Revised Common Lectionary (Semicontinuous)
68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்றுவோம்.
தேவன் அவரது மக்களுக்கு உதவ வந்தார். அவர்களுக்கு விடுதலை தந்தார்.
69 தேவன் நமக்கு வல்லமை பொருந்திய இரட்சகரைத் தந்தார்.
அவர் தாவீது என்னும் தேவனுடைய பணிவிடைக்காரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்.
70 தேவன் இதைச் செய்வதாகக் கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாக இதை அவர் கூறினார்.
71 நம் எதிரிகளிடம் இருந்து தேவன் நம்மைக் காப்பாற்றுவார்.
நம்மை வெறுக்கும் அனைவரின் கைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவார்.
72 நமது தந்தையருக்கு அருள்புரிவதாக தேவன் சொன்னார்.
தனது பரிசுத்த வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
73 நமது தந்தையாகிய ஆபிரகாமுக்கு எதிரிகளின் சக்தியிலிருந்து.
74 நம்மை விடுவிப்பதாக தேவன் வாக்குறுதி தந்தார்.
அதனால் பயமின்றி நாம் அவருக்குச் சேவை செய்வோம்.
75 நாம் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய முன்னிலையில் நீதியும் பரிசுத்தமும் வாய்ந்தோராக வாழ்வோம்.
76 இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்.
கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்.
77 அவரது மக்கள் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவாய். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படுவர்.
78 நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து
புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும்.
79 இருளில் மரணப் பயத்திடையே வாழும் மக்களுக்கு தேவன் உதவி செய்வார்.
சமாதானத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்துவார்.”
என்று சகரியா உரைத்தான்.
5 பிறகு நான் உங்களிடம் வருவேன். நான் சரியானவற்றைச் செய்வேன். நான் ஜனங்கள் செய்த தீமைகளை குறித்து சொல்லுகிறவர் போன்று இருப்பேன். சிலர் தீய மந்திரங்களைச் செய்கிறார்கள். சிலர் விபச்சாரப் பாவத்தைச் செய்கிறார்கள். சிலர் பொய்யான வாக்குறுதிகளைச் செய்கின்றனர். சிலர் தமது வேலைக்காரர்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் தாம் வாக்குறுதியளித்ததுபோன்று பணம் கொடுப்பதில்லை. ஜனங்கள் விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் உதவுவதில்லை. ஜனங்கள் பரதேசிகளுக்கு உதவுவதில்லை. ஜனங்கள் என்னை மதிப்பதில்லை!” சர்வவல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
தேவனிடமிருந்து திருடுவது
6 “நானே கர்த்தர். நான் மாறமாட்டேன். நீங்கள் யாக்கோபுவின் குழந்தைகள். நீங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை. 7 ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. உங்கள் முற்பிதாக்களும் கூட என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள். என்னிடம் திரும்பி வாருங்கள். நானும் உங்களிடம் திரும்பி வருவேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றை சொன்னார்.
நீங்கள், “நாங்கள் எவ்வாறு திரும்பி வருவது?” என்று கேட்கிறீர்கள்.
8 “தேவனிடமிருந்து திருடுவதை நிறுத்துங்கள். ஜனங்கள் தேவனிடமிருந்து திருடக்கூடாது. ஆனால் நீங்கள் என்னிடமிருந்து திருடினீர்கள்!”
நீங்கள், “நாங்கள் உம்மிடமிருந்து எதைத் திருடினோம்?” என்று கேட்கிறீர்கள்.
“நீங்கள் உங்களது பொருட்களில் பத்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் எனக்குச் சிறப்பான காணிக்கைகளையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை. 9 இந்த வழியில் உங்கள் நாடு முழுவதும் என்னிடமிருந்து திருடினீர்கள். எனவே உங்களுக்குத் தீயவை ஏற்படுகிறது.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “இந்தச் சோதனையை முயற்சிச் செய்து பார். உன்னிடமுள்ளவற்றில் பத்தில் ஒரு பங்கை என்னிடம் கொண்டு வா. அவற்றைக் கருவூலத்தில் போடு. என் வீட்டிற்கு உணவு கொண்டு வா. என்னைச் சோதனை செய். நீ அவற்றைச் செய்தால் பின்னர் நான் உண்மையாக உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்திலிருந்து மழை பெய்வது போன்று நல்லவை உன்னிடம் வரும். உனக்கு தேவைக்கு அதிகமாகவே பொருள் வரும். 11 நான் உங்கள் விளைச்சலை அழிக்கும் பூச்சிகளை அனுமதிக்கமாட்டேன். உங்கள் திராட்சைக்கொடிகள் எல்லாம் திராட்சைகளை விளையச்செய்யும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
12 “பிற நாடுகளிலுள்ள ஜனங்கள் உங்களுக்கு நல்லவர்களாக இருப்பார்கள். நீங்கள் உண்மையில் ஓர் அற்புதமான நாட்டைப் பெறுவீர்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
பவுலின் துன்பங்கள் உதவியது
12 சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 13 சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும். 14 இன்னும் நான் சிறைப்பட்டிருக்கிறேன். அது நன்மைக்குத்தான் என்று பல விசுவாசிகள் இப்போது எண்ணுகின்றனர். எனவே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அச்சமில்லாமல் பரப்புவதில் மேலும் தைரியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
15 கிறிஸ்துவைப் பற்றிச் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், என்றாலும் அவர்கள் பொறாமையும், கசப்புணர்வும் கொண்டவர்களாக உள்ளார்கள். இன்னும் சிலர் உதவி செய்யும் விருப்பத்தோடு கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். 16 இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர். 17 மற்றவர்களோ தன்னலம் காரணமாக கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சார நோக்கம் தவறானது. சிறைக்குள் எனக்குத் தொல்லைகளை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர். 18 அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. மக்களிடம் அவர்கள் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். நானும் இயேசுவைப் பற்றி அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர்கள் அதைச் சரியான நோக்கத்தோடு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தவறான நோக்கத்தோடு போலியாகப் பிரச்சாரம் செய்தாலும் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இதனால் தொடர்ந்து நான் மகிழ்ச்சியடைவேன்.
2008 by World Bible Translation Center