Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 55:1-15

இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்குத் தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்.

55 தேவனே, என் ஜெபத்தைக் கேளும்.
    இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும்.
தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.
    என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன்.
என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான்.
    கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.
என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள்.
    என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள்.
என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது.
    நான் மரணபயம் அடைந்தேன்.
நான் அஞ்சி நடுங்கினேன்.
    பயத்தால் தாக்குண்டேன்.
ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன்.
    அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன்.
    நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.

நான் ஓடி தப்பித்துக்கொள்வேன்.
    துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.
9-10 என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும்.
    இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன்.
என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன.
    இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன.
11 தெருக்களில் பெருங்குற்றங்கள் நேரிடுகின்றன.
    ஜனங்கள் பொய்களைக்கூறி, எங்கும் ஏமாற்றுகிறார்கள்.

12 ஒரு பகைவன் என்னைத் தாக்கினால் நான் பொறுத்துக்கொள்வேன்.
    என் பகைவர்கள் என்னைத் தாக்கினால் நான் ஒளிந்துக்கொள்வேன்.
13 ஆனால் எனக்குச் சமமானவனும், என்னுடன் வாழ்பவனும்,
    என் நண்பனுமாகிய நீயே எனக்குத் தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கிறாய்.
14 நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
    தேவனுடைய ஆலயத்தில் நாங்கள் ஒருமித்து வழிப்பட்டோம்.

15 என் பகைவர்கள் அவர்கள் காலத்திற்கு முன்னே மரிப்பார்கள் என நம்புகிறேன்.
    அவர்கள் உயிரோடே புதைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்!
    ஏனெனில் அவர்கள் தங்கள் வீடுகளில் மிகப் பயங்கரமான காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.

யோபு 8

பில்தாத் யோபுவிடம் பேசுகிறான்

அப்போது சூகியனான பில்தாத் பதிலாக,

“எத்தனை காலம் இவ்வாறு பேசுவீர்?
    பலத்த காற்றைப்போன்று உமது சொற்கள் வெளிப்படுகின்றன.
தேவன் நியாயத்தை மாற்றுவாரோ?
    சர்வ வல்லமையுள்ள தேவன் சரியானவற்றை மாற்றுவாரோ?
உமது பிள்ளைகள் தேவனுக்கெதிராகப் பாவம் செய்தபோது அவர் அவர்களை தண்டித்தார்.
    அவர்கள் தங்கள் பாவங்களுக்காகத் தண்டனைப் பெற்றார்கள்.
ஆனால் இப்போது யோபுவே, தேவனைப் பார்த்து
    சர்வ வல்லமையுள்ள அவரிடம் ஜெபம் செய்யும்.
நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால்,
    அவர் விரைந்து உமக்கு உதவ வருவார்.
    உமது குடும்பத்தை மீண்டும் உமக்குத் தருவார்.
தொடக்கம் அற்பமாக இருந்தாலும்
    உமது எதிர்காலம் ஆசீர்வாதமானதாக இருக்கும்.

“வயது முதிர்ந்தோரைக் கேளும்,
    அவர்கள் முற்பிதாக்கள் அறிந்துகொண்டதைத் தெரிந்துகொள்ளும்.
ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தோம்.
    ஒன்றும் நாம் அறியோம், ஏனெனில் பூமியில் நம் நாட்கள் நிழலைப்போன்று மிகவும் குறுகியவை.
10 முதிர்ந்தோர் உமக்குக் கற்பிக்கக்கூடும்.
    அவர்கள் அறிந்துக்கொண்டவற்றை உமக்குச் சொல்லக் கூடும்” என்று கூறினான்.

11 பில்தாத் மேலும், “பாப்பிரஸ் உலர்ந்த பூமியில் ஓங்கி வளருமோ?
    தண்ணீரின்றி கோரைப் புற்கள் வளரக்கூடுமோ?
12 இல்லை, தண்ணீர் வற்றிப்போகும்போது அவை உலர்ந்துபோகும்.
    அவற்றை வெட்டிப் பயன்படுத்த முடியாதபடி சிறியனவாக இருக்கும்.
13 தேவனை மறப்போரும் அப்புற்களைப் போலிருக்கிறார்கள்.
    தேவனை மறக்கும் மனிதனுக்கு எத்தகைய நம்பிக்கையும் அழிந்துப்போகும்.
14 அம்மனிதன் சாய்ந்து நிற்க எதுவுமில்லை.
    அவன் பாதுகாவல் ஒரு சிலந்தி வலையைப் போன்றது.
15 சிலந்தி வலையில் ஒருவன் சாய்ந்தால், அந்த வலை அறுந்துப்போகும்.
    அவன் வலையைப் பற்றிக்கொள்வான், ஆனால் அது அவனைத் தாங்கிக்கொள்ளாது.
16 அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான்.
    தோட்டம் முழுவதும் அதன் கிளைகள் பரவி நிற்கும்.
17 பாறைகளைச் சுற்றிலும் அதன் வேர்கள் படர்ந்திருக்கும்.
    பாறைகளினூடே வளர்வதற்கு அது ஓர் இடம் தேடும்.
18 ஆனால் அத்தாவரத்தை அவ்விடத்திலிருந்து அகற்றினால் அது வாடிப்போகும்,
    அது அங்கிருந்தது என்பதையும் ஒருவரும் அறியமாட்டார்கள்.
19 ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது.
    அது இருந்த இடத்தில் மற்றொரு தாவரம் முளைத்தது.
20 தேவன் களங்கமற்றோரைக் கைவிடமாட்டார்.
    அவர் கொடியோருக்கு உதவமாட்டார்.
21 தேவன் இன்னும் உமது வாயை நகைப்பினாலும்
    உதடுகளை மகிழ்ச்சி ஆரவாரங்களினாலும் நிரப்புவார்.
22 ஆனால் உனது பகைவர்கள் வெட்கத்தை ஆடையாக அணிந்துகொள்வார்கள்.
    தீய ஜனங்களின் வீடுகள் அழிக்கப்படும்” என்றான்.

1 கொரி 7:1-9

திருமணம் குறித்த போதனைகள்

இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஆனால் பாலுறவினால் ஏற்படும் பாவம் எப்போதும் ஆபத்துக்குரியதென்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவளது சொந்தக் கணவனோடு இருத்தல் வேண்டும். ஒரு மனைவி என்கிற அளவில் எவற்றையெல்லாம் கணவனிடமிருந்து பெறக்கூடுமோ, அவை அனைத்தையும் கணவன் அவனது மனைவிக்கு வழங்கவேண்டும். அவ்வாறே ஒரு கணவன் என்கிற அளவில் எவற்றையெல்லாம் மனைவியிடமிருந்து பெறக் கூடுமோ அவை அனைத்தையும் மனைவி தன் கணவனுக்கு வழங்குதல் வேண்டும். மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும். நீங்கள் சில காலம் பிரிந்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காகவே நான் இதனைச் சொல்கிறேன். இது கட்டளை அல்ல. எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வரத்தை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு ஒரு வகை வரமும், இன்னொருவனுக்கு வேறு வகை வரமும் அளிக்கப்படுள்ளன.

திருமணம் செய்யாதவர்களுக்காகவும், விதவைகளுக்காகவும் இப்போது இதனைக் கூறுகின்றேன். என்னைப்போல தனித்து வாழ்தல் அவர்களுக்கு நல்லது. ஆனால் சுய கட்டுப்பாடு இல்லையெனில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பாலுறவு ஆசையினால் வெந்துபோவதைக் காட்டிலும் திருமணம் புரிந்துகொள்வது நல்லது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center