம், என் வேலைக்காரன் குணமடையட்டும் என்று கட்டளையிடுவது மட்டுமே. அப்போது அவன் குணம் அடைவான். 9 நான் என்னிலும் அதிகாரம் மிக்கவர் கீழ்ப் பணிபுரிகிறேன். என் அதிகாரத்திற்குக் கீழும் படைவீரர்கள் உள்ளனர். நான் ஒரு வீரனிடம் ‘போ’ என்றால், அவன் போகிறான். மற்றொரு வீரனிடம் ‘வா’ என்றால், அவன் வருகிறான். நான் என் வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால், அவன் அதைச் செய்கிறான். (அதைப் போலவே நீரும் வல்லமை பெற்றவர் என்பதை நான் அறிவேன்)” என்றான்.
10 இதைக் கேட்ட இயேசு வியப்படைந்தார். தன்னுடன் இருந்த மக்களிடம் இயேசு,, “உண்மையைச் சொல்லுகிறேன், நான் பார்த்த மனிதர் அனைவரிலும், இஸ்ரவேலிலும் கூட, இவனே அதிக விசுவாசம் உடையவன். 11 பலர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருடன் அமர்ந்து பரலோக இராஜ்யத்தில் உணவு உண்பார்கள். 12 ஆனால் பரலோக இராஜ்யத்தை அடைய வேண்டியவர்களான யூதர்களோ வெளியே இருட்டில் எறியப்படுவார்கள். அங்கு அவர்கள் பற்களைக் கடித்துக் கூக்குரலிடுவார்கள்” என்று கூறினார்.
13 பிறகு இயேசு அதிகாரியிடம்,, “வீட்டிற்குச் செல். நீ எவ்வாறு விசுவாசித்தாயோ அவ்வாறே உன் வேலைக்காரன் குணமாவான்” என்று சொன்னார். அந்த நேரத்திலேயே அந்த அதிகாரியின் வேலைக்காரன் குணமாக்கப்பட்டான்.
இயேசு அநேகரைக் குணமாக்குதல்(C)
14 இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். அங்குப் பேதுருவின் மாமியார் அதிகக் காய்ச்சலுடன் படுத்திருந்ததைக் கண்டார். 15 இயேசு அவளது கையைத் தொட்டார். உடனே அவளது காய்ச்சல் நீங்கியது. பின்னர் அவள் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தாள்.
16 அன்று மாலை, பிசாசு பிடித்த பல மக்களை அவரிடம் அழைத்து வந்தனர். இயேசு தமது வார்த்தையினால் அப்பிசாசுகளைத் துரத்தி, வியாதியாய் இருந்த அனைவரையும் குணமாக்கினார்.
17 ,“அவர் எங்களது நோய்களைத் தீர்த்தார்;
பிணிகளை நீக்கினார்” (D)
என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடந்தேறும்படியாக இயேசு இவற்றைச் செய்தார்.
இயேசுவைப் பின்தொடர்தல்(E)
18 அனைத்து மக்களும் தன்னைச் சுற்றி இருப்பதை இயேசு கண்டார். எனவே, இயேசு தன் சீஷர்களிடம் ஏரியின் மறு கரைக்குச் செல்லுமாறு கூறினார். 19 பின் வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து,, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான்.
20 அதற்கு இயேசு,, “நரிகள் தாம் வாழ குழிகளைப் பெற்றுள்ளன. பறவைகள் தாம் வாழ கூடுகளைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதகுமாரனுக்குத் தலை சாய்க்க ஓரிடமும் இல்லை” என்று கூறினார்.
21 இயேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான்.
22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்” என்றார்.
இயேசு ஒரு புயலை நிறுத்துதல்(F)
23 இயேசு ஒரு படகில் ஏறினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். 24 படகு கரையை விட்டுப் புறப்பட்ட பின்னர், கடலில் மிகப் பலமான புயல் உருவானது. படகை அலைகள் சூழ்ந்தன. ஆனால், இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். 25 அவரது சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினார்கள். அவர்கள்,, “ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும். இல்லையேல் நாங்கள் மூழ்கிவிடுவோம்!” என்று சொன்னார்கள்.
26 இயேசு அவர்களிடம்,, “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது.
27 படகிலிருந்தவர்கள் வியப்புற்று,, “எப்படிப்பட்ட மனிதர் இவர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறி வியப்படைந்தனர்.
இருவரிடமிருந்து பிசாசுகளை விரட்டுதல்(G)
28 இயேசு கெதரேனே மக்கள் வசிக்கும் ஏரியின் மறு கரையை வந்தடைந்தார். அங்கு இருவர் இயேசுவிடம் வந்தனர். அவர்களுக்குப் பிசாசுகள் பிடித்திருந்தன. அவர்கள் இருவரும் கல்லறைகள் இருக்குமிடத்தில் வாழ்ந்தனர். மிக அபாயமானவர்கள் அவர்கள். எனவே, மக்கள் அவர்கள் வசித்த கல்லறைகளுக்கு அருகில் சென்ற பாதைகளை உபயோகிக்க இயலவில்லை. 29 இயேசுவிடம் வந்த அவ்விருவரும்,, “தேவகுமாரனே, எங்களிடமிருந்து என்ன வேண்டும்? தக்க சமயத்திற்கு முன்பாகவே எங்களைத் துன்புறுத்த வந்தீரோ?” என்று சத்தமிட்டனர்.
30 அந்த இடத்திற்கு அருகில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துக்கொண்டிருந்தன. 31 அவர்களைப் பிடித்திருந்த பிசாசுகள் இயேசுவிடம்,, “இவர்களை விட்டு எங்களை வெளியேற்றுவதானால், தயவுசெய்து நாங்கள் அந்த பன்றி கூட்டத்திற்குள் செல்லவிடுங்கள்” என்று கெஞ்சின.
32 இயேசு பிசாசுகளிடம்,, “செல்லுங்கள்” என்றார். உடனே, அப்பிசாசுகள் அவர்களை விட்டு நீங்கி பன்றி கூட்டத்திற்குள் சென்றன. பிறகு, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் குன்றிலிருந்து கீழிறங்கி ஏரிக்குள் ஓடின. எல்லாப் பன்றிகளும் நீரில் மூழ்கின. 33 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் நகர மக்களிடம் பிசாசு பிடித்திருந்த இருவருக்கும் பன்றிகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கூறினார்கள். 34 பிறகு, அந்த நகர மக்கள் அனைவரும் இயேசுவைக் காணச் சென்றனர். இயேசுவைக் கண்ட மக்கள், அவர்களது இடத்தைவிட்டு அவரை விலகிச் செல்லுமாறு கெஞ்சினர்.
2008 by World Bible Translation Center