Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 34:1-8

தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.

34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
    என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
    என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
    அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
    அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
உதவிக்காக தேவனை நாடுங்கள்.
    அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
    கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
    என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
    கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
    கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.

சங்கீதம் 34:19-22

19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
    அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
    கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
    நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
    அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.

நெகேமியா 1

நெகேமியாவின் ஜெபம்

இவைகள் நெகேமியாவின் வார்த்தைகள். நெகேமியா அகலியாவின் மகன். நெகேமியாவாகிய நான் கிஸ்லேயு மாதத்தில் சூசான் என்னும் தலைநகரத்தில் இருந்தேன். இது அர்தசஷ்டா அரசனான இருபதாவது ஆண்டு. நான் சூசானில் இருந்தபோது என் சகோதரர்களில் ஒருவனான ஆனானியும் வேறு சில மனிதர்களும் யூதாவிலிருந்து வந்தனர். நான் அவர்களிடம் அங்கு வாழும் யூதர்களைப் பற்றிக் கேட்டேன். அந்த யூதர்கள் சிறைவாசத்திலிருந்து தப்பித்து இன்னும் யூதாவில் வாழ்ந்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் எருசலேம் நகரத்தைப்பற்றியும் விசாரித்தேன்.

ஆனானியும் அவனோடு இருந்த மனிதர்களும், “நெகேமியா, சிறைவாசத்திலிருந்து தப்புவித்து யூதா நாட்டில் வாழ்கிற யூதர்கள் மிகுந்த துன்பத்தில் இருக்கின்றனர். அந்த ஜனங்கள் மிகுந்த தொல்லைகளிலும் அவமானத்திலும் இருக்கின்றனர். ஏனென்றால் எருசலேமின் சுவர் உடைந்து விழுந்தது. அதன் வாசல்கள் நெருப்பால் எரிந்தன” என்றனர்.

நான் எருசலேம் ஜனங்களைப் பற்றியும் அதன் சுவரைப் பற்றியும் கேள்விப்பட்டதும் கவலை அடைந்தேன். நான் உட்கார்ந்து கதறினேன். நான் பல நாள் துக்கமாக இருந்தேன். உண்ணாமல் இருந்து பரலோகத்தின் தேவனிடம் ஜெபம் செய்தேன். பிறகு இந்த ஜெபத்தை ஜெபித்தேன்:

“பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, நீரே உயர்ந்தவர், வல்லமையுள்ள தேவன். உம்மை நேசித்து உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஜனங்களோடு தான் செய்துகொண்ட அன்பின் உடன்படிக்கையை நிறைவேற்றும் தேவன் நீரே.

“உமக்கு முன்னால் இரவும் பகலும் ஜெபம் செய்துக்கொண்டிருக்கிற உமது அடியானின் ஜெபத்தைக் கேட்கும்படி தயவுசெய்து உமது கண்களையும் காதுகளையும் திறவும். நான் இஸ்ரவேல் ஜனங்களான உமது அடியார்களுக்காக ஜெபம் செய்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகின்றேன். நான் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறேன் என்றும் என் தந்தையின் வீட்டார் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார்கள் என்றும் நான் அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு மிகவும் தீயவர்களாக இருந்தோம். நீர் உமது அடியாரான மோசேக்குக் கொடுத்த கட்டளைகள், போதனைகள், சட்டங்கள் ஆகியவற்றிற்கு நாங்கள் அடி பணிந்திருக்கவில்லை.

உமது அடியாரான மோசேக்கு, நீர் கொடுத்த கட்டளையை தயவுசெய்து நினைவுக்கூரும். நீர் அவனிடம், “இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால் நான் உங்களைப் பலவந்தமாக மற்ற நாடுகளுக்குள் சிதறடிப்பேன். நீங்கள் என்னிடம் திரும்பிவந்து எனது கட்டளைகளுக்கு அடிபணிவீர்களானால் பிறகு நான் சொல்லுகிற இது நடக்கும். ஜனங்கள் தம் வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியே அனுப்பப்பட்டு பூமியின் கடைசி எல்லைகளில் இருந்தாலும் அங்கிருந்து அவர்களை நான் ஒன்றுசேர்ப்பேன். எனது நாமத்தை விளங்கும்படி நான் தேர்ந்தெடுத்த இடத்திற்கு நான் அவர்களைத் திரும்பக்கொண்டுவருவேன்” என்று கூறினீர்.

10 இஸ்ரவேலின் ஜனங்கள் உமது அடியவர்களாகவும் ஜனங்களாகவும் இருக்கின்றனர். நீர் உமது வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும் அந்த ஜனங்களை மீட்டீர். 11 எனவே கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது அடியான். உமது நாமத்தில் மரியாதை வைத்திருக்கிற உமது அடியார்களின் ஜெபங்களைக்கேளும். கர்த்தாவே, நான் அரசனது திராட்சைரசப் பணியாள் [a] என்பது உமக்குத் தெரியும். எனவே இன்று எனக்கு உதவும். அரசனிடத்தில் உதவி கேட்கிறபோது நீர் எனக்கு உதவும். என் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணும். அரசனுக்கு நான் விருப்பமுடையவனாக இருக்கும்படி உதவும்.

எபிரேயர் 7:11-22

11 லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை [a] இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார். 12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். 13 எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன. 14 நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.

மெல்கிசேதேக்கைப் போன்று இயேசுவும் ஒரு ஆசாரியர்

15 மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது. 16 மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். 17 “நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” [b]என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.

18 ஆகவே அந்தப் பழைய சட்டம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில் பழைய சட்டம் பலவீனமானதும், பயனற்றதுமாய் இருந்தது. 19 மோசேயின் நியாயப்பிரமாணமானது எதையும் முழுமை ஆக்கவில்லை. எனவே சிறிதளவேனும் நல்ல நம்பிக்கை நமக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதன் மூலமாகத்தான் தேவனுக்கு அருகில் வருகிறோம்.

20 இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை. 21 ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார்.

“‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’
    என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார்.
மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” (A)

என்றும் அவர் சொன்னார்.

22 மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு [c] இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center