Revised Common Lectionary (Semicontinuous)
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று
80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் அரசராக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2 இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
3 தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
4 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
5 உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
6 எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி”யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி”யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16 உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது மகனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன
9 உங்களில் சில பெண்கள் இப்போது மிக அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பை உணருகிறீர்கள். ஆனால், நான் சொல்லுகிற வார்த்தைகளை நீங்கள் நின்று கவனிக்க வேண்டும். 10 பெண்களாகிய நீங்கள் இப்போது அமைதியை உணருகிறீர்கள். ஆனால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தொல்லைக்குள்ளாவீர்கள். ஏனென்றால், அடுத்த ஆண்டு திராட்சைகளை நீங்கள் பறிக்க மாட்டீர்கள். ஏனென்றால், பறிப்பதற்குத் திராட்சைகள் இருக்காது.
11 பெண்களே! இப்பொழுது நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அச்சுறுத்தப்பட வேண்டும். பெண்களே! இப்போது நீங்கள் அமைதியை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் கவலைக்குட்பட வேண்டும். உங்களது மென்மையான ஆடைகளை எடுத்துவிடுங்கள். துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அந்த ஆடைகளை உங்கள் இடுப்பில் கட்டிக் கொள்ளுங்கள். 12 துக்கத்துக்குரிய ஆடைகளை துன்பம் நிறைந்த உங்கள் மார்புக்கு மேல் போட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் வயல்கள் காலியானதால் அலறுங்கள். உங்கள் திராட்சைத் தோட்டங்கள் ஒரு காலத்தில் திராட்சைப் பழங்களைத் தந்தன. ஆனால் இப்போது அவை காலியாக உள்ளன. 13 எனது ஜனங்களின் பூமிக்காக அலறுங்கள். ஏனென்றால், இப்பொழுது முட்களும் நெருஞ்சியும் மட்டுமே வளரும். நகரத்திற்காக அலறுங்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த வீடுகளுக்காக அலறுங்கள்.
14 ஜனங்கள் தலைநகரத்தைவிட்டு வெளியேறுவார்கள். அரண்மனையும் கோபுரங்களும் காலியாகும். ஜனங்கள் வீடுகளில் வாழமாட்டார்கள். அவர்கள் குகைகளில் வாழுவார்கள். காட்டுக் கழுதைகளும் ஆடுகளும் நகரத்தில் வாழும். மிருகங்கள் அங்கே புல்மேயப்போகும்.
15-16 தேவன் மேலேயிருந்து அவரது ஆவியைக் கொடுக்கும்வரை இது தொடரும். இப்பொழுது பூமியில் நன்மை இல்லை. இது இப்போது வனாந்திரம்போல் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில். இந்த வனாந்திரம் கர்மேல் போலாகும். அங்கே நேர்மையான தீர்ப்புகள் இருக்கும். கர்மேல் பசுமைக் காடுகளைப்போன்று ஆகும். நன்மை அங்கே வாழும். 17 என்றென்றைக்கும் இந்த நன்மை சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். 18 எனது ஜனங்கள் சமாதானத்தின் அழகிய வயலில் வாழுவார்கள். எனது ஜனங்கள் பாதுகாப்பின் கூடாரங்களில் வாழுவார்கள். அவர்கள் அமைதியும் சமாதானமும் உள்ள இடங்களில் வாழுவார்கள்.
19 ஆனால் இவை நிகழும்முன்பு, காடுகள் விழவேண்டும். நகரம் தோற்கடிக்கப்படவேண்டும். 20 நீங்கள் தண்ணீர் நிலையுள்ள இடங்களில் விதைக்கிறீர்கள். அங்கே உங்கள் கழுதைகளையும் மாடுகளையும் சுதந்திரமாகத் திரியவும் மேயவும் விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
17 ஆனால் மேலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகத் தூய்மையாக இருக்கிறது. பிறகு சமாதானமாகவும், இணக்கமுள்ளதாகவும், எளிதில் மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததாகவும், கருணை நிறைந்ததாகவும் பல நற்செயல்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. பாரபட்சமற்றதாகவும் போலித்தன்மையற்றதாகவும் கூட இருக்கிறது. 18 சமாதானமான வழியிலே சமாதானத்துக்காக உழைக்கிற மக்கள் நீதியாகிய வாழ்வின் பலனைப் பெறுகின்றார்கள்.
2008 by World Bible Translation Center