Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 128

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

128 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள்.

நீங்கள் உழைத்துப்பெறுகிற பொருள்களால் களிப்படைவீர்கள்.
    நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்கள், உங்களுக்கு நல்லவை நிகழும்.
வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்.
    மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள்.
கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்.
    வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன்.
நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன்.

இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!

நீதிமொழிகள் 27

27 எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.

உன்னைப்பற்றி நீயே புகழ்ந்துகொள்ளாதே. மற்றவர்கள் உன்னைப் புகழும்படி செய்.

கல் கனமானது. மணலும் சுமப்பதற்கு கனமானது. ஆனால் மிகுந்த கோபமுடைய முட்டாளால் ஏற்படும் துன்பம் இவ்விரண்டையும்விட சுமப்பதற்கு அதிகக் கனமானது.

கோபம் கொடுமையும் பயங்கரமுமானது. இது அழிவுக்குக் காரணமாகும். ஆனால் பொறாமை இதைவிட மோசமானது.

வெளிப்படையான விமரிசனமானது மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது.

உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான்.

உனக்குப் பசி இல்லாதபோது, நீ தேனைக்கூட பருக முடியாது. ஆனால் நீ பசியோடு இருந்தால் சுவையற்றவற்றையும் கூட தின்றுவிடுவாய்.

ஒருவன் வீட்டைவிட்டு விலகியிருப்பது கூட்டைவிட்டுப் பிரிந்து இருக்கிற பறவையைப் போன்றதாகும்.

மணப்பொருட்களும் இனிய வாசனைப் பொருட்களும் உன்னை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் துன்பங்களோ உனது அமைதியான மனதை அழித்துவிடும்.

10 நீ உனது நண்பர்களையும் உனது தந்தையின் நண்பர்களையும் மறந்துவிடாதே. உனக்குத் துன்பம் நேரும்போது, உதவிக்காகத் தூரத்தில் உள்ள உன் சகோதரனை நாடிப்போகாதே. தூரத்தில் உள்ள உன் சகோதரனைத் தேடிப்போவதைவிட அருகில் உள்ளவனிடம் சென்று உதவி கேட்பது நல்லது.

11 என் மகனே, ஞானியாக இரு. அது என்னை மகிழ்ச்சிப்படுத்தும். அப்போது என்னை விமர்சிக்கிற எவனுக்கும் நான் பதில் சொல்ல இயலும்.

12 துன்பம் வருவதை உணர்ந்து ஞானிகள் விலகிவிடுவார்கள். அறிவற்றவர்களோ நேராகப் போய் துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு அதனால் பாடுபடுகிறார்கள்.

13 அடுத்தவன் பட்ட கடனுக்கு நீ பொறுப்பேற்றால் உனது சட்டையையும் நீ இழந்துவிடுவாய்.

14 நீ உனது அயலானை உரத்த குரலில், “காலை வணக்கம்” கூறி எழுப்பாதே. இது அவனை எரிச்சல்படுத்தும். அவன் இதனை வாழ்த்தாக எடுத்துக்கொள்ளாமல் சாபமாக எடுத்துக்கொள்வான்.

15 எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள். 16 அவளைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும்.

17 இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும்.

18 அத்திமரத்தை வளர்ப்பவன் அதன் பழத்தை உண்பான். இதுபோலவே, தன் எஜமானனைக் கவனிக்கிறவனும் அதனால் பல்வேறு பயன்களைப் பெறுவான். எஜமானனும் அவனைக் கவனித்துக்கொள்வான்.

19 ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும்.

20 ஜனங்கள் ஏறக்குறைய சவக்குழியைப் போன்றவர்கள். சாவுக்கும் அழிவுக்கும் இடமாக விளங்கும் சவக்குழியைப் போன்ற ஜனங்கள் எப்போதும் மேலும் மேலும் ஆசையுடையவர்களாக இருப்பார்கள்.

21 தங்கத்தையும் வெள்ளியையும் சுத்தப்படுத்த ஜனங்கள் நெருப்பைப் பயன்படுத்துகின்றனர். இதுபோலவே மனிதனும் ஜனங்கள் தனக்கு அளிக்கும் புகழ்ச்சியால் சோதிக்கப்படுகிறான்.

22 ஒரு முட்டாளை நீ நசுக்கி அழித்துவிட முடியும். ஆனால் உன்னால் அவனது முட்டாள்தனத்தை அவனிடமிருந்து பலவந்தமாக அகற்ற முடியாது.

23 உனது ஆடுகளையும் மந்தையையும் கவனமாகப் பார்த்துக்கொள். உன்னால் இயன்றவரை அவற்றைக் கவனமாக காத்துக்கொள். 24 செல்வம் எப்பொழுதும் நிலைப்பதில்லை. தேசங்களும் எப்பொழுதும் நிலைக்காது. 25 புல்லை வெட்டினால் புதிய புற்கள் முளைக்கும். எனவே மலை மீது வளரும் புல்லை வெட்டு. 26 உனது ஆட்டுக்குட்டி மீதுள்ள மயிரை வெட்டி கம்பளிச் செய். உனது ஆடுகளை விற்று நிலத்தை வாங்கு. 27 உனக்கும் உனது குடும்பத்திற்கும் தேவையான பால் ஏராளமாக இருக்கும். உனது வேலைக்காரிகளின் உடல் நலத்திற்கும் அது உதவும்.

யாக்கோபு 4:8-17

தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள். 10 தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.

நீங்கள் நியாயாதிபதி அல்ல

11 சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும். 12 சட்டத்தை உருவாக்கியவர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவர் தேவனாவார். சட்டத்தையே கேள்விக்குட்படுத்தினால், சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாக இருப்பதை விட்டு நீ நீதிபதியாகிறாய் என்பது பொருளாகும். சட்டத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் அதிகாரம் கொண்டவர் அவர் ஒருவரே. எனவே உன் சகோதரனையும் சகோதரியையும் நீ தான் நியாயம் தீர்க்க வேண்டும் என நினைக்க நீ யார்?

தேவன் உன் வாழ்வைத் தீர்மானிக்கட்டும்

13 “இன்று அல்லது நாளை நாம் ஒரு நகரத்திற்குப் போவோம். அங்கே ஓராண்டு தங்குவோம். வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று உங்களில் சிலர் கூறுகிறார்கள். கவனியுங்கள். 14 "நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை பனி புகையைப் போன்றது. கொஞ்ச காலத்திற்கே உங்களால் பார்க்கமுடியும். ஆனால் பிறகு மறைந்துவிடும் என்பதை நினைத்துப்பாருங்கள். 15 எனவே, "தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்" என்று எண்ணுங்கள். 16 ஆனால், இப்போது நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிற பெரிய காரியங்கள் எல்லாவற்றைப்பற்றியும் பெருமை பாராட்டிக்கொள்கிறீர்கள். அது தவறாகும். 17 எனவே இப்போது கவனம் செலுத்துங்கள். ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் போனால், அவன் ஒரு பாவியாகிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center