Book of Common Prayer
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல்
63 தேவனே, நீரே என் தேவன்.
நீர் எனக்கு மிகவும் தேவையானவர்.
நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று
என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
2 உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன்.
நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.
3 ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது.
என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன்.
உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன்.
5 சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன்.
மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.
6 என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.
7 நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்!
நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
8 என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது.
நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.
9 சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள்.
அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
11 ஆனால் அரசனோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார்.
அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள்.
ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார்.
ஒரு துதிப்பாடல்
98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும், பூமியும்
அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
தாவீதின் ஒரு பாடல்
103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
6 கர்த்தர் நியாயமானவர்.
பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
9 கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
14 தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.
15 நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார்.
நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.
16 நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார்.
அம்மலர் சீக்கிரம் மலர்கிறது.
வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது.
பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.
17 ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார்.
என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார்.
தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர்.
18 அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
19 பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது.
அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
20 தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள்.
நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள்.
21 அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
நீங்கள் அவரது பணியாட்கள்.
தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.
22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார்.
அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி
47 “மண்ணிலே இறங்கிவந்து அங்கே உட்காரு!
கல்தேயரின் கன்னியே தரையில் உட்காரு!
இப்போது நீ ஆள்பவள் இல்லை!
இனிமேல் நீ மென்மையானவள் என்று உன்னை ஜனங்கள் நினைக்கமாட்டார்கள்.
2 இப்போது நீ கடினமாக வேலை செய்ய வேண்டும்.
எந்திரத்தை நீ எடுக்க வேண்டும்.
தானியங்களை அரைத்து மாவாக்கு.
உனது முக்காட்டை நீக்கிவிடு. உனது ஆடம்பர ஆடைகளை நீக்கி விடு.
உனது நாட்டை விட்டுச் சென்று விடு!
ஆண்கள் பார்க்கும்படி உன் ஆடையைத் தொடைவரை தூக்கு, ஆறுகளைக் கடந்து போ,
3 ஆண்கள் உனது உடலைப் பார்க்கட்டும்.
உடல் ஆசைக்கு உன்னைப் பயன்படுத்தட்டும்.
நீ செய்கிற கெட்டவற்றுக்கு உன்னை விலை கொடுக்கும்படி செய்வேன்.
எந்த மனிதனும் உனக்கு உதவி செய்ய வரமாட்டான்.
4 “எனது ஜனங்கள் சொல்கிறார்கள், ‘தேவன் நம்மைக் காப்பார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர்’”
5 “எனவே, பாபிலோனே, அங்கே உட்காரு. அமைதலாக இரு.
கல்தேயரின் மகளே, இருளுக்குள் போ! ஏனென்றால், ‘இராஜ்யங்களின் இராணியாக இனி நீ இருக்கமாட்டாய்,’
6 “நான் எனது ஜனங்களின் மீது கோபத்தோடு இருக்கிறேன்.
அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள்.
ஆனால் நான் கோபமாக இருந்தேன்.
எனவே அவர்களை முக்கியமற்றவர்களாக்கினேன்.
நான் அவர்களை உனக்குக் கொடுத்தேன்.
நீ அவர்களைத் தண்டித்துவிட்டாய்.
நீ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை.
வயதான ஜனங்களும் கடுமையாக வேலை செய்யும்படி நீ செய்தாய்.
7 ‘நான் என்றென்றும் வாழ்கிறேன்.
நான் எப்பொழுதும் இராணியாகவே இருப்பேன்’ என்று நீ சொன்னாய்.
அந்த ஜனங்களுக்குச் செய்த கெட்டவற்றைக்கூடக் கவனிக்கவில்லை.
என்ன நிகழும் என்று நீ நினைக்கவில்லை.
8 எனவே, மெல்லிய இயல்புடைய பெண்ணே!
இப்போது என்னைக் கவனி!
நீ பாதுகாப்பை உணருகிறாய், ‘நான் மட்டுமே முக்கியமானவள். என்னைப்போன்று முக்கியமானவள் எவருமில்லை.
நான் எப்போதும் விதவை ஆவதில்லை நான் எப்போதும் பிள்ளைகளைக் கொண்டிருப்பேன்’ என்று நீ சொல்கிறாய்.
9 இந்த இரண்டும் திடீரென்று உனக்கு நிகழும். முதலில் நீ உனது பிள்ளைகளை இழப்பாய்.
பிறகு நீ உனது கணவனை இழப்பாய்.
ஆம் இவை உனக்கு உண்மையில் நிகழும்.
உனது அனைத்து மந்திரங்களும் தந்திரங்களும் உன்னைக் காப்பாற்றாது.
10 நீ கெட்டவற்றைச் செய்கிறாய். ஆனாலும் நீ பாதுகாப்பாயிருப்பதாக நினைக்கிறாய்.
நீ உனக்குள், ‘நான் செய்கிற தவறுகளை எவரும் பார்ப்பதில்லை’ என நினைக்கிறாய்.
உனது ஞானமும், அறிவும் உன்னைக் காப்பாற்றும் என்று எண்ணுகிறாய்.
‘நான் ஒருத்தி மட்டுமே, என்னைப்போன்று முக்கியமானவள் எவளுமில்லை’ என்று நீ உனக்குள் நினைக்கிறாய்.
11 “ஆனால், உனக்குத் துன்பங்கள் வரும்.
அவை எப்போது வரும் என்று உனக்குத் தெரியாது.
ஆனால் அழிவு வந்துகொண்டிருக்கிறது.
நீ அந்தத் துன்பங்களைத் தடுத்திட எதுவும் செய்யமுடியாது!
என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளுமுன்னரே விரைவாக நீ அழிந்துபோவாய்.
12 உன் வாழ்வு முழுவதும் கடுமையாக உழைத்து தந்திரமும் மந்திரமும் கற்றாய்.
எனவே, உனது மந்திரத்தையும் தந்திரத்தையும் பயன்படுத்தத் தொடங்கு!
ஒருவேளை அந்தத் தந்திரங்கள் உனக்கு உதவும்.
ஒரு வேளை உன்னால் வேறு எவரையாவது பயங்காட்ட முடியும்.
13 உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
அவர்களது ஆலோசனைகளால் நீ சோர்வடைந்து விட்டாயா?
நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு.
எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும்.
உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.
14 ஆனால், அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
அவர்கள் பதரைப்போன்று எரிந்துபோவார்கள்.
அவர்கள் விரைவாக எரிந்துபோவார்கள். அப்பம் சுடுவதற்கான கனல்கூட மீதியாகாமல் எரிந்துபோகும்.
குளிர் காய்வதற்குக்கூட நெருப்பு இல்லாமல் போகும்.
15 இதுவரை நீ கடினப்பட்டு வேலை செய்துள்ள அனைத்துக்கும் இது ஏற்படும்.
உனது வாழ்க்கை முழுவதும் எவருடன் வியாபாரம் செய்தாயோ அவர்கள் உன்னை விட்டு விலகிப்போவார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் வழி போவார்கள்.
உன்னைக் காப்பாற்ற எவரும் மீதியாக இருக்கமாட்டார்கள்.”
தேவனிடம் நெருங்கி வாருங்கள்
19 ஆதலால் சகோதர சகோதரிகளே! மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் நுழைய நாம் முழுமையாக விடுதலை பெற்று விட்டோம். நாம் அச்சம் இல்லாமல் இதனைச் செய்யமுடியும். ஏனென்றால் கிறிஸ்துவின் மரணம் நமக்காக நிகழ்ந்துவிட்டது. 20 இப்போது மிகப் பரிசுத்தமான இடத்தின் வழியை மூடிக்கொண்டிருக்கிற அத்திரைக்குள் நுழைய நம்மிடம் ஒரு புதிய வழி இருக்கிறது. தன் சரீரத்தையே பலியாகத் தந்து அப்புதிய வாழ்வின் வழியை இயேசு திறந்தார். 21 தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மாபெரும் ஆசாரியர் ஒருவர் நமக்கு இருக்கிறார். 22 நாம் சுத்தப்படுத்தப்பட்டு குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் பரிசுத்த நீரால் கழுவப்பட்டுள்ளன. எனவே உண்மையான இதயத்தோடும், விசுவாசம் நமக்களிக்கிற உறுதியோடும் தேவனை நெருங்கி வாருங்கள். 23 மற்றவர்களுக்கு நாம் சொல்கிற நமது நம்பிக்கையை பலமாகப் பற்றிக்கொள்வோம். நமக்கு வாக்குறுதியளித்த ஒருவரை நாம் நம்ப முடியும்.
உறுதிபெற ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள்
24 நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். நமது அன்பை வெளிப்படுத்தவும் நன்மை செய்யவும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவது என்று பார்க்கவேண்டும்.
25 சிலர் வழக்கமாய்ச் செய்வதுபோல நாம் ஒன்றாகச் சந்திப்பதை நிறுத்திவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கிறிஸ்து திரும்பிவரும் அந்த நாள் மிக விரைவில் வருவதை நாம் பார்ப்பதுபோல் செயல்பட வேண்டும்.
கிறிஸ்துவிடமிருந்து விலகாதீர்கள்
26 நாம் உண்மையை உணர்ந்துவிட்ட பின்னர் வெளிப்படையாகத் தொடர்ந்து பாவங்களைச் செய்து வந்தால் பிறகு நம் பாவங்களுக்கு வேறு எந்த பலியும் இல்லை. 27 நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும். 28 மோசேயினுடைய சட்டத்தை ஒருவன் ஒதுக்கினால் அக்குற்றத்தை உறுதிப்படுத்த இரண்டு அல்லது மூன்று சாட்சிகளே போதுமானதாக இருந்தன. அவன் மன்னிக்கப்படவில்லை. அவன் கொல்லப்பட்டான். 29 ஆகவே தேவனுடைய குமாரன் மேல் வெறுப்பைக் காட்டுகிறவன் எவ்வளவு மோசமான தண்டனைக்கு உரியவன் என்பதை யோசித்துப் பாருங்கள். அவன் இரத்தத்தைப் பரிசுத்தமற்றதாக நினைத்தான். புதிய உடன்படிக்கையின்படி இயேசு சிந்திய அந்த இரத்தம் தான் அம்மனிதனைப் பரிசுத்தமாக்கிய உடன்படிக்கையின் இரத்தமாகும். தனக்குக் கிருபை காட்டிய ஆவியையே அம்மனிதன் அவமானப்படுத்தினான். 30 “நான், மக்கள் செய்கிற பாவங்களுக்குத் தண்டனை தருவேன். நானே பதிலுக்குப் பதில் செய்வேன்” [a]என்று தேவன் சொன்னதை நாம் அறிவோம். அதோடு, “கர்த்தர் தன் மக்களை நியாயம் தீர்ப்பார்” [b]என்றும் சொன்னார். 31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது ஒரு பாவிக்கு மிகப் பயங்கரமாக இருக்கும்.
2 அங்கே ஐந்து மண்டபங்கள் உள்ள ஒரு குளம் இருந்தது. யூதமொழியில் இதற்கு பெதஸ்தா [a] என்று பெயர். இந்தக் குளம் ஆட்டுவாசல் அருகே இருந்தது. 3 குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் நோயாளிகள் பலர் படுத்துக்கிடந்தனர். [b] 4 அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள். 5 அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான். 6 இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
7 “ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான்.
8 பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். 9 உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள். 10 ஆகையால் யூதர்கள், “இன்று ஓய்வு நாள். நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போவது சரியல்ல” என்று அவனிடம் கூறினர்.
11 ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான்.
12 “உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர்.
13 ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார்.
14 பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், “பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக” என்று கூறினார்.
15 பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், “இயேசுதான் என்னைக் குணமாக்கியவர்” என்று சொன்னான்.
16 இயேசு இவ்வாறு ஓய்வு நாளில் நோயைக் குணப்படுத்தியதால் யூதர்கள் இயேசுவைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். 17 ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.
18 இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், “முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார்” என்று விளக்கம் கூறினர்.
2008 by World Bible Translation Center