Revised Common Lectionary (Semicontinuous)
சாலொமோனுக்கு
72 தேவனே, அரசனும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
உமது நல்லியல்பை அரசனின் மகனும் அறிந்துகொள்ள உதவும்.
2 அரசன் உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு அரசன் நல்லவனாக இருக்கட்டும்.
திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் அரசனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க அரசனுக்கு உதவும்.
பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் அரசனாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
8 ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
9 பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் அரசர்களும் தூரத்துத் தேசங்களின் அரசர்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள அரசர்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா அரசர்களும் நமது அரசனை விழுந்து வணங்கட்டும்.
எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது அரசன் திக்கற்றோருக்கு உதவுகிறார்.
ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் அரசன் உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் அரசனைச் சார்ந்திருப்பார்கள்.
அரசன் அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து அரசன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.
அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் அரசனுக்கு மிக முக்கியமானவை.
15 அரசன் நீடூழி வாழ்க!
அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் அரசனுக்காக ஜெபம் செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும்.
சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
7 கர்த்தர் கூறுகிறார்:
“மகிழ்ச்சியாக இருங்கள்.
யாக்கோபுக்காகப் பாடுங்கள்! இஸ்ரவேலுக்காகச் சத்தமிடுங்கள்.
அது ஜாதிகளிலேயே மகா பெரிய ஜனம் ஆகும்!
உங்கள் துதிகளைப் பாடி சத்தமிடுங்கள்,
‘கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றினார்!
அவர் இஸ்ரவேல் நாட்டில் உயிரோடு விடப்பட்டுள்ள ஜனங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.’
8 நினைவுகொள்ளுங்கள்.
வடக்கில் உள்ள அந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலை நான் கொண்டு வருவேன்.
பூமியில் வெகு தொலை தூர இடங்களில் உள்ள இஸ்ரவேல் ஜனங்களை எல்லாம் சேர்ப்பேன்.
ஜனங்களில் சிலர் குருடாகவும் நொண்டியாகவும் இருப்பார்கள்.
பெண்களில் சிலர் கர்ப்பமாக இருப்பார்கள், குழந்தை பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள்.
ஆனால் அதிகமதிகமான ஜனங்கள் திரும்ப வருவார்கள்.
9 அந்த ஜனங்கள் அழுதுக்கொண்டே திரும்பி வருவார்கள்.
ஆனால் நான் அவர்களை வழிநடத்தி ஆறுதல் செய்வேன்.
நான் அவர்களை வழிநடத்திச் சென்று நீரோடைக்கு அழைத்துச் செல்வேன்.
அவர்களை நான் எளிதான பாதையில் நடத்திச் செல்வேன்.
எனவே, அவர்கள் இடறமாட்டார்கள்.
நான் அந்த வழியிலே அவர்களை வழிநடத்திச் செல்வேன்.
ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தந்தை.
எப்பிராயீம் எனது முதலில் பிறந்த மகன்.
10 “நாடுகளே! கர்த்தரிடமிருந்து வரும் இந்த வார்த்தையைக் கேளுங்கள்.
கடல் மூலமாக தொலைதூர நாடுகளுக்கும் அச்செய்தியைக் கூறுங்கள்,ֹ ‘தேவன் இஸ்ரவேல் ஜனங்களைச் சிதறச் செய்தார்.
ஆனால் தேவன் அவர்களைத் திரும்பவும் ஒன்று சேர்ப்பார்.
அவர் தனது மந்தையை (ஜனங்களை)
ஒரு மேய்ப்பனைப்போன்று கவனித்துக்கொள்வார்.’
11 கர்த்தர் யாக்கோபை மீண்டும் கொண்டு வருவார்.
கர்த்தர் தனது ஜனங்களை அவர்களை விட பலமானவர்களிடமிருந்து காப்பாற்றுவார்.
12 இஸ்ரவேல் ஜனங்கள் சீயோனின் உச்சிக்கு வருவார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியில் கத்துவார்கள்.
அவர்களது முகம் மகிழ்ச்சியால் பிரகாசிக்கும்.
கர்த்தர் அவர்களுக்கு அளித்த நல்லவற்றுக்காக மகிழ்வார்கள்.
கர்த்தர் அவர்களுக்குப் புதிய தானியம், புதிய திராட்சைரசம்,
ஒலிவ எண்ணெய், இளம் ஆடு, பசுக்கள் ஆகியவற்றைக் கொடுப்பார்.
அவர்கள் நல்ல தண்ணீர் வளமுள்ள தோட்டத்தைப்போன்று இருப்பார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் இனி என்றைக்கும் துன்புறமாட்டார்கள்.
13 பிறகு இஸ்ரவேலின் இளம் பெண்கள் மகிழ்வார்கள்,
நடனம் ஆடுவார்கள்.
அந்த ஆட்டத்தில் இளம் ஆண்களும் முதிய ஆண்களும்
கலந்துக்கொள்வார்கள்.
நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் ஆறுதல் செய்வேன்.
நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.
14 நான் ஆசாரியர்களுக்கு மிகுதியான உணவைக் கொடுப்பேன்.
நான் அவர்களுக்குக் கொடுக்கிற நல்லவற்றால் எனது ஜனங்கள் நிறைந்து திருப்தி அடைவார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கிறிஸ்து உலகத்துக்கு வருதல்
1 உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை [a] இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. 2 அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார். 3 அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது. 5 அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை.
6 யோவான் என்ற பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனால் அனுப்பப்பட்டவன். 7 அவன் அந்த ஒளியைப் (கிறிஸ்து) பற்றி மக்களிடம் சொல்வதற்காக வந்தான். எனவே மக்கள் அனைவரும் யோவான் மூலமாக அந்த ஒளியைப்பற்றிக் கேள்விப்படவும் நம்பிக்கை வைக்கவும் முடிந்தது. 8 யோவான் ஒளியல்ல. ஆனால் அவன் அந்த ஒளியைப்பற்றி மக்களிடம் சொல்லவே வந்தவன். 9 அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது.
10 அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. 11 அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். 13 இந்தப் பிள்ளைகள் ஏனைய சிறிய குழந்தைகள் பிறப்பதைப்போல பிறக்கவில்லை. இவர்கள் ஒரு தாய் தந்தையின் விருப்பத்தின்படியோ, திட்டத்தின்படியோ பிறக்கவில்லை. இந்தக் குழந்தைகள் தேவனாலேயே பிறந்தனர்.
14 வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே மகனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று. 15 அவரைப்பற்றி யோவான் மக்களிடம், “நான் சொல்லிக்கொண்டிருந்தவர் இவர்தான். ‘எனக்குப் பின்னால் வருகிறவர் என்னிலும் மேலானவர். இவர் எனக்கு முன்னரே இருப்பவர்’” என்று சாட்சி சொன்னான்.
16 அவர் (கிறிஸ்து) கிருபையும், உண்மையும் நிறைந்தவராய் இருந்தார். அவரிடமிருந்து நாமனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். 17 மோசே மூலம் சட்டங்கள் கொடுக்கப்பட்டன! ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே கிருபையும், உண்மையும் வந்தன. 18 எந்த மனிதனும் ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் இயேசுவாகிய ஒரே குமாரனே தேவன். அவர் பிதாவுக்கு (தேவனுக்கு) மிகவும் நெருக்கமானவர். அத்துடன் குமாரனே தேவனின் தன்மையை நமக்கு வெளிக்காட்டினார்.
2008 by World Bible Translation Center