Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 1-4

சவுல் மரணத்தை தாவீது அறிதல்

அமலேக்கியரை முறியடித்தபின் தாவீது சிக்லாகிற்குத் திரும்பிச் சென்றான். சவுல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்தது. அங்கே தாவீது இரண்டு நாட்கள் தங்கினான். பின்பு, மூன்றாம் நாளில், ஒரு இளம் வீரன் சிக்லாகிற்கு வந்தான். அவன் சவுலின் முகாமிலிருந்து வந்திருந்தான். அம்மனிதனின் ஆடைகள் கிழிந்திருந்தன. அவனுடைய தலையில் புழுதி படிந்திருந்தது [a] அவன் தாவீதிடம் வந்து நிலத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கினான்.

தாவீது அம்மனிதனைப் பார்த்து, “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான்.

அம்மனிதன் தாவீதிடம், “நான் இஸ்ரவேலரின் முகாமிலிருந்து வருகிறேன்” என்று பதிலுரைத்தான்.

தாவீது அம்மனிதனை நோக்கி, “யார் போரில் வெற்றியடைந்தார் என்பதை தயவு செய்து கூறு” என்றான்.

அம்மனிதன், “நம் வீரர்கள் போரிலிருந்து தப்பி ஓடினார்கள். பலர் யுத்தத்தில் அகப்பட்டு மடிந்தனர். சவுலும் அவனது மகன் யோனத்தானுங்கூட மரித்துவிட்டனர்” என்று பதில் கூறினான்.

தாவீது இளைஞனாகிய அந்த வீரனிடம், “சவுலும் யோனத்தானும் மரித்ததைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.

அந்த இளம் வீரன், “நான் கில்போவா மலைக்குப் போயிருந்தேன். சவுல் தனது ஈட்டியில் சொருகிச் சாய்ந்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பெலிஸ்தியரின் தேர்களும் குதிரை வீரர்களும் சவுலுக்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தனர். சவுல் திரும்பி என்னைப் பார்த்து அழைத்து என்னை யாரென்று கேட்டார். நான் ஒரு அமலேக்கியன் என்பதை அவருக்குக் கூறினேன். அப்போது சவுல், ‘தயவு செய்து என்னைக் கொன்றுவிடு. நான் மிகவும் காயப்பட்டு மரிக்கும் தருவாயில் உள்ளேன்’ என்றார். 10 அவர் அதிகமாகக் காயப்பட்டிருந்ததால், இனி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை நான் மிக நன்கு அறிந்தேன். எனவே நான் அவரைக் கொன்றேன். பின்பு அவரது தலையிலிருந்த கிரீடத்தையும் புயங்களில் இருந்த கடகத்தையும் கழற்றினேன். அவற்றை என் ஆண்டவனாகிய உங்களிடம் கொண்டுவந்துள்ளேன்” என்றான்.

11 அப்போது தாவீது தன் துக்கமிகுதியால் ஆடைகளை கிழித்தான். தாவீதோடிருந்த மனிதர்களும் அவ்வாறே செய்தார்கள். 12 அவர்கள் வருத்தமுற்று அழுது மாலை வரைக்கும் ஏதும் உண்ணவில்லை. சவுலும் அவனது மகன் யோனத்தானும் மரித்துப் போனதால் அவர்கள் அழுதார்கள். தாவீதும் அவனது மனிதர்களும் கொல்லப்பட்டிருந்த கர்த்தருடைய ஜனங்களுக்காகவும் இஸ்ரவேலருக்காகவும் அழுதனர். சவுலும், யோனத்தானும் பல இஸ்ரவேலரும் யுத்தத்தில் கொல்லப்பட்டதற்காக அவர்கள் அழுதனர்.

அமலேக்கியனைக் கொல்ல தாவீது கட்டளை

13 சவுலின் மரணத்தைப்பற்றிக் கூறிய இளம் வீரனிடம் தாவீது பேசினான். தாவீது, “நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?” என்று கேட்டான்.

அந்த இளம் வீரன், “நான் ஒரு அந்நியனின் மகன், நான் ஒரு அமலேக்கியன்” என்றான்.

14 தாவீது அந்த இளம் வீரனிடம், “கர்த்தர் தேர்ந்தெடுத்த, அரசனைக் கொல்வதற்கு நீ ஏன் அச்சம் கொள்ளவில்லை?” என்றான்.

15-16 பின்பு தாவீது அமலேக்கியனை நோக்கி, “உனது மரணத்திற்கு நீயே காரணம். கர்த்தர் தேர்ந்தெடுத்த அரசனைக் கொன்றாய் என்று நீயே கூறினாய். உனது வார்த்தைகளே நீ குற்றவாளி என்று தீர்க்கின்றன” என்று கூறினான். பின்பு தாவீது ஒரு இளம் வேலையாளை அழைத்து அமலேக்கியனைக் கொல்லுமாறு கூறினான். எனவே அந்த இஸ்ரவேல் இளைஞன் அமலேக்கியனைக் கொன்றான்.

சவுல், யோனத்தான் பற்றிய தாவீதின் சோககீதம்

17 சவுலையும் அவனது மகன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான். 18 அப்பாடலை யூதா ஜனங்களுக்குக் கற்பிக்குமாறு தாவீது தனது ஆட்களிடம் கூறினான். அப்பாடல் “வில்” எனப்பட்டது. அது யாசேரின் புத்தகத்தில் உள்ளது.

19 “இஸ்ரவேலே, உன் அழகு உன் மேடுகளில் அழிக்கப்பட்டது.
    ஓ, அந்த வீரர்கள் எப்படி வீழ்ந்தனர்!.
20 அச்செய்தியைக் காத் [b] நகரில் கூறாதே,
    அஸ்கலோனின் தெருக்களில் அதை அறிவிக்காதே.
அதனால் பெலிஸ்திய நகரங்கள் களிப்படையும்!
    அந்த அந்நியர்கள் மகிழக்கூடும்.
21 மழையோ பனியோ கில்போவா மலைகளில் பெய்யாதென நம்புகிறேன்.
    அவ்வயல்களினின்று பயிர்களின் காணிக்கை இனி வராதென நான் நம்புகிறேன்.
வீரர்களின் கேடயங்கள் அங்குத் துருப்பிடித்தன.
    சவுலின் கேடகத்தில் எண்ணெய் பூசப்படவில்லை.
22 வில்லால் பல பகைவரைக் கொன்றான் யோனத்தான்.
    வாளால் அவ்வாறே வெற்றி கண்டான், சவுல்.
இவர்கள் மடிந்த பல வீரரின் இரத்தத்தைச் சிந்த வைத்தனர்!
    வலியோரில் வலிய வீரரையும் துண்டுத் துண்டாக வெட்டினர்.

23 “சவுலும் யோனத்தானும் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி மகிழ்ந்தனர்.
    மரணமும் அவர்களைப் பிரிக்கவில்லை!
அவர்கள் கழுகுகளிலும் வேகமானவர்கள்.
    அவர்கள் சிங்கங்களிலும் பலசாலிகள்.
24 இஸ்ரவேலின் குமாரத்திகளே, சவுலுக்காக அழுங்கள்!
    இரத்தாம்பர ஆடைகளை சவுல் உனக்குத் தந்தான். இன்னும் ஆடைகளில் பொன் வேலைப்பாடுகள் செய்வித்தான்!

25 “போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
    கில்போவா மலையில் யோனத்தான் மடிந்தான்.
26 சகோதரன் யோனத்தானே, மறைந்தாய், வெகுவாய் வருந்துகிறேன்.
    உனது அன்பு பெருமகிழ்வைத் தந்தது. மங்கையரின் நேசத்தைக் காட்டிலும் மாமேன்மையானது உனது அன்பு.
27 போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
    போர்க்கருவி அனைத்தும் அழிந்தனவே.”

தாவீது தனது ஆட்களுடன் எப்ரோனுக்குச் செல்வது

பின்பு தாவீது கர்த்தருடைய அறிவுரையைக் கேட்டான். தாவீது, “நான் யூதாவின் நகரங்களுள் ஏதேனும் ஒரு நகரத்திற்குப் போகலாமா?” என்று கேட்டான்.

கர்த்தர் தாவீதிடம், “போகலாம்” என்றார். தாவீது, “எங்கு நான் போகட்டும்?” என்று கேட்டான். கர்த்தர், “எப்ரோனுக்கு” என்று பதிலளித்தார்.

எனவே, தாவீதும் அவனது இரண்டு மனைவியரும் எப்ரோனுக்குச் சென்றனர். (யெஸ்ரயேல் ஊராளான அகினோவாள் ஒரு மனைவி, மற்றொருத்தி கர்மேல் நாபாலின் விதவையாகிய அபிகாயில்) தாவீது தம் ஆட்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தம்மோடு அழைத்துச் சென்றான். அவர்கள் எல்லோரும் எப்ரோனிலும் அருகிலுள்ள ஊர்களிலும் குடியேறினார்கள்.

தாவீது யாபேசின் ஜனங்களுக்கு நன்றி கூறுவது

யூதாவின் மனிதர்கள் எப்ரோனுக்கு வந்து தாவீதை யூதாவின் அரசனாக அபிஷேகம் செய்தார்கள். அவர்கள் தாவீதிடம், “கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்கள் சவுலைப் புதைத்தார்கள்” என்றனர்.

கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களிடம் தாவீது தூதுவர்களை அனுப்பினான். அந்த ஆட்கள் யாபேசின் மனிதர்களை நோக்கி, “சவுலின் சாம்பலைப் [c] புதைத்து உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இரக்கம் காட்டியதால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களிடம் இரக்கமாகவும் உண்மையாகவும் இருப்பாராக, நானும் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். இப்போது பலமும் தைரியமும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்துவிட்டார். ஆனால் யூதா கோத்திரத்தினர் அவர்களுடைய அரசனாக என்னை அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று தாவீது செய்தியைக் கூறியனுப்பினான்.

இஸ்போசேத் அரசனாவது

சவுலின் படைக்கு நேர் என்பவனின் மகனாகிய அப்னேர் தளபதியாக இருந்தான். சவுலின் மகனாகிய இஸ்போசேத்தை அப்னேர் மகனாயீமுக்கு அழைத்துச்சென்று அவனை, கீலேயாத், அஷூரியர், யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன், இஸ்ரவேல் எல்லாவற்றிற்கும் அரசனாக்கினான்.

10 இஸ்போசேத் சவுலின் மகன். அவன் இஸ்ரவேலை ஆளத் தொடங்கியபோது அவனுக்கு நாற்பது வயது, அவன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். ஆனால் யூதா கோத்திரத்தார் தாவீதைப் பின் பற்றினர். 11 தாவீதும் எப்ரோனில் அரசனாக இருந்தான். தாவீது 7 ஆண்டுகள் 6 மாதங்கள் யூதா கோத்திரத்தை அரசாண்டான்.

ஆபத்தான போட்டி

12 நேரின் மகனாகிய அப்னேரும் சவுலின் மகனாகிய இஸ்போசேத்தின் அதிகாரிகளும் மகனாயீமைவிட்டுக் கிபியோனுக்குச் சென்றனர். 13 செருயாவின் மகனாகிய யோவாபும், தாவீதின் அதிகாரிகளும் சேர்ந்து கிபியோனுக்குச் சென்றனர். கிபியோனின் குளத்தருகே அவர்கள் அப்னேரையும் இஸ்போசேத்தின் அதிகாரிகளையும் சந்தித்தனர். அப்னேரின் கூட்டத்தினர் குளத்தின் ஒரு கரையிலும், யோவாபின் கூட்டத்தார் குளத்தின் மறுகரையிலும் அமர்ந்தனர்.

14 அப்னேர் யோவாபிடம், “இளம் வீரர்கள் நமக்கு முன்பு ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளட்டும்” என்றான்.

யோவாபும், “சரி நாம் போட்டியிடலாம்” என்றான். 15 எனவே இளம் வீரர்கள் எழுந்தனர். இரு குழுவினரும் போராடத் துணிந்து தங்கள் ஆட்களை எண்ணிக்கையிட்டனர். சவுலின் மகனாகிய இஸ்போசேத்திற்காகச் சண்டையிட பென்யமீன் கோத்திரத்திலிருந்து 12 பேர்களையும் தாவீதின் பக்கத்திலிருந்து 12 பேர்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்தனர். 16 ஒவ்வொருவனும் பகைவனின் தலையைப் பிடித்து வாளால் விலாவில் குத்திக்கொண்டான். எனவே அம்மனிதர்கள் ஒருமித்து வீழ்ந்தனர். எனவே அந்த இடம், “கூரிய கத்திகளின் நிலம்” (எல்கா அருரீம்) என அழைக்கப்பட்டது. இந்த இடம் கிபியோனில் இருக்கிறது. 17 பின் அந்தச் சண்டை பெரும் யுத்தமாக மாறிற்று. அந்த நாளில் தாவீதின் அதிகாரிகள் அப்னேரையும் இஸ்ரவேலரையும் தோற்கடித்தனர்.

அப்னேர் ஆசகேலைக் கொல்வது

18 செருயாவிற்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் யோவாப், அபிசாய், ஆசகேல் ஆகியோராவார்கள். ஆசகேல் மிக வேகமாக ஓடக்கூடியவன். காட்டுமானைப் போன்ற வேகமுள்ளவன். 19 ஆசகேல் அப்னேரிடம் ஓடி அவனைத் துரத்த ஆரம்பித்தான். 20 அப்னேர் திரும்பி பார்த்து, “நீ ஆசகேலா?” எனக் கேட்டான்.

ஆசகேல், “ஆம், நானே தான்” என்றான்.

21 அப்னேர் ஆசகேலைத் தாக்க விரும்பவில்லை. எனவே அப்னேர் ஆசகேலை நோக்கி, “என்னைத் துரத்துவதைவிட்டு, இளம் வீரர்களுள் வேறு ஒருவனைத் துரத்து, நீ எளிதில் அவனை வென்று அவன் போர் அங்கிகளை எடுத்துவிடுவாய்” என்றான். ஆனால் ஆசகேல் அப்னேரைத் துரத்துவதை நிறுத்தவில்லை.

22 அப்னேர் மீண்டும் ஆசகேலிடம், “என்னைத் துரத்துவதை விட்டுவிடு. இல்லையென்றால் நான் உன்னைக் கொல்ல வேண்டியிருக்கும். பிறகு உனது சகோதரனாகிய யோவாபின் முகத்தை மீண்டும் நான் பார்க்க முடியாது” என்றான்.

23 ஆனால் ஆசகேலோ அப்னேரை விடாமல் துரத்தினான். எனவே அப்னேர் ஈட்டியின் மறுமுனையால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி ஆசகேலின் வயிற்றினுள் புகுந்து முதுகில் வெளி வந்தது. ஆசகேல் அங்கேயே விழுந்து மரித்தான்.

யோவாபும் அபிசாயும் அப்னேரைத் துரத்துதல்

ஆசகேலின் உடல் நிலத்தில் கிடந்தது. ஓடிவந்த மனிதர்கள் அவனருகே நின்றுவிட்டனர். 24 ஆனால் யோவாபும், அபிசாயும் [d] அப்னேரைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே ஓடினார்கள். அம்மா என்னும் மேட்டை அவர்கள் அடைந்தபோது சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. (கிபியோன் பாலைவனத்திற்குப் போகும் வழியில் கீயாவிற்கு எதிரில் அம்மா மேடு இருந்தது) 25 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள் அப்னேரிடம் வந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள்.

26 அப்னேர் யோவாபை நோக்கி உரக்க, “நாம் போரிட்டு ஒருவரையொருவர் கொல்லவேண்டுமா? இது துக்கத்திலேயே முடிவுறும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். சொந்த சகோதரர்களையே துரத்திக் கொண்டு இருக்கவேண்டாம் என ஜனங்களுக்குச் சொல்” என்றான்.

27 அப்போது யோவாப், “நீ அவ்வாறு சொன்னது நல்லதாயிற்று, நீ அவ்வாறு சொல்லாவிட்டால், எல்லாரும் தங்கள் சகோதரர்களைக் காலைவரை துரத்திக்கொண்டே இருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக் கொண்டுச் சொல்லுகிறேன்” என்றான். 28 எனவே, யோவாப் ஒரு எக்காளத்தை ஊதி, தனது ஆட்கள் இஸ்ரவேலரைக் துரத்தாதபடி தடுத்து நிறுத்தினான். அவர்கள் இஸ்ரவேலரோடு போரிட முயலவில்லை.

29 அப்னேரும் அவனது ஆட்களும் யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவுப் பொழுதில் அணிவகுத்து சென்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்து மகனாயீமுக்கு வரும்வரை பகல் முழுவதும் அணிவகுத்து நடந்தனர்.

30 அப்னேரைத் துரத்துவதை விட்டுவிட்டு யோவாப் திரும்பிச் சென்றான். யோவாப் தன் ஆட்களை அழைத்தான். ஆசகேல் உட்பட தாவீதின் அதிகாரிகளுள் 19 பேர் அங்கு இல்லாதிருப்பதைக் கண்டான். 31 ஆனால் தாவீதின் அதிகாரிகள் பென்யமீன் கோத்திரத்திலிருந்து அப்னேரின் ஆட்களில் 360 பேரைக் கொன்றிருந்தனர். 32 தாவீதின் அதிகாரிகள் ஆசகேலை எடுத்துச் சென்று பெத்லகேமிலிருந்த அவனது தந்தையின் கல்லறையில் புதைத்தனர்.

யோவாபும், அவனது மனிதர்களும் இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் எப்ரோனை அடைந்தபோது சூரியன் உதித்தது.

இஸ்ரவேலுக்கும் யூதாவுக்குமிடையே போர்

சவுல், தாவீது ஆகியோரின் குடும்பத்தாருக்கிடையே நீண்டகாலம் யுத்தம் தொடர்ந்தது. தாவீது வலிமை பெற்றுக்கொண்டே இருந்தான். சவுலின் குடும்பத்தார் தளர்ந்துக்கொண்டே வந்தனர்.

தாவீதுக்கு ஆறு மகன்கள் எப்ரோனில் பிறந்தனர்

எப்ரோன் நகரில் தாவீதுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.

முதல் மகன் அம்மோன். அம்மோனின் தாய் யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாள் ஆவாள்.

இரண்டாவது மகன் கீலேயாப். கீலேயாபின் தாய் அபிகாயில். அவள் கர்மேலிலுள்ள நாபாலின் விதவையாயிருந்தாள்.

மூன்றாவது மகன் அப்சலோம். இவனது தாய், கேசூரின் அரசனாகிய தல்மாயின் மகள் மாக்காள் என்பவள் ஆவாள்.

நான்காம் மகன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத்.

ஐந்தாம் மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.

ஆறாம் மகன் இத்ரேயாம். தாவீதின் மனைவி எக்லாள் இத்ரேயாமுக்கு தாய்.

தாவீதுக்கு எப்ரோனில் இந்த ஆறு மகன்களும் பிறந்தனர்.

தாவீதோடு சேர அப்னேரின் தீர்மானம்

தாவீது, சவுல் ஆகியோரின் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருந்த போது சவுலின் படையில் அப்னேர் மிகவும் பலமடைந்து வந்தான். சவுலிடம் ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள வேலைக்காரி ஒருத்தி இருந்தாள். இஸ்போ சேத் அப்னேரை நோக்கி, “எனது தந்தையின் வேலைக்காரியோடு நீ ஏன் பாலின உறவு கொண்டாய்?” என்று கேட்டான்.

இஸ்போசேத் இவ்வாறு கேட்டதால் அப்னேர் கோபமடைந்தான். அப்னேர், “நான் சவுலுக்கும் அவனது குடும்பத்துக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன். நான் உன்னைத் தாவீதிடம் ஒப்படைக்கவில்லை. அவன் உன்னைத் தோற்கடிக்க அனுமதிக்கவில்லை. நான் யூதாவுக்காக உழைக்கும் வஞ்சகன் அல்ல. நான் இத்தீயக் காரியத்தைச் செய்ததாக நீ கூறிக்கொண்டிருக்கிறாய். 9-10 நான் இப்போது இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். தேவன் சொன்ன காரியங்கள் நிறைவேறும் என நான் உறுதியாக நம்புகிறேன். சவுலின் குடும்பத்தாரிடமிருந்து அரசை எடுத்து தாவீதின் குடும்பத்தாருக்குக் கொடுப்பதாக கர்த்தர் கூறினார். கர்த்தர் தாவீதை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் அரசனாக்குவார். தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் [e] அவன் அரசாளுவான். இது நிகழும்படியாக நான் செய்யாவிட்டால் தேவன் எனக்குத் தீமை செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்!” என்றான். 11 இஸ்போசேத்தால் அப்னேருக்கு எந்த பதிலும் கூற முடியவில்லை. அவனைக் கண்டு இஸ்போசேத் மிகவும் பயந்தான்.

12 அப்னேர் தாவீதிடம் செய்தி சொல்வோரை அனுப்பினான். அப்னேர், “நீ யார் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று நினைக்கிறாய்? என்னோடு ஒப்பந்தம் செய்துக்கொள். இஸ்ரவேலருக்கு அரசனாகும்படியாக நான் உனக்கு உதவுவேன்” என்றான்.

13 தாவீது, “நல்லது! நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வேன். ஆனால் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்: சவுலின் மகள் மீகாளை என்னிடம் அழைத்துவரும்வரை உன்னை நான் சந்திக்கமாட்டேன்” என்றான்.

தாவீது தன் மனைவி மீகாளை பெற்றுக்கொள்கிறான்

14 தாவீது சவுலின் மகனாகிய இஸ்போசேத்திடம் செய்தியோடு தூதுவரை அனுப்பினான். தாவீது, “என்னுடைய மனைவியாகிய மீகாளைக் கொடு. அவளை எனக்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ளது. நான் அவளுக்காக நூறு பெலிஸ்தியரைக் கொன்றேன்” என்றான்.

15 இஸ்போசேத் லாயிசின் மகனாகிய பல்த்தியேலிடமிருந்து மீகாளை அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினான். 16 மீகாளைப் பின் தொடர்ந்து அவள் கணவன் பல்த்தியேலும் சென்றான். மீகாளோடு பகூரீமுக்கு வந்தபோது பல்த்தியேல் அழுதுக்கொண்டே பின்தொடர்ந்தான். ஆனால் அப்னேர் பல்த்தியேலை நோக்கி, “வீட்டிற்குப் போ” என்றான். எனவே பல்த்தியேல் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.

தாவீதுக்கு உதவுவதாக அப்னேரின் உறுதி

17 இஸ்ரவேலின் தலைவர்களுக்கு அப்னேர் செய்தி சொல்லியனுப்பினான். அவன், “நீங்கள் தாவீதை அரசனாக ஆக்கக் காத்திருக்கிறீர்கள். 18 இப்போது அவ்வாறே செய்யுங்கள்! கர்த்தர் தாவீதைக் குறித்து ஏற்கெனவே இவ்வாறு சொல்லியிருக்கிறார். ‘இஸ்ரவேலராகிய எனது ஜனங்களை நான் பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் விடுவிப்பேன். எனது தாசனாகிய தாவீதின் மூலமாக இதைச் செய்வேன்’” என்றார்.

19 எப்ரோனிலிருந்த தாவீதுக்கு அப்னேர் சொன்ன இக்காரியங்களை பென்யமீன் கோத்திரத்திற்கும் சொன்னான். பென்யமீன் கோத்திரத்திற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அப்னேர் கூறிய காரியங்கள் நன்மையாகத் தோன்றின.

20 பின்பு எப்ரோனிலிருந்த தாவீதிடம் அப்னேர் வந்தான். அவன் தன்னோடு 20 பேரை அழைத்து வந்திருந்தான். அப்னேருக்கும் அவனோடு வந்த ஆட்களுக்கும் தாவீது விருந்தளித்தான்.

21 அப்னேர் தாவீதை நோக்கி, “எனது ஆண்டவனும், அரசருமானவரே! நான் அனைத்து இஸ்ரவேலரையும் உம்மிடம் அழைத்துவர அனுமதியும். அப்போது அவர்கள் உம்மோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வார்கள். பின் நீர் விரும்பியதுபோல் இஸ்ரவேலை ஆளலாம்” என்றான்.

எனவே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான். அப்னேர் சமாதானமாய் திரும்பினான்.

அப்னேரின் மரணம்

22 யோவாபும் தாவீதின் அதிகாரிகளும் யுத்தத்திலிருந்து திரும்பினார்கள். பகைவரிடமிருந்து எடுத்த பல பொருட்கள் அவர்களிடமிருந்தன. அப்போதுதான் அப்னேர் தாவீதிடமிருந்து சமாதானமாய் புறப்பட்டுச் சென்றிருந்தான். ஆதலால் அந்நேரம் எப்ரோனில் தாவீதோடு அப்னேர் இருக்கவில்லை 23 யோவாபும் அவனது படையும் எப்ரோனை அடைந்தது. படையினர் யோவாபிடம், “நேரின் மகனாகிய அப்னேர் தாவீது அரசனிடம் வந்திருந்தான். அவன் சமாதானமாய் செல்லுமாறு தாவீது அனுமதித்தான்” என்றனர்.

24 யோவாப் அரசனிடம் வந்து, “நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்னேர் உங்களிடம் வந்தும், அவனுக்கு எந்தத் துன்பமும் செய்யாமல் அவனை அனுப்பியுள்ளீர்கள்! 25 நேரின் மகனாகிய அப்னேரை உமக்குத் தெரியும். அவன் உம்மை வஞ்சிக்க வந்தான். நீர் செய்துக்கொண்டிருக்கும் காரியங்களைக் குறித்து வேவு பார்க்க அவன் வந்தான்” என்றான்.

26 யோவாப் தாவீதை விட்டுச்சென்று சீராவின் கிணற்றருகே இருந்த அப்னேரைச் சந்திக்கும்படி தூதுவர்களை முன்னே அனுப்பினான். அவர்கள் அப்னேரை தனியே அழைத்து வந்தனர். அது தாவீதுக்குத் தெரிந்திருக்கவில்லை. 27 அப்னேர் எப்ரோனை அடைந்ததும், அவனோடு தனித்துப் பேசும்படியாக யோவாப் வாசலின் பின்புறம் அழைத்துச் சென்றான். அப்போது யோவாப் அப்னேரை வயிற்றில் குத்தினான். அப்னேர் மரித்தான். யோவாபின் சகோதரனான ஆசகேலை அப்னேர் கொன்றிருந்தான். ஆகையால் இப்போது யோவாப் அப்னேரைக் கொன்றான்.

அப்னேருக்காக தாவீதின் அழுகை

28 தாவீது நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டான். தாவீது, “நானும் எனது அரசும் நேரின் மகனாகிய அப்னேரின் மரணத்தைக் குறித்து என்றும் களங்கமற்றவர்கள். இதைக் குறித்து கர்த்தர் அறிவார். 29 யோவாபின் குடும்பத்தார் குற்றவாளிகள். அவர்களுக்கும் பல தொல்லைகள் நேரக்கூடும். தொழு நோய் போன்றவற்றால் அக்குடும்பத்தினர் பாதிக்கப்படக்கூடும். அவர்கள் முடவர்களாகக் கூடும். யுத்தத்தில் மரிக்கக்கூடும், உண்ண உணவின்றி வாழக்கூடும்!” என்றான்.

30 கிபியோனில் நடந்த யுத்தத்தில் தங்கள் சகோதரனாகிய ஆசகேலை அப்னேர் கொன்றதால் யோவாபும் அவனது சகோதரன் அபிசாயும் அப்னேரைக் கொன்றார்கள்.

31-32 யோவாபிடமும், யோவாபுடனிருந்த எல்லா ஜனங்களிடமும் தாவீது, “உங்கள் ஆடைகளைக் கிழித்து துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அப்னேருக்காக அழுங்கள்” என்றான். அவர்கள் எப்ரோனில் அப்னேரைப் புதைத்தார்கள். அடக்கத்திற்கு தாவீது சென்றிருந்தான். தாவீது அரசனும் எல்லா ஜனங்களும் கல்லறையருகே அப்னேருக்காக அழுதனர்.

33 அப்னேரின் அடக்கத்தின்போது தாவீது அரசன் இந்த சோக கீதத்தைப் பாடினான்:

“அறிவில்லாத குற்றவாளியைப்போல அப்னேர் மரித்தானா?
34     அப்னேர், உனது கைகள் கட்டப்படவில்லை.
    கால்களில் விலங்கு மாட்டப்படவில்லை, அப்னேரே, தீயோர் உன்னை கொன்றனர்!”

அப்போது ஜனங்கள் எல்லோரும் அப்னேருக்காக மீண்டும் அழுதனர். 35 அந்த நாள் முழுவதும் ஜனங்கள் தாவீதிடம் வந்து அப்பம் உண்ணுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் தாவீது விசேஷ வாக்குறுதி செய்திருந்தான். அவன், “சூரியன் மறையும் முன்னர் நான் ரொட்டியையோ, வேறு உணவையோ உட்கொண்டால் தேவன் என்னைத் தண்டிப்பாராக” என்றான். 36 எல்லோரும் நடந்ததைக் கண்டனர். தாவீது அரசனின் செய்கையைக் கண்டு திருப்தியுற்றனர். 37 நேரின் மகனாகிய அப்னேரைத் தாவீது அரசன் கொல்லவில்லையென யூதா ஜனங்களும் இஸ்ரவேலரும் புரிந்துக்கொண்டனர்.

38 தாவீது அரசன் அதிகாரிகளை நோக்கி, “இஸ்ரவேலில் இன்று ஒரு முக்கியமான தலைவன் மரித்துவிட்டான் என்பதை அறிவீர்கள். 39 இதே நாளில் நான் அரசனாகவும், அபிஷேகம் செய்யப்பட்டேன். இந்த செருயாவின் மகன்கள் எனக்கு மிகுந்த துன்பத்தை கொடுத்துவிட்டனர். அவர்கள் தவறுக்கேற்ற தண்டனையை கர்த்தர் அளிப்பார் என நம்புகிறேன்” என்றான்.

சவுலின் குடும்பத்திற்குத் தொல்லைகள்

எப்ரோனில் அப்னேர் மரித்தான் என்பதை சவுலின் மகனான இஸ்போசேத் கேள்விப்பட்டான். இஸ்போசேத்தும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மிகவும் அச்சம் கொண்டனர். சவுலின் மகனாகிய இஸ்போசேத்தைப் பார்ப்பதற்கு இருவர் சென்றனர். அவர்கள் படைத்தலைவர்களாக இருந்தனர். அவர்கள் ரிம்மோனின் மகன்களாகிய, ரேகாபும், பானாவும் ஆவார்கள். (ரிம்மோன் பேரோத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்திற்கு உரிய நகரமாக பேரோத் இருந்ததால் அவர்கள் பென்யமீனியர் ஆவார்கள். ஆனால் பேரோத்தின் ஜனங்கள் கித்தாயீமிற்கு ஓடிவிட்டனர். அவர்கள் இன்றும் அங்கேயே வசித்து வருகின்றனர்.)

சவுலின் மகனாகிய யோனத்தானுக்கு மேவிபோசேத் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யெஸ்ரயேலிலிருந்து வந்தபோது மேவிபோசேத்திற்கு ஐந்து வயது ஆகியிருந்தது. பகைவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்ததால் மேவிபோசேத்தை வளர்த்த தாதி பெண் அச்சம் கொண்டாள். எனவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். அவ்வாறு ஓடியபோது அவள் குழந்தையைத் தவறி போட்டுவிட்டாள். எனவே அவனது இரண்டு கால்களும் முடமாயின.

பேரோத்திலுள்ள ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்கு நண்பகலில் சென்றார்கள். வெப்பம் மிகுதியாக இருந்ததால் இஸ்போசேத் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். 6-7 கோதுமை எடுக்க வந்தவர்களைப் போன்று ரேகாபும் பானாவும் வீட்டிற்குள் புகுந்தனர். படுக்கையறையில் இஸ்போசேத் சாய்ந்திருந்தான். அவனை ரேகாபும் பானாவும் குத்திக் கொன்றார்கள். பின் அவனது தலையை வெட்டி எடுத்துக் கொண்டு யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவு முழுவதும் பயணம் செய்தனர். அவர்கள் எப்ரோனை வந்தடைந்தனர். இஸ்போசேத்தின் தலையை தாவீதிடம் கொடுத்தனர்.

ரிம்மோனின் பிள்ளைகளாகிய ரேகாபும் பானாவும் தாவீது அரசனை நோக்கி, “இதோ உம்மைக் கொல்ல முயன்ற உமது பகைவனாகிய சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை, உமக்காக இன்று கர்த்தர் சவுலையும் அவனது குடும்பத்தாரையும் தண்டித்துள்ளார்” என்றனர்.

ஆனால் தாவீது ரேகாபையும் அவனது சகோதரன் பானாவையும் நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வாறே அவர் என்னைத் தொல்லைகளிலிருந்து விடுவித்ததும் நிச்சயம். 10 ஆனால் முன்பொருமுறை ஒருவன் எனக்கு ஏதோ நற்செய்தி கொண்டுவருவதாக எண்ணினான். அவன் என்னிடம், ‘பாருங்கள் சவுலை கொன்றதினால் மரித்துவிட்டான்’ என்றான். அச்செய்தியைக் கொண்டு வந்ததற்காக ஏதேனும் பரிசளிப்பேன் என்று அவன் எண்ணினான். ஆனால் அம்மனிதனைப் பிடித்து சிக்லாக் என்னும் இடத்தில் அவனைக் கொன்றேன். 11 எனவே உன்னையும் நான் கொன்று இத்தேசத்திலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில் துஷ்டராகிய நீங்கள் ஒரு நல்ல மனிதனை வீட்டிற்குள், அவனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொன்றீர்கள்” என்றான்.

12 எனவே ரேகாபையும் பானாவையும் கொல்லும்படி தனது இளம் வீரர்களுக்கு தாவீது கட்டளையிட்டான். அந்த இளம் வீரர்கள் ரேகாப், பானா ஆகியோரின் கைகளையும் கால்களையும் வெட்டி எப்ரோன் குளத்தருகே தொங்கவிட்டார்கள். பின் அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனில் அப்னேர் புதைக்கப்பட்ட இடத்திலேயே புதைத்தார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center