Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் பாடல்
25 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
2 என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
3 ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள்.
அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
4 கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
உமது வழிகளை எனக்குப் போதியும்.
5 எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
நீரே என் தேவன், என் மீட்பர்.
அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
6 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
7 எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.
8 கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
9 தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக்
கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர்.
16 ஆனால் எங்கள் முற்பிதாக்களான அந்த ஜனங்கள் பெருமைகொண்டனர்.
அவர்கள் பிடிவாதமானவர்களானார்கள்.
அவர்கள் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தனர்.
17 அவர்கள் கவனிக்க மறுத்தனர். நீர் செய்த அற்புதங்களை மறந்தனர்.
அவர்கள் எகிப்திற்கு மீண்டும் சென்று அடிமைகளாகத் தலைவரை அமர்த்தினார்கள்!
“ஆனால் நீர் மன்னிக்கிற தேவன்!
நீர் கருணையும் மிகுந்த இரக்கமும் உடையவர்.
நீர் பொறுமையும் முழு அன்பும் உடையவர்.
எனவே நீர் அவர்களைவிட்டு விலகவில்லை.
18 அவர்கள் தங்கத்தால் கன்றுக்குட்டிகைளைச் செய்து,
‘இவை தான் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள்’ என்று சொன்னபோதுங்கூட நீர் அவர்களை விட்டு விலகவில்லை.
19 நீர் மிகவும் கருணை உடையவர்!
எனவே, நீர் அவர்களை வனாந்தரத்தில் கைவிடவில்லை.
பகலில் அவர்களிடமிருந்த உயர்ந்த மேகங்களை எடுக்கவில்லை.
நீர் அவர்களைத் தொடர்ந்து வழி காட்டினீர்.
இரவில் விளக்குத்தூணை அவர்களிடமிருந்து எடுக்கவில்லை.
அவர்களது பாதைக்குத் தொடர்ந்து வெளிச்சம் தந்தீர்.
எந்த வழியில் போக வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டினீர்.
20 அவர்களை அறிவாளிகளாக்க உமது நல் ஆவியைக் கொடுத்தீர்.
அவர்களுக்கு உணவாக மன்னாவைக் கொடுத்தீர்.
நீர் அவர்களின் தாகத்திற்கு தண்ணீரைக் கொடுத்தீர்.
21 40 ஆண்டுகளுக்கு அவர்களை கவனித்து வந்தீர்!
வனாந்தரத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அவர்கள் ஆடைகள் பழையதாய் போகவில்லை.
அவர்களின் பாதங்கள் வீங்கவோ புண்ணாகவோ இல்லை.
22 கர்த்தாவே, நீர் அவர்களுக்கு இராஜ்யங்களையும் நாடுகளையும் கொடுத்தீர்.
நீர் அவர்களுக்குக் குறைந்த அளவான ஜனங்கள் வாழ்கிற தூர நாடுகளையும் கொடுத்தீர்.
அவர்கள் எஸ்போனின் அரசனாகிய சீகோன் நாட்டையும் பெற்றனர்.
அவர்கள் பாசானின் அரசனாகிய ஓகின் நாட்டையும் பெற்றனர்.
23 வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போன்று அவர்களது சந்ததியினரைப் பெருக்கினீர்.
அவர்களது முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தீர்.
அவர்கள் உள்ளே சென்று நாட்டை எடுத்துக்கொண்டார்கள்.
24 அப்பிள்ளைகளும் நாட்டை எடுத்துக்கொண்டனர்.
அங்கே வாழ்ந்த கானானியர்களை அவர்கள் தோற்கடித்தனர்.
நீர் அந்த ஜனங்களை தோற்கடிக்கும்படி செய்தீர்!
அந்நாடுகளையும் ஜனங்களையும் அரசர்களையும் அவர்களது விருப்பப்படிச் செய்ய நீர் அனுமதித்தீர்!
25 அவர்கள் பலமிக்க நகரங்களைத் தோற்கடித்தனர்.
அவர்கள் வளமான நிலங்களை எடுத்தனர்.
அவர்கள் நல்ல பொருட்கள் நிறைந்த வீடுகளைப் பெற்றனர்.
அவர்கள் ஏற்கெனவே தோண்டப்பட்ட கிணறுகளைப் பெற்றனர்.
அவர்கள் திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் மற்றும் பழமரங்களைப் பெற்றனர்!
அவர்கள் வயிறு நிறையும் வரை உண்டுக் கொழுத்தனர்.
நீர் கொடுத்த அற்புதமான பொருட்களை எல்லாம் அனுபவித்தனர்.
இறுதி அறிவிப்புகளும், வாழ்த்துக்களும்
12 சகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 13 அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள்.
ஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள். 14 சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள். 15 ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள்.
16 எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். 17 பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள். 18 தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார்.
19 பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள். 20 தீர்க்கதரிசனங்களை முக்கியமற்ற ஒன்றாக எண்ணாதீர்கள். 21 ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.
2008 by World Bible Translation Center