Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 53

மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல்.

53 தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான்.
    அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள்.
    அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை.
தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று
    பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள்.
    ஒவ்வொரு மனிதனும் தீயவன்.
நன்மையான காரியத்தைச் செய்பவன்
    ஒருவன் கூட இல்லை.

தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்!
    ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப்பதில்லை.
    தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.
ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள்.
    அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள்.
அத்தீயோரை தேவன் தள்ளிவிட்டார்.
    எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள்.
அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார்.

சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக.
    தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார்.
அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான்.
    இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான்.

லேவியராகமம் 25:1-19

தேசத்திற்கு ஓய்வுக் காலம்

25 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம், “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது; நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் சென்ற பின்னர் ஓய்வுக்கென சிறப்பான காலத்தை அந்நாடு கொண்டிருக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற ஓய்வுக்காலம் ஆகும். ஆறு ஆண்டுகளுக்கு, உங்கள் வயல்களில் விதைகளை விதையுங்கள், உங்கள் திராட்சைத் தோட்டத்தில் கிளை கழியுங்கள். அதன் பழங்களைக் கொண்டு வாருங்கள். ஆனால் ஏழாவது ஆண்டில் அந்நிலத்துக்கு ஓய்வு அளியுங்கள். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற சிறப்பான ஓய்வுக் காலமாகும். அப்போது வயலில் விதை விதைக்காமலும், திராட்சை தோட்டத்தில் பயிர் செய்யாமலுமிருங்கள். அறுவடைக்குப் பிறகு வயலில் தானாக வளர்ந்து விளைந்தவற்றை அறுவடை செய்யவோ, கிளை கழிக்காத கொடிகளில் உள்ள திராட்சைப் பழங்களைப் பறிக்கவோ கூடாது. பூமி ஒரு வருடம் ஓய்வு கொள்ளட்டும்.

“நிலம் ஒரு வருடம் ஓய்வாக விடப்பட்டாலும் உங்களிடம் போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும். உங்களுக்கும், உங்கள் ஆண், பெண், வேலையாட்களுக்கும், உங்கள் நாட்டிலுள்ள கூலி வேலைக்காரர்களுக்கும், அயல்நாட்டுக்காரர்களுக்கும்கூட போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும். உங்கள் பசுக்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும்கூட போதுமான உணவு இருக்கும்.

யூபிலி-விடுதலையின் ஆண்டு

“மேலும் நீங்கள் ஏழு ஓய்வு ஆண்டுகள் கொண்ட ஏழு ஓய்வு ஆண்டுகளை எண்ணுங்கள். அது மொத்தம் 49 ஆண்டுகளாகும். அந்த 49 வருடங்களில் மொத்தத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பூமிக்கு ஓய்வு கிடைக்கும். பாவப்பரிகார நாளில் செம்மறியாட்டுக் கடாவின் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளத்தை ஊதவேண்டும். அது ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளாக இருக்கும். நாடு முழுவதும் எக்காளம் ஊதிக் கொண்டாட வேண்டும். 10 நீங்கள் ஐம்பதாவது ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் விடுதலை என்று அறிவிக்க வேண்டும். இந்த விழாவை ‘யூபிலி’ என்று அழைப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த சொத்திற்கும், சொந்த குடும்பத்திற்கும் திரும்புவீர்கள். 11 உங்களுக்கு ஐம்பதாவது ஆண்டு விழா மிகச் சிறப்பான யூபிலி விழாவாகும். அவ்வருடத்தில் விதைகளை விதைக்காதீர்கள். தானாக வளர்ந்த பயிர்களை அறுவடை செய்யாதீர்கள். கிளை கழிக்காத செடிகளில் உள்ள திராட்சைகளைப் பறிக்காதீர்கள். 12 அது யூபிலி ஆண்டு, அது உங்களுக்குப் பரிசுத்தமான வருடமாகும். உங்கள் வயலில் விளைந்தவற்றை உண்ணுங்கள். 13 யூபிலி ஆண்டில் ஒவ்வொருவனும் தன் சொந்த பூமிக்குச் செல்லவேண்டும்.

14 “உனது அயலானிடம் நிலம் விற்கும்போது ஏமாற்றாதே. அதுபோல் நீ நிலம் வாங்கும்போது அவன் உன்னை ஏமாற்றும்படி விடாதே. 15 நீ அயலானின் நிலத்தை வாங்கும்போது அந்த நிலத்தின் யூபிலியைக் கணக்கிட்டு அதற்கேற்ற விலையை நிர்ணயித்துக்கொள். நிலத்தை விற்கும்போதும் அதனுடைய அறுவடைகளைக் கணக்கிட்டு அதன் மூலம் சரியான விலையை நிர்ணயித்துக்கொள். ஏனென்றால் அடுத்த யூபிலிவரை அறுவடை செய்யும் உரிமையை மட்டுமே விற்கிறான். 16 யூபிலிக்கு முன் அதிகமான ஆண்டுகள் விளைந்த நிலம் அதிக விலையை உடையது. குறைந்த ஆண்டுகள் விளைந்த நிலத்தின் விலை குறையும். ஏனென்றால் உனது அயலான் உன்னிடம் அறுவடைகளின் எண்ணிக்கைகளையே விற்பனை செய்கிறான். அடுத்த யூபிலியில் அந்த நிலம் மீண்டும் அவனுக்கு உரியதாகிவிடும். 17 ஒருவரை ஒருவர் ஏமாற்றக் கூடாது. உங்கள் தேவனை நீங்கள் பெருமைபடுத்த வேண்டும். நானே உங்களுடைய தேவனாகிய கர்த்தர்!

18 “எனது சட்டங்களையும், விதிகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பின்பற்றுங்கள், அப்போது உங்கள் நாட்டில் நீங்கள் பாதுகாப்போடு வாழலாம். 19 நிலம் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தரும். நீங்கள் அதிக விளைபொருட்களைப் பெற்று நாட்டில் வசதியோடு வாழலாம்.

வெளி 19:9-10

பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான்.

10 பிறகு நான் அந்தத் தூதனை வணங்குவதற்காகக் குனிந்தேன். ஆனால் அந்தத் தூதன் என்னிடம், “என்னை வணங்கவேண்டாம். இயேசுவின் உண்மையைக் கைக்கொண்டுள்ள உன்னைப்போலவும் உன் சகோதரர்களைப் போலவும் நான் ஒரு ஊழியக்காரன். தேவனை வணங்கு. ஏனென்றால் இயேசுவின் உண்மை தீர்க்கதரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center