Revised Common Lectionary (Semicontinuous)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவுதல்
40 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “முதல் மாதத்தின் முதல் நாளில் பரிசுத்தக் கூடாரத்தை, அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தை எழுப்பு. 3 பரிசுத்தக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டியை வைத்துப் பெட்டியைத் திரையால் மூடு. 4 பிறகு மேசையை உள்ளே கொண்டு வா. மேசையின் மேல் வைக்க வேண்டிய பொருட்களை வை. பின்பு கூடாரத்தில் குத்து விளக்குத் தண்டை வை. சரியான இடங்களில் குத்து விளக்கின் அகல்களை வை. 5 கூடாரத்தில் நறுமணப் பொருட்களின் காணிக்கையைப் படைக்க பொன்னாலான நறுமணப் பீடத்தை வை. உடன்படிக்கைப் பெட்டியின் முன்புறத்தில் நறுமணப்பீடத்தை வை. அதன்பின் பரிசுத்தக் கூடாரத்தின் நுழை வாயிலில் திரைகளை இடு.
6 “பரிசுத்தக் கூடாரத்தின், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் முன்பு தகனபலிக்கான பலிபீடத்தை வை. 7 ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே தொட்டியை வை. தொட்டியில் தண்ணீர் ஊற்றி வை. 8 வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைச் சீலைகளைத் தொங்கவிடு. பிரகாரத்தின் நுழைவாயில் திரையை அதன் ஸ்தானத்தில் தொங்கவிடு.
9 “பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்தக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் அபிஷேகம் செய். எண்ணெயை இப்பொருட்களின் மேல் ஊற்றும்போது அவை பரிசுத்தமாகும். 10 தகனபலிக்கான பலிபீடத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து, பலிபீடத்தை பரிசுத்தமாக்கு. அது மிகவும் பரிசுத்தமானதாகும். 11 பின் தொட்டியையும், அதன் அடித்தளத்தையும் அபிஷேகம் செய். அப்பொருட்கள் பரிசுத்தமாவதற்கு இவ்வாறு செய்.
12 “ஆரோனையும், அவனது மகன்களையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்து வா. அவர்களைத் தண்ணீரால் கழுவு. 13 பிறகு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை உடுத்தி எண்ணெயால் அபிஷேகம் செய்து அவனைப் பரிசுத்தப்படுத்து. அப்போது அவன் ஆசாரியனாகப் பணியாற்ற முடியும். 14 பின் அவனது மகன்களுக்கும் ஆடைகளை அணிவித்துவிடு. 15 அவர்களது தந்தைக்கு செய்தபடியே அவர்கள் மேலும் எண்ணெயை ஊற்றி அவர்களையும் பரிசுத்தப்படுத்து. அப்போது அவர்களும் ஆசாரியப் பணிவிடை செய்யமுடியும். அவர்கள்மேல் அபிஷேக எண்ணெயை ஊற்றும்போது, அவர்கள் ஆசாரியர் ஆவார்கள். வரும் காலங்களில் எல்லாம் அவர்கள் குடும்பத்தினர் ஆசாரியர்களாகவே இருப்பார்கள்” என்றார்.
தேவனிடம் நெருங்கி வாருங்கள்
19 ஆதலால் சகோதர சகோதரிகளே! மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் நுழைய நாம் முழுமையாக விடுதலை பெற்று விட்டோம். நாம் அச்சம் இல்லாமல் இதனைச் செய்யமுடியும். ஏனென்றால் கிறிஸ்துவின் மரணம் நமக்காக நிகழ்ந்துவிட்டது. 20 இப்போது மிகப் பரிசுத்தமான இடத்தின் வழியை மூடிக்கொண்டிருக்கிற அத்திரைக்குள் நுழைய நம்மிடம் ஒரு புதிய வழி இருக்கிறது. தன் சரீரத்தையே பலியாகத் தந்து அப்புதிய வாழ்வின் வழியை இயேசு திறந்தார். 21 தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மாபெரும் ஆசாரியர் ஒருவர் நமக்கு இருக்கிறார். 22 நாம் சுத்தப்படுத்தப்பட்டு குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் பரிசுத்த நீரால் கழுவப்பட்டுள்ளன. எனவே உண்மையான இதயத்தோடும், விசுவாசம் நமக்களிக்கிற உறுதியோடும் தேவனை நெருங்கி வாருங்கள். 23 மற்றவர்களுக்கு நாம் சொல்கிற நமது நம்பிக்கையை பலமாகப் பற்றிக்கொள்வோம். நமக்கு வாக்குறுதியளித்த ஒருவரை நாம் நம்ப முடியும்.
உறுதிபெற ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள்
24 நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். நமது அன்பை வெளிப்படுத்தவும் நன்மை செய்யவும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவது என்று பார்க்கவேண்டும்.
25 சிலர் வழக்கமாய்ச் செய்வதுபோல நாம் ஒன்றாகச் சந்திப்பதை நிறுத்திவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கிறிஸ்து திரும்பிவரும் அந்த நாள் மிக விரைவில் வருவதை நாம் பார்ப்பதுபோல் செயல்பட வேண்டும்.
2008 by World Bible Translation Center