Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 38

நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.

38 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.
    என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.
    உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
நீர் என்னைத் தண்டித்தீர்.
    இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன.
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர்.
    என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.
    என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.
    இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
நான் குனிந்து வளைந்தேன்.
    நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
காய்ச்சலினாலும் வலியினாலும்
    என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.
    வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.
    என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.
    என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.
    என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.
    பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
    என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.
13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.
    நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.
    என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.
    எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.
    நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள்.
    செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.
    என் நோவை என்னால் மறக்க இயலாது.
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.
    என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.
    அவர்கள் பல பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.
    ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன்.
    நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.
21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
    என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
22 விரைந்து வந்து எனக்கு உதவும்!
    என் தேவனே, என்னை மீட்டருளும்.

சங்கீதம் 119:25-48

டாலெத்

25 நான் விரைவில் மரிப்பேன்.
    கர்த்தாவே, கட்டளையிடும், என்னை வாழவிடும்.
26 நான் என் வாழ்க்கையைப்பற்றி உமக்குக் கூறினேன்.
    நீர் எனக்கு பதிலளித்தீர்.
    இப்போது, உமது சட்டங்களை எனக்குக் கற்பியும்.
27 கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும்.
    நீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும்.
28 நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன்.
    நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும்.
29 கர்த்தாவே, நான் பொய்யாக வாழாதபடிச் செய்யும்.
    உமது போதனைகளால் என்னை வழிநடத்தும்.
30 கர்த்தாவே, நான் உம்மிடம் நேர்மையாயிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன்.
    உமது ஞானமுள்ள முடிவுகளை நான் கவனமாகக் கற்கிறேன்.
31 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன்.
    நான் வெட்கமடையவிடாதிரும்.
32 நான் மகிழ்ச்சியோடு உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
    கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை மகிழ்ச்சியாக்கும்.

33 கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும்,
    நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
34 நான் புரிந்துகொள்ள உதவும்.
    நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
    நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
35 கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும்.
    நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
36 செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது
    உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
37 கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும்,
    உமது வழியில் வாழ எனக்கு உதவும்.
38 ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது
    ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.
39 கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும்.
    உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
40 பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
    எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.

வௌ

41 கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும்.
    நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
42 அப்போது என்னை அவமானப்படுத்திய ஜனங்களுக்கு நான் பதிலளிக்கமுடியும்.
    கர்த்தாவே, நீர் கூறும் காரியங்களை நான் உண்மையாகவே நம்புகிறேன்.
43 உமது உண்மையான போதனைகளை நான் எப்போதும் பேசட்டும்.
    கர்த்தாவே, நான் உமது ஞானமுள்ள முடிவுகளை சார்ந்திருக்கிறேன்.
44 கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன்.
45 நான் விடுதலையாவேன், ஏனெனில் நான் உமது
    சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
46 நான் உமது உடன்படிக்கையை அரசர்களோடு கலந்து ஆலோசிப்பேன்.
    அவர்கள் என்னை ஒருபோதும் அவமானப்படுத்தமாட்டார்கள்.
47 கர்த்தாவே, உமது கட்டளைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
    நான் அக்கட்டளைகளை நேசிக்கிறேன்.
48 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன்.
    அவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன்.

1 சாமுவேல் 20:1-23

தாவீதும் யோனத்தானும் ஒரு ஒப்பந்தம் செய்கிறார்கள்

20 ராமாவிற்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து தாவீது தப்பி ஓடி யோனத்தானிடம் வந்தான். தாவீது, “உன் தந்தை என்னைக் கொல்ல தேடுகிறாரே. நான் என்ன தவறு செய்தேன்? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன?” என்று கேட்டான்.

அதற்கு யோனத்தான், “அது உண்மையாக இருக்க முடியாது! என் தந்தை உன்னைக் கொல்ல முயலவில்லை. என்னிடம் சொல்லாமல் எந்தக் காரியத்தையும் என் தந்தை செய்வதில்லை. அது சின்ன காரியமோ, பெரிய காரியமோ, எதுவாக இருந்தாலும் சரி, உன்னைக் கொல்லும் திட்டத்தை என்னிடமிருந்து அவர் ஏன் மறைத்தார்? இல்லை, இது உண்மையன்று!” என்றான்.

ஆனால் தாவீது, “உன் கண்களில் எனக்கு தயை கிடைத்தது, இதை உன் தந்தை அறிவார். அதனால், என்னிடமுள்ள நட்பினிமித்தம் நீ சஞ்சலம் அடையாதபடிக்கு இதை உன்னிடம் மறைத்தார். கர்த்தர் ஜீவித்திருக்க, நீயும் ஜீவித்திருக்கிற உண்மைபடி கூறுகிறேன், நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்!” என்று பதிலளித்தான்.

யோனத்தான் அப்போது, “நீ சொல்லுகிறபடி நான் செய்வேன்” என்றான்.

தாவீது, “கவனி, நாளை அமாவாசை விருந்து, நான் அரச பந்தியில் சாப்பிட வேண்டும். ஆனால் மாலைவரை ஒளிந்திருக்க எனக்கு உத்தரவு வேண்டும்! உன் தந்தை கேட்டால், ‘தன் ஊராகிய பெத்லேகேமில் ஆண்டுக்கு ஒரு தடவை மாதப் பலிச் செலுத்துவதால் அதில் கலந்துகொள்ள தன் குடும்பத்தோடு போயிருப்பதாகச் சொல்.’ அதற்கு அவர், ‘நல்லது’ என்றால் எனக்குச் சமாதானம். அவருக்கு எரிச்சல் வந்தால், அவரால் ஆபத்து என்று அர்த்தம், எனவே தயவுச் செய்யவேண்டும். என்னோடு கர்த்தருக்கு முன்னால் ஒப்பந்தம் செய்துள்ளாய். என் மீது தவறு என்றால் என்னைக் கொல். என்னை உன் தந்தையிடம் மட்டும் அழைத்துப் போகாமல் இருக்க வேண்டும்!” என வேண்டினான்.

அதற்கு யோனத்தான், “அந்த நிலை உனக்கு ஏற்படாமல் இருப்பதாக! என் தந்தையால் உனக்கு ஆபத்து என்றால் நான் சொல்லாமல் இருப்பேனா?” என்று கேட்டான்.

10 ஆனால் தாவீது, “உன் தந்தைக் கடுமையான உத்தரவு போட்டால் எனக்கு அதை யார் சொல்வது?” என்று கேட்டான்.

11 அதற்கு யோனத்தான், “வா ஊருக்கு வெளியே வயலுக்குப்போவோம்” என்றான். இருவரும் வெளியே போனார்கள்.

12 யோனத்தான், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருடைய முன்னிலையில் வாக்களிக்கிறேன், நான் நாளையோ மறுநாளோ என் தந்தையின் மனதை அறிந்துவிடுவேன். அவர் உன்மேல் தயவாக இருந்தாலும், தீங்கு செய்யும் எண்ணமாக இருந்தாலும் 3 நாட்களுக்குள் அறிவிப்பேன். 13 ஒருவேளை, எனது தந்தை உனக்குத் தீமை செய்யத் துடித்துக் கொண்டிருந்தால் அதையும் அறிவிப்பேன். அதோடு அமைதியாக நீ ஒதுங்கிவிட உதவுகிறேன். நான் உனக்கு உண்மையைச் சொல்லாவிட்டால் கர்த்தர் எனக்கு அதற்கு நிகராகவும் அதிகமாகவும் துன்பம் தரட்டும்! கர்த்தர் உன் தந்தையோடு இருந்தது போலவே உன்னோடும் இருப்பாராக. 14 மேலும் நான் உயிரோடு இருக்கும்வரை என் மீது கருணையோடு இரு. 15 நான் மரித்தப் பிறகும் என் குடும்பத்தின் மேலுள்ள கருணையை நிறுத்தாமல் இரு. உன் பகைவரையெல்லாம் கர்த்தர் பூமியில் இருந்து அழிப்பார். 16 யோனத்தான் பெயர் தாவீதின் குடும்பத்திலிருந்து எடுத்துப் போடாமல் இருப்பதாக. தாவீதின் பகைவர்களை கர்த்தர் தண்டிப்பாராக” என்று தாவீதின் குடும்பத்தோடு ஒப்பந்தம் செய்துக்கொண்டான்.

17 யோனத்தான் தாவீதிடம், அவனது அன்பு பற்றிய வாக்குறுதியைத் திருப்பிச் சொல்லும்படி கேட்டான். ஏனென்றால், அவன் தன்னைத் தானே எவ்வளவு நேசித்தானோ அவ்வளவு அதிகமாய் தாவீதையும் நேசித்தான்.

18 யோனத்தான் தாவீதிடம், “நாளை அமாவாசை விருந்து. நீ உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதால் உன்னைக் குறித்து விசாரிக்கப்படும். 19 இந்த சிக்கல் முதலில் ஆரம்பித்தபோது நீ ஒளிந்திருந்த இடத்திற்குப் போ. அங்கேயே காத்திரு 20 மூன்றாவது நாள், ஏஸேல் எனும் கல்லருகில் காத்திரு, பிறகு மூன்றாம் நாளில் ஒரு இலக்கைக் குறிவைத்து எய்வதுபோல், நான் அங்கு போய் அதன் பக்கமாக மூன்று அம்புகளை எய்வேன். 21 ஒரு பிள்ளையை அம்பைத் தேடிவருமாறு அனுப்புவேன். நான் அவனிடம், ‘அதிக தூரம் போனாய் அம்புகள் என் அருகில் உள்ளன,’ என்று சொன்னால் வந்துவிடு. அப்போது ஒன்றும் இல்லை, உனக்கு சமாதானம். இதை கர்த்தருடைய அன்பால் கூறுகிறேன்! 22 ஏதாவது தொந்தரவு இருந்தால் அவனிடம், ‘அம்புகள் ரொம்ப தூரத்தில் கிடக்கிறது, எடுத்து வா’ என்று சத்தமிடுவேன். உடனே நீ விலகவேண்டும். கர்த்தர் உன்னை தூர அனுப்பிகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். 23 அப்போது நமக்கு இடையேயுள்ள ஒப்பந்தத்தை மறவாமல் இரு. கர்த்தர் தாமே நமக்கு எப்போதும் சாட்சியாக இருப்பார்!” என்றான்.

அப்போஸ்தலர் 12:18-25

18 மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர். 19 ஏரோது பேதுருவுக்காக எல்லா இடங்களிலும் தேடியும் அவன் அகப்படவில்லை. எனவே ஏரோது காவலரை வினவினான். பின் காவலரைக் கொல்லும்படியாக ஆணையிட்டான்.

ஏரோது அகிரிப்பாவின் மரணம்

பின்னர் ஏரோது யூதேயாவிலிருந்து சென்றான். அவன் செசரியா நகரத்திற்குச் சென்று அங்கு சில காலம் தங்கினான். 20 தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.

21 ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான். 22 மக்கள் உரக்க, “இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!” என்றனர். 23 ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.

24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது.

25 எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.

மாற்கு 2:13-22

லேவி இயேசுவைத் தொடருதல்(A)

13 இயேசு மறுபடியும் கடலருகே சென்றார். ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு அவர்களுக்கு உபதேசித்தார். 14 கடற்கரையையொட்டி நடந்து செல்லும்போது அல்பேயுவின் மகனான லேவி என்னும் வரி வசூலிப்பவனைக் கண்டார். லேவி வரி வசூலிப்பு அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இயேசு “என்னைப் பின் தொடர்ந்து வா” என்றார். உடனே லேவி எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

15 அன்று, அதற்குப் பின் இயேசு லேவியினுடைய வீட்டில் உணவு உண்டார். அங்கே வரி வசூல் செய்பவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவரது சீஷர்களோடும் உணவு உண்டனர். இவர்களோடு பலர் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். 16 அவர்களோடு வேதபாரகரும் பரிசேயரும் இருந்தனர். அவர்கள் பாவிகளோடும், வரி வசூல் செய்பவர்களோடும் சேர்ந்து இயேசு உணவு உட்கொள்வதைக் கண்டனர். அவர்கள் இயேசுவின் சீஷரை நோக்கி, “ஏன் இவர் வரிவசூல் செய்பவர்களோடும், பாவிகளுடனும் சேர்ந்து உணவு உண்கின்றார்?” என்று கேட்டனர்.

17 இயேசு இதனைக் கேட்டார். அவர் அவர்களை நோக்கி, “சுகமுள்ளவனுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிக்கே மருத்துவர் தேவை. நான் நல்லவர்களை அழைக்க வரவில்லை, பாவிகளை அழைக்கவே வந்தேன்” என்றார்.

பிற தலைவர்களைவிட வித்தியாசமானவர்(B)

18 யோவானின் சீஷர்களும், பரிசேயரின் சீஷர்களும் உபவாசம் இருந்தனர். சிலர் இயேசுவிடம் வந்து “யோவானுடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். பரிசேயருடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். உங்களுடைய சீஷர்கள் ஏன் உபவாசம் இருப்பதில்லை?” என்று கேட்டனர்.

19 அதற்கு இயேசு, “ஒரு திருமணத்தில் மணமகன் தம்முடன் இருக்கும்போது மணமகனின் நண்பர்கள் துயரப்படமாட்டார்கள். மணமகன் இன்னும் கூடவே இருக்கிற சந்தர்ப்பத்தில், அவர்களால் உபவாசம் இருக்க முடியாது. 20 ஆனால் மணமகன் பிரிந்து செல்லக்கூடிய ஒரு தருணம் வரும். அப்போது மணமகனைப் பிரிந்த வருத்தத்தில், அவன் நண்பர்கள் துயரமுடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.

21 “எவனொருவனும் புதிய துணியோடு பழைய துணியைச் சேர்த்து ஒட்டுப்போட்டு தைக்கமாட்டான். அவன் அவ்வாறு செய்தால் ஒட்டுப்போட்டவை சுருங்கிவிடும். புதியது பழையதை அதிகமாய்க் கிழிக்கும். முன்னதைவிட மோசமாகும். 22 எவனொருவனும் புதிய திராட்சை இரசத்தை பழைய தோல் பையில் ஊற்றி வைக்கமாட்டான். ஊற்றி வைத்தால் புதிய இரசம் பழைய பையைக் கெடுத்துவிடும். அதோடு இரசமும் சிந்திவிடும். புதிய இரசத்தைப் புதிய பைகளிலேதான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center