Beginning
கர்த்தர் தமது ஜனங்கள் திரும்பவேண்டும் என விரும்புகிறார்
1 கர்த்தரிடமிருந்து பெரகியாவின் மகன் சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது தரியு பெர்சியாவை அரசாண்ட இரண்டாம் ஆண்டு எட்டாம் மாதம். (சகரியா பெரகியாவின் மகன். பெரகியா தீர்க்கதரிசியான இத்தோவின் மகன்) இதுதான் அந்த செய்தி.
2 கர்த்தர் உங்களது முற்பிதாக்கள் மேல் மிகவும் கோபங்கொண்டவரானார். 3 நீங்கள் இவற்றை ஜனங்களிடம் சொல்லவேண்டும். கர்த்தர், “என்னிடம் திரும்பி வாருங்கள். நான் உங்களிடம் திரும்பி வருவேன்” என்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
4 கர்த்தர், “நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் போன்றிருக்கக் கூடாது. கடந்த காலத்தில், தீர்க்கதரிசிகள் அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீங்கள் உங்களது தீய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என விரும்புகிறார். தீயவற்றைச் செய்வதை நிறுத்துங்கள்!’ என்றார்கள். ஆனால், உங்கள் முற்பிதாக்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை” என்றார். கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
5 கர்த்தர், “உங்கள் முற்பிதாக்கள் போய்விட்டனர். அந்தத் தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் வாழவில்லை. 6 தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்கள். நான் எனது வார்த்தைகளையும், சட்டங்களையும், போதனைகளையும் அவர்களைப் பயன்படுத்தி உன் முற்பிதாக்களுக்குச் சொன்னேன். உனது முற்பிதாக்கள் இறுதியில் தங்கள் பாடங்களைக் கற்றனர். அவர்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தான் எவற்றைச் செய்ய வேண்டும் எனச் சென்னாரோ அதைச் செய்தார். நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்காகவும், நாங்கள் செய்த தீமைக்காகவும் அவர் எங்களைத் தண்டித்தார்’ என்றார்கள். எனவே அவர்கள் தேவனிடம் திரும்பி வந்தனர்” என்றார்.
நான்கு குதிரைகள்
7 தரியு அரசாண்ட இரண்டாம் ஆண்டு சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்து நாலாந் தேதியிலே கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு இன்னொரு செய்தி வந்தது. (தீர்க்கதரிசி இத்தோவின் மகன் பெரகியா. இவனது மகன் சகரியா.) இதுதான் செய்தி.
8 இரவில், நான் ஒரு மனிதன் சிவப்புக் குதிரையில் ஏறி வருவதைப் பார்த்தேன். அவன் பள்ளத்தாக்கில் இருந்த நறுமணப் புதருக்குள் செடிகளுக்கிடையே நின்றான். அவனுக்குப் பின் சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன. 9 நான், “ஐயா இந்தக் குதிரைகள் எதற்காக?” என்று கேட்டேன்.
பிறகு என்னிடம் பேசின தேவதூதன், “இந்தக் குதிரைகள் எதற்காக உள்ளன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” என்றான்.
10 பிறகு புதருக்குள் நின்ற அந்த மனிதன் “கர்த்தர் இந்தக் குதிரைகளைப் பூமியில் அங்கும் இங்கும் போவதற்காக அனுப்பினார்” என்றான். 11 அதன் பிறகு நறுமணப் புதருக்குள் நின்ற கர்த்தருடைய தூதனிடத்தில் குதிரைகள், “நாங்கள் பூமி முழுதும் சுற்றித்திரிந்தோம், எல்லாம் அமைதியாக இருக்கிறது” என்றன.
12 பின்னர் கர்த்தருடைய தூதன், “கர்த்தாவே, நீர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் ஆறுதல்படுத்தாமலிருப்பீர்? எழுபது ஆண்டுகளாக இந்நகரங்களின் மேல் நீர் உமது கோபத்தைக் காட்டினீர்” என்றான்.
13 பின்னர் கர்த்தர், என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனிடம், நல்ல ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார்.
14 பின்னர் தூதன் ஜனங்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும் என்று சொன்னான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நான் எருசலேம் மற்றும் சீயோன் மீது உறுதியான அன்புகொண்டிருந்தேன்.
15 நான், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணும் நாடுகள் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன்.
நான் கொஞ்சம் கோபம் கொண்டிருந்தபோது
என் ஜனங்களைத் தண்டிக்க அந்த நாடுகளைப் பயன்படுத்தினேன்.
ஆனால் அந்த நாடுகள் பெருஞ்சேதத்திற்குக் காரணமாயின.”
16 எனவே கர்த்தர் கூறுகிறார்:
“நான் எருசலேமிற்குத் திரும்பி வருவேன்.
அவளுக்கு ஆறுதல் கூறுவேன்.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமை மீண்டும் கட்டுவேன். எனது வீடு அங்கே கட்டப்படும்.”
17 தூதன் கூட, “‘எனது நகரங்கள் மீண்டும் வளம்பெறும்.
நான் சீயோனுக்கு ஆறுதல் அளிப்பேன்.
நான் எனது சிறப்புக்குரிய நகரமாக எருசலேமைத் தேர்ந்தெடுப்பேன்’
என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
நான்கு கொம்புகளும் நான்கு தொழிலாளிகளும்
18 பிறகு நான் மேலே பார்த்தேன். நான்கு கொம்புகளைக் கண்டேன். 19 பிறகு நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இக்கொம்புகளின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன்.
அவர், “இக்கொம்புகள் இஸ்ரவேல், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை அன்னிய நாடுகளுக்குத் துரத்தின” என்றார்.
20 பிறகு கர்த்தர் நான்கு தொழிலாளிகளைக் காட்டினார். 21 நான் அவரிடம், “இந்த நான்கு ஆட்களும் என்ன செய்ய வந்திருக்கிறார்கள்?” எனக் கேட்டேன்.
அவர், “இம்மனிதர்கள் இக்கொம்புகளை அச்சுறுத்தி வெளியில் எறிந்துபோட வந்திருக்கின்றனர். அக்கொம்புகள் யூதாவின் ஜனங்களை அயல்நாடுகளுக்குப் பலவந்தமாக தூக்கி ‘எறிந்தன.’ அக்கொம்புகள் எவரிடமும் இரக்கம் காட்டவில்லை. அக்கொம்புகள் யூதா ஜனங்களை அயல் நாடுகளுக்குத் தூக்கி எறிவதின் அடையாளமாக உள்ளன” என்றார்.
எருசலேமின் அளவுகள்
2 பிறகு நான் பார்த்தேன், நான் ஒரு மனிதன், அளவு கயிற்றினை எடுத்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன். 2 நான் அவனிடம், “எங்கே போய்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். அவன் என்னிடம், “நான் எருசலேமை அளந்து எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எனப் பார்க்கப் போகிறேன்” என்றான்.
3 பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் விலகினான். இன்னொரு தூதன் அவனோடு பேசப் போனான். 4 அவன் அவனிடம், “ஓடிப்போய் அந்த இளைஞனிடம் எருசலேமானது அளக்க முடியாத வகையில் பெரிதாக உள்ளது என்று சொல். அவனிடம் இவற்றைச் சொல்!
“‘எருசலேம் சுவர்களில்லாத நகரமாகும்.
ஏனென்றால் அங்கே ஏராளமான ஜனங்களும் மிருகங்களும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன.’
5 கர்த்தர் கூறுகிறார்:
‘நான் அவளைக் காப்பாற்றுவதற்கு அவளைச் சுற்றி நெருப்புச் சுவராக இருப்பேன்.
அந்நகரத்திற்கு மகிமையைக் கொண்டுவர நான் அங்கே குடியிருப்பேன்’” என்றான்.
தேவன் தமது ஜனங்களை வீட்டிற்கு அழைக்கின்றார்
கர்த்தர் கூறுகிறார்:
6 “சீக்கிரம்! வடக்கே உள்ள நிலத்திலிருந்து ஓடு.
ஆம், நான் உங்கள் ஜனங்களை எல்லாத் திசைகளுக்கும் சிதறடித்தேன் என்பது உண்மை.
7 சீயோனிலிருந்து உனது ஜனங்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது தப்பி, அந்த நகரத்திலிருந்து வெளியே ஓடுங்கள்!”
8 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
உன்னிடமிருந்து திருடிய ஜனங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்.
உங்களைக் கனப்படுத்தும்படி என்னை அனுப்பினார். ஏனென்றால், யார் உன்னைக் காயப்படுத்தினாலும், அது தேவனுடைய கண்மணியைக் காயப்படுத்துவது போன்றதாகும்.
9 பாபிலோனியர், என் ஜனங்களை அடிமைப்படுத்தினார்கள்.
ஆனால் நான் அவர்களைப் பலமாக அடிப்பேன்,
அவர்கள் என் ஜனங்களின் அடிமைகளாவார்கள்,
பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை அறிவார்கள்.
10 கர்த்தர் கூறுகிறார்:
“சீயோனே, மகிழ்ச்சியோடு இரு.
ஏனென்றால், நான் வந்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்கள் நகரத்தில் வாழ்வேன்.
11 அந்த நேரத்தில், பல நாடுகளிலிருந்து ஜனங்கள் என்னிடம் வருவார்கள்.
அவர்கள் எனது ஜனங்களாவார்கள்.
நான் உங்கள் நகரில் வாழ்வேன்”
பிறகு, சர்வ வல்லமையுள்ள கர்த்தர்
என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
12 கர்த்தர் எருசலேமைத் தனது சிறப்புக்குரிய நகரமாகத் தேர்ந்தெடுப்பார்.
யூதா பரிசுத்தமான நாடாக, அவரது பங்காகச் சேரும்.
13 ஒவ்வொருவரும் அமைதியாக இருப்பார்கள்.
கர்த்தர் அவரது பரிசுத்தமான வீட்டை விட்டு வெளியே வருவார்.
தலைமை ஆசாரியன்
3 பிறகு தலைமை ஆசாரியனாகிய யோசுவாவை எனக்கு தூதன் காட்டினான். யோசுவா கர்த்தருடைய தூதனுக்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்தான். சாத்தான், யோசுவாவைக் குற்றஞ்சாட்டும்படி அவன் வலது பக்கத்திலே இருந்தான். 2 பிறகு கர்த்தருடைய தூதன், “சாத்தானே, கர்த்தர் உன்னை தொடர்ந்து குற்றஞ்சாட்டுவார். கர்த்தர் எருசலேமைத் தனது சிறப்புக்குரிய நகரமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் நகரைக் காப்பாற்றினார். இது எரிகின்ற நெருப்பிலிருந்து கட்டையை உருவி எடுப்பது போன்றதாகும்” என்றான்.
3 யோசுவா தூதனுக்கு முன் நின்று கொண்டிருந்தான். யோசுவா ஒரு அழுக்கான ஆடையை அணிந்திருந்தான். 4 பிறகு, அந்த தூதன் தன்னருகில் நின்றுக்கொண்டிருந்தவர்களை நோக்கி, “யோசுவாவின் அழுக்கு ஆடைகளை எடுத்துப் போடுங்கள்” என்றான். பிறகு தூதன் யோசுவாவிடம், “இப்பொழுது நான் உனது குற்றங்களை நீக்கியிருக்கிறேன், நான் உனக்கு புதிய ஆடையை தருகிறேன்” என்றான்.
5 பிறகு நான், “அவனது தலைமேல் சுத்தமான தலைப்பாகையை அணிவி” என்றேன். எனவே அவர்கள் அவன் தலைமேல் சுத்தமான தலைப்பாகையை அணிவித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நிற்கும்போது, அவர்கள் அவன் மேல் சுத்தமான ஆடையை வைத்தார்கள். 6 பிறகு கர்த்தருடைய தூதன் யோசுவாவிடம் இவற்றைச் சொன்னான்.
7 சர்வ வல்மையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்:
“நான் சொல்கிற வழியில் வாழ்.
நான் சொன்னவற்றைச் செய்.
என் ஆலயத்தின் பொறுப்பாளராக நீ அதன் பிரகாரங்களைக் காவல் செய்வாய்.
இங்கு நிற்கும் தூதர்களைப் போல ஆலயத்தின் எவ்விடத்திற்கும் போகலாம் என்று நான் உனக்கு அனுமதி தருவேன்.
8 எனவே யோசுவா, நீயும் உன் முன்னால் அமர்ந்திருக்கும் உடன் ஆசாரியர்களும்
நான் சொல்வதைக் கேட்கவேண்டும். நீயே தலைமை ஆசாரியன்.
உன்னோடு இருக்கிற ஜனங்கள் நான் என்னுடைய சிறப்பு வேலைக்காரனைக் கொண்டு வரும்போது செய்யப்போகும் செயல்களைக் காட்டும் உதாரணங்களாக இருக்கிறார்கள்.
நான் உண்மையாக என் சிறப்பு வேலைக்காரனைக் கொண்டு வருவேன்.
அவர் “கிளை” என அழைக்கப்படுகிறார்.
9 பார், நான் யோசுவாவின் முன்பு ஒரு சிறப்பான கல்லை வைத்தேன்.
அக்கல்லில் ஏழு பக்கங்கள் இருக்கின்றன.
நான் அந்தக் கல்லில் சிறப்புச் செய்தியைச் செதுக்குவேன்.
நான் இந்த நாட்டில் உள்ள அனைத்து குற்றங்களையும் ஒரே நாளில் எடுத்துவிடுவேன் என்பதனை இது காட்டும்.”
10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“அந்த வேளையில், ஜனங்கள் தமது நண்பர்களோடும்
அயலார்களோடும் அமர்ந்து பேசுவார்கள்.
அத்தி மரம் மற்றும் திராட்சை கொடிகளுக்குக் கீழ் அமர ஒருவரையொருவர் அழைப்பார்கள்.”
விளக்குத் தண்டும் இரண்டு ஒலிவ மரங்களும்
4 பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம் வந்து என்னை எழுப்பினான். நான் தூக்கத்திலிருந்து எழுந்தவனைப் போன்றிருந்தேன். 2 பிறகு அந்தத் தூதன், “நீ என்ன பார்க்கிறாய்?” என்று என்னிடம் கேட்டான்.
நான், “நான் முழுவதும் பொன்னாலான விளக்குத் தண்டைப் பார்க்கிறேன். விளக்குத் தண்டின் மேல் ஏழு விளக்குகள் இருந்தன. விளக்குத் தண்டின் உச்சியில் ஒரு அகல் இருக்கிறது. அந்த அகலிலிருந்து ஏழு குழாய்கள் வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு குழாயும் ஒவ்வொரு விளக்குக்கும் போகின்றன. குழாய்கள் ஒவ்வொரு விளக்கும் அகலிலிருந்து எண்ணெயைக் கொண்டு வருகின்றது. 3 அகலின் வலது பக்கம் ஒன்றும், இடது பக்கம் ஒன்றுமாக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் அகல் விளக்குகளுக்கு வேண்டிய எண்ணெயைக் கொடுக்கின்றன” என்றேன், 4 பிறகு நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “ஐயா, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டேன்.
5 என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன், “இவை என்னவென்று உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டான்.
நான், “இல்லை ஐயா” என்றேன்.
6 பிறகு அவன் என்னிடம், “இதுதான் கர்த்தரிடமிருந்து செருபாபேலுக்குச் சொல்லப்பட்டச் செய்தி: ‘உனக்கான உதவி, உனது பலம் மற்றும் வல்லமையிலிருந்து வராது. இல்லை, எனது ஆவியிலிருந்தே உனக்கு உதவி வரும்’ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்! 7 அந்த உயரமான குன்று செருபாபேலுக்கு முன்னால் சமநிலமாகும். அவன் ஆலயத்தைக் கட்டுவான். அந்த இடத்தில் மிகவும் முக்கியமான கல்லை வைக்கும்போது ஜனங்கள்: ‘அழகாயிருக்கிறது! அழகாயிருக்கிறது!’ என்று சத்தமிடுவார்கள்.”
8 எனக்கு மேலும் வந்த கர்த்தருடைய செய்தியானது, 9 “செருபாபேல் எனது ஆலயத்துக்கான அஸ்திபாரக்கல்லை இடுவான். செருபாபேலே ஆலயம் கட்டும் வேலையை முடிப்பான். பிறகு, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை ஜனங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 10 ஜனங்கள் சிறுதொடக்கத்துக்காக அவமானம் அடையவேண்டாம். செருபாபேல் தூக்கு நூலோடு கட்டி முடித்த ஆலயத்தை அளந்து சோதிப்பதைப் பார்க்கும்போது ஜனங்கள் உண்மையிலேயே மகிழ்வார்கள். இப்பொழுது நீ பார்த்த ஏழு பக்கமுள்ள கல் கர்த்தருடைய ஒவ்வொரு திசையிலும் பார்க்கிற கண்களை குறிக்கும், அவை பூமியின் மேலே எல்லாவற்றையும் பார்க்கின்றன.”
11 பிறகு நான் (சகரியா) அவனிடம், “நான் விளக்குத் தண்டின் வலது பக்கத்தில் ஒன்றும், இடது பக்கத்தில் ஒன்றுமாக ஒலிவ மரங்களைப் பார்த்தேன். அந்த இரண்டு ஒலிவ மரங்களின் அர்த்தம் என்ன?” எனக்கேட்டேன். 12 நான் அவனிடம், “இரண்டு தங்கக் குழாய்களின் வழியாகத் தொங்கி, தங்க நிற எண்ணெயைத் தங்களிடமிருந்து இறங்கச் செய்யும் ஒலிவ மரங்களின் இரண்டு கிளைகளின் அர்த்தம் என்ன?” என்றும் கேட்டேன்.
13 பின்னர் அந்தத் தூதன் என்னிடம், “இவற்றின் பொருள் என்னவென்று தெரியாதா?” எனக்கேட்டான்.
நான் “இல்லை ஐயா” என்றேன்.
14 எனவே அவன், “உலகம் முழுவதும் கர்த்தருக்கு சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரை அவை குறிக்கின்றன” என்றான்.
பறக்கும் ஓலைச்சுருள்
5 நான் மறுபடியும் மேலே பார்த்தேன். நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்த்தேன். 2 தூதன் என்னிடம், “என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான்.
“நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்க்கிறேன். அந்த புத்தகச்சுருள் 30 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது” என்று நான் சொன்னேன்.
3 பின்னர் தூதன் என்னிடம் சொன்னான்: “அந்த புத்தகச்சுருளில் சாபம் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகச்சுருளின் ஒரு பக்கத்தில் திருடிய ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. புத்தகச்சுருளின் இன்னொரு பக்கத்தில் வாக்குறுதி அளிக்கும்போது பொய் சொன்ன ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. 4 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: நான் இந்தப் புத்தகச்சுருளை திருடர்களின் வீடுகளுக்கும் கர்த்தருடைய நாமத்தால் பொய் சத்தியம் செய்தவர்களின் வீடுகளுக்கும் அனுப்புவேன். அந்தப் புத்தகச்சுருள் அங்கே தங்கி அது அவ்வீடுகளை அழிக்கும். அவ்வீட்டிலுள்ள கற்களும் மரத்தூண்களும் அழிக்கப்படும்.”
பெண்ணும் வாளியும்
5 பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் வெளியே போனான். அவன் என்னிடம், “பார்! என்ன வருகிறதென்று காண்கிறாய்?” என்று கேட்டான்.
6 நான் “இது என்னவென்று அறியேன்” என சொன்னேன்.
அவன், “இது ஒரு அளவு பார்க்கும் வாளி” என்று சொன்னான். அதோடு அவன், “அந்த வாளி இந்த நாட்டிலுள்ள ஜனங்களின் பாவங்களை அளக்கும் வாளி” என்று சொன்னான்.
7 வாளியை மூடியிருந்த ஈயத்தினாலான மூடி அகற்றப்பட்டது. வாளிக்குள் ஒரு பெண் உட்கார்ந்துகொண்டிருந்தாள். 8 தூதன், “இப்பெண் பாவத்தின் பிரதிநிதியாய் இருக்கிறாள்” என்றான். பின்னர் தூதன் அப்பெண்ணை வாளிக்குள் தள்ளி, கனத்த மூடியினால் அதை மூடிப்போட்டான். இது பாவங்கள் மிகக் கனமானவை என்பதைக் காட்டும். 9 பின்னர் நான் ஏறிட்டுப்பார்த்தேன். நான் இரண்டு பெண்கள் நாரையைப் போன்ற சிறகுகளுடன் இருப்பதைப் பார்த்தேன். அவர்கள் பறந்து போனார்கள். சிறகுகளிலுள்ள காற்றால் வாளியை தூக்கிப் போயினர். அவர்கள் வாளியை தூக்கிக் கொண்டு காற்றில் பறந்தனர். 10 பின்னர் நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “அவர்கள் வாளியைத் தூக்கிக் கொண்டு எங்கே போகிறார்கள்?” என்றேன்.
11 தூதன் என்னிடம், “அவர்கள் சிநெயாரிலே அதற்கு ஒரு வீட்டைக்கட்டப் போய் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டைக் கட்டிய பிறகு அந்த வாளியை அங்கே வைப்பார்கள்” என்றான்.
நான்கு இரதங்கள்
6 பின்னர் நான் சுற்றி திரும்பினேன். நான் மேலே பார்த்தேன். நான் நான்கு இரதங்கள் இரண்டு வெண்கல மலைகளுக்கிடையில் செல்வதைக் கண்டேன். 2 சிவப்புக் குதிரைகள் முதல் இரதத்தை, இழுத்துக்கொண்டு சென்றன. இரண்டாவது இரதத்தை கருப்புக் குதிரைகள் இழுத்துக்கொண்டு சென்றன. 3 வெள்ளைக் குதிரைகள், மூன்றாவது இரதத்தை இழுத்துச் சென்றன. சிவப்புப் புள்ளிகளை உடைய குதிரைகள், நான்காவது இரதத்தை இழுத்துச் சென்றன. 4 பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “ஐயா, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டேன்.
5 தூதன், “இவை நான்கு காற்றுகள். இவை இப்பொழுதுதான் உலகம் முழுவதற்கும் ஆண்டவராக இருக்கிறவரிடத்திலிருந்து வந்திருக்கின்றன. 6 கருப்புக் குதிரைகள் வடக்கே செல்லும். சிவப்புக் குதிரைகள் கிழக்கே செல்லும். வெள்ளைக் குதிரைகள் மேற்கே செல்லும். சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரைகள் தெற்கே செல்லும்” என்றான்.
7 சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரைகள் புறப்பட்டுப்போய் பூமியில் அவைகளுக்கான பகுதிகளைக் காண ஆவலாய் இருந்தன. எனவே தூதன் அவைகளிடம், “பூமி முழுவதும் போங்கள்” என்றான். எனவே அவை பூமியில் தங்கள் பகுதிகளில் நடந்து சென்றன.
8 பின்னர் கர்த்தர் என்னைக் கூப்பிட்டார். அவர், “பார், வடக்கே செல்லும் குதிரைகள் பாபிலோனில் தம் வேலையை முடித்துவிட்டன. அவை எனது ஆவியை அமைதிபடுத்திவிட்டன. இப்பொழுது நான் கோபமாக இல்லை!” என்றார்.
ஆசாரியன் யோசுவா ஒரு கிரீடத்தைப் பெறுகிறான்
9 பின்னர், நான் கர்த்தரிடமிருந்து இன்னொரு செய்தியைப் பெற்றேன். அவர், 10 “எகல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனின் சிறை கைதிகளாய் இருந்து வந்திருக்கின்றனர். அம்மனிதர்களிடமிருந்து வெள்ளியையும், தங்கத்தையும் பெறு. பிறகு செப்பனியாவின் மகனாகிய யோசியாவின் வீட்டுக்குப் போ. 11 அந்தப் பொன்னையும் வெள்ளியையும் பயன்படுத்தி கிரீடம் செய். அந்தக் கிரீடத்தை யோசுவாவின் தலையில் வை. (யோசுவா தலைமை ஆசாரியனாக இருந்தான். யோசுவா யோத்சதாக்கின் மகன்) பிறகு யோசுவாவிடம் இவற்றைச் சொல். 12 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“‘கிளை என்று அழைக்கப்படும் மனிதன் இருக்கிறார்.
அவர் பலத்துடன் வளருவார்.
அவர் கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவார்.
13 அவர் கர்த்தருடைய ஆலயத்தைக்கட்டி,
அதற்குரியப் பெருமையைப் பெறுவார்.
அவர் தனது சிங்காசனத்தில் அமர்ந்து ஆள்பவனாவார்.
ஒரு ஆசாரியன் அவனருகில் நிற்பான்.
இவ்விரண்டு பேரும் சேர்ந்து சமாதானத்துடன் பணிசெய்வார்கள்.’
14 அவர்கள் இந்தக் கிரீடத்தை ஜனங்களுக்கு நினைவூட்டுவதற்காக ஆலயத்தில் வைப்பார்கள். அந்தக் கிரீடம் எல்தாய், தொபியா, யெதயா, செப்பனியாவின் மகன் யோசுவா ஆகியோருக்கு நினவூட்டும் சின்னமாக இருக்கும். யோசியா, இது அரசனின் வல்லமை தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டும்.”
15 தொலைத்தூரத்தில் வாழும் ஜனங்களும் வந்து அங்கு ஆலயம் கட்டுவார்கள். பின்னர் கர்த்தர் என்னை உங்களுக்காக அனுப்பினார் என்பதை உணர்வீர்கள். கர்த்தர் சொல்லுகிறபடி நீங்கள் செய்தால் இவை நிகழும்.
கர்த்தர் இரக்கத்தையும் கருணையையும் விரும்புகிறார்
7 தரியுவின் நான்காவது ஆட்சியாண்டில் கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது ஒன்பதாவது மாதத்தின் நான்காம் நாள். (அது கிஸ்லே எனப்படும்) 2 பெத்தேல் ஜனங்கள் சரேத்சேரையும், ரெகெம்மெலேகும், அவனது ஆட்களையும் சில கேள்விகள் கேட்க கர்த்தரிடம் அனுப்பினார்கள். 3 அவர்கள் தீர்க்கதரிசிகளிடமும், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள ஆசாரியர்களிடமும் சென்றனர். அம்மனிதர்கள் அவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டனர்: “பல ஆண்டுகளாக ஆலயத்தின் அழிவுக்காக நாங்கள் துக்கம் கொண்டோம். ஒவ்வொரு ஆண்டின் ஐந்தாவது மாதத்திலும் நாங்கள் அழுவதற்கும், உபவாசிப்பதற்கும் தனியான காலத்தை நியமித்திருந்தோம். நாங்கள் இதனைத் தொடரவேண்டுமா?”
4 நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றேன் 5 “ஆசாரியர்களுக்கும் இந்த நாட்டிலுள்ள பிறருக்கும் இதனைக் கூறு. நீங்கள் ஐந்தாவது மாதத்திலும், ஏழாவது மாதத்திலும், உபவாசம் இருந்து 70 வருடங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டினீர்கள். ஆனால் அந்த உபவாசம் எனக்காகவா? 6 இல்லை. நீங்கள் உண்ணுவதும், குடிப்பதும் எனக்காகவா? இல்லை. இது உங்கள் சொந்த நலனுக்காக. 7 தேவன் முற்கால தீர்க்கதரிசிகளைக் கெண்டு இதே செய்தியைச் சொல்லியிருக்கிறார். எருசலேம் ஒரு வளமான நகரமாக ஜனங்களால் நிறைந்திருந்தபோது அவர் இவற்றைச் சொன்னார். எருசலேமைச் சுற்றியுள்ள நகரங்களிலும் நெகேவ், மேற்கத்திய மலை அடிவாரங்களிலும் ஜனங்கள் வாழ்ந்த காலத்தில் தேவன் இவற்றைச் சொன்னார்.”
8 இதுதான் சகரியாவுக்கான கர்த்தருடைய செய்தி.
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“எது நன்மையும் நேர்மையும் கொண்டதோ அவற்றை நீ செய்ய வேண்டும்.
நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையும் இரக்கமும் கொள்ளவேண்டும்.
10 விதவைகளையும், அநாதைகளையும்,
அயல் நாட்டாரையும், ஏழைகளையும் துன்புறுத்தாதேயுங்கள்.
ஒருவருக்கொருவர் தீமைச் செய்ய எண்ணவும் வேண்டாம்!” என்றார்.
11 ஆனால் அந்த ஜனங்கள் கேட்க மறுத்தனர்.
அவர்கள் அவர் விரும்பியதை செய்ய மறுத்தனர்.
அவர்கள் தங்கள் காதுகளை மூடினார்கள்.
எனவே, தேவன் என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியவில்லை.
12 அவர்கள் மிகவும் கடின மனமுடையவர்கள்.
அவர்கள் சட்டங்களுக்கு அடிபணிவதில்லை.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆவியைக்கொண்டு
தனது ஜனங்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாக செய்திகளை அனுப்பினார்.
ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை.
எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மிகவும் கோபமுற்றார்.
13 ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“நான் அவர்களைக் கூப்பிட்டேன்.
அவர்கள் பதில் சொல்லவில்லை.
இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால்,
நான் பதில் சொல்லமாட்டேன்.
14 நான் மற்ற நாடுகளை, ஒரு புயலைப்போன்று அவர்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன்.
அவர்கள் அந்த நாடுகளை அறியமாட்டார்கள்.
ஆனால், இந்த நாடு பிற நாடுகள் வந்து போன பிறகு அழிக்கப்படும்.
இந்த செழிப்பான நாடு அழிக்கப்படும்” என்றார்.
2008 by World Bible Translation Center