Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 75-76

“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று

75 தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
    நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
    நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.

தேவன் கூறுகிறார்:
    “நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்.
    நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.
பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும்.
    ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்”.

4-5 “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
    ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’
    ‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.
ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை
    எதுவும் இப்பூமியில் இல்லை.
தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார்.
    தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார்.
    தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார்.
    கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது.
அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார்,
    கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.
நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன்.
    இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
10 கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன்.
    நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.

இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்

76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
    இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
தேவனுடைய ஆலயம் சாலேமில் [a] இருக்கிறது.
    தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
    மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
    மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
    அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
    இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
தேவனே, நீர் பயங்கரமானவர்!
    நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
    தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
    பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
    நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
    தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.

11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
    இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
    அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
    பூமியின் எல்லா அரசர்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.

சங்கீதம் 23

தாவீதின் பாடல்

23 கர்த்தர் என் மேய்ப்பர்.
    எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
    குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
    அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
    ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
    உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
    என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
    நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.

சங்கீதம் 27

தாவீதின் பாடல்

27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
    யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
    எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
    என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
    போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
    ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
    இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
    கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”

ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
    அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
    அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
    அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
    மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
    கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.

கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
    என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன்.
    கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
    உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்!
எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும்.
    என்னை விட்டு விடாதிரும்!
    என் தேவனே, நீரே என் இரட்சகர்!
10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
    ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
    எனவே உமது வழிகளை எனக்குப் போதியும்.
சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
    என்னைப்பற்றி பொய்யுரைத்தனர்.
    என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
13 நான் மரிக்கும் முன்னர்
    கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.
    பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.

எண்ணாகமம் 3:1-13

ஆசாரியர்களான ஆரோனின் குடும்பத்தினர்

சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தபோது, ஆசாரியனாகிய ஆரோன், மற்றும் மோசேயின் வம்ச வரலாறு கீழ்க்கண்டவாறு இருந்தது:

ஆரோனுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நாதாப் முதல் மகன். அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் இளையவர்கள். இவர்கள் ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொறுப்பைப் பெற்றிருந்தனர். ஆனால் நாதாபும் அபியூவும் தங்கள் பாவத்தின் காரணமாக, கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போதே, மரித்துப்போனார்கள். கர்த்தருக்குக் காணிக்கைப் பலி செலுத்தும்போது கர்த்தரால் அங்கீகரிக்கப்படாத நெருப்பை அவர்கள் பயன்படுத்தினர். எனவே, நாதாப்பும், அபியூவும் சீனாய் பாலைவனத்திலேயே மடிந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. எனவே, அவர்களின் இடத்தில் எலெயாசாரும், இத்தாமாரும் ஆசாரியர்களாக கர்த்தருக்கு ஊழியம் செய்தனர். அவர்களின் தந்தையான ஆரோன் உயிரோடு இருக்கும்போதே இது நிகழ்ந்தது.

ஆசாரியர்களின் உதவியாட்களான லேவியர்கள்

கர்த்தர் மோசேயிடம், “லேவியர்களின் கோத்திரத்திலிருந்து அனைவரையும், ஆசாரியனாகிய ஆரோனிடம் அழைத்துக் கொண்டு வா. அவர்கள் ஆரோனின் உதவியாட்களாக இருப்பார்கள். ஆசரிப்புக் கூடாரத்தில் ஆரோன் ஊழியம் செய்யும்போது, அவனுக்கு லேவியர்கள் உதவுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தக் கூடாரத்திற்கு தொழுதுகொள்ள வரும்போதும், லேவியர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பது இஸ்ரவேல் ஜனங்களின் கடமையாகும். ஆனால் லேவியர்கள் இவற்றைச் சுமந்து இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சேவை செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரத்தில் தொழுதுகொள்ள வேண்டிய முறை இதுவேயாகும்.

“ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் லேவியர்களை ஒப்படையுங்கள். அவர்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உதவி செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

10 “ஆரோனையும் அவனது மகன்களையும், ஆசாரியர்களாக ஊழியம் செய்ய நியமனம் செய். அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். இப்பரிசுத்தமான பொருட்களின் அருகில் வேறு எவராவது வர முயன்றால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்” என்றார்.

11 மேலும் கர்த்தர் மோசேயிடம், 12 “இஸ்ரவேல் ஜனங்களின் குடும்பம் ஒவ்வொன்றிலும் முதலில் பிறக்கும் மகனை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது எனக்கு ஊழியம் செய்வதற்காக லேவியர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர்கள் எனக்குரியவர்களாக இருப்பார்கள்; எனவே இனி இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முதல் பிள்ளையை எனக்குக் கொடுக்க வேண்டாம். 13 நீங்கள் எகிப்தில் இருந்தபோது நான் எகிப்திலுள்ள முதலில் பிறந்த அனைத்தையும் கொன்றேன். அந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு முதல் குழந்தையையும் எனக்குரியதாக நான் எடுத்துக்கொண்டேன். முதலில் பிறந்த அனைத்து குழந்தைகளும், அனைத்து மிருகங்களும் எனக்குரியது. ஆனால் இப்போது உங்களுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகளை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். லேவியர்களை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டேன். நானே கர்த்தர்” என்றார்.

கலாத்தியர் 6:11-18

பவுல் தன் நிருபத்தை முடித்தல்

11 இதை நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். கடிதங்கள் எவ்வளவு பெரியவை என்று பாருங்கள். 12 சிலர் உங்களை விருத்தசேதனம் செய்யுமாறு கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சில மக்கள் தம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்பதன் பொருட்டு அவர்கள் இதனைச் செய்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவையை பிரசங்கித்தால் துன்பப்பட நேரும் என அஞ்சுகிறார்கள். 13 விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களோ சட்டத்தை மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களைச் செய்ய வைப்பதில் பெருமைப்பட மட்டும் விரும்புகிறார்கள்.

14 இது போன்றவற்றைக் குறித்து நான் பெருமையடித்துக்கொள்ளமாட்டேன் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் சிலுவை ஒன்றே நான் பெருமைப்படத்தக்கது. சிலுவையில் இயேசு இறந்து போனதால் எனக்கு இந்த உலகமே செத்துப்போனது. இந்த உலகத்துக்கு நான் செத்துப்போனேன். 15 ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொண்டவனா இல்லையா என்பது முக்கியமல்ல. தேவனால் புதுப்படைப்பாக ஆக்கப்படுவது தான் முக்கியம். 16 இந்தச் சட்டத்தின் முறைப்படி வாழ்கிற தேவனுடைய இஸ்ரவேலர்களுக்கு சமாதானமும் கிருபையும் உண்டாவதாக.

17 இனிமேல் எந்தத் தொந்தரவும் எனக்குத் தர வேண்டாம். எனது சரீரத்தில் வடுக்களை ஏற்றிருக்கிறேன். இந்த வடுக்கள் நான் இயேசு கிறிஸ்துவைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டும்.

18 என் சகோதர சகோதரிகளே, நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு கூட இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஆமென்.

மத்தேயு 17:1-13

இயேசு மோசேயோடும் எலியாவோடும் காணப்படுதல்(A)

17 ஆறு நாட்கள் கழித்து, பேதுரு, யாக்கோபு, மற்றும் யாக்கோபின் சகோதரன் யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு இயேசு ஓர் உயரமான மலைக்குச் சென்றார். அங்கு அவர்கள் மட்டும் தனியே இருந்தார்கள். சீஷர்கள் பார்த்துக்கொண்டிருந்தபொழுதே இயேசுவின் ரூபம் மாறியது. அவரது முகம் சூரியனைப்போலப் பிரகாசமானது. அவரது உடைகள் ஒளியைப் போன்று வெண்மையாயின. பின்பு, இருவர் வந்து பேசினார்கள். அவர்கள் மோசேயும் எலியாவும் ஆவார்கள்.

பேதுரு இயேசுவிடம்,, “ஆண்டவரே நாம் இங்கு வந்தது நல்லதாயிற்று. நீர் விரும்பினால், நான் இங்கு மூன்று கூடாரங்களை அமைக்கிறேன். உமக்கு ஒன்று, மோசேக்கு ஒன்று, எலியாவிற்கு ஒன்று” என்று கூறினான்.

பேதுரு பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர்களுக்கு மேலாக ஒரு பிரகாசமான மேகம் வந்தது. மேகத்தினின்று ஒரு குரல் எழும்பி,, “இவர் (இயேசு) எனது குமாரன். இவரிடம் நான் அன்பு செலுத்துகிறேன். நான் இவரிடம் பிரியமாக இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று சொன்னது.

இயேசுவுடன் இருந்த சீஷர்கள் இதைக் கேட்டனர். மிகவும் பயந்து போன அவர்கள், தரையில் வீழ்ந்தார்கள். இயேசு அவர்களுக்கருகில் வந்து, அவர்களைத் தொட்டு,, “எழுந்திருங்கள். பயப்படாதீர்கள்” எனக் கூறினார். தலையை உயர்த்திப் பார்த்த சீஷர்கள், இயேசு மட்டும் தனியே இருப்பதைக் கண்டார்கள்.

இயேசுவும் சீஷர்களும் மலையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தார்கள்., “மலை மீது கண்டவற்றை யாரிடமும் கூறாதீர்கள். மரணத்திலிருந்து மனிதகுமாரன் உயிர்த்தெழும்வரைப் பொறுத்திருங்கள். பின்னர் நீங்கள் கண்டவற்றை மக்களிடம் கூறலாம்” என்று இயேசு சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.

10 சீஷர்கள் இயேசுவிடம்,, “கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே, எலியா வருகை புரிய வேண்டுமென ஏன் வேதபாரகர் கூறுகிறார்கள்!” என்று கேட்டார்கள்.

11 அதற்கு இயேசு,, “எலியாவின் வருகை குறித்து அவர்கள் கூறுவது சரியே. மேலும், எவை எவை எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே எலியா அவற்றை ஆயத்தம் செய்து வைப்பான். 12 ஆனால், எலியா ஏற்கெனவே வந்துள்ளான். ஆனால், அவன் யாரென்பதை மக்கள் அறியவில்லை. மக்கள் பலவகையான துன்பங்களை அவனுக்குத் தந்தனர். மனித குமாரனுக்கும் அவ்வாறே அவர்களால் துன்பங்கள் ஏற்படும்” என்று பதிலளித்தார். 13 யோவான் ஸ்நானகனே உண்மையில் எலியா என்பதை பிற்பாடு சீஷர்கள் உணர்ந்தார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center