Chronological
கர்த்தரை நினை
11 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது
நீங்கள் அன்பு கொள்ளவேண்டும். நீங்கள் பின்பற்றுவதற்காக தேவன் உங்களுக்குக் கூறியவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் நீங்கள் அவரது சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். 2 உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த பெருஞ் செயல்களை நினைத்துப் பாருங்கள். அந்த மகா காரியங்களைக் கண்டு, அவற்றைக் கடந்து வந்தவர்கள் நீங்களே, உங்கள் குழந்தைகளல்ல. உங்களுக்குத்தான் தெரியும், கர்த்தருடைய மகத்துவத்தைப் பார்த்தவர்கள் நீங்கள், கர்த்தருடைய வலிமையைக் கண்ணாரப் பார்த்துள்ளீர்கள். கர்த்தருடைய ஆற்றல் நிறைந்த செயல்களைப் பார்த்தவர்கள் நீங்கள். 3 கர்த்தருடைய அற்புதங்களைப் பார்த்தவர்கள் நீங்கள் தான், உங்கள் பிள்ளைகள் அல்ல. எகிப்தின் இராஜாவாகிய பார்வோனுக்கும் அவனது நாடு முழுவதிற்கும் கர்த்தர் செய்த அடையாளங்களையும், செயல்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள். 4 எகிப்தின் படையும், அவர்களது குதிரைகளும், இரதங்களும் போரில் உங்களைத் தொடர்ந்து வரும்போது, கர்த்தர் அவர்களைச் செங்கடலின் தண்ணீரில் மூடியதை உங்கள் பிள்ளைகள் அல்ல, நீங்கள்தான் பார்த்தீர்கள். அவர்களை முழுவதுமாக அழித்ததை நீங்கள் பார்த்தீர்கள். 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இன்று இவ்விடத்திற்கு வரும் வரைக்கும், அன்றும் பாலைவனத்தில் உங்களுக்காகச் செய்த எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நீங்கள்தான். உங்கள் பிள்ளைகள் அல்ல. 6 ரூபன் குடும்பத்தைச் சார்ந்த எலியாப் என்பவனின் மகன்களான தாத்தான், அபிராம் இருவருக்கும் கர்த்தர் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். பூமி தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கியதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள், அவ்விருவரின் குடும்பங்களையும், கூடாரங்களையும் அவர்களது விலங்குகள், வேலையாட்கள் எல்லாவற்றையும் பூமி விழுங்கியது. 7 கர்த்தர் செய்த இந்தப் பெரிய செயல்களை எல்லாம் உங்களுடைய பிள்ளைகளல்ல, நீங்களே கண்டீர்கள்.
8 “ஆகவே நான் இன்று உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பின் நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆவீர்கள். அதனால், யோர்தான் ஆற்றினைக் கடந்து, நீங்கள் நுழையத் தயாராகவுள்ள இந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்வீர்கள். 9 பின் நீங்கள் அந்தத் தேசத்தில் நீண்ட வாழ்க்கை வாழலாம். இந்த தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்துள்ளார். இந்த தேசம் பாலும் தேனும் ஓடக் கூடிய செழிப்பும், எல்லா வளங்களும் நிறைந்த நாடாகவும் இருக்கும். 10 நீங்கள் சுதந்திரமாக வசிக்கப்போகும் இந்த தேசம் நீங்கள் விட்டு வந்த எகிப்து நாட்டைப் போல் இருக்காது. எகிப்தில் நீங்கள் விதை விதைத்தீர்கள். தண்ணீர்ப் பாய்ச்சும்படி உங்கள் கால்களால் மிதித்து, வாய்க்காலில் இருந்து உங்கள் தோட்டங்களுக்கு நீங்கள் தண்ணீர்ப் பாய்ச்சினதுபோல உங்கள் வயல்களுக்கும் தண்ணீர் இறைத்து வந்தீர்கள். 11 ஆனால், இப்போது வசிக்கப்போகின்ற இந்த நிலம் அப்படிப்பட்டது அல்ல. இஸ்ரவேலில் மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ளன. அந்த நிலம் வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம். 12 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிக்கப்போகும் நிலத்தைக் காத்து வருகிறார். வருடத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ஆண்டு முழுவதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கவனித்து வருகிறார்.
13 “கர்த்தர், ‘நான் இன்று உங்களுக்குத் தரும் கட்டளைகளைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்தி, அவருக்கு அடி பணிந்து, முழு மனதோடு ஆத்ம திருப்தியுடன் சேவை செய்யவேண்டும். நீங்கள் அப்படிச் செய்தீர்களென்றால், 14 உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையை ஏற்ற பருவத்தில் பெய்யச் செய்வேன். நீங்கள் உங்கள் தானியங்களைச் சேர்க்கவும், எண்ணெய் வித்துக்களைப் பெருக்கவும், புதிய திராட்சைரசத்தைப் பெறவும், அதற்கான காலத்தில் உங்கள் தேசத்தில் இலையுதிர் காலத்தில் முன்மாரியையும் வசந்த காலத்தில் பின்மாரியையும் நான் அனுப்புவேன். 15 உங்கள் கால் நடைகளுக்குத் தேவையான புல்வெளிகளை செழிப்படையச் செய்வேன். உங்களுக்கு உண்ணும்படி எராளமான ஆகாரம் இருக்கும்’ என்று கூறுகிறார்.
16 “ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் இருதயம் சந்தேகப்பட்டு விலகாதபடி இருங்கள். உங்களின் வழியிலிருந்து விலகி அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்யாதீர்கள். 17 அப்படிச் செய்தீர்களானால், பின் கர்த்தர் உங்கள் மீது கடுங்கோபம் கொள்வார். மழை பெய்யாது, உங்கள் நிலம் எவ்வித விளைச்சலையும் தராதபடி வானத்தை அடைத்துவிடுவார். அதனால் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த நல்ல தேசத்திலேயே நீங்கள் விரைவில் மரித்து போவீர்கள்.
18 “நான் இன்று உங்களுக்குத் தருகிற இந்தக் கட்டளைகளை எப்போதும் உங்கள் உள்ளங்களில் வையுங்கள். அவற்றை எழுதுங்கள், கட்டுங்கள், அணிந்துகொண்டு, அல்லது உங்கள் கண்களில் படும்படி எப்போதும் உங்களின் ஞாபகத்தில் இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். 19 இந்தச் சட்டங்களை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். உங்கள் வீடுகளில் இருக்கும்போதும், வீதிகளில் நடக்கும்போது, தூங்குவதற்கு முன்பும், எழுந்தப் பின்பும், எப்போதும் இவற்றைப் பற்றியேப் பேச வேண்டும். 20 உங்கள் வீட்டுக் கதவுகள் மீதும், வாசல்களிலும் இந்தக் கட்டளைகளை எழுதி வையுங்கள். 21 அப்போது உங்கள் முற்பிதாக்களிடம் கர்த்தர் கொடுத்த வாக்கின்படி உங்களுக்குச் சுதந்திரமாக வாழக் கொடுத்த நிலத்தில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழலாம். இந்த பூமியின்மேல் வானம் உள்ளளவும் நீங்கள் நீண்டகாலம் வாழலாம்.
22 “நான் உங்களிடம் கூறியவற்றைப் பின்பற்றுவதிலும், ஒவ்வொரு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்துங்கள். அவரது எல்லா வழிகளையும் பின்பற்றுங்கள். அவருக்கு உண்மையானவர்களாய் இருங்கள். 23 பின் உங்கள் தேசத்திற்குள் செல்லும்போது கர்த்தர் உங்களுக்கு எதிரான மற்ற இனத்தவர்களை வெளியே துரத்திவிடுவார். உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்தவர்களிடமிருந்து அந்த நிலத்தை நீங்கள் கைப்பற்றிவிடலாம். 24 உங்கள் பாதங்கள் படும் இடமெல்லாம் உங்களுடையதாகும். உங்களின் நிலமானது தெற்கே பாலைவனம் முதல் வடக்கே லீபனோன் வரை விரிந்து செல்லும். கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி மத்தியதரைக் கடல் வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லையாக இருக்கும். 25 உங்களை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்த நிலத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் அந்த ஜனங்களைப் பயமடையச் செய்வார். அதைத்தான் கர்த்தர் உங்களுக்கு ஏற்கெனவே வாக்களித்திருக்கிறார்.
இஸ்ரவேலர் தெரிந்துகொள்ள வேண்டிய ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள்
26 “நீங்கள் தெரிந்துகொள்ள நான் இன்று உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறேன். இதோ! ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். இவற்றில் நீங்கள் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 27 நான் இன்று உங்களுக்குக் கூறியிருக்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தர் தந்த கட்டளைகளுக்கு செவிகொடுத்து கீழ்ப்படிந்து, அவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஆசீர்வாதம் பெறுவீர்கள். 28 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும், பின்பற்றுவதையும் மறுத்தால் சாபத்தைப் பெறுவீர்கள். ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டபடி வாழ்வதை நிறுத்திவிடாதீர்கள். அதுமட்டுமின்றி அந்நிய பொய்த் தெய்வங்ளைப் பின்பற்றாதிருங்கள். கர்த்தரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது.
29 “உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள். பின்பு ஏபால் மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு சாபங்களைக் கூற வேண்டும். 30 இந்த மலைகள் யோர்தான் நதியின் மறுபக்கத்தில் கானானியர் குடியிருக்கின்ற நாட்டில் உள்ளன. இந்த மலைகள் மேற்கு நோக்கி ஓக் மரங்களுக்கு அதிக தொலைவில் இல்லாமல் கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமவெளிக்கு அருகே இருக்கின்றன. 31 நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற நிலத்தைச் சென்றடைவீர்கள். அங்கு சுதந்திரமாகக் குடியிருப்பீர்கள். இந்த நிலத்தில் நீங்கள் வாழும்போது, 32 நான் இன்று உங்களுக்குத் தருகின்ற சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து எச்சரிக்கையுடன் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
தேவனை ஆராதிப்பதற்கான இடம்
12 “இவைகளே தேவனுடைய கட்டளைகளும், நியாயங்களும் ஆகும். அவற்றை நீங்கள் சுதந்திரமாக வாழப் போகின்ற தேசத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இந்த பூமியில் நீங்கள் வாழ்கின்ற நாள்வரைக்கும் இந்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து கவனமாக அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். கர்த்தரே! உங்கள் முற்பிதாக்களுடைய தேவன் ஆவார்! அதனாலேயே அவர்களுக்கு அளித்த வாக்கின்படி இந்த சுதந்திர தேசத்தை உங்களுக்குத் தருகிறார். 2 இப்போது வசிக்கின்ற உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து அந்த தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். அந்த ஜனங்கள் எங்கெல்லாம் அவர்களது தெய்வங்களை தொழுது கொண்டார்களோ, அந்த இடங்களையெல்லாம், முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அந்த இடங்களெல்லாம் மலைகள் மீதும், மேடுகள் மீதும், பசுமையான மரங்களுக்குக் கீழும் உள்ளன. 3 நீங்கள் அவர்களது பலிபீடங்களை இடித்து, அவர்கள் ஞாபகார்த்த கற்களையும் தூள் தூளாக தகர்த்திட வேண்டும். அவர்களது அஷேரா என்ற ஸ்தம்பத்தையும், பொய்த் தெய்வங்களின் சிலைகளையும் வெட்டி. இவ்வாறு அந்த இடத்திலிருந்து அவைகளின் பெயரை நிர்மூலமாக்க வேண்டும்.
4 “அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்கிற அதே முறையை நீங்களும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யக் கூடாது. 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகல கோத்திரங்களின் நடுவில் ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்துத் தருவார். கர்த்தர் அவரது நாமத்தை அவ்விடத்திற்கு வைப்பார். அந்த விசேஷ இருப்பிடம் தேவனுடையதாகும். நீங்கள் எல்லோரும் அந்த இடத்திற்குச் சென்றே கர்த்தரை ஆராதிக்க வேண்டும். 6 அங்கே நீங்கள் வரும்போது நெருப்பினால் வேகவைத்த தகனபலியையும், உங்கள் காணிக்கைகளையும். உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுளையும், உங்களின் காணிக்கைகளையும், கர்த்தருக்குக் காணிக்கைகளாக வாக்கு கொடுத்த பொருட்களையும், கர்த்தருக்குக் கொடுக்க விரும்பும் பொருட்களையும் உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு, மாடுகளில் தலைஈற்றுகளையும் கொண்டு வரவேண்டும். 7 நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், அந்த இடத்திற்கு வந்து உண்டு மகிழவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருந்து மகிழ்ச்சியைத் தருவார். அந்த இடத்தில் நீங்கள் எல்லோரும் உங்களது மகிழ்ச்சியையும், உங்கள் கைகளால் செய்த பொருட்களையும், ஒருவருக்கொருவர் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும், நீங்கள் பெற்றுள்ள எல்லாப் பொருட்களையும், அவர் உங்களுக்குத் தந்ததையும் நினைத்துப் பார்பீர்களாக.
8 “ஆனால் நாம் அனைவரும் தொழுது வந்தது போல் நீங்கள் தொழுதுகொள்வதைத் தொடரக் கூடாது. இதுவரையிலும் ஒவ்வொருவரும் தேவனை தாங்கள் விரும்பின வழியில் தொழுது கொண்டு வந்தீர்கள். 9 ஏனென்றால் நாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தருகின்ற, அமைதியான, அந்த தேசத்திற்குள் இன்னும் அடி எடுத்து வைக்கவில்லை. 10 ஆனால் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துசென்று அந்த தேசத்தில் வாழலாம். அந்த சுதந்திர தேசத்தை கர்த்தர் உங்களுக்குத் தருவார். அங்கே உங்கள் எதிரிகள் அனைவரையும் விலக்கி கர்த்தர் உங்களை இளைப்பாறச் செய்வார். அங்கே நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். 11 பின் கர்த்தர் அவருக்கான சிறந்த வீட்டினை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பார். அவ்விடத்திற்கு கர்த்தர் அவரது பெயரை வைப்பார். அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துப் பொருட்களையும், கொண்டுவர வேண்டும். நெருப்பினால் வேகவைத்த தகனபலிகளையும், உங்கள் காணிக்கைகளையும், உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுகளையும், உங்கள் காணிக்கைகளையும், கர்த்தருக்கு வாக்குப் பண்ணின பொருட்களையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளின் தலைஈற்றுகளையும், கொண்டுவர வேண்டும். 12 கர்த்தருடைய ஆலயத்திற்கு நீங்களும், உங்கள் பிள்ளைகளும், வேலைக்காரர் அனைவரும் வந்து, உங்கள் நகரங்களில் வசிக்கும் எந்தவொரு சொத்தும் சுதந்திரமும் இல்லாத லேவியருடன்கூடி, வந்திருந்து ஒருவொருக்கொருவர் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு மகிழ்ச்சியாக இருங்கள். 13 நீங்கள் கண்ட இடங்களில் எல்லாம் உங்கள் விருப்பப்படி தகனபலிகளை செலுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். 14 உங்கள் கோத்திரங்கள் நடுவில் அவரது விசேஷ இடத்தினை கர்த்தர் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அந்த இடத்தில் மட்டுமே நீங்கள் உங்கள் பலிகளைச் செலுத்தி, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் அங்கேயே செய்யவேண்டும்.
15 “நீங்கள் எங்கெல்லாம் வசிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் நீங்கள் விரும்பிய வெளிமான், கலைமான் போன்ற விலங்குகளை அடித்து சாப்பிடலாம். நீங்கள் உங்கள் விருப்பப்படி எவ்வளவு இறைச்சி வேண்டுமானாலும் உண்ணலாம். அந்த அளவிற்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். யார் வேண்டுமானாலும் அவர்கள் சுத்தமானவர்களாக தேவனை தொழுதுகொள்ள தகுதி உடையவர்களானாலும் சரி, சுத்தமின்றி தேவனை தொழுதுகொள்ள தகுதி இல்லாதவராயினும் சரி, இறைச்சி உணவை சாப்பிடலாம். 16 ஆனால் நீங்கள் இரத்தத்தை மாத்திரம் உண்ணவே கூடாது. அதைத் தண்ணீரைப் போல் தரையிலேயே ஊற்றிவிடவேண்டும்.
17 “நீங்கள் வசித்து வரும் வீடுகளில் இவற்றை நீங்கள் உண்ணவேண்டாம். அந்தப் பொருட்கள் பின்வருமாறு: தேவனுக்காக கொடுக்க இருக்கும் உங்களது தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலைஈற்றுகளையும், தேவனுக்குத் தருவதாக வேண்டிக் கொண்டவற்றையும், தேவனுக்காக நீங்கள் கொடுக்க விரும்பும் வேறு எந்தப் பொருட்களையும், அல்லது உங்களின் அன்பளிப்புகளையும், உங்கள் வீடுகளில் உண்ணக்கூடாது. 18 நீங்கள் இவற்றையெல்லாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய இடத்திலேயே உண்ண வேண்டும். நீங்கள் உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது எல்லா வேலைக்காரர்கள், மற்றும் உங்கள் நகரங்களில் வசிக்கும் லேவியர்களையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த இடத்தில் உண்டு மகிழவேண்டும். அந்த இடத்தில் உங்களுக்குள் எல்லோருடனும் ஒன்றுபட்ட மகிழ்ச்சியாலும் அங்கு உங்கள் கைகளால் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷப்படுவீர்களாக. 19 எப்போதும் உங்களது இந்த உணவுகளில் லேவியர்களுக்கு பங்கு அளிப்பதில் தவறாதீர்கள். உங்கள் தேசத்தில் நீங்கள் வாழும்வரை இதை நீங்கள் செய்யவேண்டும்.
20-21 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்ததுபோல் உங்கள் நாட்டின் எல்லைகளை விரிவாக்குவார். அவர் அவ்வாறு செய்யும்போது கர்த்தர் அவருக்காகத் தேர்ந்தெடுத்த ஆலயங்கள் நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து தொலைவில் இருக்கலாம். அவ்வாறு தொலை தூரம் இருந்தால் நீங்கள் வரும் வழியில் பசி ஏற்பட்டு இறைச்சி உண்ண ஆசைப்பட்டால் அங்கு உங்களுக்கு கிடைக்கும் எந்த இறைச்சியையும் நீங்கள் உண்ணலாம். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளில் எதை வேண்டுமானாலும் நான் உங்களுக்கு இட்ட கட்டளையின்படி அதனை அடித்து உண்ணலாம். இவ்வாறு நீங்கள் விரும்பிய இடங்களில் உண்ணலாம். 22 வெளிமானையும், கலைமானையும், உண்பது போன்றே நீங்கள் அதையும் உண்ணலாம். யாவரும் அதாவது தேவனை தொழுதுகொள்ள தகுதியான சுத்தமானவர்களும், தொழுதுகொள்ளத்தகாத அசுத்தமானவர்களும் அதை உண்ணலாம். 23 ஆனால் அவற்றின் இரத்தத்தை உண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள், ஏனென்றால் உயிரானது இரத்தத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த உயிர் இருக்கும்வரை இறைச்சியை உண்ணக்கூடாது. 24 எனவே நீங்கள் இரத்தத்தை உண்ணாமல், தண்ணீரை போல் தரையிலே ஊற்றிவிட வேண்டும். 25 ஆகவே இரத்தத்தை உண்ணக் கூடாது. கர்த்தர் உங்களுக்குச் சொன்ன சரியானவற்றையே நீங்கள் செய்யவேண்டும். பின் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் நல்லவைகளே நடக்கும்.
26 “தேவனுக்காக ஏதேனும் சிறப்பான வாக்குறுதிகளைக் கொடுக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அந்த ஆலயத்திற்கே செல்லவேண்டும். அதுமட்டுமின்றி, தேவனுக்காக நீங்கள் செய்த சிறப்பு வாக்குறுதியை தேவனுடைய ஆலயத்திற்கே சென்று செலுத்த வேண்டும். 27 அங்கேயே நீங்கள் உங்களின் தகன பலிகளையும் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்திலேயே இறைச்சியோடும், இரத்தத்தோடும் பலியிட வேண்டும். நீங்கள் செய்ய விரும்புகின்ற மற்ற பலிகளின் இரத்தமும், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின் மேலே ஊற்றப்பட வேண்டும். பின், நீங்கள் அந்த மாமிசத்தை உண்ணலாம். 28 நான் கூறும் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து பின்பற்றுவதில் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பாக நல்லவற்றையும், நேர்மையானவற்றையும் நீங்கள் செய்வதனால் நீங்களும், உங்களுக்குப் பின்வரும் சந்ததியினரும் என்றென்றைக்கும் எல்லாவற்றிலும் நல்லதையே பெறுவீர்கள்.
29 “உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து, நீங்கள் சுதந்திரமாக வசிக்கப் போகிற தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக அந்த எதிரின ஜனங்களை அழித்துவிடுவார். நீங்கள் அவர்களை வெளியே துரத்திவிட்டு அங்கே வாழப் போகிறீர்கள். 30 அவ்வாறு நடந்ததற்கு பின்பு நீங்களும் எச்சரிக்கையாய் இருங்கள். அந்த ஜனங்களை அழித்துவிடுவீர்கள். அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ளும் வலையில் சிக்கி விடாதீர்கள்! அந்த பொய்த்தெய்வங்களிடம் உதவிக்காக செல்லாமல் எச்சரிக்கையாய் இருங்கள். ‘அவர்கள் அந்த பொய்த் தெய்வங்களை தொழுதுகொண்டார்கள். ஆகவே நானும், அதைப் பின்பற்றி தொழுதுகொள்ளுவேன்!’ என்று சொல்லிவிடாதீர்கள். 31 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அதைப்போன்று செய்துவிடாதீர்கள். அந்த விதத்தில் நமது தேவனை தொழுதுகொள்ள வேண்டாம். ஏனென்றால் கர்த்தர் அருவருக்கின்ற எல்லா தீய செயல்களையும், அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களது பிள்ளைகளைக்கூட அந்த பொய்த் தெய்வங்களுக்காக தீயிலிட்டு பலியிட்டனர்!
32 “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட ஒவ்வொன்றையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். அவற்றில் எதையும் கூட்டவோ, அல்லது குறைக்கவோ கூடாது.
பொய்த் தீர்க்கதரிசிகள்
13 “ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவன் ஒருவன் உங்களிடம் வந்து, ஒரு அடையாளத்தையோ அல்லது ஒரு அற்புதத்தையோ காட்டுவதாகச் சொல்லுவான். 2 அவன் சொன்னபடி அந்த அடையாளமோ, அற்புதமோ, உண்மையிலேயே நடந்திடலாம். நீங்கள் அறிந்திராத அந்நிய தெய்வங்களைச் சேவிப்போம் என்று அவன் உங்களிடம் சொல்வான். 3 அந்த தீர்க்கதரிசி அல்லது கனவை விளக்கிக் கூறுபவன் சொல்லுவதைக் கேட்காதீர்கள் ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும், கர்த்தர் மீது அன்பு செலுத்துகின்றீர்களா என்பதை அறிய விரும்புகிறார். 4 உங்கள் தேவனாகிய கர்த்தரை மதித்து அவரையே பின்பற்ற வேண்டும்! கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குச் சொன்னவற்றையேச் செய்யுங்கள். கர்த்தருக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதீர்கள்! 5 அதுமட்டுமின்றி, நீங்கள் அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவனைக் கொல்ல வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களைத் திசை திருப்பப் பேசினான். உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழும்படி கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து உங்களை வெளியே இழுக்க அந்த ஆள் முயற்சித்தான். எனவே நீங்கள் அவனைக் கொன்று அந்தத் தீமையை உங்களிடமிருந்து வெளியேற்றுங்கள்.
6 “யாராவது ஒருவன், அது உங்கள் உடன் பிறந்த சகோதரன், உங்கள் மகன், உங்கள் மகள், நீங்கள் நேசிக்கின்ற உங்கள் மனைவி அல்லது உங்கள் உயிர் நண்பன், இவர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் ஒருவர் உங்களிடம் வந்து, ‘நாம் போய் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யலாம்’ என்று அந்நிய தெய்வங்களை நீங்கள் வழிபட இரகசியமாக கூறலாம். (இந்தத் தெய்வங்கள் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் தெரியவே தெரியாது. 7 அந்தத் தெய்வங்கள் உங்களைச் சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கின்ற ஜனங்களின் தெய்வங்களாகும். அவைகள் உங்கள் சமீபத்திலும் தூரத்திலும் உள்ளன.) 8 நீங்கள் உங்களைத் திசைத்திருப்பக் கூறியவனின் பேச்சை ஒத்துக்கொள்ளாதீர்கள். அவன் பேச்சைக் கேட்காதீர்கள். அவனுக்கு இரக்கம் காட்டாதீர்கள். அவனை ஒளித்து வைக்காதீர்கள். அவன் தப்பும்படி விட்டுவிடக் கூடாது. 9-10 அதற்குப் பதில் அவனை நீங்கள் கொன்றுவிட வேண்டும்! கற்களால் அவனை அடித்துக் கொல்லுங்கள், அவ்வாறு செய்வதில் நீங்கள் முதன்மையாக இருங்கள். பின் அவன் மரிக்கும்வரை மற்ற எல்லா ஜனங்களும் அவன்மீது கற்களை எறிய வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை விலக்கி இழுக்க முயன்றான். எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை வெளியே கொண்டுவந்த உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை வெளியே இழுக்க முயற்சி செய்தவன் அவன் 11 பின் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், அதைக் கேட்டுப் பயந்து உங்களின் நடுவே இப்படிப்பட்ட தீய காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
அழிக்க வேண்டிய நகரங்கள்
12 “உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழ்வதற்கான நகரங்களைத் தந்துள்ளார். சில நேரங்களில் நீங்கள் அந்த நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தைப் பற்றித் தீய செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் கேட்கும் அந்தச் செய்தியானது, 13 உங்கள் தேசத்தைச் சார்ந்த சில தீயவர்கள் அவர்களது நகர ஜனங்களை தீயச் செயல்களைச் செய்யுமாறு தூண்டினார்கள் என்பதாகும். அவர்கள் அவர்களது நகர ஜனங்களிடம் ‘அந்நிய தெய்வங்களை தொழுது கொண்டு சேவை செய்வோம் வாருங்கள்!’ என்று அழைத்த செயலே அதுவாகும். (அந்தத் தெய்வங்கள் நீங்கள் இதற்கு முன் அறிந்திராத அந்நிய தெய்வங்கள்.) 14 இப்படிப்பட்டச் செய்திகளை நீங்கள் கேட்டீர்கள் என்றால், அனைவரும் அதை நன்றாகக் கேட்டு ஆராய வேண்டும். நீங்கள் விசாரித்தது உண்மை என்றால், அப்படிப்பட்ட எரிச்சலூட்டும் காரியம் உங்கள் நடுவே நடந்தது உண்மையென்று கண்டீர்கள் என்றால், 15 பின் அந்த நகர ஜனங்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். நீங்கள் அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும். அவர்களது விலங்குகளையும் கூட கொன்றுவிடவேண்டும். அந்த நகரத்தை முழுவதுமாக நாசமாக்கி அழித்து விட வேண்டும். 16 பின் நீங்கள் அங்கு கைப்பற்றிய அனைத்துப் பொருட்களையும், விலையுயர்ந்தப் பெருட்களையும், நகரத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டுவந்து நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும், தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யும் தகனபலியாகும், அந்த நகரமானது வெறும் வெற்றிடமாக மண்மேடாகவே என்றென்றும் இருக்கும். அந்த நகரம் மீண்டும் கட்டப்படவே கூடாது. 17 அந்த நகரில் உள்ள எல்லாப் பொருளும் அழிக்கப்படுவதற்காக தேவனிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆகையால் நீங்கள் அவற்றில் எந்த ஒரு பொருளையும் உங்களுக்காக வைத்துக்கொள்ளக் கூடாது. இப்படி நீங்கள் செய்வீர்கள் என்றால் கர்த்தர் உங்கள் மீதுள்ள கடுங்கோபத்தை நிறுத்திவிடுவார். கர்த்தர் உங்களுக்கு இரக்கம் காட்டுவார். உங்களுக்காக வருந்துவார். அவர் உங்கள் தேசத்தை உங்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி வளார்ச்சி அடையச் செய்வார். 18 இவைகள் நடக்க வேண்டுமென்றால் நான் இன்று உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறியதைக் கேட்டு அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லும் சரியானவற்றையெல்லாம் நீங்கள் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.
2008 by World Bible Translation Center