Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 50

ஆசாபின் பாடல்களில் ஒன்று

50 தெய்வங்களுக்கெல்லாம் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார்.
    சூரியன் உதிக்குமிடத்திலிருந்து அது மறைகிற இடம் வரைக்குமுள்ள பூமியின் எல்லா ஜனங்களையும் அழைக்கிறார்.
சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவன் அழகானவர்.
நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார்.
    அவருக்கு முன்னே நெருப்பு எரியும். அவரைச் சூழ்ந்து புயல் வீசும்.
தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு
    நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார்.
தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே,
    என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், என்னைச் சூழ்ந்து நில்லுங்கள்.

என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள்.
    நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.”

தேவனே நியாயாதிபதி,
    வானங்கள் அவரது நன்மைகளைக் கூறும்.
“எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்!
    இஸ்ரவேலின் ஜனங்களே, உங்களுக்கு எதிரான எனது சாட்சியைக் காட்டுவேன்.
    நானே உங்கள் தேவன்.
உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன்.
    எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் கொண்டுவந்தீர்கள்.
ஒவ்வொரு நாளும் அவற்றை எனக்கு கொடுக்கிறீர்கள்.

உங்கள் வீட்டின் எருதுகளையோ

    உங்கள் மந்தையின் ஆடுகளையோ நான் எடுத்துக்கொள்வதில்லை.
10 எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை.
    காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை.
    மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை.
11 உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்.
    மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை.
12 எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன்.
    உலகமும் அதன் அனைத்துப் பொருள்களும் எனக்குச் சொந்தமானவை.
13 எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை.
    ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.

14 எனவே ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள்.
    நீங்கள் மிக உன்னதமான தேவனுக்கு வாக்குறுதி பண்ணினீர்கள்.
    எனவே வாக்களித்த பொருள்களை அவருக்குக் கொடுங்கள்.
15 தேவன், “இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்!
    நான் உங்களுக்கு உதவுவேன்.
    நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத்த முடியும்” என்று கூறுகிறார்.

16 தேவன் தீயோரைப் பார்த்து, “நீங்கள் எனது சட்டங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
    எனது உடன்படிக்கையைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
17 ஆனால் நான் உங்களைத் திருத்தும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்?
    நான் கூறும் காரியங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
18 நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள்.
    விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள்.
19 நீங்கள் தீயவற்றைப் பேசிப் பொய்களைச் சொல்கிறீர்கள்.
20 உங்கள் சொந்த சகோதரரையும் பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள்.
21 நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
    நீங்கள் எதையும் சொல்லாதிருக்கிறீர்கள், நானும் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
ஆனால் நான் அமைதியாக இரேன்!
    நீங்கள் அதைத் தெளிவாக உணரும்படி நான் செய்வேன்.
    உங்கள் முகத்திற்கெதிராக உங்களை விமர்சிப்பேன்!
22 நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள்.
    உங்களைக் கிழித்தெறியும் முன்னர்
நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்!
    அது நிகழ்ந்தால் உங்களை மீட்பவர் எவருமில்லை!
23 எனவே ஒருவன் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தினால் அவன் என்னை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறான்.
    ஒருவன் அவனது வாழ்க்கையை மாற்றியமைத்தால் அப்போது நான் அவனுக்கு தேவனுடைய காக்கும் வல்லமையைக் காட்டுவேன்” என்கிறார்.

சங்கீதம் 59-60

“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.

59 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும்.
தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.
    அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்.
    ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை.
அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
    ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை.
    கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும்.
நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
    எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும்.
    அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.

அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து
    ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள்.
அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும்.
    அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள்.
    அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும்.
    அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்.
தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன்.
    தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர்.
10 தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார்.
    என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.
11 தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள்.
    என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும்.
12 அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர்.
    அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும்.
    அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
13 உமது கோபத்தில் அவர்களை அழியும்.
    அவர்களை முற்றிலுமாக அழியும்!
யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும்,
    தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்!

14 ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர்.
15 அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை.
    அவர்களுக்கு உறங்க இடமும் இராது.
16 ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன்.
    ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
    தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம்.
17 உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன்.
    ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
    நீரே என்னை நேசிக்கும் தேவன்.

“உடன்படிக்கையின் லில்லி” என்ற பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். இது போதிப்பதற்குரியது. தாவீது ஆராம் நகராயீம், ஆராம் சோபா ஆகிய நாட்டினரோடு யுத்தம் பண்ணிய காலத்தில், யோவாப் திரும்பிவந்து 12,000 ஏதோமிய வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வெட்டிக் கொன்றபோது பாடியது.

60 தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர்.
    தயவாய் எங்களிடம் திரும்பி வாரும்.
நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர்.
    நம் உலகம் பிரிந்து விழுந்தது.
    அருள் கூர்ந்து அவற்றை ஒன்றாக இணைத்து விடும்.
நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர்.
    நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம்.
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர்.
    அவர்கள் இப்போது பகைவனிடமிருந்து தப்பிச்செல்ல முடியும்.

உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்!
    என் ஜெபத்திற்குப் பதில் தாரும், நீர் நேசிக்கிற ஜனங்களைக் காப்பாற்றும்.

தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்:
    “நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்!
இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன்.
    அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன்.
    அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.
கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை.
    எப்பிராயீம் எனது தலைக்குப் பெலன்.
    யூதா என் நியாயத்தின் கோல்.
மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
    ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
    நான் பெலிஸ்தரை வென்று என் வெற்றியை முழக்கமிடுவேன்!”

9-10 தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்!
    வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்?
ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்?
    தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும்.
ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்!
    நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை.
11 தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்!
    மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது!
12 தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும்.
    தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும்.

சங்கீதம் 93

93 கர்த்தர் அரசர்.
    அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார்.
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது,
    அது அசைக்கப்படுவதில்லை.
தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது.
    தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது.
    மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன.
    ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும்.
    உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.

சங்கீதம் 96

96 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
    உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!
    அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!
    ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.
    தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.
    வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.
    ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.
    தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
குடும்பங்களும் தேசங்களும்
    கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
    உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
    கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
10     கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்!
அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை.
    கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார்.
11 விண்ணுலகங்களே!
    மகிழ்ச்சிகொள்ளுங்கள்.
பூமியே! களிகூரு.
    கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்!
    வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
13 கர்த்தர் வருகிறார், ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள்.
    கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார்.
நீதியோடும் நியாயத்தோடும்
    அவர் உலகை ஆளுகை செய்வார்.

யோபு 29:1

யோபு அவனது பேச்சைத் தொடர்கிறான்

29 யோபு அவனுடைய பேச்சைத் தொடர்ந்தான்.

யோபு 31:1-23

31 “என்னைக் கவர்கின்ற ஒரு கன்னிப் பெண்ணைப் பாராதிருக்கும்படி
    என் கண்களோடு நான் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டேன்.
சர்வ வல்லமையுள்ள தேவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறார்?
    உயரத்திலுள்ள பரலோகத்தின் வீட்டிலிருந்து எவ்வாறு தேவன் ஜனங்களுக்குத் திரும்பக் கொடுக்கிறார்?
தேவன் தொல்லையையும் அழிவையும் கெட்ட ஜனங்களுக்கு அனுப்புகிறார்.
    தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார்.
நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் அறிகிறார்.
    நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் தேவன் காண்கிறார்.

“நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால்
    அல்லது நான் பொய் சொல்லவும் ஜனங்களை ஏமாற்றவும் ஓடியிருந்தால்,
அப்போது, தேவன் என்னைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க அளவு கோலைப் பயன்படுத்தட்டும்.
    அப்போது நான் களங்கமற்றவன் என்பதை தேவன் அறிவார்!
நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால்,
    என் கண்கள் என் இருதயத்தை தீமைக்கு நேரே நடத்தினால்,
    என் கைகளில் பாவத்தின் அழுக்குப் படிந்திருந்தால், அப்போது தேவன் அறிவார்,
அப்போது நான் நட்ட பயிர்களைப் பிறர் உண்ணட்டும்,
    என் பயிர்கள் பிடுங்கப்படட்டும்.

“நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால்.
    அயலானின் மனைவியோடு தகாத நெறியில் நடக்கும்படி அவன் கதவருகே காத்திருந்தால்.
10 அப்போது, எனது மனைவி மற்றொருவனின் உணவைச் சமைக்கட்டும்,
    பிற மனிதன் அவளோடு படுத்திருக்கட்டும்.
11 ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது.
    அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும்.
12 பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது.
    நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்!

13 “என் அடிமைகளுக்கு என்னிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டபோது
    அவர்களிடம் நியாயமாயிருக்க நான் மறுத்திருந்தால்,
14 நான் தேவனைச் சந்திக்கும்போது என்ன செய்வேன்?
    நான் செய்ததைக் குறித்து தேவன் விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வேன்?
15 என் தாயின் கர்ப்பத்தில் தேவன் என்னை உண்டாக்கினார், தேவன் என் அடிமைகளையும் உண்டாக்கினார்,
    நம்முடைய தாயின் கருவில் தேவன் நமக்கு உருவம் கொடுத்தார்.

16 “நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை.
    விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.
17 நான் உணவைப் பொறுத்தமட்டில் சுய நலம் பாராட்டியதில்லை.
    நான் எப்போதும் அநாதைகளுக்கு உணவளித்தேன்.
18 தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன்.
    என் வாழ்க்கை முழுவதும், நான் விதவைகளை ஆதரித்து வந்திருக்கிறேன்.
19 ஆடையில்லாததால் ஜனங்கள் துன்புறுவதைக் கண்டபோதும்,
    மேற்சட்டையில்லாத ஏழையைக் கண்டபோதும்,
20 நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன்.
    என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள்.
21 வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது
    நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை. [a]
22 நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்!
    என் கரம் எலும்புக் குழியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்!
23 ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை.
    நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன்.
    அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது.

அப்போஸ்தலர் 15:1-11

எருசலேமில் சந்திப்பு

15 பின்பு யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்குச் சில மனிதர் வந்தனர். யூதரல்லாத சகோதரருக்கு அவர்கள் “நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இதைச் செய்யும்படியாக மோசே நமக்குக் கற்பித்தார்” என்று போதிக்க ஆரம்பித்தனர். பவுலும் பர்னபாவும் இந்தப் போதனையை எதிர்த்தனர். அதைக் குறித்து இந்த மனிதரிடம் அவர்கள் விவாதித்தனர். எனவே அந்தச் சபையார் பவுலையும் பர்னபாவையும், வேறு சில மனிதர்களையும் எருசலேமுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அங்கிருந்த அப்போஸ்தலரிடமும் மூப்பர்களிடமும் இதைக் குறித்து அதிகமாகப் பேசப் போகிறவர்களாக இந்த மனிதர்கள் இருந்தார்கள்.

அவர்கள் பயணத்திற்கு சபை உதவிற்று. பெனிக்கே, சமாரியா ஆகிய தேசங்களின் வழியாக அம்மனிதர்கள் சென்றனர். யூதரல்லாத மக்கள் உண்மையான தேவனிடம் திரும்பியது குறித்த அனைத்தையும் அவர்கள் கூறினர். இது எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. பவுலும் பர்னபாவும் பிறரும் எருசலேமை வந்தடைந்தனர். அப்போஸ்தலரும், மூப்பர்களும் விசுவாசிகள் அனைவரும் சேர்ந்து அவர்களை வரவேற்றனர். பவுலும் பர்னபாவும், பிறரும் தேவன் தங்களிடம் செய்த அனைத்துக் காரியங்களையும் கூறினர். எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர்.

அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே, தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியைப் போதனை செய்வதற்கு அப்போது உங்களுக்கிடையிலிருந்து தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் என் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசம் வைத்தனர். தேவன் மனிதரின் எண்ணங்களை அறிவார். அவர் யூதரல்லாத மக்களையும் ஏற்றுக்கொண்டார். எங்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து தேவன் இதனைக் காட்டினார். இந்த மனிதர்கள் தேவனுக்கு நம்மிலிருந்தும் வேறுபட்டவர்களல்லர். அவர்கள் விசுவாசம் வைத்தபோது, தேவன் அவர்கள் இருதயங்களை பரிசுத்தமுறச் செய்தார். 10 எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை! 11 நாமும் இந்த மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றான்.

யோவான் 11:17-29

பெத்தானியாவில் இயேசு

17 இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லாசரு இறந்துபோனாதாகவும் அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனதாகவும் அறிந்தார். 18 எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது. 19 யூதர்கள் பலர் மார்த்தாளிடமும் மரியாளிடமும் வந்திருந்தனர். அவர்களின் சகோதரன் லாசருவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்தனர்.

20 இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள். 21 மார்த்தாள் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். 22 ஆனால் இப்பொழுதுகூட நீர் கேட்பவற்றை தேவன் உமக்குத் தருவார்” என்றாள்.

23 இயேசுவோ, “உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்” என்றார்.

24 மார்த்தாளோ, “உயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசிநாளில் அவன் மீண்டும் எழுந்து உயிர் வாழ்வான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.

25 இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான். 26 என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?” எனக் கேட்டார்.

27 “ஆம், ஆண்டவரே. நீர்தான் கிறிஸ்து என்று நம்புகிறேன். நீர்தான் தேவனின் குமாரன். நீரே உலகத்திற்கு வரவிருந்தவர்” என்றாள் மார்த்தாள்.

இயேசு அழுதல்

28 மார்த்தாள் இவ்வாறு சொன்ன பிறகு அவள் தன் சகோதரி மரியாளிடம் திரும்பிச் சென்றாள். அவள் தனியாக அவளிடம் பேசினாள். “இயேசு இங்கே இருக்கிறார். அவர் உன்னை அழைத்தார்” என்றாள் மார்த்தாள். 29 இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center