Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 85

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல்

85 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும்.
யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள்.
    அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்!
    அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!

கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும்.
    கடுங்கோபமாக இராதேயும்.
எங்கள் தேவனும் இரட்சகருமானவரே,
    எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும்.
    உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும்.
    நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.

தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
    அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார்.
    எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
    நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
    நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
    பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
    நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.
    அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.

ஓசியா 5

இஸ்ரவேலும் யூதாவும் பாவஞ்செய்ய தலைவர்களே காரணமாகுதல்

“ஆசாரியர்களே, இஸ்ரவேல் தேசமே, அரச குடும்பத்து ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் குற்றவாளிகளாக நியாய்ந்தீர்க்கப்பட்டுள்ளீர்கள்.

நீங்கள் மிஸ்பாவில் கண்ணியைப் போன்றிருந்தீர்கள். நீங்கள் தாபோரில் தரை மேல் விரிக்கப்பட்ட வலையைப் போன்றிருக்கிறீர்கள். நீங்கள் பல தீமைகளைச் செய்திருக்கிறீர்கள். எனவே நான் உங்கள் அனைவரையும் தண்டிப்பேன். நான் எப்பிராயீமை அறிவேன். இஸ்ரவேல் செய்திருக்கிற செயல்களையும் நான் அறிவேன். எப்பிராயீமே, இப்பொழுது நீ ஒரு வேசியைப்போல் நடந்துக்கொள்கிறாய். இஸ்ரவேல் பாவங்களால் அழுக்கடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றார்கள். அத்தீமைகள் அவர்களை அவர்களுடைய தேவனிடம் மறுபடியும் வராமல் தடுக்கின்றன. அவர்கள் எப்பொழுதும் அந்நிய தெய்வங்களைத் பின்பற்றும் வழிகளையே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை அறியாதிருந்தார்கள். இஸ்ரவேலின் அகந்தை அவர்களுக்கு எதிரான சாட்சியாக உள்ளது. எனவே, இஸ்ரவேலும் எப்பிராயீமும் தமது பாவங்களில் இடறி விழுவார்கள். ஆனால் யூதாவும் அவர்களோடு இடறி விழும்.

“ஜனங்களின் தலைவர்கள் கர்த்தரைத் தேடி போவார்கள். அவர்கள் தங்களோடு ஆடுகளையும் பசுக்கைளையும் எடுத்துச் செல்வார்கள். ஆனால் அவர்கள் கர்த்தரைக் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர் அவர்களைவிட்டு விலகினார். அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமானவர்களாக இல்லை. அவர்களின் பிள்ளைகள் ஏதோ அந்நியனிடமிருந்து வந்தவர்கள். இப்பொழுது அவர் மீண்டும் அவர்களையும் அவர்களது நாட்டையும் அழிப்பார்.”

இஸ்ரவேலின் அழிவு பற்றிய தீர்க்கதரிசனம்

“கிபியாவிலே பூரிகையை ஊதுங்கள்.
    ராமாவிலே எக்காளத்தை ஊதுங்கள்.
பெத்தாவேனிலே எச்சரிக்கைக் கொடுங்கள்.
    பென்யமீனே, பகைவன் உனக்குப் பின்னால் உள்ளான்.
எப்பிராயீம் தண்டனை காலத்தில் வெறுமையாகிவிடும்.
    நான் (தேவன்)
இஸ்ரவேல் குடும்பங்களுக்கு
    நிச்சயமாக வரப்போவதைக் கூறி எச்சரிப்பேன்.
10 யூதாவின் தலைவர்கள் திருடர்களைப் போன்று
    மற்றவர்களின் சொத்துக்களைத் திருட முயற்சிக்கிறார்கள்.
எனவே நான் (தேவன்) தண்ணீரைப்
    போன்று எனது கோபத்தை அவர்கள்மீது ஊற்றுவேன்.
11 எப்பிராயீம் தண்டிக்கப்படுவான்.
அவன் திராட்சைப் பழத்தைப் போன்று நசுக்கிப் பிழியப்படுவான்.
    ஏனென்றால் அவன் அருவருப்பானவற்றைப் பின்பற்ற முடிவுசெய்தான்.
12 நான் எப்பிராயீமை
    பொட்டரிப்பு துணியை அழிப்பது போன்று அழிப்பேன்.
நான் யூதாவை
    மரத்துண்டை அழிக்கும் உளுப்பைப் போன்று அழிப்பேன்.
13 எப்பிராயீம் தனது நோயைப் பார்த்தான், யூதா தனது காயத்தை பார்த்தான்.
    எனவே அவர்கள் அசீரியாவிடம் உதவிக்குச் சென்றார்கள். அவர்கள் பேரரசனிடம் தங்கள் பிரச்சனைகளைச் சொன்னார்கள்.
ஆனால் அந்த அரசன் உங்களைக் குணப்படுத்த முடியாது.
    அவன் உங்கள் புண்களை குணப்படுத்த முடியாது.
14 ஏனென்றால் நான் எப்பிராயீமுக்கு
    ஒரு சிங்கத்தைப் போன்றிருப்பேன்.
நான் யூதா நாட்டிற்கு ஒரு இளம் சிங்கத்தைப் போன்று இருப்பேன்.
நான், ஆம், நான் (கர்த்தர்) அவர்களைத் துண்டு துண்டாக்குவேன். நான் அவர்களை எடுத்துச் செல்வேன்.
    அவர்களை என்னிடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது.
15 அவர்கள் தங்களைக் குற்றவாளிகளென்று ஏற்றுக்கொள்ளும்வரை,
    அவர்கள் என்னைத் தேடும்வரை
    நான் எனது இடத்திற்குத் திரும்பிப்போவேன்.
ஆம், அவர்கள் தம் ஆபத்தில் என்னைத் தேடக் கடுமையாக முயற்சி செய்வார்கள்.”

அப்போஸ்தலர் 2:22-36

22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். 24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. 25 தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்:

“‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன்.
    என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார்.
26 எனவே என் உள்ளம் மகிழுகிறது,
    என் வாய் களிப்போடு பேசுகிறது.
ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
27     ஏனெனில் மரணத்தின் இடத்தில் [a] எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை.
    உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
28 வாழும் வகையை எனக்குப் போதித்தீர்.
    என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’ (A)

29 “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது. 30 தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 31 அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான்.

“‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை.
அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’ (B)

தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான். 32 எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். 33 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். 34-35 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான்,

“‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார்,
உம் எதிரிகள் அனைவரையும் உம்
    அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’ (C)

36 “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center