Revised Common Lectionary (Semicontinuous)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
2 கர்த்தாவே, நான் உம்மைப்பற்றிய செய்திகளைக் கேட்டிருக்கிறேன்.
கர்த்தாவே, நீர் கடந்த காலத்தில் செய்த வல்லமைமிக்க செயல்களால் ஆச்சரியப்படுகிறேன்.
இப்பொழுது நான், நீர் எங்கள் காலத்தில் பெருஞ் செயல்கள் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.
தயவுசெய்து அச்செயல்கள் எங்கள் காலத்தில் நிகழுமாறு செய்யும்.
ஆனால் நீர் கோபங்கொள்ளும்போதும்
எங்கள் மீது இரக்கம் காட்ட நினைத்துக்கொள்ளும்.
3 தேவன் தேமானிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்,
பரிசுத்தமானவர் பாரான் மலையிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்.
கர்த்தருடைய மகிமை பரலோகங்களை நிறைத்துள்ளது.
அவரது துதி பூமியில் நிறைந்துள்ளது.
4 அவரது கையிலிருந்து பிரகாசமான கதிர்கள் வரும். இது பிரகாசமான வெளிச்சம் போன்றது.
அத்தகைய வல்லமை அவரது கையில் மறைந்துகொண்டிருக்கும்.
5 அவருக்கு முன்னால் கொள்ளைநோய் போனது.
அழிப்பவன் அவரைப் பின் தொடர்வான்.
6 கர்த்தர் நின்று பூமியை அசைத்தார்.
அவர் அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களைப் பார்த்தார்.
அவர்கள் அச்சத்துடன் நடுங்கினார்கள்.
பல ஆண்டுகளாகக் குன்றுகள் பலமாக நின்றுக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அக்குன்றுகள் விழுந்து துண்டுகளாகின.
பழைய குன்றுகள் விழுந்துவிட்டது.
தேவன் எப்பொழுதும் அப்படியே இருந்திருக்கிறார்.
7 நான் குஷான் நகரங்கள் துன்பத்தில் இருப்பதைப் பார்த்தேன்.
மீதியான் வீடுகள் அச்சத்தால் நடுங்கின.
8 கர்த்தாவே, உமக்கு நதிகள் மீது கோபமா?
தண்ணீரோடைகள் மீது உமக்குக் கோபமா?
கடல்மீது உமக்குக் கோபமா?
உம்முடைய குதிரைகள் மீதும், உமது இரதங்கள் மீதும் வெற்றிநோக்கி பவனி சென்றபோது கோபப்பட்டீரா?
9 அதற்குப்பிறகும் நீர் உமது வானவில்லைக் காட்டினீர்.
பூமியில் உள்ள குடும்பத்தினருடன் உமது உடன்படிக்கைக்கு இது சான்றாயிற்று.
வறண்ட நிலம் ஆறுகளைப் பிளந்தன.
10 மலைகள் உம்மை பார்த்து அதிர்ந்தன.
தண்ணீர் நிலத்தில் பாய்ந்து வடிந்து போனது.
கடலில் உள்ள தண்ணீர் தனது பூமியின் மேலிருந்த அதிகாரத்தை இழந்துவிட்டதாக உரத்த சத்தம் எழுப்பியது.
11 சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழந்தன.
அவை உமது மின்னல்களின் பிரகாசத்தைப் பார்த்து வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டன.
மின்னலானது காற்று வழியாகப் பாயும் அம்புகளைப்போன்றும், ஈட்டிகளைப் போன்றும் உள்ளன.
12 நீர் கோபத்துடன் பூமியின்மேல் நடந்தீர்;
பல தேசங்களைத் தண்டித்தீர்.
13 நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர்.
நீர் தேர்ந்தெடுத்த அரசனை வெற்றி நோக்கி நடத்த வந்தீர்.
ஒவ்வொரு தீமை செய்கிற குடும்பத்திலும் உள்ள தலைவர்களை,
முக்கியமானவர்களானாலும்
முக்கியமற்றவர்களானாலும் அவர்களைக் கொன்றீர்.
14 நீர் மோசேயின் கைத்தடியைப் பயன்படுத்தி
பகை வீரர்களைத் தடுத்தீர்.
அவ்வீரர்கள் எனக் கெதிராகப் போரிட
வல்லமைமிக்கப் புயலைப் போல் வந்தார்கள்.
ஒரு ஏழையை ரகசியமாகக் கொள்ளையிடுவது போல்
எங்களை எளிதாக வெல்லமுடியுமென எண்ணினார்கள்.
15 ஆனால் நீர் உம் குதிரைகளை
ஆழமான தண்ணீர் வழியாக மண்ணைக் கலங்கும்படி நடக்கச் செய்தீர்.
இயேசு மரணத்தினின்று எழுவார்(A)
31 பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும். 32 அவரது மக்களே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை யூதரல்லாத மக்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவர் மீது உமிழ்வார்கள். அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவார்கள். 33 அவரைச் சாட்டையினால் அடித்து பின்னர் கொல்வார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிரோடு மீண்டும் எழுவார்” என்றார். 34 சீஷர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பொருள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது.
2008 by World Bible Translation Center